பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

எந்த உணவாயிருந்தாலும் அப்படியே சாப்பிடலாமா?

எந்த உணவாயிருந்தாலும் அப்படியே சாப்பிடலாமா? அவித்து சாப்பிட வேண்டுமா? அல்லது அரைத்து சாப்பிட வேண்டுமா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி..

புற்று நோய்க்கான கூட்டுமருத்துவ சிகிச்சை குறித்த ஆய்வுபற்றிப் பேச ஒருமுறை அழைப்பு வந்தது. அதற்காக அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கிளீவ்லாந்துக்குப் போயிருந்த சமயம். அந்த 4 டிகிரி குளிரில், உப்பு, புளி, காரம் என எதுவுமே இல்லாத “கோழிக் கறியா? வான்கோழியா? என்ன சாப்பிடுறீங்க?’’ என்று வெள்ளைக்கார அம்மணி கேட்ட கேள்வியில், உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

வான்கோழியாக இருந்தாலும் சரி. வாலாட்டும் டயனோசராக இருந்தாலும் சரி, இந்த அமெரிக்கர்கள் எதையும் சமைத்துத் தந்துவிடுவார்களே.. என்ற அச்சத்தில் பரிதாபமாய், கொஞ்சம் ஸ்பினாச் சாலட்(வேற ஒண்ணுமில்லைங்க.. நம்ம ஊர் பசலைக் கீரைக்கு மச்சினன் தான் ஸ்பினாச் கீரை), கொஞ்சம் பழத்துண்டுகளை ஆர்டர் செய்ததில், இதைப்பற்றியே எழுதினாலென்ன என்பதில் பிறந்ததுதான் இந்தக் கட்டுரை!

வயிற்றுக்குள்ளேயே ஒரு அடுப்பு இருக்கும் போது எதற்கு சமையலெல்லாம்..? எந்தவொரு உணவையும் சமைக்காமல் அப்படியே சாப்பிட்டால்தான் அமிழ்தம் என்று இயற்கை உணவு ஆலோசகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. ஆதாமும் ஏவாளும் அவர்கள் குடும்பத்தாரும் அப்படித்தான் சாப்பிட்டார்கள். ஆனால், சிக்கிமுக்கிக் கல்லை உரசி நெருப்பு ஒன்றை மனிதன் கண்டுபிடித்த பிறகுதான் சுடாத பழம் வேணாம், சுட்ட பழம் சாப்பிடலாமே என்ற நினைப்பு உருவாகி அது வளர்ந்து வளர்ந்து, ஐந்து சுற்று முருக்கு, மோர்க்குழம்பில் மிதக்கும் வடை என வகைவகையாகச் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் பெருகி இதோ ஃபாஸ்ட் ஃபுட் வரை வந்து விட்டது.

பசிக்கு உணவு என்ற நிலை மாறி, ருசிக்கு உணவு எனும் நிலைமை வந்ததும், உணவுத் தயாரிப்பில் பொரியல் வறுவலாகி, பின் கருகலாகி, சமையல் என்பது ‘ஸ்வரம் தப்பிய சூப்பர் சிங்கர்’ போல் ஆகிவிட்டது. அதனால், “ஹார்லிக்ஸை மட்டுமன்றி அவரைக்காய் வெண்டைக்காயையும் ஏன் மீண்டும் நாம் அப்படியே சாப்பிடக் கூடாது?’’ என்ற கருத்து வலுக்க ஆரம்பித்துவிட்டது..

எதை அப்படியே சாப்பிடணும், எதை சமைத்துச் சாப்பிடணும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் நம் மரபணு பற்றிய சூட்சுமம் நமக்குத் தெரிந்தாக வேண்டும்.அம்மா சமையலில் 25 வருடம் சாப்பிட்ட வயிறுக்கு, திருமணமான ஆறுமாதம் கழித்து, மனைவி வைக்கும் வெந்நீர் கூட கொஞ்சம் வயிற்றைப் புரட்டுவதாகத் தெரியும். அப்படியிருக்க இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ‘சமைத்த உணவில்’ பழகிப் போன ஜீரண மண்டலம் திடீரென அனைத்தையும் ‘சமைக்காமல்’ சாப்பிடத் துவங்கும் போது சிலருக்கு சேட்டை செய்யக் கூடும். அதற்குக் காரணம் சூழலுக்கு ஏற்ப மரபணு பழகிப்போன epigenitics விஷயம் என்கிறது நவீன அறிவியல். தடாலடியாக நாம் சரவணபவனில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குடித்தனம் போய்விடாமல் படிப்படியாக இயற்கை உணவாக சிலவற்றை கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம். தவிர அதுதான் ஆரோக்கியமும் கூட.

அப்படிச் சாப்பிடுவதில் முதல் தேர்வு பழங்களாகத்தான் இருக்க வேண்டும்.

