பிரபலமான இடுகைகள்

சனி, 30 ஏப்ரல், 2011

அனுபவங்கள் பேசுகின்றன !

லைனிங் மிஸ்ஸிங்... டீஸிங் கம்மிங்!


சமீபத்தில் நானும் என் தோழியின் தங்கையும் ஸ்கூட்டியில் சென்றோம். சிக்னலில் நின்றபோது, எங்கள் வண்டிக்குப் பின்னால் நின்றிருந்த பைக் இளைஞர்கள் என் தோழியைப் பார்த்து, ''ஏய் மஞ்சள் புறா... உள்ள வெள்ளை புறா...'' என்று கேலி பேச, அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் ஆகிவிட்டது எனக்கு. காரணம், வெளிர் மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்த என் தோழியின் தங்கை, அந்த மெல்லிய உடைக்கு லைனிங் கொடுத்து தைக்காததால், அவளின் வெள்ளை உள்ளாடை அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்குத்தான் மேற்கண்ட அநாகரிக கமென்ட் உதிர்த்தார்கள் பைக் இளைஞர்கள்.
ஒரு பெண்ணை நாகரிகமாகப் பார்க்கத் தெரியாத அந்த நான்சென்ஸ் இளைஞர்களை நம்மால் திருத்த முடியாது. ஆனால், இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்க நாம் எப்போதும் கவனமாக உடுத்திக் கொள்வது சாத்தியம்தானே?!
- பி.சூர்யா, மதுரை
அக்கம் பக்கம் பழகுவோம்!


அன்று எங்கள் பக்கத்து வீட்டு டேங்க்கில் தண்ணீர் நிறைந்து வழியும் சத்தம் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்தது. 'கவனிக்காம விட்டிருப்பாங்க... கூப்பிட்டு மோட்டாரை ஆஃப் பண்ணச் சொல்லலாம்...’ என்று அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிய போதுதான் தெரிந்தது வீட்டில் ஆள் இல்லை என்று. காலையில் மோட்டாரை போட்டவர்கள், பவர் கட் ஆனதும் ஆஃப் செய்ய மறந்து வெளியே கிளம்பிவிட்டார்கள் போல! அவர்களின் மொபைல் எண்ணும் என்னிடம் இல்லை. பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் அருகில்தான், அந்த வீட்டு உரிமையாளரும் கடை வைத்திருக்கிறார். எதேச்சையாக அந்த நேரம் லோக்கல் சேனலில் ஜவுளிக்கடையின் விளம்பரம் வர, அந்தத் தொலைபேசி எண்ணை அழைத்து ''பக்கத்து கடைக்காரங்ககிட்ட விஷயத்தை சொல்லிடுங்க...'' என்றேன். ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து வந்து மோட்டாரை ஆஃப் செய்தார் பக்கத்து வீட்டுக்காரர். அதற்குள் வீணான நீர், எங்கள் தெருவில் ஒரு குட்டி ஆற்றையே உருவாக்கியிருந்தது!
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படும் நீதி யாதெனில்... அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் தொடர்பு எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது எப்போதும் அவசியம்!
- சைலவதி, வேலூர்
லீவுக்கு சம்பளம் உண்டா?

'குழந்தைங்களுக்கு லீவ் விட்டாச்சு. இனி ரெண்டு மாசம் முழுக்க ஊருல எங்கம்மா வீட்டுல இருந்துட்டு, ஸ்கூல் ரீ-ஓபன் ஆகறதுக்கு நாலு நாள் முன்னதான் வருவேன்டி...’' என்று குஷியாக துணிகளை பேக் செய்து கொண்டிருந்தாள் என் தோழி. அவள் வீட்டில் வேலை பார்க்கும் பெண், ''எனக்கு ரெண்டு மாச சம்பளம் கொடுத்துட்டுப் போறீங்களாம்மா...’' என்று தயங்கியபடியே கேட்க, ''அதான் நீ வேலைக்கே வரப் போறதில்லையே... அப்புறம் எதுக்கு சம்பளம்..?’' என்றாள் தோழி கடுப்பாக. ''ரெண்டு மாசம் சம்பளம் இல்லாம நான் எப்படிம்மா சமாளிப்பேன்...?'’ என்று சின்ன குரலில் விளக்க முற்பட்ட அந்த பெண், பின் வாடிய முகத்துடன் பாத்திரம் கழுவப் போய்விட்டார்.
அதையடுத்து என் தோழியிடம், ''உன் வீட்டுக்காரரோட ஆபீஸ்ல, 'ரெண்டு மாசம் ஆபீஸை மூடப் போறோம். நீங்க எல்லாம் வேலைக்கு வர வேண்டாம். சம்பளமும் கிடையாது’னு திடீர்னு வொர்க்கர்ஸ்கிட்ட சொல்டறாங்கோனு வெச்சுக்கோ.. அப்ப என்னடி பண்ணுவே நீ..?'' என்று நான் கேட்க... அவளுக்கோ ஷாக். ''இப்போ புரியுதா அந்தப் பெண்ணோட நிலமை..? உன்னோட வசதிக்கு, அந்தக் காசை சம்பளமா கொடுக்கறதால நீ குறைஞ்சிடப் போறதில்ல. ஆனா, அவங்களுக்கு ஆதாரமே இதுதான். ரெண்டு மாச சம்பளம் இல்லாட்டியும், ஒரு மாச சம்பளத்தையாவது கொடுக்கலாமே... அவங்களும் சந்தோஷமா வாழ்த்துவாங்களே!'’ என்று நான் புரியவைக்க, வேலைக்கார பெண்ணை அழைத்து, அட்வான்ஸாக இரண்டு மாத சம்பளத்தைத் திணித்தாள் தோழி!

__._,_.___

ஒரு மனைவி மனது வைத்தால் ..!

சிகரெட்... சீக்ரெட்...

'அமெரிக்க அதிபர் ஒபாமா, சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டார். பதின்பருவ வயதிலிருந்தே ஒபாமாவைப் பிடித்தாட்டிய புகைப் பிசாசு, தற்போது
தலைதெறிக்க ஓட்டமெடுக்கக் காரணம், ஒபாமாவின் மனைவி மிச்சேல்!’
- உலகம் முழுக்க இல்லத்தரசிகளிடம் ஹிட் ஆகியிருக்கிறது இந்தச் செய்தி!



''புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதென 'மறுபடியும்’ நான் முடிவு செய்திருக்கிறேன்...'’ - 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இப்படி ஓபன் டாக் விட்டார் ஒபாமா! அதிபர் நாற்காலியில் அமர்ந்ததும், பொறுப்பு உணர்வோடு புகையைக் குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தார் மனைவி மிச்சேல். ஆனால், முன்னைவிட டென்ஷன் கூடிப்போனதாகச் சொல்லி, சிகரெட்களின் எண்ணிக்கை யையும் ஒபாமா கூட்டியதுதான் மிச்சம்!
வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல முக்கிய முடிவுகளில் அதிபரின் மனைவிக்கும் பங்கு உண்டு என்பது அமெரிக்கா அறிந்த ரகசியம். அப்படித்தான், கிடப்பிலிருந்த 'புகையிலை பொருட்கள் கட்டுப் பாடு மசோதா’வை தூசுதட்டி எடுத்து, அதிபரைக் கையெழுத்திட வைத்துவிட்டார் மிச்சேல்.
இதைச் சாதிக்க, ஓராண்டு காலமாக பிரம்மப் பிரயத்தனமே செய்திருக்கிறார் மிச்சேல் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் ஜிம்மில் 45 நிமிடங்கள், வாரத்தில் இருமுறை ஒபாமாவுக்குப் பிடித்த பேஸ்கட் பால் விளையாட்டு என்று கட்டாயமாக்கிய மிச்சேல், தானும் கணவருடனேயே ஜிம்மிலும், கிரவுண்டிலும் பழியாகக் கிடந்தார். 'உடற்பயிற்சியும், பிடித்தமான விளையாட்டுகளும் ஒருவரை எப்படியான மன அழுத்தத்திலிருந்தும் விடுவித்துவிடும்' என்பதைத் தீவிரமாக மிச்சேல் நம்பியதுதான் இதற்குக் காரணம்!
அடுத்து... புகைக்கு மாற்றாக டாக்டர்கள் பரிந்துரைக்கும் 'நிக்கோடின் சூயிங்க'த்தை ஒபாமா வின் கோட் பாக்கெட்டுகளில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். புகைப்பதற்கென்றே ஒபாமா வலிய உருவாக்கி வைத்திருந்த 'பிரேக்' நேரங்களை நாசூக்காக நறுக்கினார். முக்கியமாக, அதிபரின் பிரத்யேக மருத்துவரை புகைப் பழக்கம் இல்லாத ஒருவராக தேர்ந்தெடுத்து மாற்றினார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஒபாமாவின் தினசரி சிகெரெட்டுகள் ஐந்தாக குறைந்தன. இதையடுத்து, வெள்ளை மாளிகை வட்டாரத்துக்குள்ளேயே புகைக்கும் வழக்கம் குறைய ஆரம்பித்ததுதான் ஹைலைட்!
க்ளைமாக்ஸாக, 'புகைப் பழக்கத்தை விட்டொழித்து விட்டேன்’ என்று பகிரங்கமாக கணவரை விட்டே மீடியாவில் அறிவிக்க செய்த மிச்சேல், ''இந்த விஷயத்தில் என்னையே நீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கணவர்களைக் காப்பாற்றுங்கள்'’ என்று அமெரிக்க இல்லத்தரசிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்!
சூப்பர்ல?!


30 நிமிட அடிமை!

''ஒருவரின் புகைப் பழக்கத்தை மாற்ற, அவருடைய மனைவி கட்டாயம் மனது வைக்க வேண்டும் என்பது உண்மை. அதைத்தான் நிரூபித்திருக்கிறார் மிச்சேல் ஒபாமா'’ என்று சொல்லும் புதுச்சேரியைச் சேர்ந்த நுரையீரல் நோய் நிபுணர்களான டாக்டர் வெங்கடேஷ்வர பாபு - டாக்டர் மஞ்சு தம்பதியர்,

''காலையில் கண் விழித்ததிலிருந்து சுமார் 30 நிமிடத்துக்குள் புகைக்கும் கணக்கை ஒருவர் துவக்கினால்... அவர் புகைக்கு அடிமை. 15 நிமிடங்களிலேயே அது துவங்கினால்... நிலைமை ரொம்ப சீரியஸ்! கட்டுப்படுத்தவில்லை என்றால்... உயிருக்கே ஆபத்துதான்.
புகைப் பழக்கம், கணவனை மட்டுமல்ல... குடும்பத்தையே பாதிக்கக்கூடிய மோசமான நோய். புகைப் பழக்கத்தின் காரணமாக கணவனுக்கு ஏற்படும் எல்லா பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வந்து சேரும். குறிப்பாக... குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு வரும். மனைவி கர்ப்பமாக இருந்தால்... வயிற்று சிசுவின் ரத்த ஓட்டக்குறைவு, நுரையீரல் செயல்பாட்டுக் குறைவு போன்றவையும் ஏற்படும். எனவே, புகைக்கு எதிரான விழிப்பு உணர்வு மனைவிக்கு அதிஅவசியம். ஹார்ட் அட்டாக், கேன்சர் அறிகுறி போன்றவை தென்பட்ட பிறகு விழிப்பு உணர்வு அடைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை!'' என்று எச்சரிக்கைக் குறிப்புகளைத் தந்தனர்.

இலங்கைப் போர்க் குற்றங்களு​ம் மனித உரிமை மீறல்களும் : ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பட்டியல்

விடுதலைப்புலிகள் உடனான இறுதிகட்டப் போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
அரசின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாகவே அப்பாவி மக்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை, ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என மதிப்பிட்டுள்ளது.
இலங்கைப் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் பட்டியலிடும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் 214 பக்க ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்பட்டது. (முழுமையான அறிக்கையை தரவிறக்கம் செய்ய கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது).
இந்த அறிக்கையில் இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் போர்க் குற்றங்கள் முழுமையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

நிபுணர் குழு நிறைவாக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா., வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு இந்த விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:
* இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிக் கட்டபோரில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் போர்க் குற்றங்களைச் செய்தன.
* போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.


* இலங்கை அரசின் படைகளும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அரசின் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகள்...
* இலங்கை ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளது.
* மருத்துவமனைகள் மற்றும் மனித நேய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
* இலங்கை அரசு மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது.
* போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறப்பட்டுள்ளது.
* போர் வலயத்துக்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்.
புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்...
* பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியது.
* தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தது.
* பொதுமக்கள் நிலைகளுக்கு அருகில் ஆயுதங்களைப் பயன்படுத்தியது.
* பலவந்தமாக சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டது; தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்.
நிபுணர் குழு பரிந்துரைகள்...
* இலங்கைப் போர்க் குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* சர்வதேச விசாரணைகள் கொள்கை அடிப்படையில் அல்லாமல், கட்டயாமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
* போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தன்னிச்சையான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசும், ஐ.நா.வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மேற்கு நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள், வருமானங்கள் போன்றவற்றை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் போய்ச் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, பொதுமக்கள் பலியாகாமல் தடுக்கும் வகையில், சர்வதேச நாடுகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று ஐ.நா. நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை முழுமையாக தரவிறக்கம் செய்ய... http://new.vikatan.com/news/images/Srilanka.pdf

கிளிப்பேச்​சு...மொழி போச்சு !

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
ராகுல் சென்... கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நான்கு வயது சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். ''குட்டி ராகுலுக்கு என்ன ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்?'' என தமிழில் கேட்டேன். பதில் சொல்லத் தடுமாறினான். அதையே ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கும் பதிலில்லை. அவன் தாய்மொழியான பெங்காலியில் கேட்டபோதும் தடுமாற்றமே!
''இப்படித்தான்... அவனுக்குப் பேச்சும் சரியா வரல... நாம பேசறதைப் புரிஞ்சுக்கவும் சிரமப்படறான். பேச்சுலயே இவ்வளவு பிரச்னை இருந்தா, பாடமெல் லாம் எப்படிப் படிப்பான்..?'' என்றார் அவனுடைய அம்மா மனதெல்லாம் தவிப்புடன்.

அவரிடம், ''குழந்தைகிட்ட வீட்ல என்ன மொழியில பேசுவீங்க..?'' எனக் கேட்டேன். ''எங்க தாய்மொழியில தான் பேசுறோம் டாக்டர்...'' என்றார். ''அவனுடைய அப்பா அவனிடம் என்ன மொழியில பேசுகிறார்?’' என்றதற்கு, ''இங்கிலீஷ், பெங்காலினு ரெண்டு மொழி யிலயும் பேசுவார்'' என்றார். ''அக்கம் பக்கத்துல அவன் வயசு குழந்தைங்க அவன் கூட விளையாடும் போதும், ஸ்கூல்லயும் என்ன மொழியில பேசுவாங்க..?'' என்றேன். ''நாங்க இருக்கறது கொஞ்சம் வசதியான அபார்ட் மென்ட். அங்க எல்லா குழந்தைகளும் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கறதால பெரும்பாலும் இங்கிலீஷ்தான். ஸ்கூல்லயும் அதேதான்'' என்றார் அவனுடைய அம்மா பயத்துடனும் குழப்பத்துடனும்!
அங்குதான் பிரச்னையே! குழந்தை, தான் வளரும் சூழ்நிலையில் தமிழ், ஆங்கிலம், பெங்காலி என்று மூன்று மொழிகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அங்கே, பெரும்பாலானவர்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம். ஆனால், அவனுடன் அதிகம் பேசும் அம்மா, பெங்காலியில் பேசியிருக்கிறார். அதனால் எந்த மொழியையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாமல் போனதால், பள்ளியிலும் சரியாகப் படிக்க முடியவில்லை; தான் பேச நினைக்கும் விஷயங்களைச் சரியாகவும் முழுமையாகவும் சொல்ல முடியவில்லை அவனால்.
மாநிலம் விட்டு மாநிலமோ, வெளிநாடு சென்றோ வாழும் இளம் பெற்றோர்களின் சிறுவயது பிள்ளைகள் சந்திக்கும் பெரும் பிரச்னை இது. இதற்கு தீர்வு..?! வாழிடத்திலும் சுற்றுப்புறத்திலும் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியையே பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை வளர்க்கும்; நட்பு வட்டமும் விரிவடையும். இல்லையென்றால், 'எனக்கு அவங்ககிட்ட என்ன பேசுறதுனு தெரியலையே...’ என்று வீட்டுக்குள்ளயே சுருங்கிவிடும். அது, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தடுக்கும்.
க்ருஷாங்கினியின் கதையைப் பார்ப்போம். உலக மேப்பில் எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், சரியாகக் காட்டுவாள். ஒரு நாட்டின் கொடியைக் காண் பித்தால்... எந்த நாட்டுக் கொடி என்பதை அழகு மழலையில் அடுத்த நொடியே சொல்லி விடுவாள். வீட்டுக்கு யார் வந்தாலும் இவளைக் கூப்பிட்டு 'அதை சொல்லும்மா... இதை சொல்லும்மா’ என்று பெருமைப்படுவார்கள் பெற்றோர். ஆனால், அவளிடம் வேறு எந்த விஷயங் களைச் சொன்னாலும் உடனே புரிந்து கொள்ள மாட்டாள். காரணம், சொன்னதைச் திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளையாகத்தான் க்ருஷாங்கினி வளர்க்கப்பட்டிருக்கிறாள். பெற்றோர் திரும்பத் திரும்பச் சொல்லித் தந்தவற்றை மனப்பாடமாக வைத்துக் கொண்டு, யார் கேட்டாலும் 'கடகடவென’ ஒப்பித்திருக்கிறாள்.
உண்மையான மொழியறிவு என்பது சொன்னதைத் திருப்பிச் சொல்லும் 'கிளிப் பேச்சு’ அல்ல. ஒரு விஷயத்தைக் காதால் கேட்டு, கண்ணால் பார்த்து, அறிவால் புரிந்து கொண்டு பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை ஒழுங்காகவும் சரியாகவும் வளர்க்கும். அது இருந்தால்தான் எங்கும் எதிலும் உச்சத்தை தொட முடியும்.
அறிவார்ந்த மொழிப்பேச்சு இருக்கும் குழந்தைதான் தான் நினைக்கும், உணரும் விஷயங்களைச் சரியாகச் சொல்லும். அந்தத் திறன் இருக்கிற குழந்தையால்தான் பள்ளியில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்து படிக்க முடியும். அப்படியான திறன் இல்லாத குழந்தைகள், பிராக்டிகல் நாலெட்ஜில் பின்தங்குவார்கள். உதாரணமாக, 'ரைட்டிங்’ என்ற ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங்கை மனப்பாடம் செய்து 'டிக்டேஷன்’ல் சரியாக எழுதி விடுவார்கள். ஆனால், வகுப்பில் 'ரைட்டிங்’ என்ற வார்த்தையை வைத்து ஐந்து வரிகள் சுயமாக எழுதச் சொன்னால்... விழிபிதுங்கி நிற்பார்கள்.
மாறாக, 'ரைட்டிங்’ என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை புரிந்து வைத்திருக்கும் குழந்தை, அழகான கட்டுரையையே எழுதி மிஸ்ஸிடம் 'வெரிகுட்’ வாங்கி, அந்த நிமிட ஸ்டார் ஆகிவிடுவாள்.
ஆகையால், உங்கள் குழந்தை சொன்னதைச் சொல்லும் 'கிளிப்பிள்ளை’யாக இருக்கிறதா..? அறிவார்ந்த 'மொழிப்பிள்ளை’யாக இருக் கிறதா என்பதை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கவனிப்புதான் குழந்தையை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற வைக்கும் ஏணி!
__._,_.___

''எல்லோர்க்​கும் பெய்யட்டும் மழை!''

சமீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.
'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’
இந்தக் கேள்விக்கு, 'நேர்மை’ என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.
'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு’ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...’ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!’
நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.
அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!’ என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.
இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்’ என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது’ என்றாள்.
உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.
அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்’ என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.
இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.
இது போதிக்கும் பாடம் என்ன? நேர்மையைக் கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.
திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன் தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!
நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை’ என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.
அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.
ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!
என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத் தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?
நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.
எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?
எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!
அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.
'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.’
ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!
பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!
மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!
__._,_.___

முள்வேலி

''இன்னும் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் ஏன் வைத்திருக்கிறீர்கள்?'' - இரக்கம் தோய்ந்த வார்த்தைகளால் கொழும்பு நிருபர் ஒருவர் கேட்டார்!
''முகாமில் இருக்கும் மக்களை விலங்குகள் கடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!'' - இந்தத் திமிரான பதில் ஆளும்கட்சி எம்.பி. அப்துல் காதர் தந்தது!
''இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் குடியிருந்த இடத்துக்கு மாற்றாமல் இழுத்து அடிக்கிறதே அரசாங்கம்?'' - இப்படி ஒரு கேள்வி விழுந்தது. இலங்கையின் பிரதான அரசியல் அமைப்புகளில் ஒன்றான ஜாதிஹல உறுமய அமைப்பின் மாநாடு இதே வார்த்தைகளை மாற்றித் தீர்மானம் போட்டது. 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து போர்ச் சூழல் காரணமாக, ஒரு லட்சத்து 65 ஆயிரம் சிங்களவர்கள் தென் இலங்கைக்கு வந்தார்கள். அவர்களை முதலில் வட, கிழக்கு மாகாணங்களில் குடியேற்ற வேண்டும்!’ என்றது தெனாவட்டாக!

''எங்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். யாரும் அதற்கு ஞானோபதேசம் செய்ய வேண்டியது இல்லை!'' என்கிறார்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவும் அவரது தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷேவும்.
சென்னைக் கடற்கரையில் நின்று, ''இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வலியுறுத்துவோம்!' என்று சோனியா சொன்னதுபற்றி அங்குள்ள அமைச்சர் லஷ்மண் யாப்பாவிடம் கேட்டார்கள். ''அப்படியா சொன்னார் சோனியா? எங்களிடம் அப்படிச் சொல்லவே இல்லையே!'' என்று கிண்டல் அடித்தவர், ''இன்னும் விளக்கமான பதில் வேண்டுமானால், சோனியாவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்!'' என்று சிரித்தார்.
வீடும் வாசலும், மண்ணும் மக்களும், ஊரும் உறவும் இழந்து, நெஞ்சில் துளி உயிரும் சுவாசிக்கக் கொஞ்சம் காற்றும் தவிர, கையிருப்பு எதுவும் இல்லாத தமிழ் ஈழத்து மக்களை, இலங்கை அரசாங்கம் எப்படி மதிக்கிறது என்பதற்கான வாக்குமூலங்கள்தான் இவை. இவர்கள் அந்த மக்களை எப்படி நடத்துவார்கள் என்பது, இதைப் பார்த்தாலே தெரியும்!
நிராயுதபாணியான சொந்த தேசத்து மக்களை ஒரே இடத்துக்கு அழைத்து வந்து, கொட்டடியில் போட்டுப் பூட்டிய கொடுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் தொடங்கியது. 'பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான போர்’ என்று சொல்லப்பட்ட அந்த யுத்தம் முடிந்த பிறகு, சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் இந்த திறந்த வெளிச் சிறையில் சிக்கவைக்கப்பட்டார்கள். 'ஆயுதம் அற்ற இந்த மனிதர்களை ஊருக்குள் விட்டால் என்ன?’ என்றபோது, 'இதுவரை பயங்கரவாதிகளைக் காப்பாற்றியவர்கள் இவர்கள்தான். எனவே, இவர்களும் குற்றவாளிகள்தான்!’ என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே சொன்னார்.
குற்றவாளிகளாக அடைக்கப்படும் கைதிகளுக்குக்கூட உலகத்தில் வேளாவேளைக்கு உணவும், தங்க ஒழுங்கான இடமும் உண்டு. ஆனால், இவர்கள் அனைவரையும் கைதிகளைவிடக் கேவலமாக நடத்தினார்கள். காயம்பட்டவர்களுக்கு மருந்து தராமலும், மற்றவர்களைப் பட்டினி போட்டும் கொல்லும் நவீனக் கொலை பாதகம் சத்தம் இல்லாமல் அரங்கேறியது. அதற்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்ச மாகத் தமிழர்களை வெளியில் விட ஆரம்பித்தார்கள். விட்டால் போதும் என்று வெளியேறிய தமிழர்கள், தங்களது சொந்த வீடுகளைத் தேடிப் போனபோது சோகம் இன்னும் அதிகமானது.
தமிழர்கள் தங்கி இருந்த வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டும், கதவு, ஜன்னல் மற்றும் நிலைகள் பெயர்க்கப்பட்டும், மேல் தளம் தகர்க்கப்பட்டும் மொட்டைச் சுவர்களாக மட்டுமே இருந்து தமிழர்களை வரவேற்றன. விவசாயம் பார்த்தவனுக்கு அவனது நிலங்கள் தெரியவில்லை. அவை வேறு யாருக்கோ ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிளாட் போடப்பட்டு விட்டன. மீன்பிடித் தொழில் பார்த்தவர் களுக்கு கடற்கரை ஓரங்களில் கால் வைக்கவே அனுமதி இல்லை. மேலும் படகுகள், வலை கள் என எதுவும் இல்லை. கையில் வைத்திருக்கும் சொற்பப் பணம் சாப்பாட்டுக்கே போதாது. படகுகள் எங்கே வாங்குவது? இதற்கு முள்வேலி முகாமே நல்லதோ என்று நினைக்க ஆரம்பித்தான் தமிழன். 'மரத்தில் இருந்து கீழே விழுந்து கால் ஒடிந்தவனை, மாடு ஏறி மிதித்தது மாதிரி இருக்கிறது தமிழனின் நிலைமை!’ என்று வீரகேசரி பத்திரிகை வர்ணிக்கிறது.
இலங்கை அரசாங்கம் அமைத்த முகாம் களில் தங்கி இருந்த தமிழர்களுக்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனமும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொண்டு அமைப்புகளும்தான் உணவு, குடிநீர் வசதியைச் செய்து கொடுத்தன. இலங்கையில் நடந்த கொடூரத்தை உணர்ந்த பல்வேறு அமைப்புகள் பணத்தைக் கொடுத்தன. அதை இந்த அமைப்புகள் ஓரளவு முறையாகச் செலவும் செய்தன. இது அரசாங்கத்தின் கண்களை உறுத்த ஆரம்பித்தது. உடனே, 'இப்படி வரும் பணத்தை நேரடியாக இந்த நிறுவனங்கள் செலவு செய்யக் கூடாது. அரசாங்கத்தின் வழியாகத்தான் செலவு செய்ய வேண்டும்’ என்று முதல் தடையைப் போட்டார்கள். இவர்கள் வழங்கும் பொருட் களில் அரசு முத்திரை வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். அப்படி வந்த நிதியை உடனடியாக ஒதுக்குவதில் தயக்கம் காட்டினார்கள். இதனால், ஏகத்துக்கும் திண்டாட்டம் ஆனது. ஒரு ஆளுக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, தொண்டு நிறுவனங்கள் அளித்து வந்தன. பணம் கிடைக்காததால், தண்ணீரின் அளவை 5 லிட்டர் ஆக்கினார் கள். அதன் பிறகு, தண்ணீரே வழங்கப் படவில்லை. இத்தனைக்கும் தண்ணீரை அரசு நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கினார்கள்.
வன்னியில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் வந்து சேர வில்லை. இதைப்பற்றி எல்லாம் அமைச்சர் பசில் ராஜபக்ஷேவிடம் கேட்டபோது, 'இனிமேல், இம்மாதிரியான தொண்டு நிறுவனங்கள் எங்கள் நாட்டுக்குத் தேவையே இல்லை!’ என்று மொத்தமாகக் கதவை மூடினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் முகமாக இலங்கை அரசாங்கம் இரண்டு முக்கியமான அமைச்சகங்களை அமைத்தது. 'புனர் வாழ்வு அமைச்சு’ என்பது முதலாவது. 'மீள் குடியேற்ற அமைச்சு’ என்பது இரண்டாவது. இந்த இரண்டு அமைச்சகங்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் செயல்பட வேண்டும். ஆனால், இன்று வரை இந்த அமைச்சகங்களின் அலுவலகங்கள்கூட அங்கு அமைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் தூதரகத்தை அமைத்துவிட்டதாக முதல்வர் கருணாநிதிக்குப் பெருமிதம் பொங்கக் கடிதம் எழுதினார், நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.
30 ஆண்டு காலச் சண்டையும் மோதலும் இதற்காகவா நடந்தது? உயிர் இழந்தவர், உடல் உறுப்பு இழந்தவர், சொத்தை இழந்தவர், தொழில் மற்றும் வருவாய் இழப்பு அடைந்தவர் கள், மீள் குடியேற்றம் நடந்துள்ளதா இல்லையா... என்பது போன்ற தகவல்களை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வுக்கு, அதைப்பற்றிக் கவலையே இல்லை. இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பெற இந்தியாவுக்கு உரிமை இருக்கிறது. மறைமுகமான ராணுவ உதவிகளை மட்டுமல்ல... வெளிப்படையான பண உதவிகளும் இந்தியர்களின் வரிப் பணத்தில் இருந்து செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிஷப் டாக்டர் ராயப்பு ஜோசப் அளித்துள்ள அறிக்கையைப் படித்தால் மனம் பதறுகிறது. '2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வன்னி மற்றும் முல்லைத் தீவுப் பகுதி மக்கள் தொகை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59. ஆனால், இப்போது அரசு வசம் இருப்போர் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர் மட்டும்தான். அப்படியானால் 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் என்ன ஆனார்கள்?’ என்று கேள்வி கேட்கிறார். இதற்கு யார் பதில் சொல்வது?
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி மாணிக்கம் பண்ணை 0 மற்றும் 1 முகாம்களில் மட்டும் 17 ஆயிரத்து 528 பேர் முள்வேலிகளுக்குள் இன்னமும் இருக் கிறார்கள். ஏதாவது கிடைத்தால் சாப்பிடுவார்கள். யாராவது கேட்டால், பேசுவார்கள். மற்றபடி கையது கொண்டு மெய்யது பொத்தி... வாழ்க்கை தொடர்கிறது. மரண நாள் குறிக்கப்பட்ட பெரியவர்கள், யாருமற்ற மூதாட்டிகள், உடல் உறுப்புகளை இழந்த ஆண்கள், போர்க் காயங்கள் ஆறாத பெண்கள், உடல் வற்றிப்போய் எலும்பைத் தோலால் மூடி இருக்கும் குழந்தைகள்... என்று இவர்களை வகைப்படுத்தி இருக்கிறது ஒரு தொண்டு நிறுவனம்.
இளம் பெண்கள் மட்டுமே இன்று அவர்கள் விரும்பும் பண்டமாக இருக்கிறது. சிங்களக் கரு தாங்கிய தமிழ்த் தாய் மடிகளாய் அவை மாறி, ஈழக் கனவை இப்படியும் சிதைக்கலாம் என்று காட்டப்போகிறார்களாம்!
இனி யாருக்கு வேண்டும் நாடும்... நாடு கடந்தும்?
__._,_.___

விகடன் மேடை - அப்துல்கலா​ம்

''நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும். 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''
- ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

எஸ்.சங்கரன், காரைக்குடி.
''உங்கள் ரோல் மாடல் யார்?''
''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''
கே.மாலதி, நாச்சியார்புரம்.
''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''
''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த். அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!
அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள MIT-ல் கல்வி கற்பதாகும். முதன்முறையாக MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார். அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''
இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.
''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''
''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''
ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.
''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''
''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''
பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.
''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''
''அறிவுத் தாகம்!''
ஆ.சங்கர், திருப்பூர்.
''உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''
''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''
ப.சிவராமன், பழநி.
''விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''
''ஆசிரியர்!''
ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.
''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''
''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.
''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''
''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.
எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''
சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.
''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''
''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!''
-அடுத்த வாரம்....
''ஜனாதிபதி பதவிக் காலத்தில், தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொருபுறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''
''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

புதன், 27 ஏப்ரல், 2011

பழச்சாறு தயாரிப்பு!

ஆண்டுக்கு எட்டு மாதம் வெயில் சுட்டெரிக்கும் நம்மூரில் சில்லென்று கிடைக்கும் குளிர்பானங்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறு தயாரிப்பு பிஸினஸ்தான் இப்போதைக்கு செம ஹிட்!
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் மது அல்லாத பானங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. பழச்சாறுகள், ஊட்ட பானங்கள், கார்போனேட்டட் குளிர்பானங்கள், டீ, காபி மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போன்றவைதான் மது அல்லாத பானங்களாகக் கருதப்படுகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலை, அதிகரிக்கும் வருமான விகிதம், மாறிவரும் வாழ்க்கைமுறை, உடல்நிலை சம்பந்தமான விழிப்புணர்வு அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் நம் நாட்டில் இவ்வகை பானங்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே உடல்நிலை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக இருக்கிறது.
பிளஸ், மைனஸ்!
இந்தத் தொழிலில் உள்ள சாதக மற்றும் பாதகமான விஷயங்கள் இதோ:
சாதகங்கள்!
* நகர மற்றும் கிராமப் புறங்களில் இருக்கும் சந்தை வாய்ப்பு.
* இந்த துறையில் நல்ல பிராண்ட்-ஆக வரும் வாய்ப்பு.
பாதகங்கள்!
* குறைந்த ஏற்றுமதி வாய்ப்பு.
* பிராண்டட் தயாரிப்புகளுக்கு போட்டியாக அதிகம் உலா வரும் போலித் தயாரிப்புகள்.

வாய்ப்புகள்!
* கிராமப்புறச் சந்தையில் பழச்சாறுகள் இன்னும் பெரிய அளவில் நுழையவில்லை.
* நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால், அதிகளவில் வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது.
* உள்நாட்டு சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.
* ஓரளவுக்கு இருக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள்.
அச்சுறுத்தல்கள்!
* வரி மற்றும் சட்ட முறைகள்.
* அயல்நாட்டு பிராண்டுகள்.

டெக்னிக்கல் விஷயங்கள்!
உடனடியாக அருந்தும் வகையில் மாம்பழம் மற்றும் ஆப்பிள் பழச்சாறுகள் தயாரிக்கத் தேவையான விஷயங்கள் இனி:
மாம்பழம் மற்றும் ஆப்பிள் சாறைத் தயாரித்து விற்பனைக்கு கொடுக்கலாம். ஒரு பேட்ச் என்பது 2,000 லிட்டர் பழச்சாறாகும். ஒரு நாளைக்கு 12 பேட்ச் பழச்சாறை தயார் செய்வதன் மூலம், நாளன்றுக்கு 24,000 லிட்டர் சாறு தயாரிக்க முடியும். வருடத்திற்கு 300 வேலை நாட்கள் எனில் 100 சதவிகிதம் வேலை பார்த்தால் ஆண்டொன்றுக்கு 72 லட்சம் லிட்டர் பழச்சாறு தயாரிக்க முடியும்.
இடம்!
மேலே குறிப்பிட்டுள்ள உற்பத்தித் திறனுக்கு சுமார் 36,000 சதுர அடி வரை இடம் தேவைப்படும். இதில் கட்டடத்திற்கு மட்டும் சுமார் 9,000 சதுர அடி தேவைப்படும். இது செயல்முறை கட்டடம், ஸ்டோர் ரூம், ஜெனரேட்டர் ரூம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அடங்கியதாகும். கட்டடம் கட்டுவதற்கு 57.00 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

மூலப்பொருள்!
பழச்சாறுக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களான ரிவர்ஸ் ஆஸ்மாஸில் முறையில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர், சர்க்கரை, மாம்பழம் அல்லது ஆப்பிள் கூழ் ஆகியவை தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான சிட்ரிக் ஆசிட், சோடியம் பென்சோயேட், சோடியம் சிட்ரேட், பொட்டாசியம் சார்பேட் ஆகியவை தேவைப்படும். வருடத்திற்கு 100 சதவிகிதம் திறனைக் கொண்டு தயார் செய்வதாக இருந்தால் 53 லட்சம் லிட்டர் தண்ணீரும், 10 லட்சம் டன் சர்க்கரையும், 7 லட்சம் டன் மாம்பழக்கூழும், 1.75 லட்சம் டன் ஆப்பிள் சாறும் தேவைப்படும்.
மின்சாரம்!
இந்த பிஸினஸ் செய்ய 110 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். மின்சாரம் இல்லாத நேரத்தில் 125 கிலோவாட் ஆம்பியர் கெபாஸிட்டியில் ஜெனரேட்டர் வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
வேலை ஆட்கள்!
ஒரு புரொடக்ஷன் மேனேஜர், பிளான்ட் ஆபரேட்டர், குவாலிட்டி கன்ட்ரோல், அக்கவுன்ட்ஸ் மேனேஜர் என சுமார் 30 பேர் வேலைக்குத் தேவை.
தண்ணீர்!
ஒரு நாளைக்கு 75,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒரு மணி நேரத்திற்கு 3,000 லிட்டர் தண்ணீர் ஆர்.ஓ. பிளான்டுக்கு தேவை. அதற்காக ஆழ்குழாய் மூலம் தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாத மாதிரி பார்த்துக் கொள்வது நல்லது.

அனுமதிகள்!
இந்த பிஸினஸுக்கான தொழிற்சாலையைத் தொடங்க பஞ்சாயத்து யூனியனில் அனுமதி பெற வேண்டும்.
தீயணைப்பு துறையின் அனுமதி அவசியம்.
மாநில சுகாதாரத் துறையின் அனுமதி கட்டாயம்.
தொழிற்சாலை இன்ஸ்பெக்டரின் அனுமதி அவசியம்.
நகரத் திட்ட துறையின் அனுமதியும் வேண்டும்.
மாநில சுற்றுச்சூழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி தேவை.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப் பட்டால் மட்டுமே இந்த ஆணையத்திடமிருந்து உரிய அனுமதி பெறமுடியும்.
இந்த தொழிலுக்குத் தேவையான பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு 190 லட்சம் ரூபாய் செலவாகும். இது மின்சாரம், போக்குவரத்து, இயந்திரத்தை பொருத்துதல் உள்ளிட்டவை களை சேர்ந்த தொகையாகும்.
எதிர்பாராத செலவுகள்!
கட்டட வேலைகள், இயந்திரங்கள் ஆகியவைகளுக்கு 5%, அதாவது சுமார் 12.50 லட்சம் ரூபாய் எதிர்பாராத செலவாக ஒதுக்கி வைப்பது நல்லது.
முந்தைய செலவுகள்!
இந்த தொழில் தொடங்கு வதற்கு முன்பே 7.30 லட்சம் ரூபாய் வரை செலவாகும். 83,000 ரூபாய் வரை சோதனை ஓட்டத்திற்கும், பிஸினஸ் ஆரம்பிக்கும்வரை முதலீட்டுக்கான வட்டி 6.50 லட்சம் ரூபாய் எனவும் இதை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
பெப்ஸியும் கோக்கும் போட்டியில்லை!
பழச்சாறு தொழிலில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் தேனி மாவட்டம், காமய கவுண்டன்பட்டி ப்ரஜா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜா, பெப்ஸியும், கோக்கும் எனக்கு போட்டியே இல்லை என நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறார். அவரைச் சந்தித்தோம்.
''பழரச பானங்களுக்கு முக்கிய மூலப் பொருள் பல்ப் எனப்படும் பழக்கூழ். இது சீசனுக்கேற்ப குறைந்த விலையில் பழங் களை வாங்கி தயார் செய்ய வேண்டியது. உதாரணமாக, மாம்பழம் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிறைய கிடைக்கும். நன்கு விளைந்த மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கழுவி, தோல் நீக்கி, விதை பிரித்து, கூழாக்கி தேவையான பிரிஸர்வேட்டிவ் சேர்த்து சேமித்து வைக்க வேண்டும்.
இந்த பழக்கூழை பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் சேமித்து வைக்கலாம். இவ்வாறு சேமித்தால் அதிகபட்சம் 6 மாதம் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். 2,000 ரூபாயில் தொழில் செய்ய நினைப்பவர் தனது தேவைக்கேற்ப பழக்கூழ் வாங்கிக் கொள்ளலாம். எஸென்ஸ் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பாட்டில், ரெடிமேட் லேபிள், ரெடிமேட் மூடிகளை வைத்து வீட்டிலேயே 200 மில்லி மேங்கோ ஜூஸ் 2.50 ரூபாய் அடக்கத்தில் தயார் செய்யலாம். கடைகளுக்கு 4 ரூபாய் விலைக்கு கொடுத்தால், கடைக்காரர்கள் ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்கு விற்றுவிடுவார்கள்.
தமிழகத்தில் மே, ஜூன், ஜூலை மாதங் களில்தான் பழச்சாறு விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், மாம்பழ வரத்தும் மே, ஜூன், ஜூலையில்தான் அதிமாக இருக்கும். ஆக மூலப்பொருளை கொள்முதல் செய்து பழக்கூழாக மாற்றும் வேலையும், உற்பத்தி செய்தபொருளை விற்பனை செய்யும் வேலையும் ஒரே நேரத்தில் வந்து நிற்கும். மாம்பழம், திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு என பல வகையான பழரசங்கள் தயார் செய்ய முடியும் என்றாலும் மாழ்பழச் சாறுக்கு இருக்கும் மவுசே அலாதி!''


முதலீடு!
இந்த பிஸினஸைத் தொடங்கும் பங்குதாரரின் மூலதனமாக 86 லட்சம் ரூபாயும், கடன் 2 கோடி ரூபாயும் தேவை.
கடன்!
இந்த தொழிலுக்கு 2 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். இதனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
செயல்பாட்டு மூலதனம்!
முதல் வருடத்திற்கான செயல்பாட்டு மூலதனம் 77 லட்சம் ரூபாய். முதல் வருட செயல்பாட்டு மூலதனத்திற்கு 58 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
லாபம்!
முதலீட்டில் 30% வரை லாபம் கிடைக்கும்.

நான்கு விதிகள்!

'''சர்வீஸைத்தான் விற்கிறோம்...''
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் சாதாரண மளிகைக் கடையாக ஆரம்பமானதுதான் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இன்று ஈரோட்டிலேயே ஐந்து, கோவையில் ஒன்பது, மதுரையில் மூன்று என தமிழகம் முழுக்க 35 கிளைகளைத் திறந்து வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு காரணம் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் நவநீத கிருஷ்ணனும், தலைவராக இருக்கும் தனுஷ்கரனும்தான். நாமக்கல் - சேலம் சாலையில் இருக்கும் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் நவநீத கிருஷ்ணனை சந்தித்தோம். கடந்த 22 ஆண்டுகளாக தாங்கள் கடந்து வந்த பிஸினஸ் வாழ்க்கைப் பயணத்தை நமக்கு எடுத்துச் சொன்னார் அவர்.
சாம்பார் செய்வதில் சாமர்த்தியம்!
''தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கருவேலம்பாடு என்கிற சிறிய கிராமத்தில்தான் நான் பிறந்தேன். விவசாயக் குடும்பம்தான். தவிர, சின்ன வயதிலேயே என் அப்பாவையும் பறிகொடுத்தேன். சாத்தான்குளத்திலேயே எஸ்.எஸ்.எல்.சி. வரை கஷ்டப்பட்டு படித்தேன். குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே, படிப்பை மூட்டைகட்டிவிட்டு, 1971-ல் சென்னைக்கு பஸ் ஏறினேன், மயிலாப்பூரில் இருந்த மளிகைக் கடையில் வேலை பார்க்க.
அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு அநாதரவாக வந்து சேருகிறவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பவை ஹோட்டல்களும் மளிகைக் கடைகளும்தான். எனக்கு ஹோட்டல் வேலைக்குப் போக இஷ்டமில்லை. காரணம், எங்கள் கிராமத்திலிருந்து ஏற்கெனவே சிலர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளில் வேலை பார்த்ததுதான். நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் விதிவிட்ட வழியாகத்தான் வாழ்க்கை போனது. ஆனால், அப்படியே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துவிட எனக்கு விருப்பமில்லை. முன்னேற வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; கௌரவம் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாமும் வாழ வேண்டும் என்று நினைத்தேன். இந்த எண்ணம் வந்தபிறகு, நான் செய்த வேலையின் தன்மை மாறியது. ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் பொருட்களை ஸ்டாக் செய்வது, சிந்தாமல் சிதறாமல் அதை பாதுகாப்பது, கஸ்டமர்கள் கேட்கிற பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பில்லிங், பொருட்களைக் கொடுக்கிற வியாபாரிகளுக்கு ஆர்டரும் பணமும் கொடுப்பது, இப்படி பல வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். வேறு எந்தத் தொழிலிலும் இப்படி படிப்படியாக பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே!
அந்தக் காலத்தில் கடை வேலைபோக எனக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சமையல்தான். நான் நன்றாகச் சமைப்பேன். நான் சாம்பார் வைத்தால், எனது நண்பர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். எந்த வேலையைச் செய்தாலும் அதன் மூலம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு அப்போதே இருந்தது.
நண்பனுடன் தனிக்கடை!
இப்படி போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது 1985-ல். பதினைந்து ஆண்டு கால அனுபவம் எனக்கு பக்கபலமாக இருக்க, சொந்தத் தொழிலைத் தொடங்க நினைத்து வேலையை விட்டு நின்றேன். இந்த நேரத்தில் என் கிராமத்தைச் சேர்ந்தவரும் எனது சொந்தக்காரரும் நண்பருமான தனுஷ்கரன் ஈரோட்டில் வசித்து வந்தார். அவரும் என்னைப்போல சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி, பிற்பாடு பிஸினஸ்மேனாக மாறியிருந்தார். அவரோடு சேர்ந்து ஒரு சிறிய மளிகைக் கடையை ஆரம்பிப்பதற்காக நான் சென்னையிலிருந்து ஈரோட்டிற்குச் சென்றேன்.
அந்த நேரத்தில் எங்களிடம் பெரிய அளவில் பணம் எதுவுமில்லை. ஆனால், பணமிருந்தால் மட்டும்தான் பிஸினஸ் தொடங்க முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
கடனில் பொருட்களைக் கொடுக்கும் வியாபாரிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். தவிர, எங்கள் சொந்தப் பணம் கொஞ்சம், நண்பர்களிடமிருந்து கடனாக வாங்கியது கொஞ்சம் என கையிலிருந்த பணத்தை வைத்து சின்னக் கடையைத் தொடங்கினோம்.
சின்னக் கடை என்றாலும் எங்கள் வாழ்க்கையை ஓட்டு வதற்கான லாபம் அதிலிருந்து கிடைத்தது. தவிர, சொந்தமாக ஒரு கடையை நடத்தும்போது ஏற்படுகிற பிரச்னைகளை சமாளிப்பது எப்படி என்பதை அந்த நிலையிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. பிஸினஸை நன்றாக விஸ்தரித்த பிறகு செய்யக்கூடாத பல தவறுகளைச் செய்து நாங்கள் பாடம் கற்றோம். முதல் நான்காண்டுகளில் பரவாயில்லை என்கிற அளவில் சென்று கொண்டிருந்த எங்கள் கடை, 1995-க்குப் பிறகு வேகமெடுக்க ஆரம்பித்தது. சின்னக் கடை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சூப்பர் மார்க்கெட் ஆனது. ஒரு கிளை போதாது என்கிற நிலையில் ஈரோட்டிலேயே இன்னொன்றையும் திறந்தோம். ஈரோட்டில் எங்கள் சர்வீஸை பார்த்த கோவை மக்கள், அங்கும் ஒரு கிளை திறக்க அழைப்பு விடுக்க, 1999-ல் கோவையில் முதல் கடையைத் திறந்தோம். இன்று கோவையில் மட்டுமே ஒன்பது இடங்களில் எங்கள் கிளை இருக்கிறது. இவை தவிர, நாமக்கல், திருச்செங்கோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை என 35 இடங்களில் கிளைகளைத் திறந்து விட்டோம்.
நான்கு விதிகள்!
இருபதாண்டு காலத்தில் நாங்கள் பெரிய வளர்ச்சி கண்டதற்கு காரணம், இந்த தொழிலில் நாங்கள் கடைப்பிடித்த நான்கு விதிகள்தான். ஈரோட்டில் சிறிய அளவில் நாங்கள் கடை ஆரம்பித்த காலத்திலேயே இந்த விதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டோம். இன்று வரை அந்த விதியிலிருந்து தவறி வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறோம்.
நிரந்தரம்!
எந்த ஒரு தொழிலையும் நிரந்தர மாகச் செய்ய நினைக்கிறவர்கள் தரமான பொருட்களையே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். எங்கள் கடைகளில் துவரம் பருப்பு என்றால் முதல் குவாலிட்டி பருப்பையே வாங்கி வைப்போம். எல்லாப் பொருட்களிலும் முதல் குவாலிட்டி அல்லது பெஸ்ட் குவாலிட்டி பொருட்களே எங்கள் கடையில் இருக்கும்.
சில கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுக்க நினைத்து இரண்டாவது, மூன்றாவது குவாலிட்டி பொருட் களை வாங்கி விற்கிறார்கள். அல்லது தரம் குறைந்த பொருட்களை வாங்கி, தரமானதாகச் சொல்லி விற்று விடுகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் முதல் குவாலிட்டிக்கு குறைவான பொருட்களை வாங்கி விற்க எங்களுக்கு இஷ்டமில்லை.
தரமான பொருள்தான் வேண்டும் என்றால் நிறைய அலைய வேண்டியிருக்கும். உதாரணமாக, முதல் குவாலிட்டி துவரம் பருப்பு வாங்க குஜராத் துக்குப் போக வேண்டும்; மிளகு, கடுகு போன்றவற்றை வாங்க ஊஞ்சா; நல்ல பிளாஸ்ட்டிக் பொருட்கள் என்றால் மும்பை; நல்ல செருப்பு என்றால் டெல்லி என இந்தியா முழுவதும் அலைய வேண்டியதிருக்கும்.
நியாயமான லாபம்!
தரமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிய பிறகு எங்களுக்கான லாபத்தையும் அதிக அளவில் வைத்தால் அதன் விலை ஏகத்துக்கும் உயர்ந்துவிடும். எந்த பொருளானாலும் அதை நியாயமான விலைக்கு விற்க வேண்டுமென்றால் நமது லாபம் நியாயமானதாக இருக்க வேண்டும். நியாயமான விலை என்பதை எல்லோரும் வாங்கக்கூடிய சகாயமான விலை என பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. பொருளின் தரத்துக்கு ஏற்ப அதன் விலை மாறும். ஆனால், நாம் சொல்லும் விலை நியாயமாக இருக்கும் என மக்கள் ஒப்புக் கொண்டாலே போதும், நம்மை விட்டு வேறு ஒரு கடைக்குப் போக மாட்டார்கள்.
தட்டுப்பாடு கூடாது!
நம் கடைக்கு பொருள் வாங்க வருகிறவர்களிடம் அவர்கள் கேட்கும் பொருள் இல்லை என்று சொல்லி போகக்கூடாது. எந்தப் பொருளானாலும் சரி, அது இந்தியாவின் எந்த பகுதி யில் கிடைத்தாலும் சரி, அதை எப்படியாவது எங்கள் கடைகளில் கொண்டு வந்து சேர்த்து விடுவோம்.
சர்வீஸ்தான் பிஸினஸ்!
எங்கள் கடைகள் மூலம் நாங்கள் பொருட்களை விற்கிறோம் என்பதைவிட சர்வீஸைத்தான் விற்கிறோம். எங்களைப் பொறுத்தவரை எங்கள் கஸ்டமர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களுக்கு சரியாக சேவை செய்தால் எங்களை விட்டு விலகிச் செல்லவே மாட்டார்கள் என்பதை எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களுக்கும் சொல்லி இருக்கிறோம். ஒரு கஸ்டமர் கடைக்குள் நுழைந்தவுடன் அவரை வணங்கி வரவேற்பதில் ஆரம்பித்து, அவருக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொடுத்து, திருப்திகரமாக கடையை விட்டுச் செல்கிற வரை ஒரு ஊழியர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பயிற்சி வகுப்பின் மூலம் கற்றுத் தருகிறோம். பத்து, பதினைந்து ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த ஊழியர்களைக் கொண்டே நாங்கள் இந்த பயிற்சியைத் தருவதால், புதிய ஊழியர்களுக்கு கிடைக்கும் பயிற்சி வெறும் தியரியாக இல்லாமல் பிராக்டிகலாக இருக்கிறது.
கவனமாக இருக்கிறோம்!
லோக்கல் மக்களின் தேவையை அறிந்து, அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும், வளர்ச்சி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த துறையில் சில நிறுவனங்கள் வீழ்ந்ததற்கு காரணம், சொற்ப காலத்தில் அகலக்கால் விரித்து பணத்தைக் குவித்துவிட வேண்டும் என்று நினைத்ததால்தான். இந்தத் தவறை மட்டும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
__._,_.___

யார் பினாமி?

நேற்று சாதாரணமாக சைக்கிளில் சென்ற ஒருவர் இன்று காரில் வந்து இறங்குகிறார். எப்படி இவருக்கு இவ்வளவு செல்வம் சேர்ந்தது என குழம்பிப்போவோம். விபரமறிந்தவர்கள் சொல்வார்கள் அவர், 'எவருக்கோ பினாமியாக இருக்கிறார்’ என்று. இப்படி 'இவர் அவருக்கு பினாமி, அவர் இவருக்கு பினாமி’ என பினாமிகள் பற்றி பல கிசுகிசுக்கள் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் நம் காதுகளுக்கு வரத்தான் செய்கிறது.
அண்மை காலத்தில் இந்தியாவில் இதுபோன்ற பினாமிகள் அதிகரித்து விட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் இதனால் ஏற்படுவதால் இந்த போக்கைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவியாய் தவிக்கிறது.
பினாமிக்கு 'இரவல் பெயர்’ என்று தமிழில் அர்த்தம் சொல்லலாம். 'பெயர் இல்லாதது’ என்று உருது மொழி சொல்கிறது. இந்த பெயர் இல்லாததுதான் இந்த பாடு படுத்துகிறது இந்தியாவை.
யார் பினாமி?
ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதையோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி இன்னொருவர் பெயரில் வாங்கினாலே அது பினாமி எல்லைக்குள் வந்துவிடும்.
ஆரம்ப காலத்தில், பாசத்தை வெளிக்காட்டும் விதமாக மனைவி, பிள்ளைகள் பெயரில் குடும்பத் தலைவர் சொத்துக்கள் வாங்குவது நடந்தது. அதாவது, மிகவும் நம்பகமான குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்துகள் வாங்குவார்கள்.
அதன்பிறகு கடன்காரர்களை ஏமாற்ற, வரி ஏய்ப்பு செய்ய, லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதித்ததை கணக்கில் காட்டாமல் மறைக்க, கோர்ட்டில் திவால் நோட்டீஸ் கொடுக்க என பல காரணங்களால் குடும்ப உறவு அல்லாத ஆட்களின் பெயரில் சொத்து வாங்குவது அதிகரித்தது. இப்படி குடும்ப உறவு இல்லாத மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதுதான் பினாமி சொத்து ஆகும்.
இப்படி பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி, பினாமிக்கும் சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்கும் இடையே பிரச்னை வந்துவிட்டால் என்ன ஆகும்? சொத்து யார் கைக்கு போய்விடும்? 1988-ம் வருடத்துக்கு முன்பு வரை சொத்தை வாங்கிக் கொடுத்தவருக்குதான் உரிமை போய்ச் சேர்ந்தது. ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்...
பிரபு என்கிற நபர், வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க தன் நண்பரான சுரேஷ் பெயரில் பினாமியாக சொத்தை பதிவு செய்தார். இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பிரபு வாங்கிக் கொடுத்த சொத்தை, சுரேஷ் தர முடியாது என்று சொல்லி விட்டார். பிரபு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சுரேஷ் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்பதை நிரூபித்தார். விளைவு, பிரபு வசம் சொத்து வந்தது. அதாவது, சொத்தை வாங்க யார் பணம் கொடுத்தார்களோ அவர்களே உண்மையான உரிமையாளர் என்றானது. இதேபோல், மனைவி பெயரில் கணவர் சொத்து வாங்கியிருந்தாலும், மனைவி தான் இஷ்டப்பட்டவர்களுக்கு அந்த சொத்தை கொடுக்க முடியாத நிலைதான் இருந்தது. அதாவது, அப்பாவின் பணத்தில் அம்மா பெயரில் சொத்து வாங்கப்பட்டிருந்ததால், அதை குறிப்பிட்டு எங்களுக்கும் சொத்தில் உரிமை இருக்கிறது என தாய் மீது வழக்கு தொடர்வதும் அதிகரித்தன.
1988-க்கு முன்பு வரை பினாமி சொத்துகளை முறைப்படுத்த சரியான எந்தச் சட்டமும் இல்லாததால் இப்படி பல பிரச்னைகள் எழுந்தன.
பினாமி தடுப்புச் சட்டம்
அத்துமீறி செயல்படுபவர்களையும், சட்ட விரோதமாக சம்பாதிப்ப வர்களையும் கட்டுப்படுத்தும் விதமாக 1988-ம் ஆண்டு, 'பினாமி சொத்து தடுப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.
அதன் முக்கிய ஷரத்துகள் வருமாறு:
* பினாமி சொத்தை வாங்குவதோ விற்பதோ சட்ட விரோதம்.
* சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, யாரிடம் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர்.
* பினாமி பெயரில் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள் மீது குற்ற வியல் வழக்கு தொடரப்படும்.
* குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறைத் தண்டனை.
* பினாமி பெயரில் வாங்கப் பட்ட சொத்துக்கு நான்தான் பணம் கொடுத்தேன். எனவே, அது என் சொத்து என உரிமை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
* பினாமி சொத்து பறிமுதல் செய்யப்படும்.
விதி விலக்குகள்
இந்தச் சட்டத்தில் விதி விலக்குகளும் இருக்கின்றன. அதாவது, கணவன் தன் மனைவி பெயரிலோ, தந்தை தன் திருமணம் ஆகாத மகள் பெயரிலோ சொத்து வாங்கினால் அது பினாமி தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்படாது.
அதே நேரத்தில், தந்தை, மகன் பெயரில் சொத்து வாங்கும்போது அது பினாமியாக கருதப்படும். இதேபோல், இந்துக் கூட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவர் மற்றவர்களுக்காக சொத்து வாங்குவது பினாமி சொத்தாக கருதப்படாது. பலர் பலன் அடையும் டிரஸ்ட் பெயரில் வாங்கப்படும் சொத்துகளும் பினாமி சொத்து அல்ல என்று தெளிவுப்படுத்தப்பட்டது.
ஆனாலும், ஒருவர் பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டாலும், அதற்கான வருமான ஆதாரம் இல்லை என்றால் அது பினாமி சொத்தாகத்தான் கருதமுடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இப்படியான சட்டம் கொண்டு வந்த பின்னும் அதை முறையாக அமல்படுத்த விதிகள் எதுவும் இல்லை என்பதால் பினாமிகள் எல்லாம் உண்மையான உரிமையாளர்கள் போலவே நடந்து கொள்வதோடு, அதனை தங்களின் சொத்தாக கருதி அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், வாங்கிக் கொடுத்தவர்கள் திடீர் என இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி ஜெயிலுக்குப் போய்விட்டாலோ பினாமிகளுக்கு கொண்டாட்டம்தான். ஐந்து பைசா கூட போடாமல், அவர்கள் பெயரில் வாங்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாம் அவர்களுக்கே அவர்களுக்குதானே!
இது ஒருபுறமிருக்க பல இடங்களில் சொத்து வாங்கிக் கொடுத்தவர்களும் பினாமி சொத்தின் பலனை அனுபவிப்பதால் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளது.
சட்டத் திருத்தம்..!
இந்த நிலையில் தற்போது பினாமி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் முக்கியமான சட்டத் திருத்தம் என்பதால் அது எப்படியிருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்.
''பழைய சட்டத்தில் பினாமி சொத்து குறித்து யாரிடம் புகார் கொடுப்பது, யார் புகார் கொடுப்பது, விசாரணை வழி முறைகள் என்ன என்பது போன்ற எதுவும் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. மேலும், சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பான அதிகாரமும் வரையறுக்கப்படவில்லை. இதனால், இதுவரை பினாமி பரிமாற்றம் தொடர்பான சொத்துகள் பறிமுதல் செய்யப்படவோ, குற்ற நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை. இந்தக் குறைபாடுகளை சரிசெய்து, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது நல்ல விஷயம்தான்.


அதாவது, பினாமி சொத்துகளை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான அதிகாரம், வழிமுறைகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம்'' என்றார்.
சொத்து விலை குறையுமா?
இந்நிலையில், சொத்துக்களை வாங்கியதற்கான சரியான வருமான ஆதாரத்தை பினாமிகள் காட்டவில்லை என்றால் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்பதை அரசு எந்த ஒரு பாரபட்சமும் காட்டாமல் அமல்படுத்தினால் நாட்டில் சொத்துக்கள் மீதான பரிவர்த்தனை குறைந்து அதன் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாக மும்பையைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
முறையாக சம்பாதித்து , முறையாக வரிகட்டி சொத்து சேர்த்தவர்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. பிஸினஸ் மேன்களும், அரசியல்வாதிகளும் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்திருக்கும் சொத்துகள் என்ன ஆகும்? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் தெரியும்? பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

உஷார் - வெள்ளி 25,000 தங்கம் 75,000

எதிர்வரும் மே மாதம் 6-ம் தேதி அட்சயதிருதியை... கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த பண்டிகையின்போது ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கினால்தான் ஆச்சு என மக்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இந்த தங்க ஜுரம், தேர்தல் ரிசல்ட் ஜுரத்தையும் தாண்டி நிற்க, கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம், வெள்ளி விலை ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது. வருகிற அட்சயதிருதியைக்குள் பத்து கிராம் தங்கம் விலை 25,000 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 75,000 ரூபாய்க்கும் போய்விடும் என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்த வட இந்திய தங்க, வெள்ளி வியாபாரிகள்.
அசத்தல் லாபம்!
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரக் காரணம், கடந்த சில ஆண்டுகளில் அது கொடுத்த அசத்தல் லாபம்தான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி பத்து கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 21,830 ரூபாய். ஆனால், ஓராண்டுக்கு முன்பு, அதாவது 2010, ஏப்ரல் 1-ம் தேதி அன்று அதே பத்து கிராம் தங்கத்தின் விலை 16,302 ரூபாய்தான். 2008, ஆகஸ்ட் முடிவில் 11,852 ரூபாய் மட்டுமே. இரண்டரை ஆண்டுக்குள் தங்கத்தில் போட்ட முதலீடு ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது ஆச்சரியம்தான். கடந்த மூன்றாண்டு காலத்தில் வேறு எதிலும் இந்த லாபம் கிடைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம்.
தங்கம்தான் இப்படி தகதகவென லாபம் கொடுத்தது என்றால் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு லாபம் தந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,750 ரூபாய். ஆனால், 2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று அதே ஒரு கிலோ வெள்ளி விலை 26,905 ரூபாய்தான். 2008, ஆகஸ்ட் முடிவில் 20,223 ரூபாய் மட்டுமே. தங்கம் இரண்டு மடங்காகி பெருகி லாபம் கொடுத்தது என்றால் வெள்ளி மூன்றரை மடங்கு பெருகி, முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்தது!
டாலர்தான் காரணமா?
''தங்கம் விலை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி 20,700 ரூபாய்தான். ஆனால், இன்று 21,830 ரூபாய். கடந்த மூன்றாண்டுகளில் தங்கம் இந்த அளவுக்கு வேகமாக உயர்ந்ததே இல்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 2008 ஜூன் மாத வாக்கில் 71.89 வரை சென்றது. பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, 2009 மார்ச்சில் 89 புள்ளி வரை சென்றது. 2009 அக்டோபரில் மீண்டும் இறங்கி 74 புள்ளி வரை வந்தது. 2010 ஜூலையில் மீண்டும் உயர்ந்து 88 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், அதற்கு மேல் செல்லாமல் தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. இப்போது 74 புள்ளிகள் என்கிற அளவில் இருக்கிறது. டாலர் மதிப்பு தொடர்ந்து குறைவதால் அதை கையில் வைத்திருப்பதைவிட தங்கமாக வாங்கி விட்டனர் வெளிநாட்டு மக்கள்'' என்கிறார் சென்னையின் பிரபல ஜூவல்லரி கடையின் ஓனர் ஒருவர்.
இன்னும் உயருமா?
கடந்த மூன்றாண்டுகளில் தங்கம், வெள்ளியை குண்டுமணி அளவுக்குக்கூட வாங்காதவர்கள் தற்போது கடன் வாங்கியாவது அதை வாங்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதன் காரணமாக அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ''வருகிற அட்சயதிருதியைக்குள் பத்து கிராம் தங்கம் 25,000 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 75,000 ரூபாயையும் தாண்டிவிடும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. தங்கமும் வெள்ளியும் கடந்த சில மாதங்களில் அடைந்த வளர்ச்சியைப் பார்க்கும் போது நாங்கள் சொல்லும் விலை நிச்சயம் அடைய வாய்ப்புண்டு'' என்கிறார்கள் தங்க, வெள்ளி வியாபாரிகள்.
தங்கமா? வெள்ளியா?
கடந்த ஆண்டுகளில் தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கிறது. இனி தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா? அல்லது வெள்ளி வாங்கினால் லாபம் கிடைக்குமா? என்று பலர் கேட்கும் கேள்விகளை தங்க வியாபாரி களிடம் கேட்டோம். தங்கம் வாங்கலாம் என்பதற்கு சிலரும் வெள்ளி வாங்கலாம் என்பதற்கு சிலரும் பரிந்துரை செய்தார்கள். முதலில் தங்கத்திற்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள்.
''உலக அளவில் மிகக் குறைவாக தங்கம் இருக்கிறது. இதில் பெரும்பகுதியை உலகில் உள்ள பல வங்கிகள் வாங்கி வைத்திருக்கின்றன. என்ன கஷ்டம் வந்தாலும் இந்த வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்கப் போவதில்லை. சமீபத்தில் ஜப்பானில் சுனாமி வந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டபோதும் அந்நாடு ஒரு கிராம் தங்கத்தைக்கூட விற்கவில்லை. எனவே, எதிர்வரும் நாட்களில் தங்கம் விலை கொஞ்சம் குறைந்தாலும் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை. ஆனால், விலை இன்னும் உயரவே வாய்ப் பிருக்கிறது'' என்கிறார்கள் தங்க ஆதரவாளர்கள்.
நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற மாதிரி கருத்து சொல்கிறார்கள் வெள்ளிக்கு ஆதரவாக பேசுகிறவர்கள். ''தங்கம் என்பது வெறும் ஆடம்பரம்தான். ஆனால், வெள்ளிக்கு தொழில் துறை பயன்பாடு உண்டு. அடுத்துவரும் காலங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் வெள்ளி விலையும் நிச்சயம் உயரும்'' என்கிறார்கள்.

கவனம்! விலை இறங்கலாம்!
தங்கம், வெள்ளி கடந்த மூன்று ஆண்டுகளில் அளவுக்கதிகமான லாபத்தைக் கொடுத்தாலும் அதேபோன்ற லாபத்தை அடுத்து வரும் ஆண்டுகளிலும் கொடுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று எச்சரிக்கிறார்கள் சிலர். ''உலக அளவில் கமாடிட்டி விலைகள் பாரதூரமாக உயர பல காரணங்கள் இருந்தன. இக்காரணங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர, நல்ல லாபம் பார்த்தவர்கள் அதை விற்கவும் முயற்சி செய்வார்கள். அப்போது தங்கம், வெள்ளி விலை குறையும். தவிர, வெள்ளி விலை கடந்த சில மாதங்களில் உயர்ந்த விதத்தை பார்த்தால் 1970-களில் நடந்ததுபோல நடக்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.
முன்பொரு காலத்தில் அமெரிக்காவில் ஹண்ட் பிரதர்ஸ் என்கிற இருவர் வெள்ளி விலையை திட்டமிட்டு உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஒரு அவுன்ஸ் வெள்ளி 50 டாலருக்கு போனது. பிற்பாடு திடீரென குறைந்து 6 டாலருக்கு வந்தது. அதேமாதிரி இப்போது ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் இப்போதுள்ள விலையில் தங்கத்தையோ, வெள்ளியையோ அதிக அளவில் வாங்காமல் இருப்பதே நல்லது'' என்றார் ஒருவர்.
எதற்கும் உஷாராக இருப்பது நல்லதுதானே!


எஸ்.ஐ.பி-யில் தங்கம் சேருங்க!
கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம்.சி.எக்ஸ். 'கோல்ட் பெட்டல்’ என்கிற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான கான்ட்ராக்ட்டில் 3.25 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் ஆகி, அன்று ஒரு தினம் மட்டுமே 14,718 கிராம் மதிப்பிலான தங்கம் வர்த்தகம் ஆகியுள்ளது. டீமேட் வடிவத்தில் வாங்கி வைத்திருக்கும் தங்கத்தை பிஸிக்கல் தங்கமாகவும் வாங்கலாம். டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை ஆகிய ஆறு இடங்களில் டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். இதனை 8, 16, 24 கிராம் என தங்கக் காசுகளாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 10 கிலோ வரை 'கோல்டு பெட்டல்’ மூலம் தங்கத்தை சேர்த்து வாங்கலாம். எஸ்.ஐ.பி. முறையிலும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு!

