பிரபலமான இடுகைகள்

வியாழன், 7 ஜூலை, 2011

ஆரோக்கியமான கண்கள்தான் அழகான கண்கள்

'கல்வி கண் போன்றது’ என்கிறோம். ஆனால், கருவளையங்கள், உப்பிய கீழ் கண் இமைகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் 'கண் கல்வி’ பற்றி அறிந்து வைத்திருக்கிறோமா! கண்களின் அழகைக் கெடுக்கும் பிரச்னைகளையும், அதிலிருந்து மீள்வதெப்படி என்பதையும் தெரிந்து கொள்வதுதான் மிக முக்கியம். கண்களை கவர்ச்சியாக வைத்துக் கொள்வது, மேக்கப் போட்டுக் கொள்வது என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான்!



கண்களின் கீழ் இமைகள் உப்பும்போது?



வயது கூடும்போது கண்களுக்குக் கீழே இருக்கும் இமையே ஒரு பை போல உப்பலாகிவிடும். கண்களுக்கு அடியில், தேவையில்லாத நீர் சேர்வதுதான் முக்கிய காரணம். அவ்வளவாக வயதாகாதவர்களுக்கும், இளம் வயதினருக்கும் தூக்கமின்மை காரணமாக இப்பாதிப்பு வரும். வழக்கத்தைவிட சற்றே உயரமான தலையணையைப் பயன்படுத்தித் தூங்குவது பலன் தரும். 'முதுகு வலி உள்ளவர்கள், தலையணையே வைத்துப் படுக்கக்கூடாது' என்று டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர்கள் என்றால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தெடுத்த உருளைக்கிழங்கு பத்தையை, மூடிய கண்களின் மீது வைத்தபடி சுமார் பத்து நிமிடம் படுத்திருப்பது பலன் தரும். உப்பு கலந்த சுடுநீரில் நனைக்கப்பட்ட இரண்டு பஞ்சு உருண்டைகளால் கண்களின் கீழ் இமைகளில் ஒத்தடம் கொடுப்பதும் பலன் கொடுக்கும்.

கருவளையத்திலிருந்து விடுதலை பெற..!

கருவளையம், பரம்பரை சார்ந்தது. வெயிலில் அலைவது, தூக்கமின்மை, மாதவிடாய், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் பெண்களின் முகம் வெளுத்துப் போய் காட்சியளிக்கும். இந்த சமயங்களில் கருவளையம் 'ஹைலைட்’டாகி பளீரென்று தெரியும். இரவு தூங்கப் போவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், பாதி டீஸ்பூன் தேனை கலந்து கருவளையத்தின் மீது தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிக்கொண்டு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கருவளையத்தின் மீது தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை நன்கு கழுவிவிட்டு, கற்கண்டு அளவுக்கு அதை பொடிப்பொடியாக நறுக்கி, பேண்டேஜ் துணியில் வைத்து கருவளையத்தின் மீது வைத்து, சுமார் அரை மணி நேரம் படுத்து எழுந்து முகத்தைக் கழுவினாலும் கருவளையம் மறைந்துவிடும்.

முகச்சுருக்கங்கள் மறைய!

இளம்பெண்கள் சிலருக்கு கண்களை அடுத்திருக்கும் பக்கவாட்டுப் பகுதிகளில் சுருக்கங்கள் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் 'க்ரோ’ஸ் ஃபீட்' (சிக்ஷீஷீஷ்’s யீமீமீt) என்பார்கள். அந்தச் சுருக்கங்கள் காக்கையின் காலடி தடத்தைப் போல இருக்கும் என்பதால் இந்தப் பெயர். இதிலிருந்து விடுதலை பெற, தினமும் காலையில் எழுந்ததும் சில்லென்ற தண்ணீரில் நனைக்கப்பட்ட ஒரு துணியை கண்களின் மீது வைத்துக் கொண்டு சிறிதுநேரம் படுத்திருக்க வேண்டும். பிறகு, சுருக்கங்கள் நீளும் வாட்டத்திலேயே அதை நீவி விடுவது நல்ல பலன் தரும் (மேலும் கீழுமாக நீவி விடக்கூடாது). விருப்பப்பட்டால், 'ஆன்ட்டி ரிங்கில் க்ரிம்' பயன்படுத்தலாம்.

கண்களுக்கு புத்துணர்ச்சியூட்ட!

வெகுநேரம் கண்விழித்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு, கண்கள் சோர்ந்துவிடும். இவர்கள் குளிர்ந்த நீரால் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொள்வது, ஓரளவுக்கு பலன் கிடைக்கும்.

கண்கள் அழகாக மட்டுமல்ல, தெளிவான பார்வையோடும் இருப்பதற்கு, சில பயிற்சிகள் அவசியம். 'கண் களுக்கு கூடவா எக்ஸர்சைஸ்?’ என்று ஆச்சர்யப்படாமல் இந்தப் பயிற்சிகளை செய்து பாருங்கள். நாள் முழுவ தும் துறுதுறுவென்று சுறுசுறுப்பான உயிரோட்டம் கொண்ட கண்களுக்கு நான் கியாரன்டி!

கண்களை மூடிக்கொண்டு, தோள்களை அசைக்காமல் தலையை மட்டும் இடது வலமாக இருபது முறை சுழற்றுங்கள். இதேபோல வலது இடமாகவும் இருபது முறை செய்யுங்கள்.

கண்களை மூடியபடி சந்தோஷமான நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கியிருங்கள். பிறகு, மெல்ல கண்களைத் திறந்து தூரத்தில் இருக்கும் மரம், செடி, கட்டடம் போன்றவற்றைப் பாருங்கள். பிறகு, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பாருங்கள். இப்படி மாறி மாறி தூரமாக இருக்கும் பொருளையும் அருகில் இருக்கும் பொருளையும் பாருங்கள்.