பழத் துண்டுகளுக்கு மேல் ஐஸ்கிரீம் போடுவது, சர்க்கரை போடுவது என்ற அதிகப் பிரசங்கித்தனமில்லாமல் பழத்துண்டுகளை அப்படியே சாப்பிடுவதுதான் உத்தமம்.

பழ அப்பம், அன்னாசிப்பழக் குழம்பு என பழத்தையும் சமைக்கும் கொடூரப் பழக்கம் பரவி வருகிறது. எப்போதோ விருந்துக்கு வேண்டுமென்றால் அது சரி.. அடிக்கடி இப்படித்தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்தால், பழம் அதனுடைய நல்ல பயனைத் தராது.

பழங்களில் நோய் எதிர்ப்பாற்றல், வயோதிகம் குறைக்கும் மார்க்கண்டேய மகத்துவம், இன்னும், கேன்ஸர் முதலிய பல நாட்பட்ட நோய்களை எதிர்க்கும் தாவரச் சத்துக்களெல்லாம் அதிகம் உண்டு.. அதிலும், சிவப்பு, நீலம், ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள அனைத்துப் பழங்களிலும் இந்த நிறமிச் சத்துக்களால் கூடுதல் பலன் உண்டு. சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தைச் சார்ந்த தேசிய உணவியல் கழகம் ‘எது சிறந்த பழம்’ என்ற அறிக்கையை விட்டது. அதில் முதலிடம் பிடித்தது எந்தக் கனி தெரியுமா? நம்ம ஊர் கொய்யா.. சும்மா பம்மாத்துக்கு இனி வெளிநாட்டு ஆப்பிள் வாங்கி காசை வீணாக்காமல் கொய்யாக் கனிக்கு மாறுங்கள். அதில் மிளகாய் வற்றல், உப்பு, மிளகு என இன்னபிறவும் தூவிச் சாப்பிடுவது சுவையைக் கூட்டுவதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அது ரொம்பவே தப்பு. வெறும் மிளகாய் வற்றல், அல்சரில் இருந்து கேன்சர் வரை வரவழைக்கும்.

அதே போல் நறுமணச் சத்துள்ள உணவுகளான இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, ஏலம், சீரகம், பெருஞ்சீரகம் முதலான உணவுப் பொருட்களை அதிகம் சூடாக்காமல் மிதமான கொதிப்பில் பரிமாறுவது நல்லது.. இந்தப் பொருட்களை சமைத்து முடித்த சூட்டில் கடைசியாக ஓரிரு நொடிகள் மட்டும் போட்டு, பின் கொதியில் இருந்து இறக்கிவிட்டால் நல்லது. அப்போது தான் அந்த நறுமணப் பொருளில் உள்ள யூஜினின் சத்து ஓடிப்போகாது.

ஆனால், அதிக நார்த் தன்மையுள்ள கீரை, மாவுச் சத்துள்ள கிழங்குகளை சமைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.. செல்லுலோஸ் அதிகமுள்ள கீரைகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்குகள் வேகாமல் இருப்பின் அஜீரணம் உண்டாகும். Õவெந்து கெட்டது முருங்கைக் கீரை வேகாமல் கெட்டது அகத்திக் கீரை’ என்ற பழமொழி சொல்வது முருங்கைக் கீரையை அதிகம் வேக வைக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

சுரைக்காய் சாறு சாப்பிடும் பழக்கம் யோகா பிரியர்களிடம் அதிகரித்து வருகிறது. அது நல்லதுதான்.. ஒரு வேளை, சுரைக்காய் லேசான கசப்புச் சுவையில் இருந்தால் தவிர்ப்பது நல்லது.

ஆவியில் வெந்தபின் காய்கறிகளைச் சாப்பிடுவது அதிக உடல் உழைப்பில்லாதவர்களுக்கு ஓ.கே. அதிக உடல் உழைப்பு உள்ளவருக்கு ஜீரணத்திற்கான வெப்பம் சிறப்பாக உடலில் இருக்கும். சமைக்காமல் சாப்பிட்டாலும் அவர்களுக்கு செரிக்கும். ஒரு முறை வேகவைத்து இடித்த அவல், பொரியை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம்.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை போன்ற முளைகட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களில் அதிகப்படியான புரதங்களுடன் ஒரு சில எதிர் ஊட்டச்சத்தும் (anti nutrients) இருப்பதாக சில கருத்துக்கள் வருகின்றன. அதனால், அவற்றுடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடுவது இன்னும் நல்லது.

முக்கியமான விஷயம்... சமைக்காத காய்கறி மற்றும் பழங்களை உணவுக்கு அரைமணி நேரம் முன்பு சாப்பிடுவது ஜீரணத்திற்கு நல்லது.

எந்தக் காய்கறிகளை
அப்படியே சாப்பிடலாம்?

நார் அதிகமில்லாத காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதில் தவறில்லை.

வெண்டை, வெங்காயம், கேரட், முள்ளங்கி, தக்காளி போன்றவை சமைக்காமல் அப்படியே
சாப்பிடலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக