பிரபலமான இடுகைகள்

வியாழன், 24 மார்ச், 2011

எல்.கே.ஜி. நுழைவுத்தேர்வு – ஓர் ஆய்வு

எல்.கே.ஜி. நுழைவுத்தேர்வு – ஓர் ஆய்வு



சென்னையில் சமீபத்தில் சேகரித்த எல்.கே.ஜி சேர்க்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்:

1 . எல்.கே.ஜி.க்கு இன்டர்வ்யூ நடத்தாத தனியார் பள்ளிகளே இல்லை என்கிற நிலை. அரசு.


2 . மிகக்கடினமான இன்டர்வ்யூ நடத்துகிற பள்ளிகளே 'நல்ல பள்ளிகள்' என்கிற பெயர்.


3 . மிக அதிகமாக பள்ளிக்கட்டணம் வசூலிக்கிற பள்ளிகளே 'சிறந்த பள்ளிகள்' என்கிற பெயர்

4 . பல 'பெரிய பள்ளிகள்', 'ப்ரீ.கே.ஜி. மற்றும் ப்ளே ஸ்கூல்களையும்' நடத்துகின்றன. அவற்றில் படித்த மாணவர்களுக்கே அப்பள்ளியின் எல்.கே.ஜி.யில் இடம் கிடைக்கும் என்கிற நிலை.

5 . எல்.கே.ஜி. சேர்க்கை படிவத்தில் ஒரு இடத்தில் 'பள்ளி வளர்ச்சி நிதியாக எவ்வளவு பணம் தங்களால் தர முடியும்?' என்கிற கேள்விக்கு நீங்களே குத்து மதிப்பாக ஒரு எண்ணிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். மிக அதிகமாக பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டும் பள்ளியில் இடம். (மற்றவர்கள் எவ்வளவு போட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியாததால், எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அதிக எண்ணை அதில் பூர்த்தி செய்வார்கள்)


6 . சில பள்ளிகள் நேரடியாகவே வளர்ச்சி நிதியை (?!?) கேட்டுப்பெறுகிறார்கள். (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆற்காடு வீராசாமியால் துவங்கப்பட்டு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிற சென்னை பப்ளிக் பள்ளியில் ஒன்றரை லட்சமாம் எல்.கே.ஜி இடத்திற்கு)


எல்.கே.ஜி. நுழைத்தேர்வு எப்படி இருக்கும்:

1 . எல்.கே.ஜி இண்டர்வ்யூவிற்கு ஹால் டிக்கெட் எல்லாம் உண்டு. பெற்றோர் தேர்வறைக்கு வெளியில்தான் நிற்கவேண்டும்.

2 . எல்.கே.ஜி பாடத்திட்டமனைத்தையும் கரைத்துக்குடித்தவர்களுக்கே எல்.கே.ஜி. யில் இடம் (பள்ளியில் சேர்ந்த பிறகு இவங்க என்னத்த சொல்லித்தருவாங்கன்னு தெரியல)

3 . எல்.கே.ஜி. இன்டர்வ்யூ கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கேட்கப்படுகிறது.


ஒரு பள்ளியில் கேட்கப்பட்ட கேள்விகளை உதாரணத்திற்கு தருகிறேன்:


Can you identify this object?


Do you know any English rhymes?


What is your favorite food?


(3 வயது குழந்தை தன் தாய்மொழியையே தட்டுதடுமாறிதான் பேசும் என்பதுகூட அறியாத முட்டாள்களா அவர்கள்)

4 . ஒரு 'பெரிய பள்ளியில்' ஒரு குழந்தையிடம் ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் எழுதிக்காட்ட சொல்லியிருக்கிறார்கள். அந்தக்குழந்தையும் எழுதியிருக்கிறது. ஆனாலும் அக்குழந்தைக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. காரணம் - கையெழுத்து நேராக இல்லையாம். கோடு போட்ட நோட்டில் எழுதுகிற திறமை இருக்கவேண்டுமாம்.

5 . பல நடுத்தரப்பள்ளிகளில் எல்.கே.ஜி இன்டர்வ்யூவில் தேர்ச்சி பெறாத குழந்தைகளையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் காலையும் மாலையும் அதே பள்ளியில் முதல் ஆறுமாதம் ட்யூசன் சேர வேண்டும். அதற்கு தனி கட்டணம். ஆறு மாதத்தில் தேறவில்லையெனில் பள்ளியை விட்டு துரத்திவிடுவதாக குழந்தைகளை மிரட்டல்.

இதுதான் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்பதற்கான முன்னோட்டமோ? இறைவா இந்த பச்சிளம் குழந்தைகளை நீ தான் காப்பாற்ற வேண்டும்.

அழுக்கு வேட்டியும், அப்பாவும்……

அப்பா நன்றாகக் குடித்திருந்தார், வரும்போதே குடித்து விட்டு வரும் அப்பாவை என்ன சொல்லித் திட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை, அப்பா குடிப்பது வழக்கமான ஒன்றுதான், அவர் எவ்வளவு குடித்தாலும் தன்னிலை மறந்து கீழே விழுந்து கிடந்ததாகவோ, யாரையும் தகாத சொற்களால் திட்டியதாகவோ எனக்கு நினைவில் இல்லை, ஆனாலும் குடித்து விட்டு வீட்டுக்குள் வருபவர்களை எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அது அப்பாவாக இருந்தாலும் சரி, "காலைலேயே தண்ணி அடிக்கணுமா?, தண்ணி அடிக்கிறதா இருந்தா வீட்டுப் பக்கம் வராதீங்க" என்று சொல்ல நினைத்தேன், பிறகு அந்தச் சொற்கள் அவரது மனதை அதிகம் பாதிக்கலாம் என்று யோசித்து விட்டு அப்படியே விட்டு விட்டேன்.எனது மகன் முருகனும், மகள் குழலியும் தாத்தா வாங்கி வந்திருந்த அச்சு முறுக்கையும், பனங்கிழங்கையும் வாங்கிக் கொண்டு பதிலுக்குச் சில முத்தங்களை அவருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்,

அம்மாவோடு எத்தனை சண்டை போட்டாலும் அப்பாவை மரியாதைக் குறைவாகவோ, கடுமையாகவோ என் மனைவி ஒருபோதும் பேசி இருக்கவில்லை, அது எனக்கு எப்போதும் ஒரு வியப்பான ரகசியமாகவே இருந்தது, நான் அவரை ஏதேனும் கடும் சொற்களால் பேசினால் கூட உடனடியாக ஒரு கோப்பைத் தேநீரை அவருக்குக் கொடுத்து நான் இருக்கிறேன் என்று என் அப்பாவுக்கு ஆதரவுக் கொடி பிடிப்பாள். "எப்டி இருக்கீங்க, அதிகமா குடிக்காதீங்க மாமா, இன்னும் ரொம்ப நாள் பேரப் புள்ளங்களோட நீங்க நல்லா இருக்கணும்னு தான் நெனைக்கிறோம்" என்றபடி அப்பாவோடு தனது உரையாடலைத் துவங்கி விட்டிருந்தாள் தாமரை. இனி அவர்களின் உரையாடல் மாலை வரை நீடிக்கும்.

சின்ன வயதில் இருந்தே அப்பாவைக் கண்டால் எனக்குப் பிடிப்பதில்லை, அதற்கு நிறையக் காரணங்கள் என்னிடத்தில் இருந்தன, ஒன்று அவர் ஒரு ஏழையாய் இருந்தது, இன்னொன்று அவர் காய்கறிக் கடை வைத்திருந்தது, ஒரு காய்கறிக் கடைக்காரரின் மகன் என்று பள்ளியில் சொல்லிக் கொள்வதற்கும், கல்லூரியில் நண்பர்களிடத்தில் சொல்லிக் கொள்வதற்கும் எனக்கு இருந்த வெட்கமும், தாழ்வுணர்வுமே அவரை எனக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்று நினைக்கிறேன், அவர் பெரும்பாலும் கடையிலேயே காலம் கழித்தார், நான் சிறுவனாக இருந்தபோது விடுமுறை நாட்களில் வலுக்கட்டாயமாக என்னை அவர் கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுவார், கடினமான வேலைகள் எதையும் எனக்குச் வழங்குவதில்லை என்றால் கூடக் கல்லாவில் உட்கார வைத்து விடுவார், வருகிற பணத்தை எண்ணி வாங்குவது மீதிச் சில்லறை கொடுப்பது என்று என்னுடைய பல விளையாட்டு நாட்களை நான் இழந்து போனதற்கு அப்பா தான் காரணம் என்று நான் உறுதியாக நம்பினேன், பலமுறை கிரிக்கெட் பந்தயங்கள் நடக்கும் போது நான் கடையில் அமர்ந்திருப்பது சிறையில் அடைக்கப்பட்ட மனநிலையைத் தந்திருக்கிறது. ஆகவே நான் அவரைக் கடுமையாக வெறுக்கத் துவங்கி இருந்தேன், அவருடைய முகத்தையும், அவருடைய நடவடிக்கைகளையும் என்னையும் அறியாமல் நான் வெறுப்பது எங்கிருந்து தொடங்கியது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கடையில் வேலை செய்வதற்கு இரண்டு பேர் இருந்தாலும் கூட அவரே பல நேரங்களில் மூட்டைகளை லாரியில் இருந்து இறக்குவார், அந்தக் காட்சியைக் காண்பதற்கு எனக்கு மிகவும் எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கும். அப்பாவின் மீது நான் வெறுப்புக் கொள்வதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணமும் இருந்தது, அது அவருடைய உடைகள் பற்றியது.

அப்பா எப்போதும் அழுக்கான முரட்டுத் துணிகளையே ஆடையாக அணிந்திருப்பார், பள்ளியில் பணம் கட்டுவதற்கும், கல்லூரியில் கையெழுத்துப் போடுவதற்கும் கூட அவர் அதே அழுக்கு உடைகளோடு தான் வருவார், சில நேரங்களில் அரக்கு நிறத்தில் மாறிப் போயிருக்கும் வெள்ளை வேட்டியில் அவர் என் கூட வருவது வெட்கமானதாகவும், சினம் வரவழைப்பதாகவும் இருந்திருக்கிறது. கல்லூரி காலத்தில் ஒருமுறை அவரோடு அப்படி நடந்து சென்று கொண்டிருந்தபோது கூடப் படிக்கும் பெண் தோழிகள் சிலர் கூட்டமாக எதிர்ப்பட்டார்கள், அவர்களின் கண்களில் படாமல் ஒளிந்து நடந்து செல்ல வேண்டியிருந்தது, இருப்பினும் அவர்களில் ஒருத்தி என்னைக் கவனித்து விட்டு "என்ன கதிரவா? அப்பாவோட வாக்கிங்கா?" என்று நக்கலடித்தாள், அவமானமாக இருந்தது. அம்மாவிடம் வந்து "ஏம்மா, அப்பா யாரையும் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறாறு?" "ஏண்டா இப்படி ஒரு ஆளுக்கு மகனாப் பொறந்தோம்னு இருக்கும்மான்னு" என்றதும், அம்மா, ஒன்றும் சொல்லவில்லை, அப்பாவை யாரும் குறை சொல்வது அம்மாவுக்குப் பிடிக்காது, அது மகனாக இருந்தாலும் என்பதை அம்மாவின் பார்வையில் உணர்ந்தவனாக நகர்ந்தேன். அம்மா, அப்பாவைப் பற்றி எந்தக் குறையும் எப்போதும் சொன்னதில்லை, அவர் குடிப்பதைப் பற்றி மட்டும் அவர் வருத்தப்படுவாரே தவிர, அவரைப் பற்றிய எந்த ஒரு வெறுப்பான மனநிலையையும் வெளிப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை.

மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது அப்பா அறைக்குள் படுத்திருந்தார், குழலி அப்பாவுக்கு அருகில் அமர்ந்து ஏதோ கதை கேட்டுக் கொண்டிருந்தாள், பொதுவாக காலையில் வந்தால் மாலையில் கிளம்பி விடுவது தான் அப்பாவின் வழக்கம், நாங்கள் இருக்கும் நகரத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் தான் ஊர், நினைத்தால் வந்து விடுவது அப்பா, அம்மாவுக்கும், எங்களுக்கும் பழக்கமான ஒன்றுதான். இன்று வழக்கத்துக்கு மாறாக அவர் இங்கேயே இருந்தது ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது, "இந்த மனுஷன் என்ன இன்னும் கெளம்பாம இருக்காரு" என்று பல்லைக் கடித்தவாறே முருகனைத் தேட ஆரம்பித்தேன். "தாமர, அவன எங்கே காணம்? சாய்ங்கால நேரத்துல அவன வெளில விடாதன்னு சொல்லி இருக்கேன்ல" என்று அப்பாவின் மீதுள்ள எரிச்சலை மனைவியிடம் காட்டினேன். "அவன் மெடிக்கல் ஷாப்புக்கு போயிருக்காங்க, மாமாவுக்கு வயித்து வலின்னு நான்தான் மாத்திரை வாங்க அனுப்பி இருக்கேன்" என்றாள் தாமரை. "ஆமா, காலைலே குடிக்கச் சொல்லு வயித்த வலி வராது, நம்மள வேற எதுக்கு தொந்தரவு பண்றாருன்னு தெரியல" என்று நான் முனகியது அனேகமாக தாமரையில் காதில் விழுந்திருக்கும் என்பது அவள் கையில் இருந்த பாத்திரத்தை அழுத்தமாகக் கீழே விட்டதில் இருந்து தெரிந்தது.

