பிரபலமான இடுகைகள்

புதன், 26 ஜனவரி, 2011

மனப் பயிற்சியே மகிழ்ச்சிக்கு வழி

மனதை ஒருநிலைப்படுத்த சில வழிகள் உண்டு.
நாம் அடைந்த வெற்றி, சாதித்த சாதனை ஒன்றை
எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றியே
நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருப்பது நல்லது.
-
காலையிலோ , மாலையிலோ, கடற்கரை, பூங்கா,
குளக்கரை, ஏரிக்கரை, பச்சை வயல்வெளி, மரங்கள்
அடர்ந்த பகுதி இவைகளில் ஏதேனும் ஓரிடத்தைத்
தெரிவு செய்து உலாவப் போகலாம்.
மன அமைதிக்கு இது உதவும்.
-

யோகாசனம், சுவாசப் பயிற்சி இவைகளின் மூலமும்
மனதை ஒரு நிலைப்படுத்தலாம். ஒரு குருவின் மூலமாக
யோகாசனம், மூச்சுப் பயிற்சி இவைகளை முறையாகக்
கற்றுக் கொள்வது அவசியம்.
இன்று பல நோய்கள் கூட இவைகளினால்குணமாகிறது.

இப்படியாக ஏதேனும் ஒரு வழியில் தினம் பத்து அல்லது
இருபது நிமிட நேரம் மனதை ஒரு நிலைப்படுத்தப்
பழகிக் கொண்டால், நாம் எதையும் சாதிக்க முடியும்.

'மகிழ்ச்சியை நம்புங்கள். மகிழ்ச்சியைப் பற்றி நினையுங்கள்.
மகிழ்சியாக இருப்பதை வழக்கமாக எற்படுத்திக் கொள்ளுங்கள்.
பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள்.
அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்' என்கின்றார்
நார்மன் வின்சென் பீல்.

நம்முடைய மனப் பயிற்சினால் மகிழ்ச்சியோடு இருப்பதே
நமது நோக்கமாகக் கொண்டு செயல்பாட்டால் எளிதில்
இன்பம் காணலாம்.

மனப் பயிற்சியே மகிழ்ச்சிக்கு வழி

வேதாத்திரி மகரிஷி அருளுரைகள்

=

இதுதான் நல்ல குடும்பம்! ஒரு குடும்பம் நல்ல குடும்பமாக திகழ சில அவசியமான அறிவுரைகளை கூறு கிறார் வேதாத்திரி மகரிஷி. அந்த அறிவுரைகள் :

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய ன்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

"இது இந்தியாவின் கதை"- ஒரு பார்வை

"இது இந்தியாவின் கதை"- ஒரு பார்வை


ஒருவனுடைய வாழ்க்கை எப்பொழுது முழுமையடையும் என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு. ஒருவனின் வாழ்க்கை, அவனது இறப்புக்குப் பின்னரே தீர்மானிக்கப் படுகின்றது. ஒருவனுடைய வாழ்வு வரலாறாகும் போதே அது முழுமையடைவதாகத் தோன்றுகின்றது. வரலாறு என்பது வெறும் நாட்குறிப்பல்ல. அது ஒரு வழிமுறை. வாழ்க்கைப் பாடம். ஒரு தனி மனித வரலாறே இவ்வாறென்றால் ஒரு நாட்டின் வரலாறு எப்படி இருக்கும் ?. அதுவே வரலாற்றின் ஆரம்பமாயிருந்தால் ? ஆம் அப்படி ஒரு வரலாறே நம் இந்திய நாட்டின் வரலாறு.

பெரும்பாலும் நாம் அனைவருக்கும் இந்திய வரலாறு பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தோடு நின்றிருக்கும். ஆர்வமுடையவர்கள் பட்ட படிப்பிலும், மேலும் சிலர் சில புத்தகங்களின் மூலம் தேடியிருப்பார்கள். அதற்கு மேல் முயற்சித்தவர்கள் மிகச் சிலரே. நம் தேசப் பிதாவின் வரலாற்றை படமாக எடுத்து நமக்கு காட்டவே இங்கிலாந்திலிருந்து ஒரு அட்டன் பாராவ் வரவேண்டியிருந்தது.அப்படியிருக்கும் போது நம் நாட்டின் வரலாற்றை நமக்குச் சொல்ல இன்னும் ஒருவர் வானத்திலிருந்துதான் குதித்து வர வேண்டும். யார் செய்த புண்ணியமோ அப்படி குதித்து வந்த ஒருவர் தான் மைக்கேல் வுட். பிபிசி சானல் நிகழ்ச்சிக்காக இந்தியாவின் 10,000 ஆண்டு கால வரலாற்றை தோண்டித் துருவி ஆவணப்படமாக்கியிருக்கிறார். வெறும் காகிதங்களில் அல்ல, ரத்தமும் சதையுமாக நம் கண் முன் நிறுத்துகின்றார். அவரது தேடுதலும், இந்திய வரலாறை அறிந்து கொள்ளும் ஆர்வமும் அவர் கண்களில் மின்னுகின்றது. பார்க்கும் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கிறார். நாம் கூட அப்படி ரசித்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே.

இந்திய வரலாற்றைத் தேடும் அவரது பயணம் ஆப்பிரிக்காவில் தொடங்குகின்றது. அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே திராவிடர்கள். மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில் வாழும் விருமாண்டி என்பவரின் ஜீன்கள் ஆதி மனிதனின் தொடர்ச்சி என்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றார். மலையாளிகளின் ஒரு சடங்கு முறையில் எழுப்பப்படும் ஒலிகள் ஆதி மனிதன் பறவை விலங்குகளோடு உரையாடப் பயன்படுத்தியன என்கிறார். நம் மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு கூட பண்டைய திராவிடர்களின் பெண் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே என்கிறார்.

