பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சுயமருத்துவம்...

''காலையிலிருந்து சமையல்கட்டுல மூணு மணி நேரமா நின்னு வேலை பார்த்ததுல கால் ரெண்டும் ஒரே வலி, இடுப்பு கழண்டு கீழ விழுற மாதிரி வலி கொன்னு எடுக்குது. போன தடவ இடுப்புவலிக்காக டாக்டர்கிட்ட போனப்ப வலி குறைய மாத்திரை கொடுத்தாரே... அதுல ரெண்டு வாங்கிட்டு வாங்களேன்... போட்டுட்டுத் தூங்குறேன்...'' - வீட்டில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை. இப்படித்தான் நம்மில் பலர் ஒருமுறை ஏதோ ஒரு வலிக்காக மருத்துவர் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகளை, எல்லா வகையான வலிகளுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக... ஆர்த்ரைட்டீஸ், கால் மூட்டுவலி, தசைவலி, மூட்டு எரிச்சல் போன்றவற்றுக்கு முதல் முறை பிரச்னை வந்ததும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வாங்கிய மாத்திரைகளை... அடுத்தடுத்த முறை அந்த வலி தோன்றும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகிறோம். ''இது சரியா?'' என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கருணாநிதியைச் சந்தித்தபோது... ''வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் பெண்கள்தான்'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கூட்டினார் டாக்டர். ''என்னிடம் வரும் நோயாளிகளில் பாதிப் பெண்கள், 'கை, கால் குடைச்சல் தாங்க முடியல டாக்டர். வலி சட்டுனு போற மாதிரி மாத்திரை கொடுங்க’ என்பார்கள். ஏன் இந்த வலி நமக்கு வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட, வலி உடனே பறந்து செல்வதற்கு என்ன வழி என்றுதான் பலரும் அவசரப்படுகிறார்கள். இதற்குக் காரணம் வீட்டு வேலை, பிழைப்புக்கான வேலை என்று சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கைச் சூழல்தான். வலியைக் குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் 'நான்-நார்காடிக்’, 'நார்காடிக்’ என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் 'நான்-நார்காடிக்’ வகையில் 'நான் ஸ்டீராய்டல் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ்' (NSAID- Non Steroidal Anti-Inflammatory Drugs) மாத்திரைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். புரூஃபன், அசிட்டமினோபென் போன்ற மாத்திரைகள் இந்த வகையில் அடங்கும்.'' ''வலி நிவாரணிகளை அடிக்கடி விழுங்கு வதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்?'' ''ஒருமுறை வலி போவதற்காக நாம் பயன்படுத்திய மாத்திரையை அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வலி தோன்றும்போது டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் விழுங்கிப் பழகிக் கொண்டால்... அது மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்கிற 'அடிக்ஷன்’ பிரச்னையை உண்டாக்கும். அடுத்த கட்டமாக முதலில் வயிற்றில் புண் (அல்சர்) உண்டாகும். அதன் எதிரொலியாக குடலின் தோல் கிழிந்து, உள்ளேயே 'கேஸ்ட்ரிக் எரோஸன்’ எனப்படும் ரத்தக்கசிவு உண்டாகும். அதை உணராமலும், தெரியாமலும் 'வயிற்று வலி வயிற்று வலி’ என்று துடித்து, அதற்காக தனி சிகிச்சை எடுப்போம். சிலருக்கு வலி நிவாரணிகளைத் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டால்கூட, பிரச்னை வரலாம். அடுத்து நேரடியாக பாதிக்கப்படுவது சிறுநீரகம். 50 வயதைக் கடந்தவர்கள் வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்தும்போது, 'ஹைபர் டென்ஷன்’ மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஹைபர் டென்ஷன் உண்டான பின்பும் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது மாரடைப்பு வரை செல்லலாம். கூடுதல் பரிசாக, ரத்தம் உறையும் பிரச்னையும் உண்டாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அந்த பிரச்னை அதிகமாகும். சிலருக்கு இந்த மாத்திரைகளை சில நாட்கள் உட்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும்.'' ''வலி நிவாரண மாத்திரை களால் ஏற்படும் விளைவு களைத் தடுப்பது எப்படி?'' ''அறுவை சிகிச்சை, மூட்டு - தசை வலிக்குள்ளானவர்கள் வலி நிவாரணிகளை உட்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முக்கியமாக, முதல் முறை டாக்டரைச் சந்திக்கும்போது 250 மில்லி கிராம் அளவு மாத்திரையைக் கொடுத்திருந்தார் என்றால், சில நாட்கள் கழித்து அந்த வலி உண்டாகும்போது அதைக் குறைக்க 100 மில்லி கிராமே பரிந்துரைப்பார். அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், மருத்துவ ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து அதே மருந்தை எடுத்துக் கொள்ளும்போது, 250 மில்லிகிராமையே பயன்படுத்துவோம். இது ஆபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, 'ஆன்ட்டி - ஆசிட்’ மாத்திரைகளையும் சேர்த்து உட்கொண்டால், மாத்திரையால் உண்டாகும் அல்சர் வராமல் தடுக்க முடியும்.''

பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

பெயின்டர் தேவை, பிளம்பர் தேவை என்று யாராவது கேட்டு வந்தால், அந்த வேலை தனக்குத் தெரியும் என்று யாரும் ஆஜராக மாட்டார்கள். ஆனால், தலைவலி என்று சொல்லிப் பாருங்கள்... ஆளுக்கொரு வைத்தியம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அந்தளவுக்கு இந்தியத் திரு நாட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடி மகனுமே தன்னை எம்.பி.பி.எஸ். படிக்காத குட்டி டாக்டராகவே நினைத்துக் கொள் கிறார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு அது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு என் டாக்டர் நண்பர் ஒருவருக்கு தலைவலி அதிகமாக, அதற்குரிய ஸ்பெஷ லிஸ்ட் மருத்துவரிடம் செல்லாமல் இரண்டு ஆண்டுகளாக தானே சிகிச்சை எடுத்துக் கொண்டார். முடிவில் அவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து, 34 வயதி லேயே உயிரிழந்த சோகத்தை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை. அன்றைய நாளில் இருந்த எல்லா ஆய்வுக் கூட சோதனைகளையும் மேற்கொண்ட அவர், ரத்த அழுத்தத்தை மட்டும் ஏனோ சோதிக்கவே இல்லை. அவருடைய மனைவி யும் ஒரு டாக்டர் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு மருத்துவரே, தன் பிரச்னைக் குரிய ஸ்பெஷலிஸ்ட்டிடம் செல்லாமல், தனக்குத் தானே மருத்துவம் பார்த்து காப்பாற்றிக் கொள்ள முடியாதபோது... சாமான்ய மக்களால் எப்படி சுய மருத்துவத்தால் தற்காத்துக்கொள்ள முடியும்? செல்ஃப் மெடிக்கேஷனின் ரிஸ்க்-ஐ புரியவைக்க, இதைவிட எச்சரிக்கும் விதமான, சோக மான எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா என்ன? உடலின் நோய்க்கூறு இயல் - அதாவது பெத் தாலஜி (Pathology) எனப்படும் மருத்துவப் பிரி வில், ஒவ்வொரு நோயும் உடலில் எவ்விதமான மாறுதல்கள் உண்டாக்கும் என்று அறிந்து, நோயின் போக்கு (Course), அதன் தீர்வுக்கான கணிப்பு (Prognosis), நோயினால் வரக்கூடிய சிக்கல்கள் ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் மேற்பார்வையில் இவை பற்றிய விரிவான அலசல் ஏதுமின்றி... 'மார்பு சளிக்கு இந்த மருந்து' என்று பொதுவாக உட்கொள்வது அபத்தம். உதாரணமாக, சளி என்பது நோயல்ல. சுவாச மண்டலத்தின் உள்ளே நுழைந்துள்ள ஒரு கிருமியை அகற்ற தற்காப்புக்கென உடலில் சுரக்கும் திரவப் பொருள்தான் சளி. சிலசமயம் கிருமிக்கு பதில் வேறு நச்சுத் துகள்கள் அல்லது புகையாலும் சளி ஏற்படலாம். இதை உடலிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் சுவாச மண்டலத்தின் உட்புறச் சுவர் முழுவதும் உள்ள சீதப்படலம் (Mucous Membrane)...