தொலைக்காட்சியில் கழிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நான் அப்பாவை மறந்திருந்தேன், திரும்பி அறைக்குள் பார்த்தபோது அப்பா, வலியால் அவதிப்படுவது மாதிரித் தெரிந்தது எனக்கு, அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளவில்லைஎன்றால் கூட அவர் மெல்ல முனகுவது மாதிரித் தெரியவும், உள்ளே சென்று "ரொம்ப வலியா இருந்தா ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வரலாம் வாங்கப்பா" என்றேன். அவரும் எழுந்து சட்டையை மாட்டிக் கொள்ளத் துவங்கினார், வேறெதுவும் சொல்லாமல் அவர் அப்படிக் கிளம்பியது அவருக்கு வலி மிகுதியாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது. வண்டியைக் கிளப்பினேன், அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று காத்திருந்து மருத்துவரைச் சந்தித்தபோது இரவு ஒன்பதுக்கும் மேலாகி விட்டிருந்தது. சில சோதனைகளைச் செய்து விட்டு என்னை மீண்டும் உள்ளே அழைத்தார் மருத்துவர், மிக இளவயது மருத்துவராக இருந்ததால் நெருக்கமாகப் பேசினார், "ஏதோ யூரினல் அலர்ஜி மாதிரித் தான் சார் தெரியுது, ஒரு கிட்னிதானே, இதுமாதிரிப் பிரச்சனைகள் அடிக்கடி வரும், எதுக்கும் இன்னைக்கு இரவு இங்கேயே இருந்து பார்த்துக் கொண்டால் நல்லது" என்றார் மருத்துவர். "சரி சார், அப்படியே செய்யலாம்" என்று சொல்லி விட்டு அப்பாவை செவிலிப் பெண் காட்டிய படுக்கை அறைக்குள் படுக்க வைத்து விட்டு தாமரைக்கு அழைத்தேன். மருத்துவர் ஒரு கிட்னி என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாக இருந்தது எனக்கு. அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனை வாசலில் தாமரை நின்று கொண்டிருந்தாள். பொதுவாகவே மருத்துவமனை செல்வது தாமரைக்குப் பிடிக்காது, அதிலும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மருத்துவமனையில் இருந்தால் அவள் வருவதே இல்லை, மருத்துவமனைகளில் நிலவும் ஒருவிதமான கலவையான மருந்துகளின் மணம் தனக்கு வயிற்றுக் குமட்டலைத் தரும் என்றும், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு சாப்பிட முடியாது என்றும் அடிக்கடி அவள் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பாள், ஆனால் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றவுடன் அவள் ஓடி வந்தது போலிருந்தது எனக்கு. இந்த குடிகார மனுஷன் மேலே மட்டும் அப்படி என்ன கரிசனையோ என்று மனதுக்குள் திட்டியபடி நான் அவளை உள்ளே அழைத்துச் செல்ல அப்பா இப்போது படுக்கையில் அமர்ந்திருந்தார். "மாமா, டாக்டர் என்ன சொன்னாரு?" என்று அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அனேகமாக வீட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த உரையாடலை இருவரும் துவக்கியது போலிருந்தது எனக்கு.

பத்து மணிக்குத் தம்பி அம்மாவைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டான், அநேகமாகத் தாமரை தான் அம்மாவுக்குச் சொல்லி இருப்பாள், அம்மா நேராக அப்பாவிடம் சென்று அவரது படுக்கையில் அமர்ந்து கொண்டாள், ஏங்க, காலைல ரொம்பக் குடிச்சீங்களா? ஏன் வயித்த வலிக்குது? மத்தியானம் என்னம்மா சாப்டாரு? ஏண்டா டாக்டர் என்ன சொன்னார்? ஊசி போட்டாங்களா? மாத்திரை எழுதிக் கொடுத்தாங்களா? என்று ஒரு சி.பி.ஐ அதிகாரி அளவுக்குக் கேள்வி கேட்ட அம்மாவை முறைத்தேன் நான். "போடா, தாமரையையும் கூட்டிட்டுப் போய் படுங்க, காலைல வரலாம்" என்று அம்மா சொல்லத் துவங்கியதும் அதற்காகவே காத்திருந்தவன் போல தாமரையைப் பார்த்தேன், அவளும் கிளம்புவதற்குத் தயாரானாள், முருகன் மருத்துவமனையில் வைத்திருந்த மீன் தொட்டியின் அருகே நின்று கொண்டு மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், வாடா கிளம்பலாம் என்று நான் அவனை வீட்டுக்குக் கூப்பிடவும் "அப்பா, இதுல இருக்குற Black Tiger" தாம்பா நான் கேட்டுக் கிட்டே இருக்கேன். எப்பப்பா வாங்கித் தருவீங்க", தாத்தா கூட்டிட்டுப் போய் வங்கித் தாரேன்னு சொன்னாருப்பா, அவரு எப்போ வீட்டுக்கு வருவாரு" என்றான். நள்ளிரவில் ஒருமுறை அலைபேசியில் அம்மாவோடு உரையாடிக் கொண்டிருந்தாள் தாமரை. பேசி முடித்ததும் "என்ன எப்படி இருக்காராம்" என்றேன் நான். இப்போ வலி எதுவும் இல்லையாம், மாமா நல்லாத் தூங்கிக்கிட்டு இருக்காராம்" என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டுப் படுத்துக் கொண்டாள் தாமரை.

காலையில் கொஞ்சம் விரைவாகவே எழுந்து மருத்துவமனைக்குச் சென்றேன் நான், அதிக நடமாட்டம் இல்லாத அதிகாலைத் தெருவுக்குள் சூரியக் கதிர்கள் மட்டும் சுதந்திரமாய் படிந்திருந்தன. மருத்துவமனைக்குள் நுழைந்து அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னாள் சென்ற போது அப்பாவின் குரல் காதில் விழுந்தது, "இல்ல, மாரி, அவன் கிட்ட கடைசி வரைக்கும் அதச் சொல்லவே கூடாது, ஏன்னா, அது ஒரு பெரிய கொறையாவே போயிரும், தேவை இல்லாம அவனுக்குப் பயம் வரும், இதுவரைக்கும் அவனுக்கு கிட்னி பிரச்சனை எதுவும் வரவே இல்லை, ஒருவேளை அவனுக்கு இந்த ஆபரேஷன் பண்ணின விஷயம் இப்போத் தெரிஞ்சாக் கூட மனசளவுல எம்புள்ள உடைஞ்சு போயிருவான். நமக்கு ஏதோ கொறை இருக்குன்னு அவனுக்குத் மனசுல படக் கூடாதுன்னு தானே இந்த விஷயத்த நாம இவ்வளவு காலமா மறச்சோம், இப்போ திடுதிப்புன்னு அவன்கிட்டச் சொல்லப் போறேன்னு சொல்றியே".

"இல்லங்க, உங்க மேலே அவனுக்கு வரவரப் பாசமே இல்லாமப் போகுது, நீங்க அந்தப் பய மேல எம்புட்டுப் பாசம் வச்சிருக்கீங்கன்னு இப்பவாவது அந்தப் பயலுக்குத் தெரியட்டும், ஒத்தக் கிட்னிய அந்தப் பயலுக்குக் குடுத்திட்டு நீங்க பட்ட பாடு எனக்குத் தானங்க தெரியும், அந்த வலி வேதனைலையும், நகண்டு நகண்டு போய் டாக்டர் கிட்ட நின்னு எம்புள்ளைக்கு ஒன்னும் ஆகாதுல்ல சார்னு நீங்க அழுத கண்ணீர் இந்தப் பயலுக்கு என்னங்க தெரியும், இந்தப் பய வளந்து செழிச்சது எல்லாம் நீங்க போட்ட பிச்ச தானங்க, நீங்க சொல்லக் கூடாதுன்னு சொன்ன சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இவ்வளவு காலம் நான் பொறுமையா இருந்தது போதும்" என்று அம்மா விசும்பத் துவங்கி இருந்தாள்.

இந்த உரையாடலின் மையப் புள்ளியை நான் உணர்ந்து கொண்டபோது மருத்துவர் சொன்ன ஒற்றைக் கிட்னி குழப்பம் என்னிடம் இல்லை, எனக்குள் அப்பாவைக் குறித்த இனம் புரியாத உணர்வுகள் சுற்றி அலையத் துவங்கி இருந்தன. எனக்கு பள்ளிக் காலம் வரையில் நடந்த தொடர் சோதனைகளும், மருந்து மாத்திரைகளும் நினைவுக்கு வந்து போயின, என்னைச் சுற்றி அந்த அதிகாலையில் இருள் சூழத் தொடங்கி இருந்தது, எனக்குக் கீழே இருந்த மருத்துவமனைக் கட்டிடம் இன்னும் சிறிது நேரத்தில் இடிந்து விழும் போலிருந்தது. எனக்கு அழ வேண்டும் போலிருந்தது, சத்தம் போட்டு அழுது விடுவேனோ என்று நான் அஞ்சினேன். மெல்ல அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தேன், விரைவாக வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனபோது தாமரை பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள், தாமரை என் முகத்தைப் பார்த்தாள், என்னங்க மாமா எப்டி இருக்காங்க? டாக்டர் எதுவும் பயப்படுற மாதிரி இல்லைன்னு சொன்னாராம், இன்னைக்கு மத்தியானம் வீட்டுக்குக் கூட்டிப் போகலாம்னு அத்தை சொன்னாங்க" என்றாள். நான் அமைதியாகவே இருந்தேன். பிறகு முருகனைப் பார்த்து "முருகா இன்னைக்கு லீவு போட்ரலாம், தாத்தா கூட ஆஸ்பத்திரில இருந்துட்டு அப்புறமா நீ போய் அவர் கூட Black Tiger வாங்கிட்டு வா" என்றதும் என்னை முருகன் விநோதமாகப் பார்த்தான்.

நாங்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்து அப்பாவிடம் சென்ற போது சுவற்றில் யாரையோ இவர் நல்ல மேய்ப்பன் என்று எழுதிப் போட்டிருந்தார்கள், எனக்கு அவர் கீழே நின்று கொண்டிருந்தது மாதிரித் தெரிந்தது, "குடிக்கிறத விட்டிருங்க பெரியவரே" என்று அந்த இளம் மருத்துவர் அப்பாவுக்கு அறிவுரை சொல்லி விட்டு எங்களைப் பணம் கட்டுவதற்காகக் கீழ்த் தளத்திற்கு போகச் சொன்னார், அப்பா, படுக்கையில் இருந்து எழுந்து நின்றார், கீழே வைக்கப்பட்டிருந்த மருந்துக் குப்பி ஒன்று அவர் காலில் தட்டவும் கொஞ்சம் தடுமாறினார் அப்பா, எனது கைகளால் அப்பாவை அணைத்துப் பிடித்துக் கொண்டேன் நான். "மெதுவாப்பா" என்று சொல்லி விட்டுக் கீழே குனிந்தேன், அப்பா எனது கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைப் பார்த்து விட்டார், "ஏண்டா ஐயா, அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொன்னாரே" என்று சொல்லி விட்டு "இவன் என்ன சின்னப் புள்ள மாதிரி அழுதுகிட்டு…….., சொல்லு மாரி" என்றார்.

எதற்காகவோ அப்பா என்று கத்தினான் முருகன், அந்தச் சொற்கள் உலகில் உச்சரிக்கப்படும் மிக உன்னதமான சொற்களைப் போல என் காதுகளில் ஒலிக்கத் துவங்கியது, அழுக்கு வேட்டியாலும், காய்கறிக் கூடைகளாலும் இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்த எனக்கே எனக்கான அப்பாவை நான் கண்டு பிடித்துக் கொண்டேன், அவரது காய்த்துப் போயிருந்த கைகளை நான் கொஞ்சம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தேன். அப்பாவின் உடலில் மிக இன்றியமையாத பணியாற்றும் ஒரு பகுதி எனக்குள் பொருத்தப்பட்டிருப்பதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய வரமாக அந்தக் கணங்களில் நான் நம்பத் துவங்கினேன். தெரிந்து கொள்ள முடியாத பல தியாக வரலாறுகளைச் சுமந்து கொண்டு நம் கண் முன்னே நடமாடித் திரியும் நல்ல மேய்ப்பர்களை விடுத்து நாம் தான் பல நேரங்களில் கோவில்களுக்குள்ளே போய்க் கடவுளரைத் தேடித் திரிகிறோமோ என்று தோன்றியது. எனக்கான உலகம் அப்பாவினால் எனக்கு வழங்கப்பட்ட ஒற்றைக் சிறுநீரகத்தின் அச்சில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவதற்குள் வீடு வந்து விட்டிருந்தது.

ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற....!




பாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்... நோய் எதிர்ப்பு சக்தி!

அந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்... இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம்.

அந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இறுகிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு.

சளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், "எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்"ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் - இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் "சி" இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் "சி" அவசியம்.

சளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம்.

சைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழம்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம்.

சிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும்.

முட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும்.

ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள்.

காளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிறவங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது அனுபவஸ்தர்கள் சொல்லக் கேட்டது.

வெள்ளி, 18 மார்ச், 2011

உன் நினைவுகளோடு நானும்....​.!

மறந்து விட்டேன்....ஆம்
உன்னை மறந்து விட்டேன்....
இப்படி சொல்லிக் கொண்டே
நினைத்து பார்க்கிறேன்....

மறந்து விட்டேன்....,
என்று நினைத்தே....,
இன்னும் அதிகமாய்,
உன்னை நினைக்கிறேன்.


இமை மூடி
சிந்தித்த
நினைவுகளை...


விழி திறந்திருந்தும்
வியாபித்த
கனவுகளை...


விடியலின் போது
தூங்குகையில்
என்னைத் துள்ளி எழ
வைத்த உன் பார்வைகளை...


என் வாழ்க்கையின்
நம்பிக்கையை மெருகேற்றிய
உன் வார்த்தைகளை..


நாம் கை கோர்த்து
தடம் பதித்த
பாதைகளை..


பாதையோரம்
செல்கையில்...
ரசித்து சென்ற
காட்சிகளை..


காணும் காட்சிகள்
அனைத்திலும்
நீ மட்டுமே
தோன்றிய பொழுதுகளை,


உன்னால்
நேர்த்தியாய்
அழகாய் தோன்றிய
என் நிமிடங்களை...


துன்பத்திலும் உன்னோடு
நானிருப்பேன் என்று
தோள் சாய்ந்திருந்த
தருணங்களை...

சந்தித்துப் பிரிந்ததும்..
உன்னை எண்ணி
கனவில் வாழ்ந்த கணங்களை...