மனிதனின் நாகரிக வளர்ச்சி விவசாயத்தில் தொடங்கியது. நகரமயமாதல் அதன் உச்சம். கி.பி. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி நாகரிக உச்சம் பெற்ற நகரங்களே இன்றைய பாகிஸ்தானின் ஹராப்பாவும், மொகஞ்சதாரோவும். அங்கு நம் முன்னோர் பயன்படுத்திய சுட்டச் செங்கற் கட்டடங்களைச் சுடச்சுடக் காட்டுகிறார். இந்து நதியின் சமவெளியில் தோன்றிய இந்நாகரிகங்களின் வீழ்ச்சியையும் ஆராய்கிறார். இன்றைக்கு மட்டுமல்ல அன்றைக்கும் நடந்த தட்பவெப்ப மாறுதல்களும், பருவ மழையின் ஏமாற்றமுமே இவற்றின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருக்கின்றன.

இதன்பின் "வுட்"-டின் பயணம் ஆரியர்களின் வருகையை நோக்கித் திரும்புகிறது. அவர் சம்ஸ்கிருத மொழியின் தோற்றத்தையும் அதற்கும் லத்தீன், கிரேக்க மொழிகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்கிறார். ரிக் முதலிய வேதங்களும், இந்திரர் முதலான தெய்வங்களும் ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்து கூஷ் மலை கடந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சோமா செடியிலிருந்து உருவான சோம பானம் இன்றளவும் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் அருந்தப்படுவதை அறிந்து அங்கு சென்று அதையும் சுவைக்கிறார்.ஆரியர்கள் கடந்து வந்த பாதைகளை நம் கண்களுக்குகாட்டுகிறார்.

மகாபாரதம் நடந்த குருசேத்திரம், புத்தர் இறந்த குசி நகரம், அலெக்சாண்டர் முதல் அசோகர் வரையிலான மன்னர்களின் ஆட்சியும் அதிகாரமும் என இவர் பார்வை விரிகிறது. ஆச்சரியத்தில் நம் கண்களும் தான். பூஜ்யத்திலிருந்து வாஸ்தயானர் வரை இந்தியாவின் பெருமைகள் எதையும் இவர் விட்டு வைக்கவில்லை. அருமையான ஒரு ஆவணப் படம்.

இதன் ஒளிபதிவும் இசையமைப்பும் ஆவணப்படத்திற்கே என்று இருக்கும் அனைத்து வரையறைகளையும் தாண்டிச் செல்கிறது. நான் பார்த்த மதுரையா இது என்று ஆச்சர்யப் படுத்துகின்றன.

நம் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு ஆவணப்படம்.

சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு

சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு




பருவ நிலை மாற்றத்திற்கு தக்க உணவுகளை உண்டு வந்தால் உடல் நலன் மேம்படும் என்ற அடிப்படையில் இந்த பதிவு. பொதுவாக சீசனில் கிடைக்கும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை செய்பவை. இந்த பதிவு ஒரு நாளிதழில் வந்தது. ஆனாலும் இதில் குறிப்பிட்டுள்ள காய்கறிகளையும், பழங்களின் மருத்துவக்குணங்களையும் அலசிப்பார்த்தால் அவை அந்தந்த மாதங்களின் சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை என்பதால் அந்த இதழில் வந்த உள்ளடக்கத்தை இங்கு தருகிறேன்.
ஜனவரி
கோதுமை உணவுகள் இந்த மாதத்திற்கு அதிகம் ஏற்றது. காபி கொட்டையை வறுத்து மல்லியோடு சேர்த்து தூளாக்க வேண்டும். அதில் மிளகு சேர்த்து காபி தயாரித்து பருகவேண்டும். கரும்புச்சாறு பருகலாம். உளுந்து சேர்த்த உணவுகள் அதிகம் சாப்பிடலாம். ரசம் தயாரிக்கும் போது புளியை குறைவாக சேர்த்து மிளகு அதிகம் சேருங்கள். சாம்பார் தயாரிக்கும் போது மஞ்சள் தூள் அதிகம் சேர்த்திடுங்கள்.
பிப்ரவரி
வாழைத்தண்டு கூட்டு, மல்லி இலை துவையல்,நெல்லிக்காய்,முருங்கை இலை மற்றும் இதர கீரை வகைகளை அதிகம் உணவில் சேருங்கள். பாகற்காய் கூட்டு நல்லது. எருமைப்பால் சேர்த்த பால் கஞ்சி பருகலாம்( ஆவின் பால் என்றால் அது பசும் பால் என்று நினைத்து விடாதீர்கள். அதிலும் எருமைப்பால் இருக்கிறது. ஊரில் இருக்கும் பசு,எருமை என்று வித்தியாசமில்லாமல் சேகரித்து பால் பிளாண்டில் சூட்டிலும், பிறகு அதிக குளிர் அறையிலும் பதனப்படுத்தி தான் ஆவின் பால் என்று பாக்கெட்டுகளில் வருகிறது)
பப்பாளி, வெள்ளரிக்காய்களை சாப்பிடலாம்.
திராட்சை, கேரட்டில் ஜுஸ் தயாரித்து சாப்பிடலாம்
கார உணவு வகைகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள்.
மார்ச்
கொதித்து ஆறிய நீரில் தேன் கலந்து பருகுங்கள்.
மோர் அதிகம் குடிக்கலாம்.
தர்ப்பூசணி சாறு குடிக்கலாம்
வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்
தேங்காய், வெண்டைக்காய்,சுரைக்காய், கோவைக்காய் போன்றவற்றை சேருங்கள்.
எருமைப்பாலில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குளிர வைத்து பருகலாம்.
இளநீர் பருகலாம்
உணவில் அதிக புளிப்பு இனிப்பு சேர்க்க கூடாது
ஊறுகாய் வகைகள்,வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஏப்ரல்
பேரீச்சம் பழம்,வாழைப்பழம்,திராட்சை பழம் போன்றவைகளை அதிகம் சாப்பிடலாம்
வாழைப்பழம், பலாப்பழம் போன்றவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு மண்பாத்திரத்தில் போட்டு புளிக்க வையுங்கள். அந்த சாறை வடித்து இன்னொரு மண்பாத்திரத்தில் ஒரு மணிநேரம் வைத்திருந்தூ விட்டு பருகுங்கள்.
தேங்காய் தண்ணீர் அதிகம் பருகலாம்.
தண்ணீரில் கருங்காலி கட்டை, சந்தனம், வெட்டி வேர் கலந்து பருகலாம். இந்த தண்ணீரை மண்பாணையில் வைத்து பருகுவது நல்லது.
கோழி முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிருங்கள்.
சிறிய வகை மீன்களான கூட்டு, குழம்பு வைத்து சாப்பிடுங்கள்.
மே
எள், உளுந்து, பெரும்பயறு போன்றவைகளை உணவில் அதிகம் சேருங்கள்.
தேன் நல்லது. ஆட்டுப்பால் கிடைத்தால் கண்டிப்பாக பருகுங்கள். இஞ்சியின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்.