''ஏ.சி... கொஞ்சம் யோசி!''

வெயில் பின்னி எடுக்கத் தொடங்கிவிட்டது. சாதாரண காலத்திலேயே ஷேர் மார்க்கெட் ஆர்வலர்களும் டிரேடர்களும் ஏ.சி. அறையிலேயே அடைந்து கிடப்பார்கள். வெயில் காலத்தில் அவர்கள் வெளியே வருவார்களா என்ன?!
இப்படி ஏ.சி. அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது உடலுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? சென்னை அரசினர் பொது மருத்துவனையின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சைப் பிரிவின் (பொறுப்பு) டாக்டர் முத்து செல்லக்குமார் பேசுகிறார்.
''பொதுவாக ஏ.சி என்றாலே குளிர்ச்சியானது, சளி பிடித்துக் கொள்ளும், காய்ச்சல் வரும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் ஏ.சி-யைப் பயன்படுத்தும் விதமாக பயன்படுத்தினால் நன்மைகளே அதிகம். ஏ.சி. அறையின் ஈரப்பதத்தைக் குறைக்க உதவுவதோடு, அதை சமநிலையில் வைக்கிறது. வெளிக் காற்றில் இருந்து நுண் கிருமிகள் அறைக்குள் வரவிடாமல், பரவவிடாமல் ஏ.சி தடுக்கிறது.
மேலும், அது காற்றில் உள்ள தூசி துகள்களை வடிகட்டி அறைக்குள் அனுப்புகிறது!'' என்றவர் ஏ.சி-யைப் பயன்படுத்தும் விதம் குறித்து நமக்கு விளக்கினார்.
''ஏ.சி-யை சரியாகப் பயன்படுத்த, அதிலுள்ள ஃபில்டரை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அடிக்கடி என்பது அதில் எந்த அளவுக்கு தூசி, துகள்கள் படிகிறது என்பதை பொறுத்து இருக்கிறது. வாகனங்கள் அதிகமாகச் செல்லும் மெயின் ரோட்டில் வீடு இருந்தால் காற்றில் புழுதி, தூசிகள் அதிகம் இருக்கும். அப்போது ஃபில்டரில் தூசி அதிகம் சேரும். அதுபோன்ற இடங்களில் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை சுத்தப்படுத்துவது அவசியம். ஓரளவுக்கு சுத்தமான காற்று வீசும் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 20 நாள்களுக்கு ஒரு முறை ஃபில்ட்டர்களை சுத்தப்படுத்தினால் போதும்.
காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை வீட்டிற்குள் வர விடாமல் ஏ.சி. தடுப்பதால் காச நோய் தடுக்கப்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் மகரந்த துகள்களை அறைக்குள் வரவிடாமலும் ஏ.சி. தடுத்துவிடுகிறது. இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, தும்மல், நீர்க்கோவை போன்றவற்றை தொடர்ந்து ஏற்படும் சைனஸ் பாதிப்பு தடுக்கப்படுகிறது.
ஏ.சி. மூலமான அறையின் வெப்பநிலை 22 முதல் 25 சென்டி கிரேடுக்குள் இருப்பது நல்லது. அப்படி இருக்கும்பட்சத்தில் அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்பு தடுக்கப்படும்.
கடும் குளிர்காலத்தில் புற வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைவாக இருக்கும். அப்போது மூத்தக் குடிமக்கள் எல்லாம் ஆடிப் போவார்கள். அப்போது அவர்கள், மிதமான வெப்பநிலையில் ஏ.சி அறைக்குள் இருந்தால் பாதிப்பு இருக்காது. மேலும், கோடையில் கடும் வெப்பத்தை வயதானவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்போதும் மிதமான வெப்பநிலைக்கு கைகொடுப்பது ஏ.சி-தான். அதாவது, வயதானவர்களுக்கு உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள ஏ.சி. கை கொடுக்கிறது. நம்மில் பெரும்பாலோர் ஃபில்டரை ஆண்டு கணக்காக சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். இதனால், அறைக்குள் தேவையான அளவுக்கு குளிர்ச்சி இருக்காது. மேலும், நுண் கிருமிகள் ஃபில்ட்டருக்குள் குவிந்திருப்பதால் சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
வெயிலில் சென்றுவிட்டு, சிலர் வீட்டுக்குள் வந்தவுடன் ஏ.சி. அறைக்குள் தஞ்சம் புகுவார்கள். இது உடலுக்கு நல்லது இல்லை. சற்று நேரம் சாதாரண வெப்பநிலையில், மின் விசிறி காற்றில் ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகு ஏ.சி. அறைக்குள் நுழைவதே சரியானது.
சிலர் ஏ.சி-யை மிகவும் கூட்டி மிகவும் குளிர்ச்சியாக வைத்திருப்பார்கள். இதனால், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உருவாகவும், இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகரிக்கவும் கூடும். எனவே, ஏ.சி. அறை எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருப்பதுதான் மனிதர்களின் உடல் நலனுக்கு நல்லது.
சிலர் அலுவலகம், கார், வீடு என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகி இருப்பார்கள். அது போன்றவர்களுக்கு ஏ.சி. இல்லை என்றால் எதையோ இழந்ததுபோல் இருக்கும். இதைத் தவிர்க்க இடையிடையே ஏ.சி. இல்லாத இடத்திலும் இருக்க பழகிக் கொள்வது நல்லது. மற்றபடி ஏ.சி-யால் ஏற்படும் தீமைகளைவிட ஏ.சி.யால் ஏற்படும் நன்மைகளே அதிகம். எல்லாம் நாம் அதனை பயன்படுத்துவதில்தான் இருக்கிறது!'' -முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.
__._,_.___

திங்கள், 25 ஏப்ரல், 2011

ஆன்மிக கதைகள்

எதையும் சுமப்பேன் அவருக்காக!



மதுரையை வணங்காமுடி பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். மனைவி விஷயத்தில் அவன் கொடுத்து வைத்தவன். கணவனின் குறிப்பறிந்து மட்டுமல்ல, குறிப்பு அறியாமலும் சேவை செய்யும் குணமுள்ளவள். இப்படி ஒரு பத்தினி அமைந்தால் மன்னனுக்கென்ன கவலை. அவன் இன்ப வாழ்வு நடத்திக் கொண்டிருந்தான்.
ஒருநாள், பாண்டியநாட்டுக்கு பொய்யாமொழி புலவர் என்னும் தமிழ் வித்தகர் வந்தார். மீனாட்சியம்மன் கோயிலில் மன்னன் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். அங்கே சொக்கநாதப் பெருமான் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.
இதைப்பார்த்த புலவர்,""மன்னா! நீ சந்திரகுலத்தைச் சேர்ந்தவன். அந்த சந்திரன் சிவபெருமானின் தலையில் போய் உட்கார்ந்திருப்பவன். அப்படிப்பட்ட சிறப்புமிக்க குலத்தைச் சேர்ந்த நீ, இந்த சொக்கநாதனின் கால்களில் போய் விழலாமோ?'' என்ற பொருள்பட ஒரு பாடலைப் பாடினார்.
மன்னன் தன் குலப்பெருமையை வெளிப்படுத்திய அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தான். புலவரை வரவேற்று,""அவரது விருப்பம் என்ன?'' என்று கேட்டான்.
""மன்னா! மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்க வேண்டும், அதற்குரிய பணிக்காகவே இங்கு வந்துள்ளேன். உன் ஆதரவு வேண்டும்,'' என்றார் புலவர்.
""அப்படியே ஆகட்டும்,'' என்ற மன்னன், அவரை அழைத்துக்கொண்டு சங்கப்புலவர் சந்நிதிக்குச் சென்றான். அங்கே புலவர் பாடிய ஒரு பாட்டை சந்நிதியில் இருந்த 49 புலவர்களின் சிலைகளும் தலையசைத்து, கைதட்டி பாட்டைக் கேட்டன. மன்னன் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. உயிரோட்டமான பாடல் தந்த புலவருக்கு மதிப்பளிக்கும் வகையில், அவருக்கு தனி மாளிகை, சேவகர்கள் தந்து மன்னன் உபசரித்தான்.
ஆனால், அரசியல்பணி காரணமாக புலவரின் விருப்பமான தமிழ்ச்சங்க பணியை தாமதித்து விட்டான். கோபமடைந்த புலவர் பல்லக்கில் ஊரை விட்டே கிளம்பிவிட்டார். சேவகர்கள் ஓடிவந்தனர். மன்னன் உறங்கிக் கொண்டிருந்தான். மகாராணியிடம் முறையிட்டனர்.
அவள் பதறிவிட்டாள். புலவர் ஏதாவது பாடி சாபமிட்டால், மன்னனுக்கு ஏதும் செய்து விடக்கூடாதே என பயந்தாள். ஆண்போல வேடமணிந்து பல்லக்கை நோக்கி ஓடினாள். பல்லக்கு சுமந்த ஒருவனை விலகச்சொல்லி விட்டு, அவளே சுமந்தாள். பெண்ணல்லவா! அதிலும் பூஞ்சிட்டு கைகளைக் கொண்ட மகாராணியல்லவா! பலமற்ற அவள் பல்லக்கை சுமக்க சிரமப்பட்டாள்.
பல்லக்கு ஆடியது.
""பல்லக்கு ஏன் ஆடுகிறது?'' என புலவர் கூச்சலிட்டார். ""யாரோ ஒரு புதியவன் வந்து தூக்குகிறான். அதனால் தான்...'' என்றனர் சேவகர்கள்.
புலவர் கீழே இறங்கி வந்து பார்த்தார். அவருக்கு புரிந்து விட்டது. அங்கே நிற்பது ஒரு பெண், அதிலும் ராணி என்று.
அவர் அதிர்ந்து போனார்.
""ஏன் இப்படி செய்தாய் ராணி?'' என்றார்.
""என் கணவரைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. தாங்கள் கோபத்தால் வெளியூர் செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் ஏதேனும் சாபமிட்டு பாடினால், என் கணவருக்கு ஆகாது. தயவுசெய்து மீண்டும் அரண்மனைக்கு திரும்ப வேண்டும். சங்கப்பணிகள் குறித்து மன்னரிடம் நானே பேசி ஏற்பாடு செய்கிறேன்,'' என்றாள்.
புலவர் மனம் குளிர்ந்து, ""அம்மா! நீ உமாதேவியை விட குணத்தில் உயர்ந்தவள்,'' என்ற பொருள்படும்படி பாடி அவளை வாழ்த்தினார். மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.
பாண்டியனும் அவரிடம் மன்னிப்பு கேட்டு சங்கப்பணிகளைத் துவங்குவதற்குரிய ஏற்பாடுகளை வேகமாகச் செய்தான். கணவனின் நல்வாழ்வுக்கு மனைவி உறுதுணையாக இருக்க வேண்டும். அவனுக்கு எதிர்பாராமல் கஷ்டம் வந்தால், அதனைத் தீர்க்க எவ்வளவு பெரிய சுமையையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம்.


__._,_.___

சனி, 23 ஏப்ரல், 2011

செல்லுமிடமெ​ல்லாம் 'செல்'

செல்லுமிடமெல்லாம் 'செல்' ---மதுக்கூர் இராமலிங்கம்

எங்கள் ஊரில் ஒருவருக்கு அடைக்கோழி என்று பட்டப் பெயர். வேட்டி கட்டுகிற வயசு வந்தபிறகும் கூட அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டே அலைந்தததால் இந்த நாமகரணம் சூட்டப்பட்டது. ஆனால் கோழி அப்படி குஞ்சுகளை அழைத்துக்கொண்டு திரிவதில்லை. குஞ்சுகள் தனியாக இரைதேடும் காலம் வந்தவுடன் தாய் கோழி குஞ்சுகளை கொத்தி விரட்டிவிடும். அடைக்கோழி என்று அடைமொழி பெற்ற அவர் திருமணம் ஆன பிறகு அவருடைய மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்ற ஆரம்பித்துவிட்டார் என்பது தனிக்கதை.
கோழி முட்டைகளின் மேல் உட்கார்ந்து அடைகாக்கும்போது அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு முனிவர் களை சொட்டும். தர்மயோகம், ஞானயோகம் என்று கதைப்பவர்கள் அடைக்கோழியைப் பார்த்தால் வெட்கப்படுவார்கள். அப்படி ஒரு கர்மசிரத்தை ஞானயோகம். பெரும்பாலும் அடைக்கோழி மதிய நேரங்களில்தான் இரைதேடச் செல்லும். அப்போது கூட அடைமுட்டைகள் இருக்குமிடத்தை விட்டு ரொம்பதூரம் சென்றுவிடாது. ஒரு பரப்பரப்போடும், பதட்டத்தோடும் ஏதாவது கிடைக்கிறதா என்று அலையும். சந்தேகத்திற்கு இடமாக சிறு ஒலி கேட்டால் கூட கெக்கே கெக்கக்கே என்று கத்தியபடி முட்டையில் வந்து அமர்ந்துவிடும். பெரும்பாலும் அரைப்பட்டினியாகத்தான் கிடக்கும்.
கோழி அடைகாத்த இடத்தில் ஒருவகையான செல் மொய்க்கும். பெரும்போக்காகப் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாது. உன்னிப்பாகப் பார்த்தால் மாவு போல வெள்ளையாகத் தெரியும். தப்பித்தவறி அதில் கைவைத்துவிட்டால் மொழு மொழுவென்று உடம்பு முழுவதும் ஏறிவிடும். பத்துமுறை குளித்தால் கூட உடம்பில் ஏதோ மொய்த்துக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.
செல்போனுக்கு செல் என்று பெயர் வந்ததற்கு கோழிச்செல் ஏதாவது ஒரு வகையில் காரணமா என்பதை மொழி அறிஞர்கள் ஆய்ந்து சொன்னால் நல்லது. கோழிச்செல் எப்படி பிடித்துக்கொண்டால் விடுவதில்லையோ அது போல இந்தச் செல்லும் பிடித்தால் விடுவதில்லை.
பெரிய பெரிய நிறுவனங்கள் சிக்கன்65 சாப்பிட மக்கள் செல் மொய்க்க அடைகாக்கிறார்கள். . செல்போன் பேசுபவர்களின் வாய் மொழியை மட்டுமின்றி உடல் மொழியையும் கவனித்தால் நாடகப்பாங்குடன் இருக்கும். தரைவழிப் பேசியில் ரிசீவரை வைத்த ஞாபகத்தில் இன்னமும் கூட செல்போனிலும் அப்ப வெச்சிரட்டுமா என்று கேட்டுக்கொண்டிருப்போர் பலர்.
அலுவலக வாசலில் ஒரு இளைஞனை நான் அன்றாடம் சந்திப்பேன். அவருடைய முகவரி என்ன? ரேசன் கார்டு உண்டா? என்பதெல்லாம் கிடையாது. ஆனால் எப்போதும் செல்போனில் பேசியபடியேதான் இருப்பார். அவர் என்ன பேசுகிறார் என்று பக்கத்தில் சிபிஐ அதிகாரி இருந்தால்கூட கண்டுபிடிக்க முடியாது. சிபிஐ அதிகாரிகள் அதைத்தான் கண்டுபிடித்தார்கள் நீங்கள் அலுத்துக்கொள்வது தெரிகிறது.
எதிர்முனையில் இருப்பவர் இவர் என்ன பேசுகிறார் என்பதை எப்படித்தெரிந்துகொள்வார் என்று தெரியவில்லை. பார்வையற்றவர்கள் பயன்டுத்தும் பிரெய்லி மொழி போல ஒலியே இல்லாத புதுவகையான மொழி எதையும் கண்டுபிடித்திருக்கிறார்களோ என்னமோ தெரியவில்லை.
ஒரு இடத்தில் அமர்ந்து அவர் பேசமாட்டார். ஐந்தாறு இடம் மாறி மாறி உட்காருவார். ஆனால் ஒரு முறை உட்கார்ந்துவிட்டால் அந்த இடத்தை விட்டு எழுந்திரிக்க குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். இதற்கென ஏதாவது கால அட்டவனை இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.
அந்தக்காலத்து தசாவதானி, அஷ்டாவதனிகள் போல ஒரு செல்லில் பேசிக்கொண்டே மறு செல்லில் வந்த குறுஞ்செய்திகளை படிப்பது, அதற்கு பதில் அனுப்புவது என்று எப்போதும் கண், காது, கை என எல்லா உறுப்புகளுக்கும் வேலை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்.
நீராராடியா பேசியதை டேப் செய்தது போல இந்த வாலிபர் பேசுவதையும் டேப் செய்தால் ஏதாவது பரபரப்பான செய்தி கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.
எதிர்காலத்தில் செல்போன் தனியாக இருக்காது. எல்லோர் தலையிலும் ஒரு ஆன்டெனாவை தனியார் கம்பெனியிலும் பொருத்திவிடுவார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் தம்பி பூபாளம் பிரகதீஸ்வரன் சொன்னார்.
கபால ஆன்டெனா ஊழல் என்று அதிலும் பெருந்தொகை சுருட்டப்படக்கூடும்.

நவீன லேப்ரோஸ்கோ​பி சிகிச்சை

அறுவை சிகிச்சை என்றாலே, ஏகப்பட்ட தழும்புகளைச் சுமந்தது அந்தக் காலம். இப்போது தழும்பே இல்லாத அறுவை சிகிச்சை வந்தாச்சு. ஆம், ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறிமுகத்துக்குப் பின் அறுவைச் சிகிச்சைகளில் தழும்புகளே தெரிவது இல்லை.
இந்த ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையை தமிழகத்தில் அறிமுகம் செய்த சென்னை

குளோபல் மருத்துவமனையின் பேரியாட்டிக் மற்றும் ஜிஐ லேப்ராஸ்கோபி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் தனக்குமாரிடம் பேசினோம்.
''ஒரு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் குடல்வால், பித்தப்பை, சிறுநீரகம், கர்ப்பப்பை, குடல், குடல் ஏற்றம், மண்ணீரல் போன்ற பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்ற லேப்ரோஸ்கோபி போன்று இல்லாமல், இந்த முறையில் தொப்புள் வழியாக செய்யப்படுவதால், அறுவை சிகிச்சை செய்த தழும்பு தெரிய வாய்ப்பு இல்லை. இதனால் நோயாளிகள் குறிப்பாக பெண்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்பி ஏற்கின்றனர்.
பழைய லேப்ரோஸ்கோபி சிகிச்சையில், தொப்புளில் துவாரம் இடுவார்கள். வெளிச்சத்துக்காக பல்புடன் கூடிய கருவியை செலுத்திவிட்டு, பக்கத்தில் அரை செ.மீ. அல்லது 1 செ.மீ. அளவுக்கு சில துவாரங்கள் போடுவார்கள். அது வழியாக அறுவைச் சிகிச்சை கருவிகள் செலுத்தப்படும். பின்னர், கார்பன் டை ஆக்சைட் வாயுவைக்கொண்டு வயிற்றை நிரப்பி, அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுப்பது, தையல் போடுவது, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்துவது எல்லாமே அந்த துவாரங்கள் வழியாகவே செய்யப்படும். அறுவை சிகிச்சை முடிந்ததும், வயிற்றில் நிரப்பப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடை வெளியே எடுத்துவிட்டு, சிறிய துவாரங்கள் மூடப்படும். வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதைவிட, இது சிறந்தது என்றாலும் தழும்புகள் தெரியும்.
ஆனால், ஒரு துளை லேப்ரோஸ்கோபி சிகிச்சையில் தழும்பு தெரியாது. மேலும், அதிகப்படியான ரத்த இழப்பும் தவிர்க்கப்படுகிறது. இந்த சிகிச்சையில், தொப்புளில் ஒரு துவாரம் போட்டு லைட் மற்றும் கேமராவுடன் இணைக்கப்பட்ட டெலஸ்கோப் மற்றும் அறுவைச் சிகிச்சைக்கான கருவிகள் எல்லாமே ஒன்றாக உடலுக்குள் செலுத்தப்படும் என்பதால் வேறு எந்தப் பகுதியிலும் தழும்பு ஏற்படாது.
இந்த சிகிச்சை உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க லேப் பேண்ட், லேப் ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி மற்றும் லேப் கேஸ்ட்ரிக் பைபாஸ் போன்ற மூன்று வகையான சிகிச்சைகள் இருக்கின்றன.

லேப் பேண்ட் அறுவை சிகிச்சையில் இரைப்பையின் மேல் பகுதியில் வட்ட வடிவிலான எலாஸ்டிக் பேண்ட் ஒன்று போடப்படும். இது சாப்பிட்ட உணவு நேராக குடலுக்குச் செல்லாமல் தடுத்து, போதுமான உணவு சாப்பிட்டதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த அறுவை சிகிச்சையை 30 முதல் 60 நிமிடங்களில் செய்துவிடுவோம்.
இரண்டாவதான ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி அறுவை சிகிச்சையில், இரைப்பையின் அளவை உணவுக் குழாய் அளவுக்குச் செய்துவிடுவோம். பொதுவாக இரைப்பை 60 முதல் 100 மி.லி. அளவு உணவை எடுக்கும். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உணவு எடுத்துக்கொள்ளும் அளவு 30 மி.லி. முதல் 50 மி.லி. வரையே இருக்கும். மேலும் வயிற்றில் பசியை உண்டாக்கும் க்ரிலின் என்ற ஹார்மோன் சுரப்பையும் அகற்றிவிடுவோம். இதனால் பசி குறைந்துவிடும். இந்த அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் உடலின் அதிகப்படியான எடை 60 முதல் 80 சதவிகிதம் குறைந்துவிடும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் 80 சதவிகிதம் வரை குணம் அடையும். கொழுப்புப் பிரச்னைகளும் 85 சதவிகிதம் சரியாகிவிடும். கால் மூட்டு வலி, தூங்கும்போது மூச்சுவிடுவதில் உள்ள பிரச்னைகளும் சரியாகிவிடும்.
அடுத்த கேஸ்ட்ரிக் பைபாஸ் சிகிச்சையில், இரைப்பை மற்றும் குடலையும் ஷார்ட் சர்க்யூட் செய்துவிடுவோம். உணவில் இருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துகள் இவர்களுக்குக் கிடைக்காது என்பதால், வாழ்நாள் முழுவதும் இவர்கள் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அழகுக்காக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றும் லிப்போசக்ஷன் அறுவை சிகிச்சையும் இந்த முறையில் செய்யப்படுகிறது. மார்பு, இடுப்பு, வயிறு, தொடை, பின்புறம், முகம் போன்ற உடலின் பல பகுதிகளில் இருந்தும் அளவுக்கு அதிகமான கொழுப்பு அகற்றப்படுகிறது. எங்கே கொழுப்பை எடுக்க வேண்டுமோ, அங்கு மட்டும் சிறு துளையிட்டு, தோல் மற்றும் தசைக்கு இடையே உள்ள அதிகப்படியான கொழுப்பு உறிஞ்சு பம்ப் மூலம் எடுக்கப்படுகிறது. ஐந்து கிலோ வரையிலான கொழுப்பை இந்த சிகிச்சை மூலம் வெளியே எடுக்க முடியும். புற நோயாளிகளாகவே இந்த சிகிச்சையைச் செய்துகொள்ள முடியும்.
பொதுவாக ஒரு துளை லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில், வயிற்றுக்குள் அறுக்கப்பட்ட இடத்தில் தையல் போடுவது இல்லை. ஒரே ஓர் இயந்திரக் கையை மட்டும் பயன்படுத்துவதால் தையலுக்குப் பதிலாக கிளிப் போடுவார்கள். ஆனால், தையல் போட்டால்தான், விரைவில் குணம் கிடைக்கும், மேலும் குடல் ஒட்டும் பிரச்னையும் இருக்காது. அதனால் நாங்கள் ஒரு துளை லேப்ராஸ்கோப்பியில், ஒரே ஒரு கருவியைக்கொண்டே தைப்பது மற்றும் முடிச்சுப் போடுவதை முதன்முறையாகச் செய்து உள்ளோம். இது சர்வதேச மருத்துவ ஆய்வு அறிக்கையிலும் வெளியாகி இருக்கிறது...'' என்கிறார்.
குறைந்த ரத்த இழப்பு, மிகக் குறைந்த வலி, விரைவான குணம்... வேறு என்ன வேண்டும் நோயாளிகளுக்கு?
__._,_.___

வருங்காலத் தொழில்நுட்​பம்

சில மாதங்களுக்கு முன், கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் ஸ்மித் அவரது பதவியில் இருந்து விலகி, கூகுளின் நிறுவனர்களின் ஒருவரான, லேரி பேஜ் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப்போவதாக எழுதி இருந்தது, இந்த வாரம் நிகழ்ந்து விட்டது. லேரி பேஜின் உடனடி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, 'தனது முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி, வேதாளத்தைத் தூக்கி முதுகில் சுமந்த’ கதைகள்தான் நினைவுக்கு வருகிறது.
விக்ரமாதித்தன் = கூகுள்
முருங்கை மரம் = இணையம்
வேதாளம் = சமூக ஊடகத் தொழில்நுட்பம்.
இந்த நவீன இணைய வேதாள கதையை விரிவாகப் பார்க்கலாம்!

சமூக ஊடக முயற்சிகளைப் பல்லாண்டுகளாக கூகுள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அவர்களின் முதல் முயற்சி ஆர்குட் சமூக நெட்வொர்க்கிங் தளம். அமெரிக்காவில் இருக்கும் கூகுளின் முயற்சி என்றாலும், இந்தியா, பிரேசில் இரண்டு நாடுகளைத்தவிர, வேறு எங்கும் ஆர்குட் என்றால் என்ன என்பதே தெரியாமல் போனது முதல் அடி! அவர்களது ஜி-மெயில் ஒரு மகத்தான வெற்றி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இணையத்தில் இயங்கும் மின்னஞ்சல் தொழில்நுட்பமான ஜி-மெயிலை அடித்தளமாகப் பயன்படுத்தி, இரண்டு முயற்சிகள் மேற்கொண்டார்கள். அவை...
கூகுள் வேவ் பயனீட்டாளர்கள் தமக்குள் தகவல்களை எளிதாகப் பிரசுரம் செய்தும், பகிர்ந்துகொண் டும் இருக்க வசதியாக உருவாக்கப் பட்ட இந்தத் தொழில்நுட்பத்தின் பயனீட்டாளர் அனுபவம் (user experience) மிக மோசம். இணைய தொழில்துறையில் பணி புரிபவர்களே இதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல், முழி பிதுங்க, சாமானியப் பயனீட்டாளர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் இதை நடத்திய பின்னர், 'போதுமடா சாமி!’ என்று பெருமூச்சுடன் வேவ் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மெருகேற்றுவதை நிறுத்தப் போவதாக அறிவித்தது கூகுள். மேல் விவரங்களுக்கு இந்த உரலி: http://www.google.com/support/wave/bin/answer.py?answer=1083134
கூகுள் பஸ்: மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டபஸ் தொழில்நுட்பம், வாயு வேகத்தில் பிரபலமான டிவிட்டரின் பாதிப்பில் உருவானதாகக் கருதப்பட்டது. அந்தப் பதற்றத்தில், பல தவறுகள் செய்தது கூகுள். ஜி-மெயில் பயனீட்டாளர் கள் அனைவரையும், அவர்களது சரியான அனுமதி இன்றி பஸ்ஸில் இணைத்துவிட்டது. ஜி-மெயில் தகவல்கள் பஸ் மூலமாகக் கசிய நேர்ந்தது எனப் பல பிரச்னைகள், கூகுளை கோர்ட்டுக்குள் இழுத்துவந்தது. சென்ற வாரத் தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது கூகுள். சுருக்கமாகச் சொன்னால், பரபரப்பாகத் தொடங்கப்பட்ட பஸ், இப்போது புஸ்ஸென்று காற்று இறங்கிய பலூனாக பரிதாபக் காட்சி அளிக்கிறது. அதிக விவரங் களுக்கு: http://news.yahoo.com/s/afp/20110330/pl_afp/usitcompanyprivacyinternetgoogleftc
இந்தத் தோல்விகள் தங்களைப் பெரிதாகப் பாதித்ததாகக் காட்டிக்கொள்ளாமல், அடுத்த முயற்சியில் கூகுள் இறங்கிவிட்டது. சென்ற வாரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் ' +1’.
இது பற்றிய கூகுளின் தகவல் பக்கம்: http://www.google.com/+1/button/ இதைக் கூர்ந்து கவனித்தால், இது ஃபேஸ்புக் தளத்தின் 'Like’ பயன்பாடுபோல இருப்பது தெளிவாகத் தெரியும். ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள், ஃபேஸ் புக் தளத்துக்குள் செல்லாமலேயே, இணைய தள விவரங்களை 'Like’ என்று சொடுக்குவதன் மூலம் அவர்களது நட்பு வட்டத்துடன் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். இப்படி எளிதாகத் தகவல் பகிர்ந்துகொள்ள முடிகிற வசதி, ஃபேஸ்புக் தளத்தின் முக்கியத்துவத்தைப் பல மடங்கு உயர்த்தியபடி இருக்கிறது. எந்தத் தகவல், யார் யாரால், எத்தனை பேரால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்பதை ஃபேஸ்புக் அறிந்துகொண்டு, அதற்குத் தகுந்த வகையில் தங்களது விளம்பரத் தொழில்நுட்பத்தை tuஸீவீஸீரீ செய்ய முடியும். அதோடு, எந்தத் தகவல்கள் Trending / Breaking News ஆக மாறுகிறது என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். பல பில்லியன் வலைப் பக்கங்களை அலசி எடுத்து, தேடல் பதில் பக்கங்களில் காட்ட முடிகிற கூகுளால், நிகழ் நேரத்தில் இணைய பயனீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப்பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ள இதுவரை முடியவில்லை. டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களின் தகவல்களைச் சார்ந்தே கூகுள் இருக்க வேண்டிய நிலை நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டு ' 1’ஐ வெளியிட்டு இருக்கிறது கூகுள். இன்னும் சில வாரங்களில், பல வலைதளங்களுக்கு நீங்கள் செல்லும்போது, அவற்றின் பக்கங்களில் +1 பட்டன்களைக் காணலாம். இந்த சமூக வெளியீடாவது வெற்றி பெறுமா அல்லது ஆர்குட், வேவ், பஸ் போன்றவற்றின் நிலைமை வருமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இணையத்தின் சிறப்பு இதுதான். ஏதாவதொரு தொழில்நுட்பம் ஹிட் அடிக்கப் போகிறது என்றால், அது சில மாதங்களுக்குள் தெரிந்துவிடும்!
LOG OFF

'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே?

இறைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது!
ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது.
''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இடத்தை அவர் சுட்டிக்காட்டினார். அங்கே போவதற்காக நான் எனது மோட்டார் சைக்கிளை உசுப்பினேன். மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெயைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தி வந்தேன் என்பதால், அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம். உள்ளுணர்வின் தூண்டுதலால் அது ஒரு குண்டு என்பதைப் புரிந்துகொண்டு நான் சடாரென்று தாவி பக்கத்தில் இருந்த குழிக்குள் விழுந்தேன். அருகில் பெரிய வெடிச் சத்தம். சில நிமிடங்கள் கழித்து தலையை உயர்த்திப் பார்த்தேன். எனக்கு வழி சொன்ன ஆளின் கால்களுக்கு இடையேதான் குண்டு விழுந்து இருந்தது. அந்த ஆளைக் காணவில்லை. இரண்டு பெண்களும் இறந்துகிடந்தார்கள். அவரின் மனைவியின் கால்கள் இரண்டும் குண்டு வெடித்ததில் பிய்த்துக்கொண்டு போயிருந்தது. 'என்னை விட்டுவிட்டுப் போகாதே. காப்பாற்று...’ என்று அந்தப் பெண்மணி என்னிடம் கெஞ்சினார். நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத்தான் விரும்பினேன். ஆனால், அருகில் மருத்துவமனை இல்லை. என்னால் முடிந்தது, அவரது உயிர் பிரியும் வரை அவர் அருகில் சிறிது நேரம் நிற்க முடிந்ததுதான்!'' என்று தொடங்குகிறார் வால்டர் வில்லியம்ஸ் என்ற இளைஞர். இந்தக் கட்டுரை எப்படி முடிகிறது என்பதையும் பார்த்தால் தான், 18 கல் தொலைவில் எப்படிப்பட்ட நாசம் நடந்தது என்பது தெரியும்.
''உயிர் வாழ்வதைப்பற்றி எவருக்குமே கவலை இல்லை. அங்கே இருந்த மருத்துவமனை செயல் படாமல் இருந்தது. மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் தாக்கலாம் என்ற நிலையில், அங்கே இருந்தவர்கள் தமது உறவினர்களோடு நெருக்கமாக இருக்க விரும்பியதைப் பார்த்தேன். சாகும்போது எல்லோரும் ஒன்றாகச் சாக வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவர்களின் ஒரே எண்ணம். போராளிகளுக்கும் எந்தவித வாய்ப்பும் இருக்கவில்லை. சண்டை போடுவது அல்லது சாவது என்ற நிலையில் அவர்கள் போரிட்டுக் கொண்டு இருந்தார்கள். அங்குதான் நான் அது வரை பார்த்திராத, இனிமேல் ஒருபோதும் பார்க்க விரும்பாத அந்தக் காட்சியைப் பார்த்தேன். பசிகொண்ட நாய்கள் சுற்றிலும் சிதறிக்கிடந்த மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கடித்துக் குதறி தங்கள் பசியை ஆற்றிக்கொண்டு இருந்தன. எங்கு பார்த்தாலும் மரணத்தின் துர் நாற்றம். சாவுப் பறை அடிப்பதுபோல குண்டுகள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. சாலை ஓரங்களில் காயம்பட்ட போராளிகள் குவியல் குவியலாகக்கிடந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை. 'யாராவது சயனைட் கொடுத்து எங்களைக் கொன்றுவிடுங்களேன்’ என்று அந்தப் பெண்கள் கதறிக்கொண்டு இருந்தார்கள்.
அந்த இரவில் எங்காவது படுத்துத் தூங்க வேண்டும் என்று பாதுகாப்பாக ஓர் இடத்தைத் தேடினேன். ஒரு டிராக்டர் இருந்தது. அதன் கீழே போர்வை போர்த்திக்கொண்டு ஒருவர் படுத்திருப்பது தெரிந்தது. நானும் இங்கே படுத்துக்கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார். சரியென்று நான் அவர் அருகில் படுத்துக்கொண்டேன். காலை விழித்து எழுந்தபோதுதான், என் அருகில் படுத்திருந்தது மனிதர் அல்ல.... சில மணி நேரங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஒருவரின் பிணம் என்பது தெரிந்தது!'' இப்படி முடிகிறது அந்தக் கட்டுரை!
பிணங்களோடு நடைபிணங்களாய் நம் தமிழர்கள் கிடந்தார்கள். இப்போதும் கிடக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வு குறித்து அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே பேசினாலும்... சென்னை தீவுத் திடலில் சோனியா சொல்லிச் சென்றாலும்... செத்த தமிழனுக்கு நிவாரணமும் இல்லை. வாழும் தமிழனுக்கு வழிவகையும் காட்டப்படவில்லை.
''போரின் இறுதிக் காலகட்டத்தில் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 13,130 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த கருத்தரங்களில் தகவல் தரப்பட்டுள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட சாவுகளை 'வெறும் புள்ளிவிவரங்கள்’தான் என்பார்கள். ஆனால், முள்ளிவாய்க்கால் சோகம் உலக அரங்கில் புள்ளிவிவரங்களுக்குக்கூட பயன்படுத்த முடியாமல் கிள்ளி எறியப்பட்டது.
இதில் முதலும் கடைசியுமான நம்பிக்கையாக இருப்பது ஐக்கிய நாடுகள் சபை கொடுத்திருக் கும் அறிக்கை! உலகம் தடை செய்த அத்தனைக் குண்டுகளையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்தி, ஓர் இனத்தின் பாதிப் பேரை அழித்தும் சிதைத்தும் முடித்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தது அந்தச் சபை. தமிழ் சினிமாவின் கடைசி நேர போலீஸாக வந்து இன்றைக்கு விசாரணையைத் தொடங்கி உள்ளது.
இந்தோனேஷிய முன்னாள் தலைமை நீதிபதி மர்ஸ¨கி தருஸ்மான், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னா ஆகிய மூவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக இருந்து, தங்களது விசாரணையைச் சட்டத்துக்கு உட்பட்டும், மனிதாபிமான நெறிமுறைகளைப் பின்பற்றியும் நடத்தி முடித்து இருக்கிறார்கள். 220 பக்கங்கள் கொண்டதாக அறிக்கை தயார். இலங்கை அரசாங்கத்தின் அத்தனை சால்ஜாப்பு விளக்கங்களையும் புறம் தள்ளி இவர்கள் தங்களின் தீர்ப்பை எழுதி உள்ளார்கள். ராஜபக்ஷே எத்தகைய தந்திர வலைகளைத் தயாரித்தாலும், இந்த விசாரணை வளையத்தில் இருந்து தப்பிப்பது இனி சிரமம்!
மகிந்த ராஜபக்ஷேவின் கண்களில் முதன் முதலாகப் பயம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்குத் தான் செய்து கொடுத்த நன்மையாக இதை உருவகப்படுத்தும் காரியங்களை அவர் பிரசாரம் செய்து வருகிறார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இடங்களை அவரது கட்சிதான் கையில் வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் மொத்தம் உள்ள 234 இடங்களில் ராஜ பக்ஷேவின் கூட்டணி 205 இடங்களைப் பிடித் தது. முக்கிய எதிர்க் கட்சியாகச் சொல்லப்படும் ஐக்கிய தேசியக் கட்சி 9 இடங்களைத்தான் பிடித்தது. அதாவது, இலங்கையில் சுதந்திரா கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்தான் சரிக்குச் சமமான பலத்துடன் இருந்தன. ஆனால், இன்று சுதந்திரா கட்சி யானையாகவும் ஐக்கிய தேசியக் கட்சி எறும்பாகவும் சுருங்கிவிட்டன. எதிர்க் கட்சித் தலைவராக கம்பீரமாக வலம் வந்த ரணில் விக்கிரமசிங்கே இருக்கும் இடமே தெரியவில்லை. எனவே, ராஜபக்ஷே வைத்தது தான் சட்டம். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது என்கிறது இலங் கையின் அரசியல் அமைப்பு. அதையே தனது பெரும்பான்மை வாக்குகளால் மாற்றிவிட்டார் மகிந்தா. 'இதன் தொடர்ச்சியாக மேலும் சில பயங்கரங்கள் அரங்கேற இருக் கின்றன’ என்கிறார்கள் கொழும்பு செய்தியாளர்கள்.
''சிங்கள இனத்தின் அசைக்க முடியாத மனிதராக உருவகப்படுத்திக்கொள்ளும் ராஜபக்ஷே, தன்னை இலங்கையின் மாமன்னராக ஆக்கும் காரியங்களை மறைமுகமாகத் தொடங்கிவிட்டார். அதாவது மக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, மன்னர் ஆட்சிக் காலம் இலங் கையில் வெகு சீக்கிரமே ஆரம் பமாக இருக்கிறது. 'லங்க ரட்ட’ என்று சொல்லப்படும் மன்னர் ஆக ராஜபக்ஷேவை முடிசூட்டப்போகிறார் கள்!'' என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. சிங்கள இனத்தின் பெருமை பேசும் 'மகா வம்ச’ வரலாற்றுப் புத்தகத்தைத் திருத்தி எழுதும் காரியங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி, தமிழர்களை மிகமிகச் சிறுபான்மையினர் ஆக்கவும் மறைமுகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ''இலங்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதன் ஜனநாயகத் தன்மையைப் பாதிக்கும்'' என்று அமெரிக்க அதிகாரி பி.ஜே.குரோவ்லி கொடுத்து இருக்கும் எச்சரிக்கை, தமிழர்களுக்கு மட்டும் அல்ல... சிங்களர்களுக்கே சிக்கலானதுதான்.
சமீப காலமாக பல நாடுகளில், மன்னர்கள் தான் நாட்டைவிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்
__._,_.___

புதன், 20 ஏப்ரல், 2011

நச் கதைகள்

வெள்ளம் !

திடீரென்று வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்க, எல்லோரும் இங்கும் அங்குமாக ஓடினார்கள். குட்டீஸ் எல்லாம் தண்ணீரில் தத்தளிக்க, அவர்களை ஒரு பக்கமாக இழுத்து உட்கார வைத்தவள், ''இதுக்குதான் சொன்னேன், ஏரி ஓரமா வீட்டைக் கட்டாதீங்கன்னு... இப்பப் பாருங்க எல்லாம் நாசம்!'' என்று கத்த, ''சரி, என்ன செய்றது... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது. கவலைய விடு. எல்லாரையும் கூட்டிக்க, வேற இடத்துக்குப் போயிடுவோம்'' என்று பெருசு சொல்ல, குடும்பம் குடும்பமாக வேறு இடத்தில் புற்று வைக்கக் கிளம்பியது அந்த எறும்புக் கூட்டம்.

கனகு!

பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கிற வேலை கனகசாமிக்கு. எது நடக்கிறதோ இல்லையோ... அந்தந்த வேளைக்கு டான் என்று மணி அடித்துவிடுவார் கனகு. அன்றும் வழக்கம்போல வீட்டில் இருந்து கிளம்பிய கனகுக்கு, பெரிய கவலை ஒன்று வாட்டி எடுத்தது. 'ச்சே! இன்னிக்கு மணி அடிக்க முடியாதே... இப்படி ஆயிடுச்சே..!’ என்று புலம்பித் தள்ளினார். 'நேத்து எல்லாம் நல்லா அடிக்க முடிஞ்சதே. காலைல இப்படி ஆயிடுச்சே... ஹூம்! இன்னிக்கு ஃபுல்லா மணி அடிக்காமலே ஓட்டியாகணும்...’ என்று பள்ளிக்கூடத்தை நெருங்கிய கனகு, 'சரி, ஸ்கூல் டயம் ஆயிடுச்சு... ஃபர்ஸ்ட் பெல்லை அடிச்சுட்டு வந்து, நம்ம சைக்கிள் பெல்லுல என்ன ரிப்பேர்னு கவனிப்போம்’ என்று ஓடினார்.

பிஸி !

காலையில் எழுந்ததில் இருந்து செல்விக்கு எதுவுமே நடக்கவில்லை. கிச்சனில் தலைக்கு மேல் வேலை இருந்தது. வேலைக்கு ஆள் வைத்தும் சரியாக வருவது கிடையாது. அன்றும் மட்டம் போட்டுவிட்டதால் அந்த வேலைகளும் அப்படியே கிடந்தது. நேற்றுதான் கடைசிப் பரீட்சை முடிந்து லீவு ஆரம்பித்துவிட்டதால், ஆளுக்கு ஒரு பக்கம் இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். தினம் பாக்கெட் பால் கொண்டுவந்து போடுபவன் இன்னும் காணாமல், காபியும் லேட். அப்பா ஒரு பக்கம் டென்ஷன். அவரை சமாளிக்க முடியாமல் வீடே சூடாக இருந்தது. எழுந்து இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் 'உச்சா’ விடக்கூட கூட்டிட்டுப் போகலை, பிரஷ் பண்ணி விடலை, மம்மு கொடுக்கலை என்ற கடுப்பில் உர்ர்ரென்று இருந்தாள் இரண்டு வயது செல்வி.

ரகசியம் ?!

பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்தான் கார்த்திக். 'யாரும் பார்த்துவிடக் கூடாது... யார் கண்ணுலயாவது பட்டோம், அவ்வளவுதான்! உடனே சொல்லிடுவாங்க’ என்று பதைபதைத்தான். ஆனால், அது சாத்தியமே இல்லை என்பதையும் கார்த்திக் உணர்ந்திருந்தான். 'பட்டப் பகலில் நாம் இப்படி வந்தால், யார் கண்ணில்தான் விழ மாட்டோம்’ என்று நினைக்கும்போதே... முதல் ஆளாக கணேசன் பார்த்துவிட்டான். உடனே கத்தினான், ''ஹே... மொட்டை!''

சிக்கல் !


பரீட்சை ஹாலில் எல்லோரும் அமைதியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். முரளிக்கு கை துறுதுறு என்றிருந்தது. கேட்கப்பட்டிருந்த கேள்விகள் எல்லாவற்றையுமே எழுதிவிட முடியும் என்று தோன்றியது. 'அடடா... இந்தச் சமயம் பார்த்து எடுக்க வரமாட்டேங்குதே’ என பரபரத்தான். எடுக்க முயன்றான் முரளி. முடியவில்லை. 'ச்சே! எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கோம். கேள்விகளும் சூப்பரா வந்திருக்கு... இப்ப போயி காலை வாருதே’ என்று தவித்தான். வியர்த்துப் போனது. கண்காணிப்பாளர் சற்று தள்ளி நின்றிருந்தார். 'எல்லாரும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க... நாம இன்னும் ஒரு பிட்டுக் கூட எழுத ஆரம்பிக்கலை’ என படபடத்த முரளி, மீண்டும் அதை எடுக்க முயற்சித்தான். எதேச்சையாகத் திரும்பிய கண்காணிப்பாளர், முரளியைப் பார்த்துவிட்டார். மடமடவென அவன் அருகில் வந்து நின்றார். ''எல்லாரும் எழுத ஆரம்பிச்சுட்டாங்க... என்ன பண்றே நீ?'' என்றவர், முரளியிடமிருந்து பென்சில் பாக்ஸை வாங்கினார். திறக்க முடியாமல் ஸ்ட்ரக் ஆகியிருந்த பாக்ஸை கஷ்டப்பட்டுத் திறந்து, பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

அடி !

ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த அண்ணனை அடித்தாள் சுவேதா. ''போடீ இங்கிருந்து'' என டென்ஷனானான். அங்கிருந்து ஓடி, பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவை நெருங்கி ஓர் அடி வைத்தாள். நிமிர்ந்து பார்த்தவர், ''ஓகே!'' என்றார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் கன்னத்தில் அடித்தாள். ''ஒழுங்கா அடிம்மா!'' என்றாள் பாட்டி. அங்கே வந்து அமர்ந்த தாத்தாவையும் விடவில்லை... முதுகில் ஓர் அடி கொடுத்தாள். ''அடிச்சியா... நகரு!'' என்று திரும்பிப் பார்த்தார் தாத்தா. அப்போது, கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அம்மா. ''கைலே சூடா டீ இருக்கு... கிட்டே வந்துடாதே!'' என்று அவள் கத்தியதையும் பொருட்படுத்தாமல் அம்மாவை நெருங்கி, அவள் காலில் ஓர் அடி போட்டாள் சுவேதா. சமாளித்து நின்ற அம்மா, ''எத்தனை அடி அடிப்பே? அங்கே பாரு அப்பாகிட்டே'' என்று கை நீட்டினாள்.
அப்பா தன்னைத் தானே ஒரு அடி போட்டுக் கொண்டு, ''அடிச்சுட்டேன் சுவேதா... ஒரு பக்கம் அமைதியா உட்காரு'' என்ற அப்பா நொந்து கொண்டார், ''நல்லா அடிக்கிறே கொசுவை!''

மூங்கில் டிபன் பாக்ஸ்!

கொல்லி மலை குள்ளன்!
''கொல்லி மலைக் குள்ளன்... அலாவுதீனின் அற்புத விளக்குபோல எல்லா மாயங்களையும் நடத்திக்காட்டுவான்.காட்டுக்குள்இருக்கும் அவ னைப் பிடிப்பவர்கள் அதிர்ஷ்டசாலி!'' - இப்படி ஒரு தகவல் நீண்ட நாட்களாகவேகொல்லிமலைப் பக்கம் உலவுகிறது!

இதை நம்பிக் கொல்லி மலைக்கு வரும்கூட் டமும் அதிகம். ''காட்டுக்குள்ள இருக்கிற அவனை வீட்டுக்குக் கொண்டுவந்துட்டா பணம் குவியும்னு சொன்னாங்க. அவனை வாங்கலாம்னு வந்தா, அலையவிட்டாங்களே தவிர, வேலை ஆகலை'' என்று நொந்து கொள்கிறார் ஏமாந்த ஆசாமி ஒருவர்!
விபரமான உள்ளூர் ஆசாமியோ, ''இங்க 30 வருஷமா இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு, எந்தக் குள்ள மனுசனும் இங்க கிடையாது. ஆனா, காலம் காலமா மர்மங்கள் உலவுற மலை இது. சில வருஷத்துக்குமுன் னாடி, சிலர் மோகினிப் பேயை செல்போன்ல படம் எடுத்ததாப் பரபரப்பு கிளம்புச்சு. இங்கே சித்தர்கள் நடமாட்டம் இருக்குங்கிறது மட்டும் உண்மை. ஆனா, அதுக்கும் ஆதாரம் இல்லை. இந்த மலையில் அதிசய மூலிகை கள் நிறைய இருக்கு. ராத்திரி நேரத்துல சில மூலிகைகள் ஒளிரும். அதைப் பார்த்துதான் மோகினிப் பிசாசுன்னு கிளப்பிவிடுறாங்க'' என்கிறார்!
- கே.ராஜாதிருவேங்கடம்
படம்: எம்.விஜயகுமார்



ஆஹா, அன்னலட்சுமி!
கோவை பி.என். புதூர், மருதமலை ரோட்டில் இருக்கிறது ஹோட்டல் அன்னலட்சுமி. சாப்பிட்டுவிட்டு கையில் காசு இருந்தால், கொடுக்கலாம். இல்லை என்றாலும், கேட்க மாட்டார்கள். சாதம், நெய், பொடி, சாம் பார், வத்தக் குழம்பு, கூட்டு, பொரியல், கீரை, தயிர், ஸ்வீட், ரசம், ஊறுகாய் எனக் களை கட்டுகிறது விருந்து. கோவையின் பிரபலமருத்துவர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள் பலரும் இந்த ஹோட்டலுக்கு நிதியுதவி செய்கிறார்கள்.
இதன் மேலாளர் டி.ஆர்.சுந்தரம், ''15 வருடங்களுக்கு முன்பு சுவாமி சாந்தானந்த சரஸ்வதி இந்த ஹோட்டலை ஆரம்பித்தார். சேவை நோக்கில் தன்னால் இயன்றவரை பொருள் உதவி பெற்று சமைத்துப்போட்டார். அதுதான் இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது. வசதி இருப்பவர்கள், கல்லாவில் பணத்தைப் போடுவார்கள். ஆயிரக் கணக்கில் போடுபவர்களும் உண்டு. வெற்றுக் காசோலையைக் கொடுத்து, வேண்டும் அளவுக்கு நிரப்பிக்கொள்ளச் சொல்லும் நல்ல மனிதர்களும் உண்டு'' என்கிறார். இந்த ஹோட்டலுக்கு சென்னை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கிளைகள் உண்டு!
பா.விஜயசந்தர், படம்:வே.பாலாஜி



மரத்து மேல வீடு!
மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் பறவைகளின் கூடு களைப் பார்த்து நாமும் ஒருநாள் இந்தக் கூட்டுக்குள் வசித்தால் எப்படி இருக்கும் என ஆசைப்பட்டு இருக்கிறீர்களா? டாப் ஸ்லிப் காட்டுக்குள் நிஜமாகவே மரத்தின் மீது அப்படி ஒரு வீட்டைக் கட்டி இருக்கிறார்கள்!
பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் மலைப் பாதையில் இருக் கிறது டாப் ஸ்லிப். இங்கு அடர்ந்த வனப் பகுதியில் பிரமாண்டமான தேக்கு மரத்தின் மீது, மூங்கில்க ளால் வேயப்பட்ட மர வீடு இருக்கிறது. மூன்று அறை கள், அட்டாச்டு பாத்ரூம், அருமையான பால்கனி என சகல வசதிகளும் உண்டு. பால்கனியில் இருந்து பார்த்தால், கண் ணுக்கு எட்டும் தூரத்தில் மான்கள் துள்ளும். சமயத் தில் காட்டு எருமை, கரடி போன்ற வன விலங்கு களையும் பார்க்க முடியு மாம். இங்கு தங்குவதற்கு பொள்ளாச்சியில் இருக்கும் இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் தூக்கிவைத்துவிட்டு, ஒருநாள் இங்கு தங்கிவிட்டுச் சென்றால் போதும். ஒரு ஆண்டுக்கு உங்களை ரீ-சார்ஜ் செய்ததற்கு சமம்!
- கே.ராஜாதிருவேங்கடம், படம்: தி.விஜய்



மூங்கில் டிபன் பாக்ஸ்!
கிராமப் புறங்களில் வயல் வேலைக்கும் மேய்ச்சலுக்கும் செல்வோர் முன்பு எல்லாம் உணவை சுரைக் குடுவை அல்லது மூங்கில் குடுவையில் எடுத்துச் செல்வார் கள். ஆனால், எவர்சில்வர் வருகைக்குப் பின் அது பழங்கதை ஆகிவிட்டது. ஆனால், இன்றும் தர்மபுரி மாவட்டக் கிராமங்களில் சிலர் மூங்கில் குடுவையில்தான் உணவு எடுத்துச் செல்கின்றனர்.
அரூர் அருகே வகுத்துப்பட்டி கிராமத்தில் மூங்கில் குடுவையுடன் சென்றுகொண்டு இருந்த மாதுவிடம் பேசினோம். ''வெள்ளாடு மேய்ச்சலுக்குப் போறேன். எங்க தாத்தா காலத்துல இருந்தே மூங்கில் குடுவையில சோறு சாப்பிட்டாத்தான் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும். அலுமினியப் பாத்திரம், பிளாஸ்டிக் டப்பாவுலயும் சில நேரம் சோறு கொண்டுபோய் இருக்கேன். வெயில் தாங்காம சாப்பாடு கெட்டுப்போயிடுது! களி, கம்பஞ்சோறு அல்லது அரிசி சோத்தை மோருடன் பிசைஞ்சு இந்தக் குடுவையில் அடைச்சுடுவேன். ஒருநாள் முழுசா கெட்டுப் போகாது; ருசியும் அருமையா இருக்கும்'' என்கிறார் மாது!
- எஸ்.ராஜாசெல்லம்



சிரிக்கும் சிற்பம்!
பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் வெகு பிரபலம். இங்கு வேதநாயகி அம்மன் இருக்கும் வசந்த மண்டபத் தின் முற்றத்தில் இருக்கிறது சிரிக்கும் பெண் சிற்பம். இந்த சிற் பத்தின் தலையில் இருந்து பவானி ஆற்றுத் தண்ணீரை ஊற்றினால் சிற்பம் சிரிப்பதைப்போலத் தோற்றம் அளிக்குமாம். அப்படி சிரிக்கும்போது, வேண்டுதலை சிற்பத்திடம் சொன்னால், அது கட்டாயமாக நிறைவேறும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள். இதனால் சிற்பத்தைக் குளிப்பாட்ட ஏகப்பட்ட போட்டி!

ப்ளஸ் டூ - வுக்குப் பிறகு..!?

'ப்ளஸ் டூ தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும்? இன்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? அதுவும் நல்ல கல்லூரியில் கிடைக்குமா? ஒருவேளை இன்ஜினீயரிங் கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? கல்லூரியில் ராகிங் கொடுமையை எப்படி எதிர்கொள்வது? ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் வெளி வரும் பட்டதாரிகள் இடையே எனது வேலை வாய்ப்புத் திறனை நான் எவ்வாறு மெருகேற்றிக் கொள்வது?’ - இப்படி யும் இதைத் தாண்டியும் ப்ளஸ் டூ தேர்வு எழுதி, முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்கள் அலை அடிக்கும்!
இன்னொரு பக்கம்... பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி, ஜாலி ஹோலி கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்ட மாகக் கழிக்கத் திட்டமிட்டு இருப்பார்கள் பலர். இந்த இரண்டு வித மனநிலை யும் ஆரோக்கியமானது அல்ல!
கொஞ்சம் கவனமாகத் திட்டமிட்டால், ப்ளஸ் டூ -வுக்குப் பிறகான உங்கள் எதிர்காலத்துக்கு நீங்களே சிவப்புக் கம்பளம் விரித்துக்கொள்ளலாம். அதற்கேற்ப உங்களுக்கு இங்கே வழிகாட்டுகிறார்கள் பல்துறை நிபுணர்கள்!

சரி... மனசுக்குப் பிடித்த பாடப் பிரிவில் விருப்பமான ஒரு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. இனி, கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். படபடப்பு, ஆர்வம், பயம், பரவசம்... 'இனி, நான் சின்னப் பிள்ளை இல்லை. காலேஜ் ஸ்டூடன்ட்டாக்கும்!’ என்று முதல் ஆண்டின் சில மாதங்களைக் கழிப்பீர்கள். அதிலும் சீனியர்களின் ராகிங்கில் சிக்கநேர்ந் தால், கல்லூரி வாழ்க்கையின் அவஸ்தை, அத்தியாயமாகப் பதிவாகும் கலக்கமும் உங்களிடம் இருக்கலாம். அதன் பிறகும், விடுதி வாசம், ஆரோக்கியம் இல்லாத உணவு கள், வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமைத் துயர் போன்ற மனரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்வது என வழி நடத்துகிறார் மனநல மருத்துவர் தேவகி.
''ஆபத்து இல்லாத ராகிங் மூலம் நட்பு பாராட்டுவதுதான் பெரும்பாலான சீனியர்களின் நோக்கமாக இருக்கும். தரையில் நீச்சலடி, பாடு, ஆடு என்று சொன்னால், தயங்காமல் செய்யலாம். கூச்சம்,சங்கோஜம் ஆகியவற்றை அதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில், உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்யச்சொல்லும் போது... தயங்காமல், 'ஸாரி... இதில் எனக்கு விருப்பம் இல்லை’ என்று உறுதியாகமறுத்து விடுங்கள். அதையும் மீறி உங்களைக் கட்டாயப்படுத்தினால், பேராசிரியரிடமோ, கல்லூரி முதல்வரிடமோ புகார் செய்யலாம். இது போன்ற எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவை... துணிச்சல். அந்தத் துணிச்சலை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் தேவகி.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் மாணவர்களுக்கோ, தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்தில் படிக்க நேரும் மாணவர்களுக்கோ, ஆரம்பத்தில் சில சங்கடங்கள் இருக்கலாம். நகரம் என்பது வேற்றுக் கிரகம் அல்ல! கிராமத்தைக் காட்டிலும் அடர்த்தியாக மக்கள் நிறைந்த ஒரு பெரிய பகுதி. கிராமத்தைவிட, நகரத் தில் தொழில்நுட்ப வசதிகள் அதிகம். அவ்வளவே! ஆங்கிலம் என்பது தமிழைப் போல ஒரு மொழி. அதை மிகச் சுலபமாகக் கற்கலாம். ஆங்கிலம் என்பது அறிவுஅல்ல. அது ஒரு மொழிப் புலமை! ஆகவே, ஆங்கில அறிவு என்று நாம் சொல்வது தவறு. ஆங்கிலப் புலமை என்பதே சரி. சித்திரமும் கைப் பழக்கம்... ஆங்கிலமும் நாப் பழக்கம்!
''கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். நவநாகரிக உடைகள் அணியும் நகரத்து மாணவர்களைப் பார்த்து, குற்றவுணர்ச்சியால் குறுகுறுக்கத் தேவை இல்லை. வசதிக்கு ஏற்ப ஆடை அணிவதுதான் அவசியம். நாம் அணியும் உடை எந்த விதத்திலும் நமது கண்ணியத் தைக் குலைப்பதாக இருக்கக் கூடாது.'ஹோம் சிக்’ பாதிப்பு கடந்து, ஹாஸ்டல் பாதுகாப்பு குறித்த சந்தேகமும் அவர்கள் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். யாருமற்ற உலகில் தனித்துவிடப்பட்டதுபோல இருக்கும். தனது எண்ண ஓட்டத்துடன் பொருந்திப் போகும் நபர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வது, நகரைச் சுற்றிப் பார்த்து ஊரைப் பரிச்சயப்படுத்திக்கொள்வது என்று புதிய சூழலை உங்களுக்கு நெருக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

ஆரம்ப நாட்களில் உடலுக்கு செட் ஆகாத உணவுப் பழக்கம், சின்ன வசிப்பிடத்தைப் பலருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பிரச்னைகள் இரண்டொரு வாரங்களில் சரியாகிவிடும். அதனால், பயம் தேவை இல்லை. சிலர் வீட்டில் ஆறு தோசை சாப்பிடுவார்கள். ஆனால், விடுதியில் மூன்று தோசைக்கு மேல் சாப்பிட்டால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சத்தில், கால் வயிறும் அரை வயிறுமாகச் சாப்பிடுவார்கள். உணவு விஷயத்தில் மட்டும் எங்கேயும் எப்போதும் கூச்சம் வேண்டாம்.
கல்லூரிப் பருவத்தில் பல சமயம் நீங்களே தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். இரண்டாம் ஆண்டு விருப்பப் பாடம் துவங்கி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்று பல விஷயங்களைப்பற்றி தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது பல சமயங்களில் மன உளைச்சலை உண்டாக்கி, தூக்கம் கெடுத்து, குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படி முடிவெடுக்க முடியாத சமயங்களில் தனிமை தவிர்த்து, பெற்றோர் அல்லது விவரம் தெரிந்த சீனியர், பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள். நாளை நீங்களே ஒரு வழிகாட்டி ஆகலாம்!'' என்று நன்னம்பிக்கை முனை சுட்டுகிறார் தேவகி.



கவுன்சிலிங் கவனம்!
''பெரும்பாலும் பள்ளிகளில் ப்ளஸ் ஒன் வகுப்பில் நான்கு மாதங்கள் மட்டுமே ப்ளஸ் ஒன் பாடத் திட்டத்தை நடத்துகிறார்கள். பள்ளிக்கு நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்பதற்காக, ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் ஒன் சமயமே நடத்தத் தொடங்கிவிடுவதால், பொறியியல் படிப்பில் சேருபவர்கள், கணிதத் திலும் இன்ஜினீயரிங் கிராஃபிக்ஸ் பாடத்திலும் அடிப்படை தெரியாமல் கஷ்டப் படுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இதற்கான பாடத் திட்டம் இருக்கிறது. பொறியியல் ஆர்வம் உள்ள மாணவர்கள், கல்லூரியில் சேருவதற்குள், கிடைக்கும் சில மாத இடைவெளியில்இவற்றைப் படிப்பது நல்லது. இது எனது சின்சியர் அட்வைஸ்!'' என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர். பொறியியல் கவுன்சிலிங்கின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்...
''தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் 41 விதமான பொறியியல் படிப்புகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு அதிகம் பேர் தேர்ந்தெடுத்த எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் துறை, அநேகமாக அனைத்துக் கல்லூரிகளிலும் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருப்பது, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு 2,20,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். விண்ணப்பிப்பவர்களின் மதிப்பெண்கள் உண்மை தானா என்பதை கல்வித் துறையோடு ஊர்ஜிதப்படுத்தும் பணி முதலில் நடக்கும். கடந்த ஆண்டு 38 நாட்கள் கவுன்சிலிங் நடந்தது. இந்த ஆண்டு கவுன்சிலிங் மே 16 வாக்கில் தொடங்கலாம். 10.30 மணிக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது என்றால், ஒரு மணி நேரம் முன்னதாகவே மாணவர்கள் வந்துவிட வேண்டும். அதிகாலையிலேயே பல்கலைக்கழக வளாக வங்கிக் கிளை திறந்திருக்கும். அங்கு எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் என்றால் 2,500-ம் மற்றவர்கள் 5,000-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு மாணவர் மதுரையில் இருந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஏற்கெனவே எந்தக் கல்லூரி யில், என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருப்பார். ஆனால், நாம் நினைத்த கல்லூரியில், குறைந்த கட்டணத்தில், நினைத்த பாடப் பிரிவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அந்தச் சமயம், நம் முன்னுரிமை கல்லூரிக்கா அல்லது பாடப் பிரிவுக்கா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் இருக்கும் கல்லூரியில்தான் இடம் இருக்கிறது என்பதற்காக, விருப்பம் இல்லாத பாடப் பிரிவைத் தேர்ந்து எடுப்பது உங்கள் கேரியருக்கு நல்லது அல்ல. விருப்பமான பாடம் குறைந்தபட்சத் தூரத்தில், தரமான கல்லூரியில் எங்கே இருக்கிறது என்ற விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. அப்படியான தகவல் திரட்ட முடியாதவர்கள், கவுன்சிலிங் அரங்கில் இருக்கும் ஆலோசகர்களின் வழி காட்டுதலுக்கு ஏற்ப நடந்துகொள்ளலாம்.
ஒரு கல்லூரியின் தரத்தை நிர்ணயிப்பது, அதன் ரிசல்ட் மட்டும் அல்ல... அங்கு உள்ள பேராசிரியர்கள், லேப், நூலகம், கணினி, உள்கட்டமைப்பு வசதிகள் என எல்லாவற்றையும் பார்த்துதான் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்!'' என்கிறார் மன்னர் ஜவஹர்!



வேலைவாய்ப்புத் தகுதிகள்!
இத்தனை போராட்டங்களும் எதற்காக?
கௌரவமான ஒரு வேலையைக் கைக்கொள்ளும் இலக்கை எட்டுவதற்காகத்தானே! கல்லூரிப் பருவத்திலேயே தங்களின்வேலை வாய்ப்புத் திறனை அதிகரித்துக்கொள்வது எப்படி? ''கல்லூரியில் விருப்பப் பாடங்களைத் தேர்ந்து எடுப்பதில் உள்ள நிதானமும், உத்வேகமும் வேலை குறித்து முடிவு செய்வதிலும் வேண்டும்!'' என்கிறார் 'கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர்’ நிறுவன இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, வேலை வாய்ப்புச் சந்தையில் தன்னை முன்னிறுத்த, சில சிறப்புத் தகுதிகளை வளர்த்துக்கொள்ள என்ன செய்வது?
''பல கல்லூரிகளில் இறுதி ஆண்டுசமயம் தான் மாணவர்களிடம் வேலைவாய்ப்புத் தகுதியை உருவாக்க முனைகிறார்கள். இந்தப் பழக்கம் இரண்டு வாரங்களில் வரன் பார்த்து திருமணம் முடிப்பதற்குச் சமமானது. 25 வருடங்கள் வளர்ந்த ஒருவன், வெறும் 20 நாட்களில் முழுமையாகத் தன்னை திருத்தி வடிவமைத்துக்கொள்ள இயலாது. அப்படியே மாறினாலும், அது செயற்கையான, தற்காலிகமான மாற்றமாகத்தான் இருக்கும். அதனால், கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்தே எதிர்காலத்துக்கு ஏற்பத் தன்னை மெருகேற்றிக்கொள்வதில், மாணவர் கள் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் உலகத்தையே கட்டி ஆளலாம் என்று இதுவரை கற்பனைகோட்டை கட்டி இருந்தால், அதற்கு இப்போதே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். நேர்முகத் தேர்வுகளில் ஆங்கிலத்தைவிட, டெக்னிக்கல் சம்பந்தமான அறிவையும், இண்டஸ்ட்ரி தொடர்பான விழிப்பு உணர்வையும்தான் சோதிக்கிறார் கள்.
இறுதி ஆண்டில் புராஜெக்ட்களைத் தங்கள் கைப்படச் செய்து முடிப்பது, கேம்பஸ் இன்டர்வியூக்களில் உங்களுக்குக் கூடுதல் மதிப்பை அளிக்கும். விலைக்கு வாங்கும் புராஜெக்ட்கள் உங்களின் இயல்பான திறமையைக்கூடமறைத்து, எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கும். பொதுவாக, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும்போது, வெளியுலக அனுபவம், விளையாட்டு, நாடகங்கள் என படிப்பைத் தவிர்த்த பிற துறை ஆர்வங்க ளையும் கணக்கில்கொள்வார்கள். ஆல் தி பெஸ்ட்!'' என்று வாழ்த்துகிறார் கார்த்திகேயன்.
கல்லூரி மாணவர்களை வளாகத் தேர்வின் மூலம் தேர்ந் தெடுக்கும் சி.டி.எஸ். நிறுவனத்தின் ப்ளேஸ்மென்ட் செல்லில் இருக்கும் பாலசுப்ரமணிய ராஜாவின் டிப்ஸ்....
''பொதுவாக, எந்த செமஸ்டரிலும் அரியர் இல்லாமல் இருப்பது நலம். தகுதியுடைய மாணவர்கள் அதிக அளவில் இருந்தால், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் சராசரிகளும் கணக்கில்கொள்ளப்படும். மதிப்பெண்கள் தவிர, விளையாட்டு, என்.எஸ்.எஸ் போன்ற தனித் திறமைத் தகுதிகளுக்கும் அங்கீகாரம் உண்டு. தனித் திறமைகொண்டவர்கள் மற்றவர்களிடம் எளிதில் கலந்து பழகுவார்கள் என்ற லாஜிக்தான் இதற்குக் காரணம். உங்களது 'ரெஸ்யூம்’களில் உங்களின் ப்ளஸ் பாயின்ட் என்று நீங்கள் எவற்றை எல்லாம் நினைக்கிறீர்களோ, அவற்றை எல்லாம் தயங்காமல் குறிப்பிடுங்கள். நேர்முகத் தேர்வில் முகம் பார்த்து சாதுர்யமாகப் பதில் சொல்லும் திறனும் உங்கள் தகுதியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்!''
__._,_.___