தலையை நேராக வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக கொஞ்ச நேரம் நில்லுங்கள். பிறகு, தலையை கொஞ்சமும் அசைக்காமல் விழிகளை மட்டுமே உருட்டி தலைக்கு நேர் மேலே இருக்கும் வானத்தைப் பாருங்கள். பிறகு தலையை அசைக்காமல் உங்கள் பார்வையை கால்களுக்கு அடியில் இருக்கும் பூமியை நோக்கி திருப்புங்கள். அதேபோல தலையை அசைக்காமல் வலதுபுறத்தில் தூரமாக இருக்கும் ஏதோ ஒரு மரம் அல்லது கட்டடத்தைப் பாருங்கள். அதன் பின் இடது பக்கமாக இருக்கும் ஏதாவது ஒரு மரம் அல்லது செடியைப் பாருங்கள். இந்த பயிற்சியை எத்தனை முறை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யுங்கள்.

மையும், மஸ்காராவும் பூசும் கண்கள் அல்ல... ஆரோக்கியமான கண்கள்தான் அழகான கண்கள்!

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து !

'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’

- இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம்.





''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்!

''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும்.

கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன்,

''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார்.

''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!

விழித்திருப்போம்... விபத்திடமிருந்து விலகியிருப்போம்!

சிறகை விரி...சிகரம் தொடு...

'ஆண்களுக்கு போட்டியாக, களம் இறங் கினார் பெண்' என்றுதான் பெரும்பாலும் ஆச்சர்ய செய்திகள் வரும். இவரோ... 'ஆண் களுக்கும் முன் உதாரணம்' எனப்படுபவர் என்றால், ஆச்சர்யம்தானே!

ஆம்! சாதனை விளையாட்டுகளில் ஒன்றான 'ஸ்கை டைவிங்'கில், இந்தியாவின் முதல் வீரர், ரேச்சல் தாமஸ் எனும் 57 வயதான பெண். கடந்த 23 ஆண்டுகளாக வானிலிருந்து குதித்து, காற்றில் மிதந்து சாகசங்கள் நிகழ்த்தியிருப்பவரை, டெல்லியில் சந்தித்தோம்.





''பறவைகள், பட்டங்கள், மேகக்கூட்டம் என சிறு வயதிலிருந்தே வானம் பார்க்கும் நேரம் எனக்குப் பிடித்தமானது''- வெகு ரசனையுடனேயே பேச்சையும் ஆரம்பித்தார் ரேச்சல்.

''அந்தப் பிரியத்தால்தான் 'பைலட்’ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், 17 வயதிலேயே மணம் முடித்து விட்டனர். கணவர், ராணுவத்தில் 'பாரா செய்லர்' எனும் 'ஸ்கை டைவர்’ பணியில் இருந்தார். அதைப் பற்றி அத்தனை சந்தோஷப்பட்டு, அடிக்கடி அவரிடம் பேசுவேன். 'நான் பறப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டால் போதுமா... நீயும் பறக்க வேண்டாமா..?’ என்று அவர் கேட்டபோது, குழந்தையென குதூகலித்தது என் மனம். 1979-ல் அவர் ஆக்ராவில் பணியாற்றியபோது 'ஸ்கை டைவர்'களின் பயிற்சியாளராக இருந்த ஃபிரெஞ்சு பெண்மணி, பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்க... நானும் அதில் சேர்ந்தேன்.

பறந்து கொண்டே இருக்கும் ஏர்கிராஃப்ட் அல்லது போர் விமானங்களில் இருந்து கீழே குதிக்கவேண்டும். குறிப்பிட்ட வினாடி களுக்குள் பாராசூட்டை நாம் திறக்கா விட்டால்... உயிருக்கு உத்தரவாதமில்லை. தவறுதலாக பாராசூட் ஏர்கிராஃப்டில் பட்டுவிட்டாலும் ஆபத்துதான். எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில்தான், முதன் முறையாக 1,500 அடி உயர வானத்திலிருந்து குதித்தேன்!'' என்று சிரித்த ரேச்சல் தொடர்ந்தார்.

''அடுத்த கட்டமான 'ஃப்ரீ ஃபால்ஸ்’ எனும் வானத்தில் டைவ் செய்து குதிப்பதையும் விரைவாகக் கற்றுக் கொண்டேன். 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதிக்கும் இந்த அனுபவம், நம்ப முடியாதது. கிட்டத்தட்ட ஒரு பறவைக்குச் சமமாக மாறிவிடுவோம்.

ஒரு பெண்ணாக இந்த சாகசங்களை நான் செய்ததில் பலருக்கும் அளவிடாத ஆச்சர்யம். குறிப்பாக, ஆஸ்திரேலிய ஸ்கை டைவிங் கூட்டமைப்பின் தலைவர், எனக்கு ஸ்பான்சர்களுடன் அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அடுத்தக்கட்ட பயிற்சி கிடைக்க மிகவும் உதவினார். இல்லை எனில், மிகவும் காஸ்ட்லியான இந்த விளையாட்டை இவ்வளவு தூரம் கற்றிருக்க முடியாது. ஒரு பாராசூட்டின் விலை... ரூபாய் மூன்று லட்சம். பாதுகாப்பு கண்ணாடி 12 ஆயிரம் ரூபாய். ஒரு முறை குதிக்கச் செலவாகும் தொகை ரூபாய் 15 ஆயிரம். அப்போதையை பிரதமர் ராஜீவ் காந்தி, நான் பணியாற்றிய ரயில்வே இங்கிருந்தெல்லாம்கூட உதவிகள் கிடைத்தன'' என்று நினைவு கூர்ந்தவர்,


''மகன் டாம்னிக் மற்றும் மகள் ஆனி தாமஸ் இருவருமே... 'என் அம்மா எனக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுப்பவளாக இருக்க வேண்டும்' என்று எண்ணாமல், ஒரு சாதனையாளராக வேண்டும் என்று விரும்பியதும் என் சிறகுகள் அகல விரிந்ததற்கு முக்கிய காரணம்!'' எனச் சொன்னபோது பூரிப்பில் கண்களில் நீர் பூக்க நின்றார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ரஷ்யா, துருக்கி, ஜோர்டான் மற்றும் சீனா உட்பட 15 நாடுகளில் சுமார் 670 முறை ஸ்கை டைவிங் செய்து சாதனை புரிந்திருக்கும் ஒரே இந்தியரான ரேச்சலின் சாகச சாதனைகளுக்காக ரயில் அமைச்சக விருது, பத்மபூஷண் விருது, அர்ஜுனா விருது (இதை பெற்ற முதல் பெண்மணி) உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

''பேரக் குழந்தைகள் எடுத்துவிட்ட பின்பும், ஸ்கை டைவிங் செய்த ஒரே பாட்டியும் நானாகத்தான் இருக்கும்!'' என்று சிரித்த ரேச்சல், அடுத்து சொன்ன விஷயம் சோகமயம். அது-

''சொந்த மாநிலமான கேரளாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாக்களில் ஸ்கை டைவிங் செய்து வேடிக்கை காட்டச் செல்வேன். அப்படி ஒரு விழாவில் 2003-ல் குதித்த போது ஏற்பட்ட விபத்தில் இடது கால் துண்டாகி உயிர் பிழைத்தேன். தற்போது 13 ஸ்க்ரூக்களுடன் இணைக்கப்பட்ட காலின் மூலம் என்னால் நடக்க முடிந்தாலும், டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி ஸ்கை டைவிங் செய்வதை நிறுத்திவிட்டேன். அதனால் என்ன... புதியவர்களை உற்சாகப்படுத்துவதை நான் என்றும் நிறுத்தப் போவதில்லை''

- தன் மாணவர்கள் வழியாக அவர் மனம் இன்னும் பறந்துகொண்டுதான் இருக்கிறது!

காருக்குள்ள 'அலர்ஜி' இருக்கு பார்த்துப் போ...

''ஊர்ல ஆறேழு கார் வெச்சிருக்கவனெல்லாம் சந்தோஷமா ரவுண்டடிக்கிறான். ஆனா, ஒரே ஒரு காரை வெச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே... அய்யய்யயோ...'' - புதிதாய் வாங்கிய காரைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரரின் தினசரி புலம்பல் இது! சஸ்பென்ஸ் தாங்காமல், என்னதான் பிரச்னை? என்று விசாரித்தபோது,





''எங்க அப்பார்ட்மென்ட்ல எல்லா வீட்டுலேயும் கார் இருக்குது. தூரத்துல இருக்குற அம்மா வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வர ஈஸியா இருக்குமேன்னு நாலு மாசத்துக்கு முன்னால லோன் போட்டு காரை வாங்கினேன். ஆறரை லட்சம் கொடுத்து வாங்குன காரை, இதுவரைக்கும் ஆறு தடவைதான் வெளியே எடுத்திருக்கேன். இதுக்கு மெயின் காரணம் என் குழந்தை பிருந்தாதான்!'' என்றவர் தொடர்ந்தார்.

''புது காரை ஓட்டிட்டு முதல் முறையா கோயிலுக்குப் போயிட்டிருந்தப்பவே காருக்குள்ளே வாமிட் பண்ணிட்டா! சாப்பிட்டது ஒத்துக்கலைன்னு நினைச்சு விட்டுட்டேன். அதுக்குப் பிறகு கார்ல போறப்பல்லாம் வாமிட்டிங்தான். 'எனக்கு கார் பிடிக்கலை. வேணாம்’னு ஒரே அழுகை. ஒரே மகளை விட்டுட்டு நாங்க மட்டும் சுத்தவா முடியும். காருல ஏறினதும், குழந்தை படுற அவஸ்தையைப் பார்க்கிறப்ப, கார் வாங்கினதே தப்போன்னு நினைக்க வைக்குது. என்னதான் செய்ய?'' என்று நொந்து கொண்டார்.



இந்தப் பிரச்னை குறித்து பேசினார் மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் தோல் நோய் சிறப்பு மருத்துவர் செந்தில்குமார்.

''இது ஒரு வகையான அலர்ஜி. கழுத்து ஸ்டெடியாக நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கும் குழந்தைப் பருவம் முதல், பள்ளி செல்லும் காலம் வரை பல குழந்தைகள் இப்படிப்பட்ட பிரச்னைக்கு உள்ளாகின்றனர். கலகலவென இருக்கும் குழந்தை கார் ஸ்டார்ட் ஆனதும், அழ ஆரம்பித்துவிடும். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கார் வாங்குபவர்கள், காருக்குள் இருக்கும் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்'' என்றவர், காரினால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க டிப்ஸ்களையும், ஆலோசனைகளையும் சொன்னார்.

காரில் உள்ள சீட்டின் தன்மையால் நிறைய குழந்தைகளுக்கு தொடை, பின் பகுதி, முழங்கையில் தடிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

கார் பழசாகிவிட்டாலும், புது காரைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, சீட் மீது இருக்கும் பாலிதீன் கவரைக்கூட சிலர் அகற்றாமல் இருப்பார்கள். ஆர்டிபிஷியல் லெதர், மற்றும் தரமற்ற சாதாரண கவர்களின் வெப்பத்தால் ஒருவித வாசனை வரும். சீட்டுகளுக்கு ஒரிஜினல் லெதர் அல்லது காட்டன் துணி பயன்படுத்துவது நல்லது. உடம்புக்கு ஒப்புக் கொள்ளாத, உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய மெட்டீரியலில் உள்ள கார் சீட் கவர்களைத் தவிர்த்து விடுங்கள். வேறு வழியில்லை எனில், கார் சீட்டின் மீது சுத்தமான காட்டன் துணியை விரித்துப் பயன்படுத்துங்கள். காரின் சீட் கவர் பருத்தித் துணியால் செய்யப்பட்டதாக இருந்தால், அடிக்கடி எடுத்துத் துவைத்துப் பயன்படுத்தலாம்.

காரை உடனே இயக்காமல், காருக்குள்ளே குழந்தையை அமர வைத்து, காருடன் குழந்தையை சகஜமாக்குங்கள். மிகவும் முக்கியமாக கார் செல்லும் திசையில் குழந்தையை அமர வையுங்கள். எதிர்திசையில் அமர வைத்தால் தலைவலி, தலைச் சுற்றல் போன்ற பிரச்னைகள் தலை தூக்கும்.

காருக்குள் உட்கார்ந்ததுமே காது கிழியும் அளவுக்கு சிலர் மியூஸிக்கைப் போட்டு விடுவார்கள். இதுவும் குழந்தைகளுக்கு அசௌக ரியத்தை ஏற்படுத்தும்.



காருக்குள் உபயோகிக்கும் பெர்ஃப்யூம்கள் சில குழந்தைகளுக்கு அலர்ஜி, மூச்சுத் திணறல், தலைச் சுற்றலை ஏற்படுத்தும். அதனால், மிகவும் கவனமாக குழந்தைகளுக்கு ஏற்றுக் கொள்கிற பெர்ஃப்யூமை உபயோகிப்பது நல்லது.

வெயிலில் காரை நிறுத்தும்போது, கார்களின் டேஷ் போர்டு மற்றும் பிளாஸ்டிக்ஸ் பாகங்களில் இருந்து அதிக வெப்பத்தால், ஒருவித வாசனை வெளியாகும். இதுகூட குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். வெயிலில் நிறுத்தும்போது டேஷ் போர்டை வெள்ளை நிறத் துணியால் மூடி வைத்து விடுங்கள்.

காரின் மிதியடிகளை அடிக்கடி வெளியே எடுத்து மண்ணை உதறி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உட்புறப் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து, தூசி இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

உங்கள் குழந்தைக்கு அலர்ஜி இருந்தால், காரில் செல்லும்போது, ஏ.ஸி பயன்படுத்துவதை பெரும்பாலும் குறைப்பது நல்லது. புறநகர் பகுதிகளில் பயணிக்கும்போது, வயல்வெளி, ஆற்றங்கரை பக்கமாக குழந்தைகளை அழைத்துச் சென்று சுத்தமான காற்றைச் சுவாசிக்க வையுங்கள். இயற்கைக் காற்றோட்டம் காருக்குள் இருக்கும் வாசனை, புழுக்கத்தை வெளியேற்றிவிடும். இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே, உங்கள் குழந்தையும் காரைக் காதலிக்க ஆரம்பித்து விடும்!

புதன், 6 ஜூலை, 2011

ரத்த அழுத்தம் சீராக முத்தான் டிப்ஸ்...

நாற்பது வயதை நெருங்குவதற்குள்ளேயே இன்றைய இளைய தலைமுறையை ரத்த அழுத்த பாதிப்பு எட்டிவிடுகிறது. நம் வாழ்க்கை முறையும், உணவு பழக்கத்தினால் ஏற்பட்ட அதீத மாற்றங்களும்தான் இதற்கு காரணம்.

மும்பையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளரும் பிஃபை (BFY- Better Fitness For You) அமைப்பின் கல்வி டெக்னிக்கல் டைரக்டருமான டாக்டர் ருசித்ரா டென்டூல்கர் ரத்த அழுத்த பிரச்னை பறந்தோட இங்கே வழி சொல்கிறார்...

''மன உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்கு கொடுக்காதததுதான் ரத்த அழுத்தத்துக்கு காரணம்.

உயர் ரத்த அழுத்தம் (Hyper Tension), குறைந்த ரத்த அழுத்தம் (Hypo Tension) என்று இரண்டு வகை உண்டு. வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் இயல்பான ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவுதான் இருக்க வேண்டும். இதில் சுமார் 20-30 மி.மீ. பாதரச அளவு குறையும் போது, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை தலைதூக்கும். இந்த அளவு குறையும்போது, அதிக ரத்த அழுத்த பிரச்னை தாக்கும். ரத்த அழுத்தத்துக்கான எல்லைக்கோடு 130/85 என்று சொல்லலாம். இந்த அளவில் வந்துவிட்டால் நாம் உஷாராகி, உடனடியாக உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.

140/90-க்குமேல் வந்த பிறகுதான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிட்டால் அதுவே ஆபத்தில் முடியலாம். பொதுவாக, உடல்நலம் தொடர்ந்து பாதிக்க ஆரம்பித்தாலே ரத்த அழுத்தத்தை பரிசோதித்து கொள்ளவேண்டியது முக்கியம்.

பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்ததைப் பரிசோதிப்பது அவசியம்!'' - ரத்த அழுத்தத்தின் அளவுகளை அடுக்கிய ருசித்ரா, உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கான உணவு, பயிற்சி முறைகள் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.



''உடல் பருமன், தொப்பை உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. பருமனைக் குறைக்கவில்லை என்றால், இருதய நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம். வேகமாக ஓடுவது, கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும். மிதமான உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி நல்ல பலனைத் தரும்.

கோதுமை, ராகி, கம்பு போன்ற நார்ச்சத்துள்ள முழு தானியங்களை அதிகமாகவும், பாதாம், பிஸ்தா போன்றவற்றை குறைவாகவும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உணவில் குறைவான உப்பு மற்றும் குறைவான சோடியத்தைப் பயன்படுத்த வேண்டும். அதிக உப்பு சேர்த்த உணவுகள் மற்றும் பண்டங்களைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சட்னி, ஊறுகாய், பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்'' - என்றவர் குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் விவரித்தார்.