நம் கனவுகள்
பற்றி சொல்லவே
ஒரு யுகம் வேண்டும்

என்று கூறி
கண் சிமிட்டி
நீ சிரித்த சிரிப்புகளை...

என் கர்வங்களைக்
களவாடிய
உன் பேச்சுக்களை...


மறந்து விட்டேன்....,
என்று நினைத்தே....,

இன்னும் அதிகமாய்,
உன்னை நினைக்கிறேன்.

மறந்து விட்டதாக நினைக்கும்
அனைத்திலும் நீ மட்டுமே
என்னில் நிறைந்திருக்கிறாய்.

வாழ்வது நானாக இருந்தாலும்
வாழ்விப்பது உன் நினைவுகள்தான்
என்பதை நான் எப்படி மறந்தேன்...?

இப்போது நான்
தெளிவாகப் புரிந்து கொண்டேன்....
உன்னை மட்டுமல்ல....
உன் நினைவுகளை நீங்கினாலும்
எனக்கு ஜீவன் இல்லை.

என்றும் என்னோடு நீயும்....,
உன் நினைவுகளோடு
நானும்.....!

மறந்து விட்டேன்....,

என்று நினைத்தே....,
இன்னும் அதிகமாய்,
உன்னை நினைக்கிறேன்.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்​











'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.


இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.


நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.


இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.


இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..


இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.


இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.


ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.


மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.


இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.


அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:


வாழைப்பூ:

இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.


வாழைத்தண்டு:

இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.


வாழைக்காய்:

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.


பாகற்காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.


சேப்பங்கிழங்கு:

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.


பீட்ரூட்:

கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.


வெண்டைக்காய்:

போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.


கோவைக்காய்:

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.


முருங்கைக் காய்:

வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.


சுரைக்காய்:

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.


குடைமிளகாய்:

வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.


சௌசௌ:

கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்:

புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.


காரட்:

உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.


கொத்தவரங்காய்::

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:

கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.




__._,_.___

பழமொழிகள்

"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். " -ஸ்பெயின்.

"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.

"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.

"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.

"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.

"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.

"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.

"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.

"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது." -ஜப்பான்.

செல்போன் போதை

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.

அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.

செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.



கோபுரங்களால் கோடி தொல்லை
செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.



செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு
செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.



கழிவறைகளில்...
யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள் என்றில்லை, பேருந்து நிலையம்,
மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.



காவல்துறை சொல்வதென்ன?
செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அந்த சுகம் வேண்டுமா..இந்த சுகம் வேண்டுமா?.. தொடர்பு கொள்ளவும்... என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் நிலத்தை விற்பதற்கில்லை,என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.



வெறும் 2 நிமிடங்கள்தான்
சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.



எச்சரிக்கை அவசியம்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். Ôஐஈஎம்ஐÕ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.



செல்போன் போதை
வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்.




__._,_.___

ஆணிவேரானவன் நீ!

செல்லமே....
இரவுப் பொழுது மெல்லமாய்
இறக்கின்றது....ஆனால்
என் இரவு மட்டும் எப்போதும்
வெளிச்சமாகவே இருக்கின்றது!

இயலாமையிலேயே
இதயமும் கிடப்பதால்
எனது காகிதப்பேடும்
வெற்றிடமாகவே கிடக்கிறது...

உன் ஞாபக சின்னங்கள்
நெஞ்சோடு சிதறிக்கிடப்பதால்
என் கண்ணீரின் தூறலில்
கரைந்தே போகின்றேன்...

உன் முகம் மட்டுமல்ல
நீ விடும் மூச்சுக்காற்றும்
எனக்கு ராசிதான் - அதையே
நான் சுவாசிப்பதால்...

என் குலசாமிக்கும் உனக்கும்
ரொம்ப வித்தியாசமில்லையடா
நான் உன்னைக் கேட்டு
கையேந்தினால் சாமியும்
உன்னைப்போலவே எப்போதும்
கல்லாகவே நிற்கின்றது....

நீயோ
எனை காக்க வைத்து
களிப்டைகின்றாய்...
நானோ காத்திருந்து
காயமடைகின்றேன்...
என் தேசம் மட்டுமல்ல
என் நேசமும் தப்பானதல்ல!!

உனக்காய்
காத்திருக்கையில்
நான் காணாமலே ஆகலாம்
ஆதலால் அன்பே - நான்
மறையுமுன் வந்துவிடு
என் சாம்பலையாவது
தொட்டுவிட்டுப் போ
எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்

நேற்றைய நினைவிலும்
நாளைய கனவிலும்
காலத்தை கழிக்கின்றேன்
என் எண்ணத்தின்
ஆணிவேரானவன் நீ!

என் ஆவியை உன்னிடம்
தொலைத்ததால் பார்ப்பவர்களுக்கு
நான் பாவியானேன்!

தொலைதூர இடத்தில் நீ
இருந்தாலும்
தொலையாத நினைவுகளுடன்
உன்னை தொடர்கின்றேன்

எனை நினைக்க மறந்து
நீ பறந்தாய்!
நினைத்தே இருப்பதால்
நான் இறந்தேன்.....

ஜப்பான் சுனாமிக் காட்சிகளை

ஜப்பான் சுனாமிக் காட்சிகளை சேனல் சேனலாகத் தாவித் தாவிப் பார்த்துக்கொண்டே, நமது வீட்டுக்குள் நாம் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், அது உண்மையா?

கடந்த ஒரு வார காலமாக ஜப்பான் அடுத்தடுத்து எதிர்கொண்டுவரும் நிலநடுக் கங்கள், சுனாமி, கதிரியக்க அபாயங்கள் என ஜப்பானின் சோகம்... உலகத்துக்கே பாடம். குறிப்பாக இந்தியாவுக்கு! கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்!

ஜப்பானுக்கு நிலநடுக்கங்கள் புதிதல்ல. பூமிக்கு அடியில் யுரேஷியன், பசிஃபிக், பிலிப்பைன்ஸ் கண்டத்திட்டுகள் சேரும் இடத்தில் அமைந்திருக்கிறது டோக்கியோ. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ள பிரதேசம். உலகிலேயே ஜப்பானில்தான் இதுவரை அதிக அளவு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. சராசரியாக ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுனாமியை ஜப்பானியர்கள் எதிர்கொள்கிறார்கள்.
ஆனால், அந்தக் கருப்பு வெள்ளியன்று ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும், ஜப்பானியர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கின்றன. சுமார் 1,326 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'ஹகுவா மஹா’ சுனாமிக் கதைகளையும், ஜப்பானின் மிக மோசமான நிலநடுக்கமான 1923-ம் வருடத்திய 'கான்டோ’ நிலநடுக்க நினைவுகளையும் ஜப்பானியர்கள் அசை போடத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான பேரழிவை ஏற்படுத்தியது கான்டோ நில நடுக்கம். அப்போதைய பூகம்பமும் அதைத் தொடர்ந்த சுனாமியும் 1.43 லட்சம் ஜப்பானியர் களைப் பலிகொண்டது. ஒப்பீட்டளவில் பார்த்தால், அந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வுகள் 7.9 ரிக்டர் அளவிலானதாம். ஆனால், இப்போதைய நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவு கொண்டது. உயிர்ச் சேதம் குறைவாக இருக்கலாம்... ஆனால், இயற்கைச் சீற்றத்தின் அளவு அதிகம்!
அபார இயற்கை வளங்கள் ஏதும் இல்லாத ஜப்பான், இரண்டாம் உலகப் போரின் மாபெரும் வீழ்ச்சிக்குப் பின் உலகின் பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக உயரக் காரணமே, அந்த நாட்டின் தொழில் துறை வளம்தான். அதன் உயிர்நாடி... மின்சாரம். ஆனால், நாட்டின் பெரும் பகுதி எரிசக்தித் தேவைக்கு இறக்குமதி பெட்ரோலியப் பொருள்களையே ஜப்பான் நம்பி இருக்க வேண்டி இருந்தது. அனல் மின் நிலையங்களோ, புனல் மின் நிலையங்களோ அமைக்க போதிய வளங்கள் இல்லாத நிலையில், எந்த சக்தி தங்கள் நாட்டை அழித்ததோ... அந்த சக்தி யையே ஆக்க சக்தியாகப் பயன்படுத்தினார்கள் ஜப்பானியர்கள்.

உலகின் மூன்றாவது பெரிய அணுசக்திப் பயனீட்டாளராக ஜப்பான் உருவெடுத்தது இப்படித்தான்!
ஏறத்தாழ 53 அணு மின் நிலையங்கள் ஜப்பானில் இருக்கின்றன. உலகையே உலுக்கிய செர்னோபில் அணு உலை விபத்தோ, த்ரீ மைல் தீவு அணு உலை விபத்தோ, ஜப்பானின் அணு சக்திக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அதே சமயம், நிலநடுக்க அபாயப் பகுதிக்குள் இருப்பதால், வேறு எந்த நாட்டையும்விடக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட்டவை ஜப்பானிய அணு உலைகள். இந்தச் சூழலில், தொழில் துறை சார்ந்த முன்னேறிய நாடு என்ற அந்தஸ்தினை எட்ட, அணுசக்தி எரிபொருள்தான் சரியான தீர்வு என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை பற்றி எரிவது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஃபுகுஷிமா அணு உலைக்கு நேர்ந்திருக்கும் நிலை, இத்தனை நாட்கள் அணு சக்திக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இருந்தவர் கள் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. இதுவரை அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாட்டின் வயிற்றிலும் புளியைக் கரைத்து உள்ளது!
இந்தியா என்ன செய்யப்போகிறது?
மிக முக்கியமான கேள்வி இது. நியாயமாக 2004-ல் சுனாமி தாக்குதலுக்கு இந்தியா ஆளான போதே, நாம் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால், நகைமுரணாக அதற்குப் பின்தான் நம்முடைய அணுசக்தித் துறை மேலும் வலுப்படுத்தப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்கள் நலனுக்கு எதிரான அணு விபத்து இழப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜப்பானுடன் ஒப்பிட்டால், இந்திய அணு உலைகள் பலவீனமானவை மட்டும் அல்ல... பல நூறு மடங்கு பேராபத்துகளை உருவாக்கக் கூடியவையும்கூட!
''இந்தியா விழித்துக்கொள்ள இதுதான் கடைசித் தருணம்!'' என்கிறார் அணு சக்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி. உதயகுமார். ''அணுசக்தி எந்த விதத்தில் பார்த்தாலும், அபாயகரமானதே. அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பது வடிகட்டிய பொய். இதைத்தான் இயற்கை, ஃபுகுஷிமா சம்பவம் மூலம் மனித குலத்துக்கு மீண்டும் சொல்கிறது.
இதுவரை ஃபுகுஷிமா அணு உலையைச் சுற்றி கதிரியக்கப் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து 6 லட்சம் மக்களை வெளியேற்றி இருக்கிறது ஜப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த அணு உலை உருகி, கதிரியக்கப் பேரபாயமாக மாறிவிடும். இனி, அந்த இடம் எந்தக் காலத்திலும் மக்களால் திரும்பவே முடியாத இடமாகிவிடும். ஆனால், கதிரியக்கப் பாதிப்புகளை தலைமுறை தலைமுறையாக அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும். இந்தியாவில் இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்!'' என்கிறார் உதயகுமார்.
அணு சக்தித் தொழில்நுட்பத்துக்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவக் குழுவின் உறுப்பினர், மருத்துவர் வி.புகழேந்தி, ''இந்திய அரசு இனியாகிலும் தன் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்!'' என்கிறார்.
''ஜப்பான் அணு உலைகள் 8.5 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பங்களைத் தாங்க வல்லவை. ஆனால், இந்தியாவில் உள்ள அணு உலைகளோ 5.6 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பங்களை மட்டுமே தாங்க வல்லவை. தவிர, இந்திய அணு உலைகளில் பேணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை ஏட்டளவிலானவை மட்டுமே. கல்பாக்கத்தில் ஒரு முறை விபத்து ஒத்திகை நடந்தபோது, அணு மின் நிலையத்தில் இருந்த 'வாக்கி டாக்கி’கள் செயல்படவில்லை. நம்முடைய பாதுகாப்புக் கட்டமைப்பின் லட்சணம் இதுதான்.
இப்போது எல்லோரும் ஜப்பானைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால், 2004-ல் சுனாமித் தாக்குதல் ஏற்பட்டபோது, இங்கே கல்பாக்கத்தில் என்ன நடந்தது என்பதைப்பற்றிப் பேச இன்னும்கூட ஆட்கள் இல்லை. கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் கதிர்வீச்சு இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு சதுரங்கப்பட்டினம் என்ற கிராமத்தில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டோம். ஏராளமானோர் புற்றுநோய்க்கு ஆளாகிஇருப்பது தெரிய வந்தது. ஆனால், அதை அனல் மின் நிலைய நிர்வாகம் மறுக்கிறது. அரசும் உண்மையை மறைக்கிறது.
இந்தியாவில் உள்ள எந்த ஓர் அணு உலையைச் சுற்றிலும் இத்தகைய பாதிப்புகளை நாம் பார்க்க முடியும். பொது மருத்துவர்களையோ, நிபுணர்களையோகொண்டு ஆய்வு மேற்கொண்டு இதை நிரூபிக்க முடியும். ஆனால், அரசு தயாராக இல்லை. இங்கு நடக்கும் விபத்துகள்கூட மூடி மறைக்கப்படுகின்றன. இந்த விஷயங்களை அரசு மறுக்கலாம்; ஆனால், இல்லை என்று நிரூபிக்க முடியாது!'' என்கிறார் புகழேந்தி.
இந்தியாவின் மீது பிற நாடு கள் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த முற்படக் கூடாது என்ப தற்காக, ஏராளமான அணு ஆயுதங்களை உருவாக்கி இருக் கிறது நம்முடைய அரசு. அதை மீறி அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அவற்றை வழி மறித்துத் தாக்க ஏராளமான ஏவுகணைகளையும் தயாரித்து வைத்திருக்கிறோம்.
ஆனால், அணுகுண்டுக் குவியல்போல நாடெங்கிலும் நாம் உருவாக்கி இருக்கும் அணு உலைகள் மீது இயற்கை குறிவைத்தால், அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது நம்முடைய அரசு?