ஜுன்
கொய்யா, பப்பாளி பழம் அதிகம் சாப்பிடலாம்.
ஆடு,கோழி சூப் பருகுங்கள்.
பழச்சாறுகளை குளிர வைத்து சாப்பிடலாம்.
தேன்,சீரகம் கலந்த நீர் பருகுங்கள்.
மாம்பழம், அன்னாசி பழம் சாப்பிடலாம்.
கரும்புச்சாறு, எருமைப்பால் சர்க்கரை சேர்த்த பால் நல்லது. திராட்சை,சீதாப்பழம் சாப்பிட வேண்டாம்.
ஜுலை
கீரை வகைகளை உணவில் அதிகம் சேருங்கள்.
பெரும்பயறு,கடலை,கொள்ளு போன்றவற்றை வேக வைத்து சூப் தயாரித்து பருக வேண்டும்.
வெண்டைக்காய்,முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு,கேரட் போன்றவற்றை குறைத்து பயன்படுத்துங்கள்.
பாலில் சர்க்கரை சேர்க்காமல் பருகுங்கள்.
ஆகஸ்ட்
சிறிதளவு புளி, உப்பு, தேன், நெய் ஆகியவை சேர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
புழுங்கல் அரிசி உணவு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
காய்கறிகளை உணவில் அதிகம் சேருங்கள்.
முருங்கை இலை தவிர மற்ற கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செப்டம்பர்
சிறுபயறுகளை உணவில் அதிகம் சேருங்கள்.
புடலங்காய் அதிகம் சேருங்கள்.
அக்டோபர்
நெல்லிக்காயை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ அடிக்கடி சேருங்கள்.
புடலங்காயை அதிகம் சேர்க்கலாம்.
நவம்பர்
அரிசி மாவு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
கோதுமை உணவுகளையும் சேர்க்கலாம்.
உளுந்து சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்
கிழங்கு வகைகளையும் உணவில் சேர்க்கலாம்.
டிசம்பர்
சேணைக்கிழங்கை உணவில் அதிகம் சேருங்கள்.
மல்லியும், சீரகமும் அதிகம் பயன்படுத்துங்கள்.
சுக்கு,இந்துப்பு,பூண்டு போன்றவைகளின் அளவையும் அதிகப்படுத்தலாம்.
அரிசி மாவு, வெல்லம் சேர்க்கும் உணவுகள் நல்லது. கோதுமையுடன் பால் சேர்க்கும் உணவுகளை அதிகமாக தயாரித்து சாப்பிடுங்கள்.
மல்லி காபி பருகலாம்,
மிளகை உணவில் அதிகம் சேருங்கள்.

தற்போது நாம் உணவில் சேர்க்கும் சாதாரண உப்பால் உடலில் ஏராளமான நோய்கள் வருகின்றன. இதற்கு பதிலாக இந்துப்பு என்ற பாறை உப்பை பயன்படுத்தலாம். இந்த உப்பு நாட்டு மருந்துக்கடைகளிலும், இயற்கை உணவு கடைகளிலும் கிடைக்கும். இதன் பயன் உடலுக்கு அதிகமான நன்மை தரும். இந்துப்பு பற்றிய பதிவை தனியாக இடுகிறேன்.

புதன், 19 ஜனவரி, 2011

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!





னை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

சனி, 15 ஜனவரி, 2011

இதயத்தை பாதுகாக்க...

ஒவ்வாமை: ஒரு பார்வை!

ஒவ்வாமை: ஒரு பார்வை!