''ஒருவருக்கு உடல் சோர்வு, சுறுசுறுப்பின்மை, மந்த நிலை தொடர்ந்து இருந்தாலே, குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருக்கக்கூடும். இதற்கு உடனடி பலனை தருவது உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த அழுத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கும். தினசரி 45 முதல் 60 நிமிடங்கள் நடை, சைக்கிள் ஓட்டுதல் போன்றபயிற்சிகளை மேற்கொள்ளலாம். எடை தூக்கும் பயிற்சி செய்வதும் நல்லதுதான் என்றாலும், தோளுக்கு மேல் அதிக எடையை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தவிர்க்கச் சொன்ன உணவுகளை இவர்கள் சாப்பிடலாம். அதிக உப்பு சேர்த்த உணவை எடுத்துக் கொள்ளலாம். பேரிச்சம் பழம், அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். தினசரி குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்தம் சீராகும். உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தாலும் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை குறையவில்லை என்றால் மருத்துவர்களை அணுகுவதுதான் நல்லது!'' என்றார் அறிவுறுத்தலாக.

பக்காவான தீர்வு தரும் பத்து நிமிஷ தியானம் !

''கவலைகள் ஒன்றும் கைக்குழந்தைகள் அல்ல... காலமெல்லாம் சுமந்துகொண்டே இருப்பதற்கு. உங்களுக்குள் இருக்கும் சக்தியைப் பயன்படுத்தியே... உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். அதற்குக் கைகொடுப்பது... ஆழ்மன தியானம் எனப்படும் ஆஃல்பா நிலை தியானம்!''

- இப்படி அறிமுக விளக்கம் தருகிறார் சென்னை, டெல்லி, மும்பை, கோவா, சண்டிகர், திருச்சி, மதுரை, கோவை, கொச்சி என்று நேரடியாக ஆயிரமாயிரம் பேருக்கு ஆழ்மன தியானப் பயிற்சியைத் தந்துவரும் டாக்டர் விஜயலட்சுமி பந்தையன். இவர், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'ஆல்ஃபா மைண்ட் பவர் இன்ஸ்டிடியூட்'டின் நிர்வாக இயக்குனர்!





''பேங்க் ஆஃப் இந்தியாவுல வேலை செய்துட்டு இருந்தேன். டைம் டேபிள் போட்ட மாதிரி ரெகுலரா செய்ற அந்த வேலையில திருப்தி இல்லை. இன்னும் பவர்ஃபுல்லா எதையாவது பண்ணனும்னு ஒரு எண்ணம் எழ... ஆழ்மனம் சம்பந்தமா நிறைய புத்தகங்கள் படிச்சேன். ரெய்கி, பிரானிக் ஹீலிங், மாக்னிஃபைட் ஹீலிங், வேதிக் ஹீலிங், விபாசனா தியானம், சில்வா மெதட் ஆஃப் மைண்ட் கண்ட்ரோல்னு பலவிதமான தியான முறைகள நிறைய பயிற்சியாளர்கள்கிட்ட கத்துக்கிட்டேன். நான் படிச்ச தியான முறைகளை அன்றாட வாழ்க்கை முறைக்கு உதவுற மாதிரி ரிசர்ச் பண்ணி, நிறைய பேருக்கு சொல்லித் தர்றதுக்காக பதினோரு வருஷத்துக்கு முன்ன இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சேன்'' எனும் விஜயலட்சுமி, அந்த தியான முறை பற்றி சிம்பிளாக விளக்கினார்... இப்படி -

''மனித மூளையோட செயல்பாட்டை டெல்டா, தீட்டா, பீட்டா, ஆல்ஃபானு நாலு நிலைகளா விஞ்ஞானிகள் தெளிவா ஆராய்ந்து சொல்லியிருக்காங்க. 'ஆல்ஃபா நிலை’ங்கறது, தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலை. இடது பக்க மூளையுடன் வலது பக்க மூளையும் ஊக்குவிக்கப்பட்டு, சக்தி வாய்ந்த, ஆக்கப்பூர்வ உள்ளுணர்வு கொண்ட சிந்தனையுடன் மூளை செயல்படுறது இந்த நிலையிலதான். 10 - 15 நிமிட ஆல்ஃபா தியானத்துலயே நம்மகிட்ட மறைந்துள்ள மகத்தான சக்தி வெளிப்பட்டு, நம்ம பிரச்னைகளுக்கான தீர்வை விஷ§வலா மனக் கண் மூலமா காட்டும். அதை நடைமுறையில அப்ளை செய்யலாம். தற்கொலை செய்துக்கற அளவுக்கு விரக்தியில இருக்கறவங்ககூட, இந்த தியானத்துக்குப் பிறகு தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கிட்டிருக்காங்க!''

பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..?

காலையில் எழுந்ததுமே 'பால் பாக்கெட்' முகத்தில் விழிப்பவர்கள்தான் இங்கே அதிகம். 'சத்து நிறைந்தது' என்ற நினைப்பில் காலை, மாலை மற்றும் இரவு என்று மூன்று நேரமும் காபி, டீ, சத்து பானங்கள் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் பிள்ளை களுக்குக் கொடுத்து, நாமும் குடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், 'பால் நமக்கு பகை’ என்று ஆராய்ச்சி அலறல் வந்தால்?

'ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைக் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இது உண்மையா என்பது குறித்த ஆராய்ச்சி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறு கிறது’ என்றொரு செய்தி, தற்போது பதைபதைப்பைக் கிளப்பி யுள்ளது!