வியாழன், 17 மார்ச், 2011

காற்றில் அஞ்சல் செய்கிறேன்

காற்றில் அஞ்சல் செய்கிறேன்

உன்னை காணும்
ஆவலில் கைதியாக
உன் நினைவு சிறையில் !
விழிகள்தான் சாவி என்றால்
என்னை மட்டும்
முறைத்து பார்த்துவிட்டு !
தெருவில் உடைந்த
கண்ணாடிகளும் என்னை
பிரதிபலிக்க மறுக்கின்றன !
என் முகவரிகள்
தொலைத்துவிட்டேன்
உன் கைகளில்
இல்லை
என் நினைவுகளை
இழந்துவிட்டேனா?
உனக்கு
நினைவுருந்த ஒருதரமேனும்
சொல்லிவிட்டு
என்
காதலை
காற்றில் அஞ்சல் செய்கிறேன்
உனக்காக

கவிதையாய்.​...

குழந்தையின் ஏக்கங்கள்

அம்மா அடித்ததற்காக
அழும் குழந்தையின்
அழுகையின் பின்னால்
ஒளிந்திருக்கிறது வாங்காமல்
போன விளையாட்டு பொருட்களும்
உடைந்து போன பொம்மைகளும்
அழைத்து போகாத இடங்களுக்குமான
ஏக்கங்களின் மிச்சங்கள்...

தேடலின் சுகம்

என் கிராமத்திற்கு செல்லும்
ஒவ்வொரு முறையும்
தொலைந்து போன
என் காலடி தடங்களை
தேடியலைகிறேன்
என் பழைய
பள்ளிக்கூட வாசலில்...

மூளையைப் பாதிக்கும் 9 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.




__._,_.___

பிரிவு......

விடுதலைக்காகப் போராடிக்
கொண்டிருக்கும் உயிர்,
உடலிடம் மன்றாடும்
உருக்கமான தருணம்-பிரிவு !

உன்னுடன் பேசித்திரியும்
காலமெல்லாம் தெரியவில்லை
பிரிவில் என் உயிரைப்
பிரித்தெடுப்பாய் என்று !

நட்பும் ஒருவகைக்
காதல்தான் என்று எழுதிய
என் எழுதுகோல் ,
மையற்று மௌனித்து
மரணிக்கின்றது,
உன் பிரிவில்.......

சொர்ப்பமாய்க் கிடைத்திட்ட
உன் நட்பை,
அற்பமாய்த் தூக்கியெறிய
மனமற்றும்,
நுட்பமாய் நுகர்ந்த
உன் காதலை விட்டு
திட்பமாய் நகர்ந்த
என் நினைவுகளும் பட்ட பாடுகள்
இறைவனுக்கே வெளிச்சம் !

நிரந்தரமொன்று வாழ்வில்
இல்லையென்று
உணரப்பட்ட தருணம்,
ஊசிபோல் உலவிக்கொண்டிருக்கின்றது ,
என் இதயத்தைச் சுற்றி....

உன் பிரிவில் சப்தமிட்டு அழவும்
அவஸ்தையாய் உள்ளது ,
நம்மைக் காதலர்களென்று
கலங்கப்படுத்தி விடுவார்களோ
என்ற பயத்தில்.....

உண்மையான வரிகள் கூட
என் வாசகரிடையே
கற்பனைகளைக் கரைய
வாய்ப்புகளுண்டு ....
ம்ம்ம் .. அவர்களுக்குத் தெரியாது ,
என் வலிகளை நான்
வரிகளாக்கியுள்ளேன் என்று !






__._,_.___

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

ஒரு குடம் தண்ணி ஊத்தி.... ஒரே பூ பூத்துச்சாம் !


ரவி தேஜா... வீட்டில் ஒரே குழந்தை. அக்கம் பக்கத்தில் அவனுடன் சேர்ந்து விளையாடும் வயதில் குழந்தைகள் யாரும் இல்லாததால், தனியாகத்தான் விளையாடுவான். கிரிக்கெட் பேட்டை வைத்து, பந்தை அடித்து அடித்து விளையாடும் நேரங்களில் அவனுக்கே, அவனை நினைத்து பாவமாக இருக்கும்!


குழந்தையாக இருக்கும்போது வறுமை மட்டும் கொடுமை அல்ல; இப்படி விளையாட சரியான தோழமை இல்லாததும் கொடுமைதான்! என்னிடம் பேசிய பல குழந்தைகள், 'தோழமை இல்லை' என் பதை தங்கள் மழலையில் திக்கித் திணறி சொல்லும் போது, 'என் வேலை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, இவர்களுடன் கொஞ்ச நேரம் விளையாடினால் என்ன தவறு...?’ என்று நினைப்பேன். சில நேரங்களில் சின்னச் சின்னதாக விளையாடியும் இருக்கிறேன்.
ஒரு குடும்பத்தில் நான்கைந்து குழந்தைகள் இருந்து, அவையெல்லாம் வீட்டுக்குள்ளேயே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி, பொழுதைக் கழித்த அற்புதமான அனுபவங்களுக்கு... இரண்டு தலைமுறைக்கு முன்பே 'முற்றும்’ போடப்பட்டு விட்டது, பெருகும் மக்கள்தொகை பிரச்னை. இன்றைய தலைமுறையில் வீட்டுக்கு ஒரு குழந்தை! அந்தக் குழந்தை, தன் வீட்டுக்குள் தோழன், தோழிகளோடு ஆனந்தமாக விளையாடும் வகையில் சகோதர, சகோதரி உறவுகள் இல்லை.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்புறவு கொண்டாடுவதற்குகூட நேரம் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாத்திய கதவுகளுக்குள் இருக்கும் மனிதர்களின் முகம் தெரியாமலேயே நாட்களை நகர்த்துகிறோம். இந்தச் சூழ்நிலையில் குழந்தையுடன் சேர்ந்து விளையாட வேண்டியது யார்? சந்தேகமில்லாமல், உங்கள் ஆசைக் குழந்தையைப் பெற்றெடுத்த நீங்களும், உங்கள் கணவரும்... குழந்தைகளின் தாத்தா, பாட்டியும்தான்!
''என்ன டாக்டர் வெளையாடுறீங்களா நீங்க? சமைக்கறதுக்கும் குடும்பத்தைப் பாத்துக்கறதுக்குமே நேரமில்ல. இதுல அவகூட சேர்ந்து விளயாடணுமா?'' என்று உணர்ச்சிவசப் படாதீர்கள். 'நேரமில்லை’ என்ற காரணம், உங்கள் குழந்தையை 'ஒபிஸிட்டி’க்குள் தள்ளலாம். ஏனென்றால், சேர்ந்து விளையாடுவதற்கு ஆள் இல்லாத குழந்தைகள் பெரும்பாலான நேரம் டி.வி. பெட்டியின் முன் உட்கார்ந்து கொண்டு, 'பென்-10’ சீரியலையும், பவர் ரேஞ்சர்களின் சாகஸத்தையும் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ரசிக்கின்றன. விளைவு... ஒபிஸிட்டி பிரச்னையும், பாடங்களில் அக்கறையின்மையும் உருவாகிறது.
குழந்தைக்கு இத்தகைய பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கான தீர்வுகள்... உங்களிடம்தான் இருக்கின்றன. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டி.வி. சீரியல்களுக்கு 'பை... பை...’ சொல்லிவிட்டு குழந்தையுடன் ஜாலியாக விளை யாடிப் பாருங்கள். உங்களுக்கு உங்கள் பால்ய காலம் மீண்டு வந்தது போல் இருக்கும்; புத்துணர்ச்சியைக் கொடுக்கும் - உங்களுக்கும், குழந்தைக்கும்! குழந்தையுடன் நீங்கள் அரை மணி நேரம் விளையாடினாலும், அந்த 'குவாலிட்டி டைம்’... இருவருக்கும் இடையில் இறுக்கமான பிணைப்பை உண்டு பண்ணும்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அன்பான பிணைப்பு இல்லாத காரணத்தினால்தானே, சில பிள்ளைகள் தடம் பிறழ்கிறார்கள்..? விளையாடும்போது, 'டே தம்பி... அப்படி போடு, இப்படி போடு, அதை எடுத்து வா, இங்க போயி வை’ என்று நீங்கள் பேசும்போது, அது 1 - 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களிடத்தில் பேசும் திறனையும், ஒரு விஷயத்தை சரியாகச் சொல்லும் திறனையும் வளர்க்கிறது.
யோசித்துப் பாருங்கள் 20, 25 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலோ, கூடத்திலோ, வாசலிலோ... தாவணி போட்ட அக்கா, பாவாடை-சட்டை போட்ட தங்கை ஆகியோரோடு அவர்களின் அம்மாவும் உட்கார்ந்து தாயம், பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த நேரத்தில்தான் அந்த பாவாடைக் குழந்தை பல வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளும்.
நம் கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா இவர்களெல்லாம் விளையாடிய பல இண்டோர், அவுட்டோர் கேம்ஸுக்குள் பல விஷய ஞானங்கள் அடங்கியிருக்கின்றன. 'ஒரு குடம் தண்ணி ஊத்தி... ஒரே பூ பூத்துச்சாம், ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டே பூ பூத்துச்சாம்...’ என்று தொடரும் பாட்டில்... ஒரு குழந்தை பள்ளிக்குப் போவதற்கு முன்பே எண்களைத் தெரிந்து கொள்ளும்.
பல்லாங்குழி விளையாடும்போது, 'இந்தக் குழியில் ஆரம்பித்து, இத்தனை முத்துக்களைப் போட்டால், இத்தனையாவது சுற்றில் இந்தக் குழியில் உள்ள அத்தனை முத்துக்களும் நமக்குத்தான் கிடைக்கும்’ என்று மனக்கணக்குப் போட்டு விளையாடுவார்கள். இது ஒரு விஷயத்தின் மீது கவனம் குவிக்கும் திறனை அதிகமாக்கும், ஒரு விஷயத்தை இது இப்படித்தான் போகும் என கணிக்கும் விளையாட்டால் மூளையின் செயல்திறன் மேம்படும். அப்படி குழந்தையாக இருக்கும்போது மூளையை விளையாட்டாக பிரயோகப்படுத்தியவர்கள்தான், இன்று ஊர் மெச்சும் உயரத்தில் ஜொலிக்கிறார்கள்.
பூப்பறிக்க வருகிறோம்; பூப்பறிக்க வருகிறோம், கிட்டிப்புல், தாயக்கட்டை, கல்லா- மண்ணா, சில்லு, கிச்சுக்கிச்சு தாம்பாளம், தட்டாங்கல், பாண்டி, பச்சக்குதிரை, களிமண் பொம்மை செய்தல், ஊஞ்சல் என்ற ஏராளமான விளையாட்டுக்கள் குழந்தைகளை மேதைகளாக்கின. அந்த மேதைகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படினால்... உங்கள் குழந்தைக்கும் அந்த வாய்ப்பைக் கொடுங்கள்.
காரணம், நான் பார்த்த பெரும்பாலான பெற்றோர்கள்... நம் மண் சார்ந்த விளையாட்டுக்களை அலட்சியமாக நினைக்கிறார்கள். 'இந்த விளையாட்டெல்லாம் ஊர் பசங்கதான் விளையாடும், நீ ஏன் விளையாடுற...’ என்று திட்டும் பெற்றோர்களே, 'ஓல்ட் இஸ் கோல்ட்’! அது நம் பாட்டன் பூட்டன் விளையாட்டுக்கும்தான்!
குழந்தை விளையாட வீட்டில் விளையாட்டுப் பொருள் இல்லை என்றால்... வீட்டுக்குள் இருக்கும் பொருளை வைத்து என்ன விளையாடலாம் என்பதைக் கற்றுக் கொடுங்கள். அது பணத்தை மிச்சப்படுத்துவதோடு, குழந்தையின் கற்பனைத் திறனையும் தூண்டும். இனி விளையாட்டை... விளையாட்டாக நினைக்க மாட்டீர்கள்தானே பேரன்ட்ஸ்..?!
__._,_.___

அனுபவங்கள் பேசுகின்றன !

'முறை அழைப்பு’ முறையாக இருக்கட்டுமே!

முன்பெல்லாம் திருமணம் என்றால், வெளியூரில் இருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பார்கள். திருமணப் பத்திரிகை அனுப்பும்போது, கூடவே ஒரு கடிதம் எழுதி, 'கண்டிப்பா குடும்பமா வந்துருங்கப்பா...’ என்று ஆசையுடன் அழைப்பார்கள். அந்த அன்புக்காகவே... 'தவறாமல் போகவேண்டும்' என்று நினைப்போம். இப்போது கடிதம் எழுதும் பழக்கமெல்லாம் காணாமல் போய்விட்டது. பத்திரிகையை அனுப்பிவிட்டு, போன் செய்து, ''வந்துடுங்க மாமா'' என்று கூப்பிடுகிறார்கள். இதில் சிக்கல் என்னவென்றால், மாமாவைக் கூப்பிடுகிறவர்கள் ''மாமிகிட்ட கொடுங்க... ஒரு வார்த்தை சொல்லிடு றேன்'' என்று சொல்வதில்லை. சித்தியை அழைப்பவர்கள், சித்தப்பாவைக் கண்டுகொள்வதில்லை. இப்படி சம்பந்தப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களை மட்டும் அழைத்துவிட்டு, அவர்களின் துணையை மரியாதைக்குக்கூட அழைக்கமால் விடுவதால், உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது.
உறவுகள் நிலைக்கத்தானே இம்மாதிரியான அழைப்புகள்..? அதை முறையோடு செய்வதுதானே தலைமுறைகள் தாண்டியும் அந்த உறவை உடன் வரச் செய்யும்?!
- இந்திராணி தங்கவேல், மும்பை

எழுதிக் கொடுத்தால்... இல்லை பிராப்ளம்!
ரிப்பேரான என் மொபைல் போனை சரி செய்வதற்காக, ஒரு கடையில் நின்றிருந்தேன். அங்கு வந்த ஒருவர், ''சார்... 100 ரூபாய்க்கு 'டாப் அப்’ பண்ணுங்க... சீக்கிரம்'' என்று தன் மொபைல் எண்ணைச் சொன்னார். கடைக்காரரும் 'டாப் அப்’ செய்தார். ஆனால், அவர் மொபைல் நம்பரில் அது ரீ-சார்ஜ் ஆகவில்லை. டென்ஷனான அந்த நபர், ''அஞ்சு நிமிஷம் ஆச்சு... இன்னும் ஏன் ஏறல..?'' என்று கொஞ்சம் குரலை உயர்த்தினார். ''இல்ல சார்... உங்க நம்பர்ல பணம் ஏறினதுக்கான டெலிவரி ரிப்போர்ட் எங்களுக்கு வந்துடுச்சு'' என்று பதில் தந்தார் கடைக்காரர். மோதல் வெடிக்கும் என்கிற நிலையில்தான் தெரிந்தது ஒரு நம்பர் மாறி, வேறு யாருக்கோ ரீ-சார்ஜ் ஆன விஷயம். ''நான் சரியாதான் சொன்னேன். நீங்க தப்பா போட்டுட்டீங்க'' என்று வந்தவர் கத்தித் தீர்த்தார். கடைக்காரரோ.. ''எனக்கென்ன வேண்டுதலா... தப்பா ரீ-சார்ஜ் செஞ்சு உங்ககிட்ட திட்டு வாங்கணும்னு? நீங்கதான் மாத்திச் சொல்லிட்டீங்க'' என்று பதிலடி கொடுத்தார். வந்தவருக்கு நூறு ரூபாய் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம்!
டாப்-அப் செய்யும்போது, மொபைல் எண்ணை எழுதிக் கொடுத்துவிட்டால்... நோ பிராப்ளம்தானே?!
- இரா.சந்திரிகா, குன்னூர்

ஃபண்ட் ரைஸிங்... பண்பு ரைஸிங்!

சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காக 'ஃபண்ட் ரைஸிங்’ செய்யச் சொல்கிறார்கள். குழந்தைகளும் தங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரிடமும் வசூல் செய்து கொடுக்கிறார்கள். பள்ளிகளும் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என்று முக்கிய நாட்களில் அந்தத் தொகையைத் தொண்டு நிறுவனங் களுக்கு வழங்குகிறார்கள். இது பாராட்டத்தக்க செயல்தான். ஆனால், அதில் அதிகம் வசூல் செய்தவர்களுக்கு விருதும், பாராட்டுச் சான்றிதழும் தருவதுதான் பிரச்னை. எனக்குத் தெரிந்த அப்பா ஒருவர் தன் குழந்தையிடம், ''நீ வீடு வீடா போக வேணாம். நானே கொடுத்துடறேன்...'' என்று சொல்லி ஒரு பெருந்தொகையைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அண்டை வீடுகள், பக்கத்து கடைகள், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என்று ஒவ்வொருவரின் முகமாகப் பார்த்து, கேட்டு வசூலித்த குழந்தைகளின் தொகை, அதைவிட குறைவாகவே இருந்திருக்கிறது. பள்ளியில் நிறைய பணம் தந்த குழந்தைக்கு பரிசும் சான்றிதழும் தந்திருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் மற்ற குழந்தைகள் வாடிப்போய் விட்டன.
நல்ல பண்பு வளரவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர்களுக்கு இதுபோன்ற வேலைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதை பெற்றோரும்... பள்ளி நிர்வாகமும் சேர்ந்தே குலைத்துப் போடுவது என்ன நியாயம்?
- ஆர்.ராஜலஷ்மி, சென்னை-42

பக்குவம் சொல்லும் பள்ளி!

எங்கள் தெருவில் ஒரு பெண் பூப்பெய்தி னாள். மூன்றாம் நாளே பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். அவளுடைய பாட்டி யிடம், ''வயசுக்கு வந்த பெண்ணை கொஞ்ச நாளைக்கு வீட்டுல வெச்சு, அந்தச் சமயத்துல ஏற்படற உடல் உபாதைகளைத் தாங்கிக்கற பக்குவத்தையும், நாப்கின் உபயோகிக்கற முறைகளையும் சொல்லிக் கொடுக்காம, அவசரமா ஸ்கூலுக்கு அனுப்பிட்டீங்களே?'' என்றேன்.
அவரோ... ''ஸ்கூல்லயே குறிப்பிட்ட வயசுக்கு மேல உள்ள பெண் பிள்ளைகளுக்கு... உடல்ல ஏற்படற மாற்றங்கள், பூப்படையறது, அதை எதிர்கொள்ற பக்குவம், நாப்கின் பயன்படுத்தறதுனு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. இதுதொடர்பா நமக்குத் தெரியாத விஷயங்களைக் கூட பேத்திகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க லாம். அந்தளவுக்கு பக்குவப்படுத்தியிருக்காங்க ஸ்கூல்ல!'' என்றார்.
பாராட்டப்பட வேண்டிய பள்ளிக்கூடம்தானே!
- மு.ஜெயக்கொடி, விருதுநகர்

__._,_.___

புதன், 16 மார்ச், 2011

மனதை அமைதியாக வையுங்கள்

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.
உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர்கள் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?
கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிக் களம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பில் கவனம் செலுத்தலாம்.

09. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

திங்கள், 14 மார்ச், 2011

அவரவர் வாழ்க்கை, அவரவர் எண்ணங்களில்

அமெரிக்க விண்வெளியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது பேனாவைப் பயன்படுத்தி வந்தனர். விண்வெளியில் ஜீரோ க்ராவிடியால் பேனாவானது எழுதவில்லை. அதனால் எப்படியாவது விண்வெளியில் எழுதும் அளவிற்கு உள்ள பேனாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். முயற்சியின் பலனாக பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், பத்து ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக
குறைந்த க்ராவிடியில் எழுதும் பேனாவினை கண்டுபிடித்தனர்.

அதேசமயம் விண்வெளியில் எழுதுவதற்கு ரஷ்யர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் பென்சிலை பயன்படுத்தி எழுதினார்கள்.

இது வேடிக்கையாக கூறப்படும் ஒரு சிறுகதை. இதுவரை சிரிக்கக் கூடியதாக இருந்தாலும் இதற்கு மேலும் சிந்திக்கக் கூடிய ஒன்றும் உள்ளது. அதைப் பார்ப்போம் இப்போது.

இதிலிருந்து நாம் அறியவேண்டியது.....

வாழ்க்கை சுலபமானதே; கடினமானது அல்ல அவரவர்கள் கண்ணோட்டத்தில் சிறு சிறு யோசனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்பதில் தான் உள்ளது. "அவரவர் வாழ்க்கை, அவரவர் கைகளில்(எண்ணங்களில்)"

__._,_.___

ஞாயிறு, 13 மார்ச், 2011

எப்போதும் இன்புற்றிரு​க்க...

உலகம், பழிச்சொற்களைச் சிறிதும் யோசிக்காமல் சொல்லும் வழக்கம் கொண்டது. அன்று, கோவலனுக்கு நிகழ்ந்தது; இன்றைக்கு உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், சமூகப் பணியாற்றுவோருக்கும் நிகழ்கிற அவலமாகிவிட்டது. மிகுந்த நுண்ணிய தன்மை உள்ளவர்களும், தொட்டாற்சிணுங்கி போன்ற தன்மை கொண்டவர்களும் இன்றைய சூழலில் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. விமர்சனமற்ற வாழ்க்கை என்பது, எந்தச் செயலையும் செய்யாதவர்களுக்கு மட்டுமே சாத்தியம். குடும்பத்தில்கூட, முழுத் திருப்தியுறுவோர் மிக மிகக் குறைவுதான்.
அதிக நுண்ணுணர்வு, தவறிழைக்காமல் இருக்கவும், படைப்புத் தன்மையை அதிகப்படுத்தவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எங்கேயாவது, எவரேனும் முனகும் சத்தம் கேட்டால், சின்ன எதிர்ப்புக் குரல் கிளம்பினால், நத்தையைப்போல் சுருண்டு கொள்வோரும், ஆமையைப்போல் அரண்டு போவோரும் புலம்பலிலேயே பொழுதைக் கழிப்பார்கள். ஆனாலும், விமர்சனங்களை முழுவதுமாக ஒதுக்கிவிடமுடியாது. ஆக்கபூர்வமான, பயன்தரக் கூடிய, நடுநிலையுடன் கூடிய விமர்சனங்களை ஏற்று, நம்மைத் திருத்திக்கொள்வதே பண்புடைமை.
ஒருமுறை, தன் தவற்றை இளம் விஞ்ஞானி ஒருவர் சுட்டிக் காட்டியபோது, சற்றும் கோபப்படாமல், அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவரது விஞ்ஞான வித்தகத்தைவிட, மெய்ஞ்ஞான மேன்மையே எனக்குப் பெரிதாகப்படுகிறது. அறிவுசார்ந்த செய்திகளில் நமது தவற்றை ஏற்பதால், ஒரு நிமிடம் மட்டுமே முட்டாளாகி, வாழ்நாள் முழுவதும் புத்திசாலியாகத் திகழும் வாய்ப்பைப் பெறுவோம்.
இன்றைக்குப் பெரிய பொறுப்பு களில் இருப்பவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது; திருப்திப் படுத்த நினைக்கவும் கூடாது. பெரிய பதவியில் இருப்பவர்கள், கடும் நடவடிக்கை எடுக்கும்போது, நிச்சயம் சிலர் எதிர்ப்பார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவர்கள், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. சின்ன வழிமுறையைக்கொண்டு வந்தால்கூட, அதற்கும் எதிர்ப்பு வரும். இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணியாற்ற வேண்டுமெனில், அதை அனைவரும் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. எதிர்ப்புக் கிளம்பியதும், நுண்ணிய தன்மையாளர்கள் பயந்து அவற்றை விலக்கிக் கொள்வார்கள். இது, மிகப் பெரிய பலவீனம். சமரசம் செய்யாமல், உண்மையை நிலைநாட்ட முற்படும்போது, சற்று தடித்த தோல் தேவைப்படுகிறது. 'உதகமண்டல தட்பவெட்பமே எனக்கு ஏற்றது’ என அடம்பிடிப்பவர்கள், எப்படி உயர்ந்த பதவியில் இருக்கமுடியாதோ, அதேபோல் மிகவும் மெல்லிய மனம் கொண்டவர்களும் பெரிய சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது. இதைத்தான் அறிஞர் அண்ணா, 'எதையும் தாங்கும் இதயம்’ எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவர், ஷேக்ஸ்பியரின் வாசகங்களை கிங் லியரி லிருந்து மேற்கோள்காட்டி, 'மறப்போம் மன்னிப்போம்’ என அறிவுறுத்துகிறார்.
துரோகங்களைத் தாங்குவதும், விமர்சனங்களை எதிர்கொள்வதும், பழிச்சொல்லைச் சகிப்பதும்... வலுவான இதயம் உள்ளவர் களுக்கே சாத்தியம்! சமூக அமைப்பில் தவறு இழைப்பவர்கள் இன்றைக்கு வலிமையுடன் திகழ்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க, கட்டமைப்புகளும் கூட்டமைப்புகளும் இருக்கின்றன. அழிவுப்பாதையைத் தேர்ந்தெடுப் பவர்களுக்கு, அதுவே முழுநேரப் பணியாக இருக்கிறது. அவர்கள் நேர்மையானவர்கள்மீது, எளிதாகப் புழுதிவாரித் தூற்றமுடிகிறது; ஊடகங் களில் பொய்ச் செய்திகளை வரவழைக்க முடிகிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்க, வலிமையான இதயம் மட்டுமின்றி, தடித்த தோலும் தேவைப்படுகிறது.
அந்தக் காலத்தில், வீடுகளில் அதிகம் கண்டிப்பு காட்டினர். இன்றைக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே என்பதால், செல்லம் கொடுத்து, வேண்டியதை மட்டுமின்றி விரும்பியதையும் வாங்கிக் கொடுத்து வளர்ப்பதால், சின்ன ஏமாற்றம் அல்லது எதிர்ப்பு ஆகியவை ஏற்படுத்தும் எதிர்வினைகள் இன்றைய குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை உண்டாக்குகின்றன. இளைஞர்களிடம் தற்கொலை மனப்பான்மை அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினால், தூக்கில் தொங்குகிற மனநிலை சில மாணவர்களிடம் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர் திட்டுவதற்கெல்லாம் செத்துப் போவதென்றால், நாங்கள் பலப் பலமுறை செத்துப் போயிருக்கவேண்டும். பெஞ்ச் மீது ஏறாமல் பள்ளி வாழ்வையும், பேராசிரியர் திட்டாமல் கல்லூரி வாழ்வையும் ஒருவர் கழித்திருந்தால், தீர்ப்பு நாளில் அவருக்கு நரகமே வழங்கப்படும்.
தடித்த தோலுடன் இருப்பது வேறு; உணர்ச்சியற்று இருப்பது வேறு. தன் உணர்ச்சி களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதிர்ச் சியையே நான் அப்படிக் குறிப்பிடுகிறேன். நுண்ணறிவு மிகுந்திருப்பவர்கள், உணர்ச்சிக் குதிரைகளின் கடிவாளத்தைக் கைகளில் வைத்திருக்கிற புத்திசாலிகளாக இருக்கின்றனர். மகாத்மாகாந்தியின்மீது அவர் வாழும்போதே வைக்கப்படாத கண்டனங்களா? அவரை, 'அரை நிர்வாணப் பக்கிரி’ என மிக மோசமாக சர்ச்சில் கேலி பேசவில்லையா? அவரது எளிமையைத் துச்சமாக சிலர் இழித்துரைக்கவில்லையா?
ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக நீளமான கடிதம் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த காந்திஜி, அதிலிருந்த குண்டூசியை மாத்திரம் எடுத்துக்கொண்டு, கடிதத்தைக் கிழித்தெறிந்தார். 'இந்தக் கடிதத்தில் குண்டூசி ஒன்றுதான் பயனுள்ளது’ எனச் சிரித்தபடியே சொன்னாராம். அப்படிப்பட்ட திடமான உள்ளமே, மிகப் பெரிய எதேச்சதிகாரத்தை எதிர்க்கிற துணிவை நமக்குப் பெற்றுத் தந்தது.
காமராஜரைப் பற்றி சிலர் அவதூறு பரப்பினர்; நேர்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, நிறைய சொத்துச் சேர்ப்பதாக எழுதினார்கள். அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''நான் நேர்மையானவன். என்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் சொல்லி, என் நேர்மையை நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை, எனக்கு யானைக்கால் நோய் இல்லை என்பதற்காக, எல்லோரிடமும் என் காலைத் தூக்கிக் காட்டவேண்டிய அவசியமில்லை'' என நறுக்குத்தெறித்தாற்போல் பதில் சொன்னார்.
மற்றவர்களின் கடும் விமர்சனங்களால் உண்டான வலியை, நம் பணியால் மகிழ்ச்சியுறுவோரின் புன்னகை போக்கிவிடும். இயேசுவைச் சிலுவை யில் அறைந்த அநியாயமும், லிங்கனைச் சுட்டுக் கொன்ற அவலமும் நிகழ்ந்த கொடுமையான உலகம் இது! ஆனால், சங்ககாலப் பாடல் ஒன்றில் கூறப்படுவதுபோல, 'இவ்வுலகம் இன்னாதது தான். ஆனால், இதிலிருக்கும் இனிமையைக் கண்டு, வாழ்வைக் கழிக்கவேண்டியதுதான்!’
சுயசரிதக் குறிப்புகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுபவன் நான். இருப்பினும், அனுபவத்தால் ஏற்படும் சில நிகழ்வுகளைச் சொல்வது, நம்பகத்தன்மைக்காகத்தான். தவிர, என் வாழ்வில் நான் சந்திக்காத எதையும், செய்யாத எதையும் நான் சொல்வதில்லை என்பதும் ஒரு காரணம்!
காஞ்சிபுரத்தில் ஆட்சியராகப் பணி புரிந்த காலம் அது. இலவச தையல் இயந்திரங்களை வழங்கவேண்டிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்; தேசிய அளவில் தரமான இயந்திரங் களை வாங்கி, வழங்கவேண்டும் எனக் குறிப்பு எழுதியிருந்தார், எனக்கு முன்பிருந்த மாவட்ட ஆட்சியர். அது எனக்கு நியாயமாகப்பட்டது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரினேன். வழக்கமாக, தரமற்ற இயந்திரங்களைத் தருவித்துப் பணம் பண்ணுகிற நிறுவனங்களுக்குக் கோபம் கொப்பளித்தது. அவர்கள் நோட்டீஸ் ஒன்றைத் தயாரித்தனர். அதில், நான் இயந்திர நிறுவனங்களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டதாக அச்சடித்து எனக்கு அனுப்பினர். வாழ்நாளில், அப்படியரு அவதூறைச் சந்தித்திராத எனக்கு, அது பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால், இதன் பின்னணியை உடனே என்னால் யூகிக்க முடிந்தது; சுதாரித்துக் கொண்டேன். அலுவலக ஊழியரிடம் 'இதை, வருகிறவர்கள் அனைவரும் வாசித்துவிட்டு வரவேண்டும். எனவே, நம் முகாம் அலுவலக முகப்பிலும், மாவட்ட ஆட்சியர் அறைக் காத்திருப்பு அறையிலும் ஒட்டி வையுங்கள்’ எனக் கட்டளையிட்டேன். அதைப் பகிரங்கப்படுத்திப் பரிகாசம் செய்ததன் மூலம் நிர்மூலமாக்கினேன். அதைப் பார்த்த சிலர் உள்ளே வரும்போது, அழுத விழிகளுடன், ''உங்களைப் போய் இப்படிச் சொல்கிறார்களே! இது அடுக்குமா?'' என்றனர். அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி யாக இருந்தது. பிறகு அந்த மாவட்டத்தில் இருந்து மாற்றலாகும்போது, எனக்குச் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன; இதழ்கள் என் பணிகளைப் பட்டியலிட்டன; அப்போதும், பெரிதாக உணர்ச்சிவசப்படவில்லை நான்.
எனக்கு நிகழ்ந்தது போன்ற கசப்பான அனுபவங்கள், நேர்மையுடன் திகழும் என் நண்பர்கள் பலருக்கும் நிகழ்ந்தன. இன்றைய சூழலில், நேர்மையும் உண்மையும் அதிகம் பாதிக்கப்படுகிற கையாலாகாத நிலை அதிகம் உள்ளது. அதற்காக, நாம் உலகிலிருந்து ஒதுங்கி, ஓடிவிட முடியாது. சவால்களைச் சந்திப்பதும் வெற்றி கொள்வதும் இன்னும் தீவிரம் அடையும் தருணம் இது. தவறுகளை இழைப்பவர்கள், முன்கூட்டியே தங்களைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை, தாங்கள் ஈட்டிய பணத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