டாக்டர் ப.உ.லெனின் - 11 January, 2011
Allergic Reaction Symptoms, Causes, Signs and Treatment - Food Habits and Nutrition Guide in Tamil
இந்தக் காலத்தில் 'ஒவ்வாமை' எனப்படும் 'அலர்ஜி'யால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அலர்ஜி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
பரம்பரைத் தன்மைக் காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படலாம். எனினும் பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச் சூழல் தூண்டுதல் காரணமாகவே பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. உதாரணமாக சிகரெட் புகை, வேதிப் பொருட்கள், குளிர்காற்று உள்பட தட்பவெப்ப நிலையில் திடீர் மாற்றம், கடுமையான துர்நாற்றம், மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் 'ரைனிட்டிஸ்' எனப்படும் மூக்குப் பாதை திரவப் படலத்தில் வீக்கம் ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படும்.
வீட்டைப் பொறுத்தவரை தூசு நுண்பூச்சி, பூனை உள்பட சில வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை, விரிப்பு போன்றவற்றில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒவ்வாத தூசுப் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவை. கரப்பான் பூச்சி, எலிகள் காரணமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். உணவுப் பொருட்கள் காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. மீன் உட்பட கடல் சார்ந்த உணவுப் பொருட்கள், கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள், பால் பொருட்கள், சோயா உள்ளிட்டவை காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில் சார்ந்த அலர்ஜியைப் பொறுத்தவரை வேதிப் பொருட்கள், மரம் உள்ளிட்ட சாமான்களில் உள்ள தூசு, வேளாண்மை சார்ந்த தானியங்கள் காரணமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் சென்னை உள்பட பெரு நகரங்களுக்கு வருகின்றனர். இதனால் பெரு நகரங்களில் இரு சக்கர வாகனங்கள் உள்பட பிற வாகனங்களின் பெருக்கம் லட்சக்கணக்காக உயர்ந்துள்ளது. விளைவு அந்த வாகனங்கள் விடும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒவ்வாமையின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். நாம் 24 மணிநேரமும் சுவாசித்துக் கொண்டிருப்பதால் ஒவ்வாமை காரணமாக பொதுவாக பாதிக்கப்படுவது சுவாச மண்டலாம்தான். அலர்ஜி காரணமாக நமச்சல் ஏற்பட்டு மூக்குப்பாதை திரவப் படலத்தில் வீக்கம் ஏற்படும். தொடர் ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா நோய் பாதிப்பும் ஏற்படக்கூடும். மூச்சு விடுவதில் கஷ்டம், கண்கள், உதடு, முகம் ஆகியவற்றில் வீக்கம், தொண்டை அடைப்பு உள்ளிட்டவை உயிருக்கு ஆபத்தான தீவிர ஒவ்வாமை அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் உடனடி சிகிச்சை அவசியம். அதிர்ஷ்டவசமாக ஒவ்வாமை என்பது பொதுவாக ஒருநாள்பட்ட நோயாகத்தான் உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்புடைய ஒவ்வாமை காரணமாக ஒருவர் பாதிக்கப்படும் நிலையில் தொடர் ஜலதோஷம், தொடர் தும்மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப் பகுதியில் வலி, வாசனையை அறிய முடியாத தன்மை, குரலில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வாமை காரணமாக மூக்கு, கன்னப் பகுதிக்குள் உள்ள சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்பட்டு 'சைனுசைட்டீஸ்' நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒவ்வாமை காரணமாக ஒற்றை தலைவலி பிரச்சினையும் ஏற்படலாம். இது தவிர ஒருவருக்கு அலர்ஜி பிரச்சினை இருந்தால் வயிறும் பாதிக்கக் கூடும். சில பொருட்களை சுவாசித்தல், சிலவற்றை சாப்பிடுதல், தொடுதல் ஆகிய காரணங்கள் மூலமாக ஏற்படும் ஒவ்வாமை இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாதது. இதற்கு மனிதர்களுக்கு பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும், மனநலம் சீராக இல்லாததுமே காரணம் என்கிறது நவீன ஆராய்ச்சிகள்.
ஆங்கில மருத்துவத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இம்மருந்துகள் சிலருக்கு மட்டுமே பயன்தரும். சிலருக்கு பக்க விளைவுகள் வந்த வேடிக்கை சம்பவங்களும் உண்டு. பின் விளைவுகளும் வரும்.
ஹோமியோபதியில் ஆர்கனிகம் ஆல்பம், பெசிலினம், மெபோரினம், சிபிலினம், நக்ஸ்வாமிகா போன்ற மருந்துகள் உள்ளன. உடலையும், உள்ளத்தையும், சுற்றுப்புறத்தையும் கணக்கில் கொண்டு இந்த ஹோமியோபதி மருந்துகளைக் கொடுப்பதால் ஒவ்வாமை இரண்டே மாதங்களில் இருக்கிற இடம் தெரியாமல் அலறி அடித்து ஓடிவிடும்.

வியாழன், 13 ஜனவரி, 2011

கலப்புத் திருமணங்களால் தங்களது அடையாளத்தினை இழக்கும் தமிழ்க் குடும்பங்கள்

தற்போது புலம்பெயர்நாடுகளில் கலப்புத் திருமணம் செய்து வாழும் தங்களது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஊர்திரும்பும் போது தங்களது மொழி, காலாச்சாரம் மற்றும் மொழி என்னாவது என அவர்கள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள் என ucanews.com என்னும் இணையத்தளத்தின் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தி ஆய்வின் முழுவிபரமாவது:

தங்களது பிள்ளைகள் வேற்று இனத்தினைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்யும்போது தங்களது கலாச்சாரத்தினையும் வழமையினையும் இழந்துவிடுவதாக சிறிலங்காவிலுள்ள தமிழ் கத்தோலிக்கர்கள் கரிசனை கொள்கிறார்கள்.

தற்போது புலம்பெயர்நாடுகளில் கலப்புத் திருமணம் செய்து வாழும் தங்களது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஊர்திரும்பும் போது தங்களது மொழி, காலாச்சாரம் மற்றும் மொழி என்னாவது என அவர்கள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள்.

பிரான்சிலுள்ள தங்களது மகன் பிரெஞ்சுப் பெண்ணொருவரை திருமணம் செய்யப்போவதாக ஒற்றைக்காலில் நிற்பதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள சவரிமுத்துவும் அவரது மனைவியும் கவலையில் மூழ்கிப்போயுள்ளார்கள்.

"இதுபோன்ற கலப்புத் திருமணங்களை தேவாலயங்கள் ஊக்குவிக்கக்கூடாது. இது தமிழ் மக்களது கலாச்சார ரீதியிலான அபிலாசைகளை ஒருபோதும் பிரதிபலிக்காது" என நீக்கிலஸ் சவரிமுத்து கூறுகிறார்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தங்களது பிள்ளைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற வேளை, பிரான்சில் வசிக்கும் கலப்புத் திருமணங்கள் செய்த பல குடும்பங்களிடையே பிணக்குகள் நிலவுவதைத் தான் நேரில் அவதானித்ததாக சவரிமுத்து கூறுகிறார்.

தங்களது துணைவிமார் தங்களது மதத்தினை, இனத்தினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற பெற்றோர்களது வாதத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது என புலம்பெயர் நாடுகளில் வாழும் கத்தோலிக்கத் தமிழ் இளைஞர்கள் கூறுகிறார்கள்.

சொந்தக் கலாச்சாரத்தினையும் மதத்தினையும் பின்பற்றும் பெண்ணையே மணம்செய்யவேண்டும் என்ற தங்களது பெற்றோர்களது வேண்டுகையினைத் தங்களால் மறுக்கமுடியாது என புலம்பெயர் தேசங்களில் வாழும் வேறுசிலர் கூறுகிறார்கள்.

ஏனைய சிலர் பெற்றோரது விருப்பு வெறுப்புகளுக்கு மாறாக வேறு இனப் பெண்களைத் திருமணம் செய்திருக்கும் அதேநேரம் வேறுசிலரோ திருமணம் செய்யமாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள்.

43 வயதான தவரத்தினம் என்ற பல்வைத்தியர் பிரித்தானியாவினைச் சேர்ந்த பெண்ணொருவரைத் திருமணம் செய்திருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். பரஸ்பர மரியாதை, தேவையானதைப் புரிந்துகொள்ளும் பாங்கு என்பனதான் சிறந்த திருமண வாழ்வின் அடிப்படை என்கிறார் இவர்.