'என்னதான் உண்மை?' என்பதை அறிய, துறை சார்ந்த வல்லுநர்களிடம் பேசினோம். முதலில் பேசுகிறார்... 'வெளிநாட்டு மாட்டினங்களான ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் போன்றவற்றின் பாலைக் குடிக்காதீர்கள்' என்ற பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கும் புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு, கால்நடை மருத்துவமனையின் டாக்டர் பிரசன்னா.

''பால் பற்றிய இந்த குற்றச்சாட்டு பல ஆண்டு காலமாகவே முன் வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றிய புரிதல் இன்றி தொடர்ந்து பயன்படுத்திதான் வருகிறார்கள். எந்த இன மாட்டின் பாலைக் குடித்தால் நன்மை என்று 1990-ம் ஆண்டு முதலே ஆய்வுகளும் நடக்கின்றன'' என்று முன்னுரை யாகச் சொன்னவர், விளக்கமாகத் தொடர்ந்தார்.

''பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, புரதம் போன்ற சத்துக்கள் உள்னன. புரதச் சத்திலும் கேசின் ஏ-1, கேசின் ஏ-2 ஆகிய இரு புரதங்கள் உள்ளன. இதில் கேசின் ஏ-1 புரதம் மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடியது. கலப்பின மற்றும் அயல்நாட்டு ரகங்களில் ஓரிரு மாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான மாடுகளில் கேசின் ஏ-1 புரதம் மட்டுமே அதிகமாக இருக்கிறது. இவற்றின் பால், மனிதக் குடலில் செரிக்கும்போது நொதி மாற்றமடைந்து நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆட்டிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாரம்பரிய இனங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, மணப்பாறை, சிந்து, தார்பாக்கர், ஓங்கோல் போன்ற... மாடுகளில் கேசின் ஏ-2 புரதம் அதிகமாக இருக்கிறது. இது மனித உடலுக்குத் தீமை செய்யாத புரதம்.

பால் ஒவ்வாமை மற்றும் நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள், கேசின் ஏ-2 புரதமுள்ள பாலைக் குடிக்கும்போது பிரச்னைகள் வருவதில்லை. அதனால்தான் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனி வாரியம் அமைத்து, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்து பாரம்பரிய மாடுகளின் பாலை இறக்குமதி செய்கிறார்கள். நம் நாட்டில் அந்தத் தெளிவு இதுவரை ஏற்படவில்லை'' என்று வருத்தத்தை வெளிப்படுத்திய பிரசன்னா,

''இப்போது கிடைக்கும் பாக்கெட் பால், கொழுப்பு நீக்கப்பட்டது என்று தானே கூறப்படுகிறது. அதோடு சேர்ந்து இந்த கேசின் ஏ-1 புரதமும் காணாமல் போயிருக்கும் அல்லவா என்கிற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால், நீக்கப் படுவது அதிகப்படியான கொழுப்புதானே தவிர, புரதம் அல்ல. அது பாலில் அப்படியேதான் இருக்கும்'' என்றும் தெளிவுபடுத்தினார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர், கால்நடை மருத்துவர் காசி. பிச்சை, ''அதிக பால் உற்பத்திக்காக வெளிநாட்டு மாடுகளை வரவழைத்தோம். செயற்கைக் கருவூட்டலும் செய்தோம். அதோடு நின்றுவிடாமல், ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துதல், மரபணுக்களை மாற்றுதல் என நவீன மருத்துவ உதவியோடு அதிக பால் சுரக்க வைக்கும் வேலைகளையும் செய்கிறோம். ஆண்டில், 300 நாட்களுக்கும் பால் கறக்கும் மெஷினாகவே மாடுகளை மாற்றி வைத்திருக் கிறோம். அந்த ஹார்மோன்களின் எச்சங்கள் பாலோடு கலந்து விடுகின்றன. அதைக் குடிக்கும் நபர்களுக்கு மூட்டு வலியில் இருந்து மூளைக் கோளாறு வரை ஏற்படுகிறது. அதனால்தான் சீமைப் பசுக்களுக்கு எதிராக நீண்டகாலமாகவே நான் முழங்கி வருகிறேன். அதற்கு வலு சேர்க்கும் விதமாக கால்நடைப் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கது!'' என்று சொன்னார்.

இதுதொடர்பாக பேசிய கால்நடை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.பிரபாகரன், ''ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைக் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் பல்கலைக்கழகம் இறங்கியி ருப்பது உண்மைதான். ஆராய்ச்சியின் முடிவுகள் பற்றி மக்களுக்கு நிச்சயம் தெரிவிக்கப்படும்'' என்பதோடு முடித்துக் கொண்டார்.

ஆக, வெளுத்ததெல்லாம் (நல்ல) பால் அல்ல!

கால்சியத்துக்கு எங்கே போவது?

'பால் குடிப்பதால்தான் மனிதர் களுக்கு கால்சியமே கிடைக்கிறது என்பார்கள் டாக்டர்கள். இந்த நிலையில், பால் குடிப்பதை நிறுத்திவிட்டால், கால்சியம் எங்கிருந்து கிடைக்கும்?' என்ற கேள்வி நமக்கு எட்டிப் பார்க்க... பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஹேமமாலினியிடம் கேட்டோம். ''கேசின் ஏ-1 புரதம் அடங்கிய பால் குடிப்பவர்களுக்கு... மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய பாரம்பரிய பசுக்கள் மூலம் கிடைக்கும் கேசின் ஏ-2 புரதம் அடங்கிய பாலைக் குடிப்பதுதான் நல்லது!'' என்று பரிந்துரை செய்தார்.

'இந்தியாவில் கிட்டத்தட்ட நாட்டுமாடுகளே இல்லை எனும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. இந்நிலையில் மாற்றுவழி என்ன?' என்ற கேள்வியை 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவரும் சித்த மருத்துவருமான ஜி. சிவராமன் முன்பாக வைத்தபோது...