கோழை அல்லது நீரைச் சுரக்கிறது. அதன் விளைவாக உடலில் நச்சு நுழை யாமல் நீர்த்துப் போகும். ஆனால், படையெடுக்கும் கிருமியைப் பற்றி கவலைப்படாமல் தற்காப்புக் காகச் சுரக்கும் சளியை அறவே நீக்கிவிட உடனடியாக சிகிச்சை செய்கிறோம். காய்ச்சல் என்பதுகூட உடல் தன்னைக் காத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிதான். கிருமி ஒன்று உள்ளே நுழைகிறது எனில், அதைக் கொல்லும் முயற்சியில் உடல் தன் வெப்பத்தைக் கூட்டுகிறது. அதில் கிருமி அழியாமல் போராடும். அதன் விளைவுதான் நாம் உடல்வலி, தலைவலி எனத் தவிப்பது. ஆனால், கிருமியை வெல்லவிடாமல் செய்யும் உடல் வெப்பத்தை, நாம் மாத்திரைகள் போட்டுத் தடுத்து விடுவதோடு, ஒரு நுண்ணுயிர்க் கொல்லி - அகண்ட திறன் வரிசை நுண்ணுயிர் கொல்லி (பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக்) உட்கொண்டு, உடலின் தற்காப்புத் திறனை (Immunity) வளர விடாமல் செய்கிறோம். சுயமருத்துவம் ஏன் கூடாது என்பது இப்போது புரிந்திருக்கும். சரி, சுயமருத்துவம் எடுத்துக் கொள்வ தனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? பொதுவாக, நாம் உட்கொள்ளும் எந்தப் பொருளும் செரிமானமாகி, உடலில் கல்லீரலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை அனைத்தும் வெளியேறுவது சிறுநீரகங்கள் வழியாகத்தான். எனவே, நாம் எடுத்துக்கொள்ளும் சுயமருந்துகளின் பாதிப்பு, சிறுநீரகங்களைத்தான் பெரிதும் தாக்கும். இவை பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அடிக்கோடிடப்படும் காரணங்களைப் பகிர் வது, உங்களையும் முன்னெச்சரிக்கை ஆக்கும். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரகம் பழுதடைந்தோ அல்லது நோயுற்றோ உள்ளவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர், இதயம் செயல் திறனிழப்பு கொண்டவர்கள் மிக கவன மாக இருக்க வேண்டியவர்கள் என்கின்றன ஆராய்ச்சிகள். 'நான் வெறும் தலைவலி மாத்திரை தான் சாப்பிடுவேன். இதுக்கு ஆராய்ச்சி அளவுக்கு அறிவுரை சொல்லணுமா?’ என்கிறீர்களா..? கவனிக்க... சிறுநீரகங்கள் மிக அதிகம் சேதமடைவது வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால்தான். இதை அனால்ஜீஸிக் நெஃப்ராபதி (Analgesic Nephropathy) என்றே அழைக்கிறார்கள். இவை தவிர, ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் மாத்திரைகூட தீங்கு செய்யலாம். அந்தக் காலத்தில் வீட்டி லேயே வைத்தியம் பார்த்துக் கொண்டார்கள் எனில், சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு முதலுதவிதான் செய்வார்களே தவிர, எல்லா நோயையும் குணப்படுத்த கூடிய மட்டும் முயல மாட்டார்கள். இன்று சமையல் பொருட்களில்கூட கலப்படம் வந்துவிட்ட நிலையில், அஞ்சறைப் பெட்டி வைத்தியம்கூட உத்தரவாதம் இல்லாதது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, மெடிக்கல் ஷாப்களில் நோய்களைச் சொல்லி மாத்திரைகள் வாங்கி விழுங்குவதும், நம் மருத்துவ அறிவை (!) மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் அபாயமானவை. அந்த முறையற்ற மருந்துகள் சிறுநீரகங்களைத்தான் குறி வைத்துத் தாக்கும், முடிவில் நம்மையே தகர்க்கும் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும்! நோயாளியாக இருப்பது தவறில்லை... தனக்குத் தானே டாக்டராவதுதான் மிகப் பெரிய தவறு!