சிறிலங்காவில் தமிழர்களது திருமண நிகழ்வின் போது வெறும் சோடிகள் மாத்திரம் இணைவதில்லை. அவர்களது பெற்றோரும்கூட திருமணத்தினைத் தொடர்ந்து நெருங்கிய உறவுகளாகிவிடுகிறார்கள்.

திருமணத்தின் பின்னரும் பெற்றோரைப் பாதுகாக்கவேண்டும் என்ற நிலை மற்றும் தமிழர்களது கலாச்சாரப் பண்புகளைத் தொடர்ந்தும் பற்றிப்பிடித்து வாழுவதற்கு கலப்புத் திருமணங்கள் தடையாக அமைகின்றன எனப் பலரும் நம்புகிறார்கள்.

"மரணத்தில்கூட நாங்கள் பாதிக்கப்படுகிறோம்" என 63 வயதுடைய சிங்கராசா செபஸ்தியம்பிள்ளை கூறுகிறார். இவரது ஐந்து பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் கலப்புத் திருமணம் செய்தவர்கள் மத்தியில் மணமுறிவுகள் அதிகரித்துக் காணப்படுவது பெற்றோர்களது வாதத்தினை வலுப்படுத்துவதாக அமைகிறது என முத்துத்தம்பி சிவலிங்கம் என்ற சட்டவாளர் கூறுகிறார்.

சில சந்தர்ப்பங்களின்போது குறித்த ஒருவர் வேறு கலாச்சாரத்தினைப் பின்பற்றும் வேறு மொழியினைப் பேசும் ஒருவரைத் திருமணம் செய்தபோதிலும் பெற்றோர்களுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியளித்து வருகிறார்கள் என்கிறார் இவர்.

கலப்புத் திருமணங்கள் இடம்பெறுமெனில் அதில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உத்தியோகபூர்வமாகத் தலையிட்டு நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கப் போவதில்லை எனச் சட்ட வல்லுநரான மதகுரு தம்பிராசா ஜெப்றியல் கிருபாகரன் கூறுகிறார்.

"தேவாலயங்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது மத ரீதியிலான சடங்குகளில் அடிப்படையில் இடம்பெறவேண்டும் என்பதே தேவாலயங்களின் பிரதான கரிசனை. மணமுறிவு, செல்லுபடியாகாத திருமணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேவாலயங்கள் ஒருபோதும் தலையிடாது" என்றார் அவர்.

"திருமணத்திற்கென வரும் சோடிகள் திருமண வயதினை அடைந்துவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்திவிட்டு அவர்களுக்கான சமயச் சடங்குகளைத் தேவாலயம் முன்னெடுக்கும்" என யாழ்ப்பாணத்திலுள்ள சென் ஜேன்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை சாள்ஸ் சேவியர் நேசராசா கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும் தனது பங்கில் வெறும் ஐந்து அல்லது ஆறு கலப்புத் திருமணக் குடும்பங்களே இருப்பதாக அவர் கூறுகிறார். இன்றைய நிலையில் இது புறம்தள்ளக்கூடிய தொகை என்றும் ஆனால் கலப்புத் திருமணங்களை மேற்கொள்ளும் போக்கு வேகமாக வளர்ந்துவருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா போன்ற புலயம்பெயர் தேசங்களில் 1.5 மில்லியன் சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்.

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம்
பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள்  பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம்  மகிழ்வார்கள்.

“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.
என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும்
விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.

நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம்,
சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.
அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி.
பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட
ஊக்குவிப்பதில்லை.மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.

நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி,
மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது.
வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது
உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும்
நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை
இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக்
கொள்ள வேண்டும்.

--

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு

உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், "பழங்கதை பேசுவதால் என்ன பயன்?" என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.
கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.
இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.
டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் "விடுபட்ட இணைப்பு" என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.
"சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்" என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை "இந்து மதத்தோடு" தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.
கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
"இருங்கோவேளே... என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!"
- இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
"நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்ற வரியில் தொடங்குகிறது.
"வடபால் முனிவன்" யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது "பெரும் மண் பாண்டத்தில் தோன்றி" என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, 'ஓமகுண்டத்தில்' என்று தவறாகப் பொருள் கூறினர். 'தட' என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் 'தட' என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.
கண்ணன் தமிழன்
நச்சினார்க்கினியரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.
அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், "வடபால் முனிவர் தடவினுள் தோன்றி" என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை 'தாச யாதவன்' என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!
கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.
"கண்ணன் கருப்பு நிறத்தவன் தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தத் ஆரியர் தலைவன் இந்திரன்" ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.
அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).
அகத்தியரோடு தொடர்புடைய 'தட' குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.
அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.
மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும் என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.
ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, "நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.
இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.
அழிந்த நகரங்கள்
இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்
"உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு" என்கிறார் கபிலர். (புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு. கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)
இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் "நீடுநிலை அரையத்துக் கேடு" என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.
மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்ல் அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.
சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, 'தாச யாதவன்' என்கின்றன.
கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் "துவரை" என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.
தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் "அகத்தியம்" என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். "அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்" என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.
பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.
சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.
முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, "இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்" என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.

புதன், 12 ஜனவரி, 2011

கரும்பின் தத்துவ இனிப்பு

பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.
...
மஞ்சள் குலை வாங்குவது ஏன்?
மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது< அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் ' என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.
காப்பரிசி சாப்பிடுங்க!
பொங்கலன்று காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை திருவிளக்கின் முன் படைக்க வேண்டும். பச்சரிசியை ஊற வைத்து, அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றை கலக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதன்முதலாக காதுகுத்தும் சமயத்தில் இந்த அரிசியை உறவினர்களுக்கு கொடுப்பார்கள். இதனால் இதற்கு காதரிசி என பெயர் வந்தது. காப்பரிசி என்றும் சொல்வர். குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பொங்கலன்று இரவு பூஜை
பொங்கலன்று காலைநேர சூரிய பூஜை எவ்வளவு முக்கியமோ, அதே போல இரவு நேர பூஜையும் முக்கியம். அன்று இரவு முன்னோர்களை வழிபட வேண்டும். ஒரு தலைவாழை இலையை குத்துவிளக்கின் முன் விரித்து, அதில் பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், புத்தாடைகள் வைக்க வேண்டும். முன்னோரை மனதார வணங்கி, ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும். நம் குடும்பத்தில் மணமாகாத கன்னிப்பெண்கள் இறந்து போயிருந்தால், அவர்களின் நினைவாக, உறவுப்பெண்களில் கஷ்டப்பட்ட பெண் ஒருவருக்கு திருமணத்திற்கான உதவியைச் செய்ய வேண்டும்.