''முதலில் பால் என்பது நமக்கானதே அல்ல. மாடுகளின் கன்றுகளுக்குதான். உலகில் மற்ற இனத்தின் பாலைக் குடிக்கும் ஒரே உயிரினம்... மனிதன் மட்டுமே. பழக்கத்தின் காரணமாக அதைத் தொடர்கிறோம். மற்றபடி பாலில் மட்டுமல்ல... நாம் சாப்பிடும் பல்வேறு பொருட் களிலும் கால்சியம் இருக்கிறது. குறிப்பாக கீரை, கிழங்கு வகைகள், சிறு தானியங்களில் கால்சியம் நிறைய இருக்கிறது. கேழ்வரகில் பாலைவிட அதிகமாகவே இருக்கிறது.

பால் சாப்பிடக்கூடாது என்றாலும், அதை மோராக மாற்றிச் சாப்பிடுவது சில வகைகளில் உடலுக்கு நல்லது செய்கிறது. மோராக மாற்றும்போது நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாகி, கேசின் ஏ-1 புரத பிரச்னைகளையும் குறைக்கிறது. பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மோர் ஏற்றது. இதைத் தவிர வேறு எந்த ரூபத்திலும் பாலை பயன்படுத்தக் கூடாது!'' என்று சொன்ன சிவராமன்,

''தாய்ப்பால் கொடுக்காமல், மாட்டுப் பால் குடித்தே வளரும் குழந்தைகளை சீக்கிரமாக நீரிழிவு நோய் தாக்குகிறது என்பதையும் மறந்து விடக்கூடாது'' என்றார் அக்கறை பொங்க!

வாழ்க்கையை நொறுக்கிய விதி... நம்பிக்கையை இழக்காத ப்ரீத்தி !

'வாழ்க்கையின் சந்தோஷங்களுக்கு என்றுமே நிரந்தர உத்தரவாதம் இல்லை' என்பதற்கு வாழும் சாட்சி... ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். 'எந்த இக்கட்டான நிலையிலும் வாழ்க்கையை தொடர வேண்டும்’ என்பதற்கும் அவரே சாட்சி!

அப்பாவின் அமெரிக்க வேலை காரணமாக 'ஓஹோ' என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் லேசாக தடுக்கி விழுந்து, கழுத்துக்கு கீழே எந்த இயக்கமும் இன்றி 'வீல் சேரே கதி' என முடக்கிப் போட்டாலும், அதில் அமர்ந்தபடியே தன்னம்பிக்கையோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் ப்ரீத்தி - பலருக்கும் பாடமாக!





'சென்னை, தி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் ரிசர்ச்’ மாணவர் களுக்கு, தன்னம்பிக்கை வகுப்பெடுக்க சமீபத்தில் வந்திருந்தார் ப்ரீத்தி, தன் வீல் சேரில் அமர்ந்தபடி! அவரின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அந்த எம்பிஏ மாணவர்களின் நெஞ்சங்களில்! அந்தச் சூழலில் அவருடன் பேசினோம்!

''சொந்த ஊர், சென்னைதான். அப்பா ஸ்ரீனிவாசன், சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்தார். அம்மா விஜயலஷ்மி, ஹோம் மேக்கர். திருமணமாகி ஒன்பது வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை நான். அதனால, அவ்வளவு கொண்டாடி வளர்த்தாங்க. நீச்சல்ல மாநில அளவுல ரெண்டாவது பரிசு, எல்லாரும் ஆச்சர்யப்படற அளவுக்கு எட்டு வயசுலயே 'ஸ்டேட் வுமன்ஸ் கிரிக்கெட் டீம்' ப்ளேயர்னு பெருமையோட வளர்ந்தேன்'' எனும் ப்ரீத்தி, படிப்பிலும் பயங்கர ஷார்ப்.

''அப்பாவோட டிரான்ஸ்ஃபர்களால இந்தியாவுல ஒன்பது மாநகரங்கள், மூணு வெளிநாடுகள்னு படிப்பும் இடம் மாறிச்சு. அமெரிக்காவுல இருக்கற பிரபல பல்கலைக்கழகங்கள்ல படிக்கறதுக்கு தேர்வாகியும், 'ஊர்லயே படிக்கறேன்!’னு பாட்டி வீட்டுக்கு வந்துட்டேன். அஞ்சு வருஷ இன்டக்ரேட்டட் கோர்ஸான எம்.பி.ஏ., சேர்ந்தேன். தேவதைக் கதையில வர்ற மாதிரி ஹேப்பியா போயிட்டு இருந்தது என் நாட்கள். 'வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமானதா?!’னு அப்போ ருசிச்ச நான், சில மாதங்களுக்குள்ள 'வாழ்க்கை இவ்வளவு நரகமானதா?!’னு வெறுக்கற நிலமைக்கு ஆளானேன்''

- பதிமூன்று வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்தப் பெருந்துயரை சொல்வதற்கு முன் சிறு மௌனம் ப்ரீத்தியிடம்.

''ஃபர்ஸ்ட் இயர் செமஸ்டர் லீவ்ல பாண்டிச்சேரிக்கு டூர் கூட்டிட்டுப் போனாங்க. காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பீச்ல இடுப்பளவு தண்ணியில நின்னு சந்தோஷமா விளையாடிட்டு இருந்தோம். திடீர்னு கால் தடுக்கி குப்புற விழுந்துட்டேன். நீந்தறதுக்காக கைகள முன்னால நீட்டினா, முடியல. உடம்புல கரன்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஒரு உணர்வு. கழுத்துக்கு கீழ அசைக்க முடியல. அலை என்னை அடிச்சுட்டுப் போறதைப் பார்த்து ஓடி வந்து ஃபிரெண்ட்ஸ் தூக்க, எனக்கு என்ன ஆகியிருக்குங்கறத ஓரளவுக்கு யூகிச்சிட்டேன். 'உடம்பை அசைக்காம ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போங்க’னு அலறினேன்'' என்பவருக்கு நிகழ்ந்திருந்தது, தன் வாழ்க்கையையே முடக்கும் அளவுக்கான ஒரு பெருவிபத்து என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.