ஜம்முனு எடையைக் குறைக்கும் ஜி.எம்.டயட் !

'உடம்பை எப்படிக் குறைப்பது..?’ - இன்று பாதி மக்கள் தொகையின் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. 'ஸ்லிம் பாடி’க்கு ஆசைப்படுபவர்கள் தேர்ந் தெடுக்கும் முதல் வழி... டயட். அதிலும், 'அடுத்த வாரம் ஒரு ஃபங்ஷன்... அதுக்குள்ள வெயிட்டைக் குறைக்கணுமே’ என்று நகம் கடிப்பவர்களுக்கு சூப்பர் சாய்ஸ், ஜி.எம். டயட்! அதென்ன ஜி.எம். டயட்? கார்கள் மற்றும் மோட்டார் பாகங்கள் தயாரிப்பில் 'நம்பர் ஒன்’ நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், தன் ஊழியர்களுக்காகக் கொண்டு வந்த டயட் சார்ட்தான், 'ஜி.எம். டயட்’. அமெரிக்காவில் உள்ள 'அக்ரிகல்ச்சர் அண்ட் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன்’ டிபார்ட்மென்ட் (Agriculture and food and drug administration),இந்த ஃபுட் சார்ட்டை அங்கீகரித்திருக்கிறது! 'ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம்' என இதன் ரிசல்ட் ஆச்சர்யப்படுத்தும் அளவில் இருக்கவே, ஜி.எம். நிறுவன ஊழியர்களைத் தாண்டி, உலகெங்கும் ஹிட் அடித்திருக்கிறது இந்த டயட். சினிமா ஸ்டார்கள் தொடங்கி, சாதாரண மக்கள் வரை ரீச் ஆகியுள்ள இந்த டயட், ஏழு நாட்களுக்கான ஃபுட் பிளான் பற்றி சொல்கிறது. நோய் உள்ளிட்ட எந்த உடற்பிரச்னைகளும் இல்லாதவர்கள், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இந்த ஜி.எம். டயட் சார்ட்டை ஃபாலோ செய்தால், எட்டாவது நாளில் நல்ல ரிசல்ட்டைக் காணலாம். இந்த டயட்டை எடுத்துக் கொள்ளும்போது, அதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் அளவு களைத் தவிர்த்து மற்றவற்றை வயிறு கொள்ளும் அளவுக்கு சாப்பிடலாம். கூடவே, தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம் என்பதை மனதில் கொள்ளவும். ஜி.எம். சார்ட்படி ஒரு வாரம் டயட் முடித்து, எட்டாவது நாள் எடையை செக் செய்தால், நிச்சயம் நாலைந்து கிலோ குறைந்திருக்கும் என்பதுதான் இதை உருவாக்கியவர்கள் தரும் உத்தரவாதம். அப்படி எடையைக் குறைத்த பெங்களூருவை சேர்ந்த மாலினி, இங்கே தன் அனுபவம் சொல்கிறார்... ''நான் அசிஸ்டென்ட் அக்கவுன்டன்டா... ஆடிட் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். உடம்பைக் கவனிக்க நேரமே இருக்காது. 59 கிலோ வெயிட்ல இருந்த எனக்கு, சென்னையில இருக்கிற என் பெரியம்மா பையன்தான் ஜி.