தண்ணீருக்கு மரியாதை
குழந்தைகளுக்கான பொங்கலை சிறுவீட்டுப் பொங்கல் என்றும் சொல்வர். தை மாதத்தில் வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பொங்கலை வைக்கலாம். அன்று அதிகாலையில் வாசலில் சாணப்பிள்ளையார் பிடிப்பது போல, சாணத்தை உருட்டி வைத்து அதில் பூவரசு, பூசணி, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மணலால் சிறு வீடு போல ஓவியம் வரைந்து, அதன் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிட வேண்டும். ஒரு முறத்தின் (சுளவு) பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பொங்கல், பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விட வேண்டும். கங்காதேவிக்கு பூஜை செய்ததுடன், தண்ணீரில் வாழும் மீன் முதலான ஜீவன்களுக்கு தானமளித்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அன்று மதியம் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களை திட்டாமல் சாப்பிட வைக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக வைக்கப்பட்ட இந்தப் பொங்கலை இப்போதும் வைத்து, எதிர்காலத்திலாவது தண்ணீருக்கு மரியாதை செய்ய பழகிக் கொள்வோம்.

காவிபட்டை ரகசியம்ஒரு காலத்தில் வீட்டில் வெள்ளையடிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இப்போது போல விதவிதமான வண்ணங்களை பூசும் வழக்கமில்லை. எனவே வீட்டு வாசல் சுவரில் வெள்ளையடித்து, நடுவில் காவிநிற பட்டையை அடிப்பார்கள். காவி இறைவனை சென்றடைவதற்குரிய நிறம். துறவிகளுக்குரிய அடையாளம்.
இல்லறத்தில் இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில், மனதளவிலாவது துறவறத்தை கடைபிடிக்க வேண்டும், பற்றற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. பொங்கல் கட்டி எனப்படும் பொங்கல் பானை வைக்கும் கற்களிலும் (அடுப்பு) வெள்ளையடித்து இடையிடையே காவிபட்டை (நீளமான கோடு) இட வேண்டும். கோயில் மதில் சுவர்களில் வெள்ளை, காவி நிற கோடுகள் போடுவதன் ரகசியம் இதுவே. மேலும் இந்தக் கோடுகள் கள்ளமற்ற பால் மனமும், செம்மையான (உறுதியான) மனமும் வேண்டும் என்பதையும் இங்கு வரும் பக்தன் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

தைமாத முகூர்த்த சிறப்பு
இருமனம் இணையும் திருமண வைபவத்தை, தை மாத முகூர்த்தங்களில் நடத்துவதை பலரும் விரும்புவர். மார்கழி பாவை நோன்பில் வாசலில் கோலமிட்டு பூசணிப்பூவினை வைத்து நல்ல மணமகன் வேண்டி காத்திருந்த கன்னியர் தை மாதத்தில் மாலைசூடுவது வழக்கம். திருமணத்திற்கு ஒருபெண் தயாராகிவிட்டாள் என்பதன் அறிகுறியாகவே பொங்கல் நாளில் வாசலில் கூரைப்பூ வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆவாரம்பூ, மாவிலை, வேப்பஇலை, கண்ணுப்பிள்ளைச் செடி என்று தோரணங்கள் கட்டுவது மங்கலநிகழ்ச்சிக்கான அடையாளமே. இதுவே, நாளடைவில் காளையை அடக்குதல், இளவட்டக்கல்லினை தூக்குதல் என்று வீரசாசகவிளையாட்டு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு மாறின. காலங்கள் மாறினாலும், நம் பண்பாட்டு அடையாளங்கள் மாறுவதில்லை. வழிவழியாக பழகிவந்த தைமுகூர்த்தங்களில் திருமணம் நிகழ்த்துவதையே இன்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

பட்டத்திருவிழாபொங்கல் பண்டிகையை வடமாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் "மகர சங்கராந்த்' என்ற பெயரில் இவ்விழாவை,பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழா கொண்டாடப்படும். மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும், விதவிதமான பட்டங்களைப் பறக்க விடுவர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் நாட்டின் சின்னம், கலாச்சாரம், நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தும் படங்கள் அச்சிட்ட பட்டங்களைப் பறக்க விடுவர்.

கிழங்குக்குள்ளே இவ்ளோ விஷயம் இருக்கா

பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?
சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள் அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை. மண் எத்தனை தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக் கொண்டு, அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்துவிடும். இதைப்போலவே, மணப்பெண்ணும் தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். அதையே தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக் கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் கொடுக்கும் வழக்கம் உள்ளது. சிறுகிழங்குகள் திருநெல்வேலி பகுதியிலும், பனங்கிழங்குகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும் மார்கழி, தை மாதங்களில் விளையும் என்பது குறிப்பிடத்தக்கவை.

பச்சரிசி காட்டும் தத்துவம்
பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா?
பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். அதைப் பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசைகளைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான். பொங்கல் நாளில் பச்சரிசி காட்டும் இத்தத்துவ உண்மையை உணர்ந்து நம்மை நாமே பக்குவமாக்கிக் கொள்ள முயற்சிப்போம்.

பொங்கல் பண்டிகை பிறந்தது எப்படி?

எக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத <உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையில் "இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது. காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத்திய போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.
இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத்தோரணங்கள் கட்டப்பட்டன. அன்றையச் செல்வச் செழிப்பிற்கேற்ப தங்கத்தூண்களில் முத்துமாலைகள் தொங்க விடப்பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புதுமணல் பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின்பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத்தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள் வேண்டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப்பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்சலுக்கு காரணம் அவரே என நம்பினர். பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத்ததால், இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு
 
 
விருதுநகர்: விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.

உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.

இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.
 