'தடித்த தோல்’ என்பது சுரணையற்ற தன்மை அல்ல.அது அதிக உஷ்ணத்தையும் குளிரையும் தாக்குப்பிடிக்கிற வைராக்கியம். எது எது உகந்தது என்பதைப் பகுத்துப்பார்க்கிற உண்மையான நுண்ணறிவு. புயலுக்கும் வெள்ளத்துக்கும் கலங்காத மக்களை, மீனவர் குப்பங்களில் பார்த்திருக்கிறேன். புயல் பாதுகாப்பு மையங் களில் மகிழ்ச்சியாக இருந்த பிறகு, தங்கள் இருப்பிடத்துக்கு வருவர். வாழ்வாதாரத்தை இழந்தாலும்கூட, அவர்களின் உதடுகளில் இருந்து புன்னகையை எவரும் பறிமுதல் செய்யமுடியாது. பல ஏழைகளின் வீடுகள் எரிந்ததும், அவர்களைச் சந்தித்து நிவாரணத் தொகையை வழங்கச் செல்லும் போது, அவர்களது கலங்காத உள்ளத்தைக் கண்டிருக்கிறேன். ஏழை எளிய மக்கள், தங்கள் வாழ்வை இயல்பாக எடுத்துக்கொள் கின்றனர். அதனால்தான் வறுமையிலும் மகிழ்ச்சியாக, இல்லாமையிலும் செம்மை யாக, அவர்களால் வாழ முடிகிறது. ஆனால் நாம், பேனா மூடி தொலைந்தால்கூட, நாள் முழுவதும் குனிந்து குனிந்து தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம்மையும் மீறிய இழப்புகளை எதிர்கொள்கிற பக்குவம் நமக்குத் தேவை. தேவையற்ற பயம், அவசியமற்ற கவலை, அடுத்தவரின் கருத்துகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கிற மனப்பான்மை ஆகியவற்றை முழுவதுமாகக் களைய முடியாவிட்டாலும், அவற்றை உதிர்க்கவா வது கற்றுக்கொள்வதே மகிழ்ச்சியை நம்முள் முழுமையாக மலரச் செய்யும். அதற்காக, நம் செயல்பாடுகள் குறித்த சுயபரிசோதனையை நிறுத்திவிடக்கூடாது. அப்படிச் செய்தால், ஆணவக்காரர்களாகிவிடுவோம்.
மகிழ்ச்சியின் மையப் பகுதி, நம் உள்ளத்தில்தான் உள்ளது. அது, 'தொட்டனைத்தூறும் மணற்கேணி’ போல இருக்க, நம் மனதின் முதிர்ச்சி முக்கியம். சிலர்... தேவைப்படும்போது, தம்மையே தோண்டி மகிழ்ச்சி ஊற்றைச் சுவைக்கின்றனர். பலர்... அது பாலைவனச் சோலை என நினைத்து, அதைத் தேடி நித்தமும் அலைகின்றனர்!
__._,_.___

கடவுள் ஒருவரே என்கிறீர்க​ள். அப்படியானா​ல்

'கடவுள் ஒருவரே என்கிறீர்கள். அப்படியானால், அவர் எப்படி எல்லா இடத்திலும் நிறைந்திருக்க முடியும்?'' என்று என்னை வம்புக்கு இழுத்தான் என் மருமகன். ஹாஸ்டலில் தங்கி, ஐஐடி-யில் படிக்கிறான்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், சற்றுத் தடுமாறினேன். பிறகு, அவனைப் பார்த்து ''உங்க அப்பாவுக்கு எத்தனை மூக்கு?'' என்று கேட்டேன்.
குழம்பிய மருமகன், ''இதென்ன கேள்வி, ஒரு மூக்கு தான்'' என்றான்.
''எத்தனை மூக்குக் கண்ணாடி வைத்திருக்கிறார்?''
''ஒரே ஒரு மூக்குக் கண்ணாடிதான்.''
''ஆனால், அதைக் காணாவிட்டால் குளியல் அறை, சமையலறை, வாசல் வராந்தா, ஈஸிசேர் கைப்பிடி, படுக்கை அறை, டாய்லெட் ரூம், டி.வி. ஸ்டாண்ட், தனது தலை என எல்லா இடத்திலும் தேடுகிறார். எல்லாரும் அவருக்கு உதவியாக, அவரவருக்குத் தெரிந்த முறையில் தேடுகிறீர்கள். அழுக்குத் துணிக்கூடையில் உள்ள துணி களையெல்லாம் எடுத்து கீழே போட்டு, சட்டைப் பைகளில் தேடுகிறார் ஒருவர். 'நல்லா யோசனை பண்ணிப் பாருங்க. எழுந்ததிலிருந்து என்னென்ன பண்ணினீங்க? பேப்பர் படிச்சீங்களா?’ என்று கேட்டபடியே, பேப்பர்களையெல்லாம் உதறோ உதறு என்று உதறுகிறார் ஒருவர்.
மூக்குக் கண்ணாடி தொலைந்ததற்கும், பழைய பேப் பர்களை இப்படி உதறிக் குப்பையாட்டம் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, மூக்குக் கண்ணாடி அதற்குள் ஒளிந்திருக்கலாமல்லவா?
ஆக, ஒரு பொருள் எல்லா இடத்திலும் இருக்கக்கூடும் என்பது கண்ணாடியைத் தேடுவதிலேயே தெரிகிறதல்லவா? பசுவின் பால் அதன் மடியில் மட்டுமா இருக்கிறது. உடம்பு முழுவதிலும்தானே? யோசனை பண்ணு!'' என்றேன்.
ஐ.ஐ.டி. அசரவில்லை. ''சரி, நீங்களோ எல்லாக் கடவுள் களையும் கும்பிடுகிற வழக்கம் உடையவர். அதனால், உங்க ளுக்கு ஒரு கஷ்டம் என்றால், 'பிள்ளையாரப்பா, முருகா, ஈஸ்வரா, பெருமாளே, ஐயப்பா, காளியம்மா... காப்பாற் றுங்கள்!’ என்று எல்லாத் தெய்வங்களையும் உத விக்கு அழைப்பீர்களா? அல்லது, ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் கூப்பிடுவீர்களா?'' என்று கேட்டான்.
''ஏன், எல்லாப் பெயரையும் சொல்லித்தான் கூப்பிடுவேன்,'' என்றேன்.
''சரி, ஒரே சமயத்தில் முருகனும் விஷ்ணுவும் உங்களுக்கு உதவக் கிளம்புகிறார்கள் என்று வைத் துக்கொள்ளுங்கள்; 'அவர்தான் காப்பாற்றப் புறப்படு கிறாரே! நாம் வேறு போக வேண்டுமா!’ என்று நினைத்துக் கொண்டு, இருவருமே புறப்படாமல் தங்கிவிட நேருமல்லவா?'' என்று மடக்கினான் அந்தப் பயல்.
தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இந்தக் கேள்விக்கு, ஒரு கூட்டத்தில் அளித்த பதிலை, மருமகனுக்குக் கூறினேன்.
''உலகில் ஒரு விபத்து அல்லது உடல்நலக் குறைவு ஒரே சமயத்தில் பல இடங்களில் உள்ளவர்களுக்கும் ஏற்படு வது உண்டுதானே? ஒரே கடவுளாக இருந்தால், அவர் யாரைக் கவனிக்க விரைவார்? நிறையக் கடவுளர் இருந்தால், 'நீ டெல்லிக்குப் போ, நீ பம்பாய்க்குச் செல், அமெரிக்காவில் ஏதோ தகராறாம்; நீ போய் அதைக் கவனி!’ என்று தலைமைக் கடவுள், தன் கீழ் உள்ள பல கடவுள்களையும் ஆங்கங்கே சென்று உதவ, உடனடியாக அனுப்பி வைப்பார். ஆகவே, பல கடவுள்கள் இருப்பது நல்லதுதான்!'' என்றேன்.
தொடர்ந்து, ''நீ ஐடி பையன் என்பதால், உனக்குப் புரிகிற மாதிரியே சொல்கிறேன்; ஓர் அலுவலகத்தில் எத்தனையோ சிஸ்டங்கள் இருக்கும்; பலர் அவற்றில் அமர்ந்து வேலை செய்வார்கள்; ஆனால், அத்தனைக்கும் பொதுவாக ஒரே ஒரு சர்வர்தானே இருக்கிறது! அதுபோல, பல வித கடவுள் களைக் கும்பிட்டாலும், ஒரே கடவுளைக் கும்பிடுகிற மாதிரி தான்! ஒரே கடவுளைக் கும்பிட்டாலும், பல கடவுள்களைக் கும்பிடுவது போலத்தான்'' என்றேன்.
'ஸர்வானன சிரோக்ரீவ: ஸர்வபூத குஹாயச’ என்கிறது உபநிஷத். 'எங்கும் முகத்தையும் தலையையும் உடையவன்; எல்லா உயிர்களின் உள்ளத்திலும் உள்ளவன்’ என்பது பொருள்.
__._,_.___

தினமும் உன்னைக் கவனி!