எம். டயட் பத்தி சொன்னான். அவன் அதை ஏற்கெனவே வொர்க் அவுட் செய்து, நல்லா மெலிஞ்சிருந்ததால, நானும் என் கணவரும் நெட்ல அதைப் பத்தின தகவல்களைத் தேடித் தெரிஞ்சுக்கிட்டு, நம்பிக்கையோட அதுல இறங்கினோம். முதல் ரெண்டு நாள் சுலபமா ஓடிருச்சு. மூணாவது நாள்ல இருந்து பசியெடுக்க ஆரம்பிக்க, ரொம்ப டயர்டாவும் இருந்தது. அஞ்சாவது நாள்... 'டயட்டை நிறுத்திடுவோம்'ங்கிற நிலைமைக்கு வந்துட்டேன். ஆனா... அந்தா, இந்தானு மனசை இழுத்துப் பிடிச்சு டயட்டை முடிச்சுட்டேன். எட்டாவது நாள் மூணு கிலோ குறைஞ்சுருந்தேன். என் கணவர் அஞ்சு கிலோ குறைஞ்சுருந்தார். இவ்வளவு எஃபெக்டிவ்வான ஒரு டயட்டை நான் பார்த்ததில்லை'' என்கிறார் சந்தோஷமாக மாலினி. சென்னையைச் சேர்ந்த 'ஸ்போர்ட்ஸ் டயட்டீஷியன்' மற்றும் ராமச்சந்திரா மெடிக்கல் யுனிவர்ஸிட்டியின் லெக்சரருமான ஷைனி சந்திரனிடம் ஜி.எம். டயட் பற்றிக் கேட்டபோது, ''இதை மிஞ்சிய பல டயட் சார்ட்டுகள் வந்துவிட்டன. ஆனாலும், 'அடுத்த வாரம் ஒரு முக்கியமான ஃபங்ஷன் வருது... வெயிட் குறைக்கணும்...’ என்கிற அவசரத்தில் இருப்பவர்களுக்கு, ஜி.எம். டயட் கை கொடுக்கும். என்றாலும் ஒரு டயட்டீஷியனின் மேற்பார்வையில்தான் இதை பலரும் வொர்க் அவுட் செய்கிறார்கள். சுயமாக முயற்சிகள் எடுக்கும்போது, பல பிரச்னைகள் வரலாம். உதாரணத்துக்கு, ஒருவருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவை என்றால், ஜி.எம் டயட்டை ஃபாலோ செய்யும்போது 1,200 கலோரிகள் மட்டுமே கிடைக்கும். இதை தொடர்ந்து ஃபாலோ செய்யும்போது அனீமியா, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் என பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். எப்போதும் படிப்படியா உடம்பைக் குறைப்பதுதான் சரி. நான் பரிந்துரைக்கும் இந்த சமச்சீரான உணவு சார்ட்டுடன் உடற்பயிற்சியும் செய்தாலே உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள லாம்'' என்றபடியே ஃபுட் சார்ட் தந்த ஷைனி, ''நான் தந்த சார்ட்டை 20 - 40 வயது வரையுள்ள, எந்த உடல் பிரச்னைகளும் இல்லாதவர்கள் மேற்கொள்ளலாம். இதனுடன், ஒரு ஃபிசியோதெரபிஸ்ட்டின் வழிகாட்டுதலுடன் கட்டாயமாக உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். எடை குறைவுக்கு நிச்சயமாக உத்தரவாதம் உண்டு! கூடவே, இரவு சரியாகப் பத்து மணிக்கு உறங்கி, காலையில் ஆறு மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டாலே... நோய்கள் அண்டாது'' என்று நம்பிக்கை கொடுத்தார்!

மருந்தை விட மனசு முக்கியம்...