வாழ்க வளமுடன்

ஒரு ஐந்து நிமிடம் தொலைக்காட்சியில் ஏதாவது நல்லதொரு நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று நினைத்து உட்காரும்போது ஒரு நிமிடத்திற்குள் 10 விளம்பரங்களை போட்டுவிடுகிறார்கள். அவற்றில் 6 விளம்பரங்கள் அழகுசாதனப் பொருட்களைப் பற்றியதாக இருக்கிறது.  அந்த ஆறில் மூன்று ’முகப்பொலிவு க்ரீம்’ அல்லது ’சிவப்பழகு க்ரீம்’ பற்றியதுமாக இருக்கிறது.
செயற்கையாக நம்மை அழகாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே இத்தகு விளம்பரங்கள் உணர்த்துகின்றன.
.
“சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும்.  முகம் பொலிவாகக் காணப்படும்.”
                                                                                                       -மகரிஷி
’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ ("Face is the Index of the Mind") என்பது ஓர் சிறந்த பழமொழியாகும்.
மனத்தில் எல்லா நற்குணங்களும் தோன்றி செயல்படும்போதுதான் நமது முகம் அழகாககத் தோன்றுகிறது. நற்குணங்கள் என்று சொல்லுகிறபோது அதற்கு எதிர்ச்சொல்லாக வருவது ’தீயகுணங்கள்’ ஆகும்.  ‘தீ’ என்பது எதையுமே அழிப்பது அல்லவா?  அவற்றுல் தலையாயது ‘சினம்’ ஆகும்.
அதனால்தான் வள்ளுவப்பெருந்தகை,
“தீயவை தீயபயத்தலால் தீயவை
 தீயினும் அஞ்சப்படும்’
                     -குறள் 202
என்கிறார்.
மகரிஷி கூறுகிறார்கள்,
“சினம், அறிவுக்கு மேன்மையைத் தரத்தக்க ஒரு வழியை அடைத்துவிட்டு, தடுத்து விடுகிறது என்பது ஒன்று. இரண்டாவது உடல்நலத்தைக் கெடுத்துவிடுகிறது. மூன்றாவது குடும்பத்தில் எந்த நேரமும் சச்சரவு, சங்கடம். உறவினர்களிடத்தில்கூட அன்போடு பண்போடு இருக்கக்கூடியவர்களிடம் கூட சங்கடத்தையும், துன்பத்தையும், குழப்பதையும் விளைவித்துவிடும்.”
                                                                                                 -(அருளருவி)
மேலும் மகரிஷி அவர்கள் ஒரு எளிய எடுத்துக்காட்டு ஒன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
“ஒரு பூக்கூடையை எடுத்துக்கொண்டு போய், நந்தவனத்திலிருக்கும் அருமையான பூக்களைப் பறித்துப் போட்டுக்கொண்டே வருகிறோம்.  பறித்த பூக்களெல்லாம் நல்ல வாசனையோடு இருக்கின்றன.  அந்த சமயத்தில் தவறி பூக்கூடையைச் சாக்கடையில் கொட்டிவிட்டோமேயானல் என்னாகுமோ அதேபோல நமக்கு(SKY Meditationer) அந்தச் சக்தி (தவஆற்றல்) பயன்படாமலேயே போகும்.  இந்தச் சக்தியை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் சினம் தவிர்க்கத்தான் வேண்டும்.”
                                                                                                  -(அருளருவி)
 
மற்றவர்கள் ’முகப்பொலிவு க்ரீம்’ தினசரி பயன்படுத்துவது போல நாமும் சினம் தவிர்க்கும் பயிற்சியை தினமும் செய்து இயற்கையான அழகைப்பெறுவோம்.
வாழ்க வளமுடன்.

திங்கள், 3 ஜனவரி, 2011

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள்

மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு
திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார். மரணம்
தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார்.

தன்னுடைய படைத் தளபதியை அழைத்த அவர், "எப்படியும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன். என்னுடைய மூன்று விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.  கண்ணீர் வழிய நின்ற தளபதியும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

"என்னுடைய முதல் ஆசை, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கி செல்ல வேண்டும்.இரண்டாவதாக, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களை இறைத்தபடி செல்ல வேண்டும்.  மூன்றாவதாக, சவப் பெட்டிக்குள் என்னை வைக்கும்போது, என் இரண்டு கைகளையும் வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும்" என்றார்.

கூடி இருந்த மக்களெல்லாம் இந்த வித்தியாசமான வேண்டுகோள்களைக் கேட்டு வியந்தனர். ஆனால் ஒருவரும் அவரைக் கேட்க தயங்கினர்.  அலெக்ஸாண்டருடைய  நம்பிக்கைக்குரிய படைத் தலைவர் மட்டும் அவரை நெருங்கி அவர் கையை  முத்தமிட்டு, அவரிடம், "மன்னர் அவர்களே, உங்கள் ஆசையை நிச்சயம் பூர்த்தி செய்வோம்.  ஆனால், இந்த ஆசைக்கான காரணம் மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

ஒரு நீண்ட மூச்சு விட்டபின், அலெக்ஸாண்டர் சொன்னார், "மூன்று விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  முதலாவதாக, மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது, என்பதை உணர்த்தவே, என்னுடைய சவப்பெட்டியை  அவர்களை விட்டு எடுத்து செல்ல விரும்புகிறேன்.  இதன் மூலம் மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

"ஒரு மனிதன் இறந்து போகும்போது, தான் சம்பாதித்த சிறு துரும்பைக் கூட
எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள் மீது ஆசை கொண்டு அலைவதை  மக்கள் நிறுத்த வேண்டும்.  இதை வலியுறுத்தும் விதமாகத்தான், என்  சவப்பெட்டி செல்லும் வழி எங்கும் தங்க, வைர பொருட்களை இறைத்துச்
செல்லவேண்டும் என்று இரண்டாவது ஆசையை தெரிவித்தேன்.

"நான் பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் என்னோடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கவே, என் இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்க மூன்றாவது ஆசையை வெளியிட்டேன்".

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள் : "நான் இறந்தபிறகு, என்னைப்
புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம்.  என்னுடைய இரண்டு
கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள்; இந்த உலகத்தையே  வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை  என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்."



ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இப்பவும் காக்கா கத்துதா?