ஹோட்டல் முதலாளி: ''இன்றுதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாய். உன்னால் வாடிக்கையாளர்களுக்குத் திருப்திகரமாக சேவை செய்ய முடியுமா?''
வெயிட்டர்: ''நிச்சயமாக சார். என்னால் அவர்களுக்கு இரண்டு விதமாகவும் சேவை புரிய முடியும்!''
ஹோட்டல் முதலாளி: ''இரண்டு விதமாகவா... எப்படி?''
வெயிட்டர்: ''அவர்கள் மீண்டும் எப்போதும் நம் ஹோட்டலுக்கே வரும்படி அல்லது எப்போதும் இனி வராதபடி!''
'The Power Of Humor At The Workplace’ புத்தகம் முழுக்க இப்படி பணியிட சூழல் நகைச்சுவைத் துணுக்குகளாக நிரம்பிக் கிடக்கின்றன. இந்த 24X7 வாடிக்கையாளர் சேவை உலகத்தில் வீட்டில் செலவழிக்கும் நேரத்தைவிட, அலுவலகத்தில்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறார்கள். என்னதான் கார்ப்பரேட், புரொஃபஷனல் அலுவலகம் என்றாலும், அங்கே இருக்கும் சமயம் முழுக்க இறுக்கமாகவே இருக்க முடியாதே! கிடைக்கும் இடைவெளிகளில் ஜோக் அடித்துக்கொள்வதன் மூலம்தான் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். அப்படி அலுவலகத்தில் இறுக்கி நெருக்கும் தருணங்களின்போது சமயோசித மாகச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்!
லொப லொபா பலாப் பழம்!
அந்த டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரின் பழ அங்காடிப் பிரிவில் சின்ன கசமுசா. கழுத்து நிறைய நகைகளும், உடலை ஏகமாகச் சுற்றி தலையிலும் முக்காடாகச் சுருண்ட சேலையுமாக ஒரு மார்வாடிப் பெண், பணிப்பெண்ணிடம் காச்மூச் என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். 'எங்கள் வீட்டில் இரண்டு பேர்தான். எனக்குப் பாதி பலாப் பழம் வேண்டும். முழுப் பழத்தில் இருந்து அறுத்துக் கொடுங்கள்!’ என்று மார்வாடிப் பெண் கூற, 'இல்லை மேடம் புரிந்து கொள்ளுங்கள். பலாப் பழத்தைப் பாதி அறுத்து விற்பதில்லை. முழுப் பழமாகத்தான் விற்போம் என்று போர்டில் எழுதியே வைத்திருக்கிறோம் பாருங்கள்!’ என்று சமாதானங்கள் சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால், எதையும்கேட்பதாக இல்லை அந்த மார்வாடிப் பெண். தொடர்ந்து தனது கூச்சலின் டெசிபலை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நிலைமை யைச் சமாளிக்க முடியாமல், 'கொஞ்சம் பொறுங் கள்... மேனேஜரிடம் கேட்டுப் பார்க்கிறேன்!’ என்று அந்த இடத்தில் இருந்து தப்பித்து, மேனேஜரின் இருப்பிடத்துக்கு வந்தார் பணிப் பெண்.
கண்களில் கேள்வியுடன் எதிர்கொண்ட மேனேஜரிடம், ''ஐயோ, இன்னிக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. காலையிலேயே இம்சை. லொப லொப லொபான்னு சத்தம் போடுற ஒரு வாயாடிப் பொம்பளை பாதி பலாப் பழம்தான் வேணும்னு அடம்பிடிக்...'' என்று கூறிக்கொண்டே திரும்பினால், அங்கு உக்கிரமாக நின்று கொண்டு இருக்கிறார் அந்த மார்வாடிப் பெண். அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பணிப்பெண் சட்டென்று சுதாரித்து, ''மீதம் இருக்குற பாதிப் பழத்தை இதோ இவங்க கேட்குறாங்க... கொடுக்கலாமா?'' என்று சமாளித்தார்.
எந்த நேரமும் பாயும் ரௌத்ர புலிதான் வாடிக்கையாளர்கள். சமாளிக்க அஞ்சாதீர்கள்!
'ஆமாம் ஆமாம்... பெரியய்யா!’
ஃபோர்டு தொழிற்சாலையில் பரபரப்பாக விவாதம் நடந்துகொண்டு இருந்தது. தொழிற்சாலையின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டின் கூற்றை மறுத்துப் பேசினார் ஒரு மேனேஜர். உடனே இறுக்கமான முகத்துடன், 'இப்போதே நாம் இருவரும் வெளியே செல்வோம். இந்தக் கட்டடத்தின் முகப்பில் யார் பெயர் எழுதியிருக்கிறது என்று பார்ப்போம்!’ என்றார் ஃபோர்டு.
இதற்கு நேர் எதிர் சம்பவம் ஒன்று, ஹாலிவுட்டின் பெரும் புள்ளியான சாமுவேல் கோல்ட்வின் தனது விவாதக் குழுவினரிடம் இப்படிச் சொன்னார், 'என்னைச் சுற்றி 'ஆமாம் ஆமாம்’ போடும் ஆசாமிகள் தேவையில்லை. என்னிடம் எல்லோரும் உண்மையை மட்டுமே பேச வேண்டும். அதனால், அவர்கள் வேலையே பறிபோனாலும் பரவாயில்லை!’
'ஆமாம்’ என்பது கைப்பிடியில்லாத கத்தி!

அத்தைக்கு வளராது மீசை!
அந்த நிதி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு நேர்முகத் தேர்வு நடந்துகொண்டு இருந்தது. பலரிலிருந்து வடிகட்டி, கிட்டத்தட்ட ஒருவரைத் தேர்வு செய்யும் நேரம், ஒரு பெண்ணின் பயோடேட்டா வந்தது. அந்த வேலைக்கு மிகப் பொருத்தமான அதிகபட்சத் தகுதி களுடன் இருந்தது அந்த பயோடேட்டா. ஒரு ஆர்வத்தில் அந்தப் பெண்ணை எதற்கும் இருக்கட்டும் என்று நேர்முகத் தேர்வுக்கு அனுமதித்தனர் அதிகாரிகள். 10 நிமிடங்கள் பேசியதில் இருந்தே அந்தப் பெண் முன்னர் தேர்வு செய்தவரைக் காட்டிலும் வேலைக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை உணர்ந்தார்கள். ஆனாலும், 'ஒரு பெண்ணுக்கு அந்த வேலையை வழங்கலாமா?’ என்ற தயக்கம் அவர்களுக்கு. அதை அந்தப் பெண் ணிடமே தெரிவிக்கவும் செய்தார்கள். அதற்கு எந்த ஒரு எதிர்மறை ரியாக்ஷனும் காட்டாத அந்தப் பெண், சின்னதாகப் புன்னகைத்துவிட்டு பேசத் துவங்கினார்.
''உங்கள் தயக்கத்தின் நியாயம் எனக்குப் புரிகிறது. ஆனால், நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் தருகிறேன். ஒரு ஆணைப்போல அலுவலகத்துக்குநான் ஃபுல் கோட் சூட் அணிந்து வருவேன். திருமணமான ஆண் எந்தளவு முதிர்ச்சியோடு ஒரு விஷயத்தை அணுகுவாரோ, அதே போல நான் எந்த விஷயத்திலும் முடிவு எடுப்பேன். இரவு, பகல் எனக் கால நேரம் பார்க்காமல் நான் வேலை பார்ப்பேன். தினமும் அந்நியர்களைச் சமாதானப்படுத்தும் பணி என்றாலும், சளைக்காமல் அவர்களைச் சந்திப்பேன். ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னால் முடியவே முடியாது. அதை மட்டும் செய்யச் சொல்லி என்னை வற்புறுத் தாதீர்கள். ஆமாம்... அது மட்டும் என்னால் முடியவே முடியாது!'' என்று கூறி நிறுத்தினார் அந்தப் பெண். அதிகாரிகள் அதீத ஆர்வத்துடன், 'என்ன அது?’ என்று விசாரிக்க, ''என்னால் ஆண்களைப் போல மீசை வைத்துக்கொள்ள முடியாது. அது வளரவும் வளராது!'' என்று குறும்பாகச் சொல்லி கலகலவெனச் சிரிக்க, அந்த வேலை யாருக்குக் கிடைத்திருக்கும் என்பதை இனிமேல் சொல்லவும் வேண்டுமோ!
சூழ்நிலையில் கலகலப்பை உண்டாக்குபவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்று மையம் கொள்ளும்!
'தினமும் உன்னைக் கவனி!’
ராபர்ட் ஆர்பன் என்பவர் அமெரிக்க எழுத்தாளர். அவர் ஒருமுறை இப்படிக் கூறினார், ''நான் ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலைப் பார்ப்பேன். அதில் என் பேர் இல்லையென்றால், உடனே உழைக்கக் கிளம்பிவிடுவேன்!''
தினமும் உன் முன்னேற்றத்தை அளவிடு!
__._,_.___

சி.ஏ. ஆகலாம் சிம்பிளாக!

இந்திய சார்ட்டட் அக்கவுன்ட்டன்ஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் தலைவர் ஜி.ராமசாமி.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டிங் துறையில் இருப்பவர். வருமான வரி கமிட்டி உள்பட, மத்திய அரசாங்கம் அமைத்த 25-க்கும் மேற்பட்ட கமிட்டிகளில் அங்கம் வகித்த இவர், இன்டர்நெட் மூலம் வரி தாக்கல் செய்யும் 'இ-பைலிங்’ குறித்து பல முக்கிய யோசனைகளை அளித்தவர். சி.ஏ. பரீட்சைக்கான தேர்வுக் குழுவிலும் இவருக்குப் பெரும் அனுபவம் உண்டு. சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாம் சந்தித்தபோது, நம் மாநிலத்தில் இருந்து இன்னும் நிறைய சி.ஏ-க்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''இன்றைய தேதியில் இந்தியா முழுக்க 7 லட்சம் மாணவர்கள் சி.ஏ. படிக்கிறார்கள். ஆனால், கடைசி பரீட்சையில் பாஸாகி ஆடிட்டராவது என்னவோ வெறும் 10 ஆயிரம் பேர்தான். சி.ஏ. பரீட்சையில் பாஸ் செய்வதை ஏறக்குறைய முடியாத செயலாகப் பலரும் நினைக்கிறார்கள். இது முழுக்கத் தவறு. சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நானே சி.ஏ. ஆகியிருக்கிறேன். மற்றவர்களால் முடியாதா என்ன?
அண்மையில் சி.ஏ. படித்து முடித்த ஒரு மாணவரைச் சந்தித்தேன். 'உன் அப்பா என்னவாக இருக்கிறார்?’ என்று கேட்டதற்கு, 'பால்காரர்’ என்றார். பால் கறந்து விற்கிற ஒருவரால் தன் மகனை சி.ஏ-வுக்கு படிக்க வைக்கிற அளவில்தான் செலவு இருக்கிறது.
சி.ஏ. படிப்பது என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், அசாத்திய உழைப்பு தேவை. கம்பெனிச் சட்டங்கள், வரிவிதிப்பு விதிகள், கணக்கெழுதும் முறைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து மணி நேரமாவது படித்தால், மூன்றாண்டுகள் முடிவில் நீங்கள் சி.ஏ. ஆவது உறுதி.
இன்றைக்கு அத்தனை நிறுவனங்களும் தங்களின் பேலன்ஸ்ஷீட்டை ஒரு ஆடிட்டரிடம் கொடுத்துத் தணிக்கை செய்ய வேண்டும். ஆடிட்டர் தணிக்கை செய்த பேலன்ஸ்ஷீட்டுக்கு வங்கிகள் எளிதாகக் கடன் கொடுக்கின்றன. மக்களும் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நம்பிக்கை வைக்கத் தொடங்குகின்றனர். எனவே, இந்த வேலையில் கை நிறையச் சம்பளம் கிடைக்கும் என்பது நிதர்சனம். இன்றைக்கு சி.ஏ. படித்து முடித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே 60 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. உள்நாட்டில்தான் வேலை என்றில்லை, நமது கடுமையான உழைப்புக்கும், அறிவுத்திறனுக்கும், நேர்மைக்கும் நல்ல சம்பளத்தோடு வெளிநாடுகளிலும் வேலை கிடைக்கிறது.
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி இப்போது 8 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 10 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காணும்போதுஇன்னும் நிறைய ஆடிட்டர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள். 10-ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் மகனையோ அல்லது மகளையோ இப்போதே நீங்கள் தயார் செய்ய ஆரம்பித்தால், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கை நிறையச் சம்பாதிக்கலாம்!'' என்கிறார்.
அட, நல்ல யோசனையாத்தான் இருக்கு!
__._,_.___

பழங்களும் பயன்களும்

1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர
மலச்சிக்கல் அற்றுப் போகும்.


2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.
அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம்
தணியும். காய்ச்சல் விலகும்.


3. இளமை தரும் *தக்காளி*

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.



4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2
நாளில் பேதி நின்றுவிடும்,


5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்
தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.


6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.


7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து
தலைக்கனம் குறையும்.



8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும்.
வயிற்றுக் கோளாறு வராது.


9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம்
விலகும்.


10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.



11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு
வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் ஆஇறக்கி ஆறவைத்து
வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.


12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம்
விலகும்.


13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை
பெறும்.

அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.


14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும்.
அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.



15. தாது விருத்தி தரும் *திராட்சை*

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன்

சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.


16. *பப்பாளிப் பழம்*

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம்
சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.



17. *வாழைப்பழம்*

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை
மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.


18. *வில்வப் பழம்*

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம்
நன்கு செயல்படும்.


19. *அரசம் பழம்*

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.


20. *சீமை அத்திப்பழம்*

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்.

இரத்தச் சோகை விலகும்.


21. *பேரீச்சம் பழம்*

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.


22. *தர்பூசணிப் பழம்*

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.


23. *முலாம் பழம்*

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.


24. *விளாம்பழம்*

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்

விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட,
பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.


25. *அன்னாசிப் பழம்*

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச்
சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு
வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

சனி, 12 மார்ச், 2011

'என் தேக ஆரோக்கியம்​...