செய்யும் வேலையே சேவையாக அமைவது, வரம். தனக்குக் கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பை வைத்து, நிறைவாக வாழ்கிறார் ராஜேஸ்வரி. புற்றுநோயால் ஆட்கொள்ளப்பட்டு, குடும்பம் மற்றும் உறவுகளால் கைவிடப்பட்ட பரிதாப உயிர்களை, தன் உறவுகளாக நினைத்துப் பணிவிடை செய்வதுதான் வேலையே! மனிதமும் கருணையும் நிரம்பிக் கிடக்கிறது ராஜேஸ்வரியின் பேச்சில்... ''என் சொந்த ஊர் ஈரோடு. கணவர் அன்புமணி வேன் டிரைவர். ரெண்டு பசங்களும் ஸ்கூல்ல படிக்கிறாங்க. நர்ஸிங் முடிச்சுட்டு, தனியார் மருத்துவமனையில வேலைக்குச் சேர்ந்தேன். சேவையையே முக்கிய நோக்கமா நினைச்சு படிச்ச இந்தப் படிப்புக்கு, அங்க அதை செயல்படுத்துறதுக்கான சூழல் முழுமையா இல்லை. எல்லா மருத்துவமனைகள்லயும் ஒரு உயிரைப் பணமாவே பார்க்கற அவலம் எனக்குப் பிடிக்கல. காசு இருக்கற நோயாளிகளுக்கு ஃபைவ் ஸ்டார் கவனிப்பு தர்றது, டெபாஸிட் கட்ட முடியாத நோயாளிகளுக்கு கருணையே இல்லாம கெட் அவுட் சொல்றதுனு இப்போ இருக்குற கார்ப்பரேட் மருத்துவமனைகளோட போக்கே வேற மாதிரி இருக்கு. மனச கல்லாக்கிட்டு வேலை பார்க்க பிடிக்கல. இந்த நிலையிலதான், ஈரோடு மாவட்டத்துல இருக்கற கங்காபுரம், 'இமயம் டிரஸ்ட்'ல, கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளைக் கவனிக்கும் பணிக்கான வாய்ப்பை அறிந்து, நான் அங்க போனேன்'' எனும் ராஜேஸ்வரிக்கு, அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது மனம்போல் வேலை. ''டிரஸ்ட்டோட பிரசிடென்ட் டாக்டர் அபுல் ஹசன், 'இந்த வேலைக்குச் சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு, அக்கறை வேணும்’னு ஆரம்பிச்சு, நிறைய அறிவுரைகள் சொன்னார். அதுக்கு உறுதிமொழி கொடுத்து வேலையில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் இங்க இருக்கற நோயாளிகளோட நிலைமையைப் பார்க்குறப்போ, மனசு முழுக்க வேதனை நிரம்பும். இப்போ அதை வேதனையா சுமக்காம, அவங்களுக்கான பிரார்த்தனையா மாத்துற பாஸிட்டிவ் பக்குவம் வந்திருக்கு. டிரஸ்ட் டாக்டர்களோட சேவை மகத்தானது. இந்தக் கருணை நதியில, ராமரோட அணில் நான்'' என்றவரின் பணி, நற்பணி. ''ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள்னு எந்த பாரபட்சமும் இல்லாம கேன்சர் தீண்டின நோயாளிகள் இங்க இருக்காங்க. குடும்பம், உறவினர்களால பார்த்துக் கொள்ள முடியாத நிலையிலும், சிகிச்சையளிக்க வசதியில்லாத நிலையிலும் கொண்டு வந்து விட்டுடறாங்க. புறக்கணிப்போட கொடூர வலிதான் கேன்சரைவிட அவங்கள அதிகமா பாதிச்சுருக்கும். அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தைனு குடும்பத்துல சிரிச்சு பேசி வாழ்ந்துட்டு இருந்தவங்க, கேன்சர் பரிசோதனைகள், மருத் துவமனைகள், சிகிச்சைகள்னு அலைக்கழிக்க... உறவுகளோட உரையாடல்களை கொஞ்சம் கொஞ்சமா இழந்திருப்பாங்க. ஆறுதலான வார்த்தைகள்தான் அவங்களுக்கு உடனடி தேவை. அதனால, மாத்திரை, மருந்துகளைவிட, அன்பா