உதிர்ந்து கொண்டே இருக்கிறது, உறவுகளுக்கிடையே பூசப்பட்டிருந்த பாச வர்ணம். அது ஒரு காலம், மோட்டார் ரூம் மேல் போடப்பட்டிருக்கும் டியூட் லைட் பைப் மேல் அவ்வப்போது அமரும் காகத்தில் ஏதோ ஒன்று கத்தினால் போதும், ”காக்கா கத்தியிருச்சு, ஒறம்பரை வருமாட்ருக்குதே” என யாராவது சொல்வது, பெரும்பாலும் நடந்தேறியிருக்கிறது. காகம் கரைந்து உறவினர் வரும் நாட்கள், காகத்தின் ஒரு வெற்றியாய் திரும்பத் திரும்பப் பேசப்படும். அப்படி காகம் கரைந்தும் உறவினர் எவரும் வராதது தோல்வியடைந்த நாட்களாகவே தோன்றும். காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.

தொலைபேசி என்ற ஒரு கருமத்தை கண்டிராத நாட்கள் அவை. யார் எப்போது வருவார்களெனத் தெரியாத சுவாரசியம் நிறைந்த நாட்கள். காக்கை கரைந்த நாட்களில், கண்ணி வாய்க்கால் நிறுத்தத்திலிருந்து நீளும் தோட்டத்து வரப்புகளை அடிக்கடி கண்கள் சுகித்துக் கொண்டிருக்கும். காக்கைகள் வெற்றி பெறும் தினங்களில் வயல்வெளிகளில் இருக்கும் அம்மாவோ பாட்டியோ, ”அதா பாரு வர்றாங்க” எனும் குரலையொட்டி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் உருவத்தை வைத்து வருவது ”இவுங்க” “இல்ல அவுங்க” என ஒரு வித பந்தய மனநிலை கோலோச்சும்.

பக்கத்துத் தோட்டத்து எல்லையோரம் இருக்கும் பள்ளத்து ஓரம் வரை ஓடிச்சென்று அழைத்து வர ஓடுவதில் போட்டியும் நிகழும். ஓடிச் சென்று பார்க்க, அவர்கள் வேறெங்கோ செல்பவர்களாய், உறவினர்களாய் இல்லாமல் போகும் கொடுமையும் நடக்கும். அந்த நேரத்தில் துளிர்க்கும் இயலாமை, கோபம், எரிச்சலை அப்படியே பள்ளத்தில் கரைத்து கருமாதி செய்துவிட்டுத்தான் வரவேண்டும்.

உறவினர்கள் வருகையில் குதூகலமூட்டுபவை அவர்கள் வாங்கிவரும் பலகாரமும் பன்னும், விதவிதமான தொனிகளில் இடைவிடாது விழும் அவர்கள் வீட்டுக் கதைகளும். வந்த எவரும் வந்த வேகத்தில் திரும்பியதாக நினைவில்லை. வந்த உறவு ஊருக்குத் திரும்பும் போது, கைகளில் திணிக்கப்படும் நாணயங்களில் உண்டியல்கள் அவ்வப்போது பசியாறும்.

கால ஓட்டத்தில் மோட்டார் சைக்கிள் பரவலான பிறகு, கண்ணி வாய்க்கால் பக்கம் இருந்த கண்கள், தெற்குப்புறமாய் இருக்கும் வண்டிப்பாதையில் பதிய ஆரம்பித்ததோடு காதுகளையும் தீட்டி காத்திருக்க வைத்தது. எப்போதாவது எழும்பும் வண்டியின் ”டுபு டுபு” சத்தத்திற்கேற்ப மனசு தடதடக்க ஆரம்பிக்கும். வண்டியில் வரும் உறவுக்காரர்களின் வருகையும் கூட எப்படியோ காகம் சொன்ன சோசியத்தின் பலனாகவே பலமுறை இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திற்கு சற்று முன்னர் உள்ளடங்கியிருந்த தோட்டத்திற்கும் தொலைபேசி இணைப்பு வந்ததன் தொடர்ச்சியாய், உறவினர் வருகையின் மேலிருந்த சுவாரசியமும் தொலை தூரத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டது. 

விஞ்ஞானம் எல்லாவற்றையும் தந்தது, அதையொட்டிய தேவைப் பிசாசு எல்லாவற்றையும் கலைத்து, பிரித்துப் போட்டது. வெட்டி விட்ட நொங்குக் குலை சிதறியோடுவது போல் குடும்பமும் திசைக்கொருவராய். ஏதோ ஒரு சமாதானம் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பிரிந்து கிடக்க அனுமதிக்கிறது. ஒன்றா இரண்டா, கிட்டத்தட்ட உறவினர்களின் எல்லா வீடுகளிலும் இது போலவே எப்படியோ நடந்தது.

விருந்துகளுக்கு நேரில் போய் அழைக்கும் சாக்கில், உறவினர்கள் வீடுகளுக்கு அவசரகதியாய் ஒரு முறை சுற்றி வரும் முறையும் ”இனிமே நாங்களும் போன் போட்டு சொல்லிர்றோம், நீங்களும் போன் போட்டுச் சொல்லீருங்க, வந்து போயிக்கலாம்” என்ற ஒற்றைச் சமரசத்தில் குத்துயிரும் குலையுயிருமாய்.

காலம் கடந்த தலைமுறை உள்ளடங்கிய அதே கிராமத்தில், நடுத்தர வயதினர் அருகிலிருக்கும் சிறு நகரத்தில், இளம் தலைமுறையினர் பெரு நகரங்களில் என குடும்பமே உறவினர்களாய் சிதைந்து கிடக்கும் நவீன யுகத்தில், இனி குடும்பத்தை ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும் காக்கை கூட்டங்கள்.

அவ்வப்போது உறவினன் போல் போகும் நான், ஏனோ இந்த முறை கவனித்தேன், அழகாய் சுத்தமாய் இருக்கிறது அதே இடத்தில் இடித்துக் கட்டப்பட்ட மோட்டார் ரூம், முன்பு போலவே டியூப் லைட் பைப்பும் இருக்கிறது. ”இப்பவும் காக்கா கத்துதா?” என்று நாக்கின் நுனி வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கினேன்.

தோற்கடிப்பது மனிதர்கள்தான் எனத் தெரியாமல் தோற்றுப் போகும் காக்கைகள் பாவம் தானே!!??