'வாழ்க்கைல வரம் எதுனா கிடைக்காதாங்கறதுதான் எல்லாரது எதிர்பார்ப்பும், பிரார்த்தனையும்! என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கைங்கறதே வரம்தான்; அதை எப்படிப் பயன்படுத்திக்கிறோம்கறதுதான் முக்கியம். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டுவிட்டு, மென்சிரிப்பை உதிர்க்கிறார் அனிதா குப்புசாமி.
''தோள்ல ஆட்டைப் போட்டுக்கிட்டு, ஊரெல்லாம் தேடினகதையா, எல்லாத்தையும் நம்மகிட்டயே வைச்சுக் கிட்டு, நம்ம செல்போன்ல பதிஞ்சிருக்கிற நம்பர் அத்தனைக்கும் போன் போட்டு, 'ஊர்ல நல்ல ஜிம் சென்டர் எங்கே இருக்கு?’னு கேட்டுக்கிட்டிருக்கோம்'' என்று சிரிப்பவரிடம் உடலைப் பேணுகிற ரகசியத்தைக் கேட்டோம்.
அந்த ஏரியாவே அதிரும்படி சிரித்த அனிதா, ''இதுல ரகசியம் என்ன வேண்டிக்கிடக்கு?! மிடில் ஏஜ் வந்துட் டாலே, கூடவே பிரஷரும் சர்க்கரையும் வந்துடும்னு சொல்லுவாங்க. நானும் ஜிம்முக்குப் போனேன். அங்கே சொல்லிக் கொடுத்ததையெல்லாம் பார்த்தப்போ, 'அட... இதையெல்லாம் வீட்லயே செய்யலாமே’னு தோணுச்சு. ஒருவிதத்துல ஆண்களைவிட பெண்கள் பாக்கியசாலிகள். ஏன்னா, தினமும் வீட்டுல அவங்க செய்ற வேலைகளைப் போல மிகச் சிறந்த உடற்பயிற்சிகள் எதுவுமே இல்லை.
கச்சேரி, ரிக்கார்டிங்னு அடிக்கடி வெளியூர் போகவேண் டியிருக்கிறதால, குழந்தைங்களைப் பாத்துக்கறதுக்கும், அவங்களுக்குப் பேச்சுத் துணைக்காகவும் ரெண்டு மூணு பேரை வேலைக்கு வைச்சிருக்கோம். ஆனாலும், வீட்ல இருக்கிற நேரங்கள்ல, ஒரு நிமிஷம்கூடச் சும்மாவே இருக்க மாட்டேன்.
மனசு கடவுள் குடியிருக்கிற கோயில்; அது சுத்தமா இருக்கணும். அதேபோல, நாம குடியிருக்கிற வீடும் சுத்தமா இருக்கணும். வீட்டுச் சுத்தத்துக்கும் மனசு சுத்தத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. இந்தச் சுத்தம் செய்ற வேலைங்கறது, கிட்டத்தட்ட எக்சர்ஸைஸ் மாதிரிதான்!

என்னிக்காவது காலைல, அரக்கப்பரக்க ஓடவேண்டிய தேவை இருக்கலேன்னா... பக்கெட்ல தண்ணி எடுத்துட்டு, வீடு முழுசையும் மெழுகித் துடைக்க ஆரம்பிச்சிடுவேன். குனியாம, முதுகு வளையாம சுலபமா சுத்தம் பண்றதுக்கு மாப் ஸ்டிக் இருக்கு. ஆனா, அதைப் பயன்படுத்தறது வேஸ்ட்! குத்துக்காலிட்டு, குனிஞ்சு, வளைஞ்சு, நிமிர்ந்து, உட்கார்ந்து ஒவ்வொரு இடமா துடைச்சுட்டு, தள்ளி நின்னு பாத்தா... தரையெல்லாம் சுத்தமாகியிருக்கும்; உடம்பெல்லாம் தக்கையாகியிருக்கும்!'' என எதுகை மோனையுடன் அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார் அனிதா.
''சைக்கிள், பைக், கார்னு எல்லா வண்டிகளின் உதிரி பாகங்களுக்கும் 'கிரீஸ்’ தடவுவாங்க, தெரியுமா? அதுமாதிரி நம்ம உடம்புல உள்ள ஒவ்வொரு இணைப்புப் பகுதிகளுக்கும் கிரீஸ் தேவை. எங்க அகர்வால் குடும்பத்துல, முதல் நாள் சப்பாத்தியைப் போட்டு, மறுநாள் சாப்பிடுறது வழக்கம். அந்தச் சப்பாத்தியில மூணு ஸ்பூன் வெண்ணெயைத் தடவிச் சாப்பிட்டா, கை- கால் மூட்டுப் பகுதிகளுக்கு அவ்வளவு நல்லது. வெண்ணெய் கொலஸ்ட்ரால் ஆச்சேனு என் கணவர்கூட ஆரம்பத்துல பதறினார். ஆனா, அளவா சாப்பிடுற வரைக்கும் எதுவுமே பிரச்னை தராது.
அப்புறம், சின்ன ஏணியில் ஏறி ஃபேன், ஷோ கேஸ்னு உசரத்துல இருக்கிற பொருள்களையெல்லாம் துடைக்கும் போது, அது கைகளுக்கும் தோள்களுக்கும் நல்ல பயிற்சியா ஆயிடுது. உடம்பு அதிகம் பெருத்திருச்சு, வயசு அதிகம் ஆயிடுச்சுங்கறதை, கைகள்ல மணிக்கட்டுப் பகுதிகளும், கழுத்துச் சதையும், வயிறும் காட்டிக் கொடுத்துடும். இப்படி உடம்பை எக்கி, கைகளைத் தூக்கி, அண்ணாந்து பார்த்து வேலை செய்யும்போது, உடம்புல சதை போடுறதுக்குச் சான்ஸே இல்லை.
துணி துவைக்கறது மட்டும் என்னவாம்? நிக்கிறோம்; கால்களுக்குப் பயிற்சி. குனியறோம்; முதுகுக்கு வலு. துணியை அலசிப் பிழியறோம்; விரல்களுக்கு பலம்!
எல்லாத்தையும் முடிச்சுட்டு, அக்கடான்னு வந்து நின்னா, வியர்வை மழையில தெப்பமா நனைஞ்சு போயிருப்பேன். அடுத்து, மொட்டை மாடிக்குப் போவேன். பீர்க்கங்காய், வெற்றிலை, பூக்கள்னு பெரிய ஏரியா அது. 'என்ன, நல்லாருக்கீங்களா?’னு நலம் விசாரிச்சபடியே, செடி- கொடிகளுக்குத் தண்ணி ஊத்துவேன். மனசு லேசாயிடும். அசதி, கவலை எல்லாமே காணாமப் போயிடும். அப்புறம், ஜில்லுனு ஒரு குளியல்; ஜம்முனு ஒரு தியானம்!
நம்மளை இயக்கற மனசுதானே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்! அதைக் கட்டிப் போடுற வித்தைதான் தியானம். தவிர, அனிதாவை அனிதாவே தெரிஞ்சுக்கிற இடமும் அதுதான்! அலை அலையா வர்ற எண்ணங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தடுத்து நிறுத்திட்டா, மனசுல 'ஹோ’ங்கற இரைச்சல் இருக்காது. அதுக்கு முன்னாடி, பிராணாயாமம்.
நமக்கே தெரியாம நாம இயங்கிட்டிருக்கிற, நம்மை இயக்கிட்டிருக்கிற விஷயம்- மூச்சு விடுறது! அது நமக்குத் தெரியாமலே இருக்கிற வரைக்கும் உடம்புல ஒரு குறையும் இல்லைன்னு உறுதியா நம்பலாம். அப்படி மூச்சு விடுறது, கீழ் மூச்சு, மேல் மூச்சு, பெருமூச்சுனு விதம்விதமா விடுறது, நமக்கும் நம்மளச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் தெரிஞ்சா... நம்ம வண்டில ஏதோ கோளாறுன்னு அலர்ட் ஆகிக்கணும்.
மூச்சு சீரா இருக்கிறதுக்கு, பிராணாயாமம் பண்றது நல்லது. இதெல்லாம் தொடர்ந்து பண்ணினா... மூச்சிருக்கும் வரைக்கும் உடம்புல ஒரு தொந்தரவும் இல்லாம, நிம்மதியா வாழலாம்.
மனித வாழ்க்கை நிச்சயம் நமக்குக் கடவுள் கொடுத்த வரம்தான்! அதைச் சாபமா மாத்திக்கிட்டு அல்லாடுறது நாமதான். இனிமேலாவது, அபூர்வமா கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கை வரத்தைப் பேணிப் பாதுகாப்போம்!'' என அனிதா சொல்லும்போதே அவரது குரலில் தொனிக்கிறது, வாழ்வை வரமாக்கிக்கொண்டிருக்கும் குதூகலம்!
__._,_.___

''உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!''

ஏப்ரல் 13... தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் என்றதுமே, திருமங்கலம் பக்கம் நம் நினைவுகள் திரும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் இந்த முறையும், அள்ளி வழங்கும் வைபோகங்களும் அராஜக அத்துமீறல்களும் தமிழகத் தேர்தலில் கரை புரண்டு ஓடும் வாய்ப்பு இருக்கிறது. ஐந்து வருட ஆட்சியை மனதுக்குள் அசைபோட்டு, நியாயத் தராசை நெஞ்சுக்குள் ஆடவிட்டுக்கொண்டு இருக்கும் வாக்காளன், இந்தத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமை என்ன?
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா பக்குவம் சொல்கிறார்...
''ஒவ்வொரு வாக்காளரின் முதல் கடமை, வாக்காளர் பட்டியலில் தங்க ளின் பெயர் இருக்கிறதா என்பதைஉறுதி செய்வதுதான். வாக்களிக்கும் ஆர்வமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. முறைப்படி வாக்காளர் அடையாள அட்டை பெற்று, நமக்கான வாக்கு உரிமையை நாம் பெற்றிருக்க வேண்டும். நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், இப்போதும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேருங்கள்.

வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில், அதிகாரிகள் அந்தவேலை யில் தீவிரமாவதற்குள், வாக்காளர் பட்டியலில் நமது பெயரைச் சேர்ப்பது அவசியம். காரணம், நம் ஒவ்வொருவரின் வாக்கும் அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது. 'வாக்களிப்பது புனிதமான கடமை’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1920-லேயே 'யங் இந்தியா’ புத்தகத்தில் வாக்களிக்கும் அவசியம் குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
சமீப காலமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பதிவாகும் வாக்குகள் குறைவாகி வருகின்றன. 'க்யூவில் நிற்க வேண்டுமே’ என்கிற சலிப்பிலும், 'இன்றைய விடுமுறையை வேறு வேலைக்காகப் பயன்படுத்தலாமே’ என்கிற அக்கறையற்ற ஆசையிலுமே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வது இல்லை. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம். பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு காட்டுபவர்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.
இன்னும் சிலரோ, 'போட்டியிடுபவர்களில் ஒருவரும் சரி இல்லை’ என்கிற ஆதங்கத்தில் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைய நிலையில், ஒரு சட்டமன்ற தொகுதியில் 15 பேருக்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒருவர் சரி இல்லை என்றாலும், இன்னொருவர் சரியா னவராக இருப்பார் என நம்பலாம். அப்படி யாருமே நம் மனதுக்கு ஒவ்வாதவர்களாக இருந்தாலும், நமது புறக்கணிப்பைப் பதிவு செய்யும் விதமாக 49 ஓ படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்!
'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா?’ என்கிற தயக்கமும் பல ருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா? இன்றைய நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அமைகிறது. 'நம் வாக் குதான், நாட்டின் போக்கு’ என்பதை இத் தகைய நிகழ்வுகள் நமக்கு அப்பட்டம் ஆக்குகின்றன. அப்படி இருந்தும் வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் பெரு காதது ஏனோ?!
தேர்தல் களத்தைச் சுற்றி வந்தவனாகச் சொல்கிறேன்... இன்றைய அரசியலில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக எதையும் செய்கிற அளவுக்குத் துணிந்து விட்டார்கள். அதற்காகத் தேர்தல் விதி களை மீறி பணத்தை இறைக்கிறார்கள். வாக்காளர்கள் இதற்கு ஒருபோதும் மயங்கக் கூடாது. பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.
முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, 'எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், குடிநீர்க் குழாய் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த வாக்காளர்கள் இப்போது, 'பணம் வேண்டும்’ எனப் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். பல இடங்களில், 'அந்தக் கட்சி வேட்பாளர் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார். நீங்கள் குறைவாகக் கொடுக்கிறீர்களே?’ என வற்புறுத்திப் பணம் கேட்கும் நிலையும் நீடிக்கிறது. வாக்காளர்களின் மனப்போக்கு ஏன் இந்த அளவுக்குப் புரையோடிப் போனது என்று எனக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது!
இந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை... 'இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும்’ என்பதைத்தான்!
ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு. வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், வழக்கு நிலுவை விவரம் என அனைத்தையும் அஃபிடவிட்டில் சொல்கிறார்கள். அதுபற்றி எல்லாம் வாக்காளர்கள் அறிந்து, தெளிந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சியையும், தலைவரையுமே மனதில் வைத்து வாக்கு செலுத்துகிறார்கள். 'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்?’ என்பதை ஆராய்ந்து, அதன்படி வாக்களிப்பதுதான் அரசியல் நலத்துக்கு வழிவகுக்கும். தரமான ஆட்களைத் தேர்வு செய்யும் பக்குவமும் அக்கறையும் நமக்கு உண்டாகும் நாளில், நிச்சயமாக இந்த தேசமே புத்துணர்ச்சிகொள்ளும்!
அக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதேபோல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்!''
__._,_.___

புதிய முறையில் இணையத்தின் ஊடான மொழி அகராதி

பொதுவாக டிக்ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும். அல்லது ஒரு மொழிச் சொல்லுக்கு இன்னொரு மொழிச் சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும்.
இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக்ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணையத் தளம் சென்றால், அங்கு எந்தச் சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும். பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன.

இத்துடன் இந்த டிக்ஷனரி நின்று விடவில்லை. உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன. www.dicts.info இந்தத் தளத்தின் மூலம் நீங்களும் பயனடையுங்கள்