அவங்க கண் பார்த்து, முகம் பார்த்து, கை பிடிச்சு ஆறுதலா பேசுறதுலதான் என் சிகிச்சை ஆரம் பிக்கும்! உடை மாற்றி விடுவது, உணவு சாப்பிட வைக்கிறது, புண்ணால அவதிப்படறவங்களுக்கு அதைச் சுத்தம் செய்து மருந்து போடுறதுனு எல்லாப் பணிவிடைகளையும் செய்றேன். தாயம் விளையாடுறது, கதை பேசுறதுனு அவங்களோட பொழுதுபோக்குக்கும் நான் கியாரன்டி. எல்லாத்துக்கும் மேல, 'உங்களுக்கு ஒண்ணுமில்ல... சீக்கிரமே குணமாகிடுவீங்க’னு நான் சொல்ற நாலு நம்பிக்கை வார்த்தைகள், அவங்கள ரொம்பவே புத்துணர்வாக்கும்!'' என்ற ராஜேஸ்வரி, ''இதுவரை 500-க்கும் மேற்பட்டவங்க தங்க ளோட இறுதி நாட்களை இங்க கழிச்சிருக்காங்க. அதுல ஒரு சிறுவனோட இழப்பு, என்னை அதிகம் உலுக்கினது. ரொம்ப அறிவான, சமர்த்துப் பையன். அவனுக்கு வலது கண்ல புற்றுநோய் ஏற்பட்டதால, ஆபரேஷன் மூலம் அந்த கண்ணை அகற்றின நிலையிலதான் இங்க வந்தான். ஒரு சில மாதங்கள்ல இடது கண்ணுக்கும் கேன்சர் பரவி, அதையும் அகற்றிட்டாங்க. பார்வை இல்லைனாலும்... மலர்ந்த முகத்தோட, 'அக்கா எங்க இருக்கீங்க... ஏதாவது கதை சொல்லுங்க...’னு அவன் கேட்கும்போது, தாங்க முடியாம நிறைய அழுதிருக்கேன். அவன் மூளைக்கும் கேன்சர் பரவ, கடைசியா சாக்லேட் வாங்கிச் சாப்பிட்டு... அவன் உயிர் விட்ட காட்சி, கண் முன்னால கசியுது'' என்று கண்கள் கசிந்தார். ராஜேஸ்வரி நிறைவாக மனதிலிருந்து எடுத்து வைத்த வேண்டுகோள்... ''எய்ட்ஸ், புற்றுநோய் மட்டுமில்ல... கைவலி, முதுகுவலினு உடல் முடங்குற உங்க உறவுகளுக்கு முதல் மருந்து... உங்களோட அனுசரணையும், ஆறுதலும்தான். பெரிசா காசு பணம் செலவழிச்சு வைத்தியம் பார்க்க முடியலனாலும், அவங்க கை பிடிச்சு நம்பிக்கை சொல்லுங்க. அந்த சிகிச்சைதான் அவங்களோட முதல் தேவை!''

கட்டா பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், இஞ்சி - பூண்டு விழுது - தலா கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கட்டா செய்ய: தக்காளி (விழுதாக அரைக்கவும்) - 4, கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி விழுது, கடலை மாவு, மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் விட்டு கலந்து பிசைந்து, கயிறு போல நீளவாட்டில் கனமாக உருட்டவும். 2 இஞ்ச் நீள துண்டுகளாக வெட்டவும்.

அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து உதிராக சாதம் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, உருட்டி வைத்துள்ள கட்டாக்களை போட்டு, மிதமான தீயில் வேகவிட்டு, தண்ணீர் வடித்து எடுக்கவும். கட்டாக்களை சிறு சிறு துண்டுகளாக 'கட்’ செய்து ஆற விடவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும், கடுகு, சீரகம் தாளித்து... இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலந்து, நறுக்கிய கட்டாக்களை போட்டு புரட்டவும். அதில் சாதத்தை போட்டு கரண்டியால் லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.