''ஏடாகூடமா விழுந்ததால கழுத்து எலும்பு உடைஞ்சு, முதுகெலும்புத் தொடர் நரம்பை கிழிச்சிருக்கு. ஒட்டுமொத்த உடம்பும் செயல்படாமா போயிட, எங்கப்பாவும், அம்மாவும் நடை பிணமாயிட்டாங்க. சிகாகோவுல 'ஸ்பைனல் கார்டு'க்கென ஸ்பெஷலா இருக்கற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ரெண்டு வருஷ சிகிச்சைக்குப் பிறகும்... முன்னேற்றம் இல்ல. குளிக்க வெச்சு, சாப்பாடு ஊட்டினு மறுபடியும் என்னை குழந்தையா வளர்க்கற கொடுமையை அப்பா, அம்மாவுக்குத் தந்தேன்'' எனும் ப்ரீத்தியின் குடும்பம், பின் திருவண்ணாமலையில் தஞ்சமடைந்திருக்கிறது.

''நாங்க, விசிறி சாமியாரோட பக்தர்கள். எங்கப்பா யு.எஸ். வேலையை விட்டுட்டு, திருவண்ணாமலைக்கே கூட்டிட்டு வந்துட்டார். இடையில, ஹார்ட் அட்டாக்ல அப்பா இறந்துட்டார். எங்களுக்கு இருந்த ஒரே வெளிச்சமும் எங்களை விட்டுப் போயிடுச்சு'' - தான் சொல்வதைக் கேட்டு உடைந்து அழும் அம்மாவை ஆறுதல்படுத்தித் தொடர்ந்தார் ப்ரீத்தி...

''அப்பாவோட அக்கவுன்ட் எந்த பேங்க்ல இருக்குனுகூட தெரியாம முழிச்சோம். மலை மாதிரி சேர்த்து வெச்சிருந்த பணம் எல்லாம் கடுகு மாதிரி காணாமப் போச்சு. உலகம் இத்தனை கொடூரமானதுனு பல மனக்காயங்களோடதான் புரிஞ்சுக்கிட்டோம். மீளவே முடியாத பெருஞ்சோகத்துல அம்மா மூழ்கிட... 'இனி நாமதான் மீட்கணும்’னு நானே மனசுக்குள்ள மந்திரமா ஓதிக்கிட்டேன். 'என் பொண்ணு அப்படி வருவா, இப்படி வருவா’னு என்னை வளர்த்தெடுத்த எங்கம்மாவுக்கு, வீல் சேர்லயே என் வாழ்க்கை அடங்கறதைப் பார்க்கற கொடுமையை கொடுக்கக் கூடாதுனு முடிவெடுத்தேன்.''

- தேடுபவர்களுக்கு திசைகள் தெரியும்தானே?

''ஒரு கட்டத்துல, வாயாலயே பிரஸ் பிடிச்சி ஓவியங்கள தீட்டக் கத்துக்கிட்டேன். அடுத்து ஏதாச்சும் வேலை செய்தே ஆகணும்கற தேடல்ல இறங்கினேன். நாம பேசறதை ஒலியா வாங்கி கம்ப்யூட்டர்ல எழுத்தா டைப் பண்ற சாஃப்ட்வேர் இருக்கறது தெரிஞ்சுது. அதைப் பயன்படுத்தி ஆங்கில பத்திரிகைகளுக்கு 'ஆன்லைன் எடிட்டிங்' செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். பத்திரிகையில என் எழுத்துக்களைப் பார்க்கும்போது நானும் எங்கம்மாவும் ரொம்ப வருஷங்கள் கழிச்சு சில சந்தோஷமான தருணங்களை உணர்ந்தோம்.இப்பவும் அந்த வேலை தொடர்ந்துட்டு இருக்கு. ஆனா, குறைவான சம்பளமே கிடைக்குது. எனக்கு நம்பிக்கையிருக்கு... என் தகுதிக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்!'' என்ற ப்ரீத்தி,

''அப்பாவோட நண்பர்தான், 'தி இன்டர் நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அண்ட் ரிசர்ச்’ நிறுவனத்தோட டைரக்டர் அச்சுத் குமார். அவர்தான் தன்னோட மாணவர்களுக்கு நான் வகுப்பெடுக்கணும்னு கூட்டிட்டு வந்தார். முன்ன பின்ன தெரியாத இந்தப் பசங்க என்னைக் கொண்டாடின விதத்தையும், எனக்காக வருந்தின, பிரார்த்திச்ச அவங்க கண்களையும் பார்த்தப்போ... மறுபடியும் நினைக்கத் தோணுது... வாழ்க்கை அழகானது!''

- கண்கள் மின்னுகிறது ப்ரீத்திக்கு!

''கவலைகளை இறக்கிவைக்க ட்ரட்மில்!''

'கண்கள் இரண்டால்’ கவர்ந்து இழுத்த சுவாதி, இப்போது 'போராளி’ சசிகுமாருக்கு ஜோடி. உருட்டிப் பார்க்கும் விழிகளும் உதடுகளை மீறி வெளிப்படும் தெற்றுப்பல்லும் சுவாதியின் சூப்பர் அடையாளங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தால், ''ஒரு நிமிஷம்... எங்க அம்மாகிட்ட கேட்டுட்டு வந்துடுறேன்!'' என ஓடுகிறது இந்த ஆந்திரத்துப் பொண்ணு.

''ஸாரிங்க... சின்ன வயசில் இருந்தே அம்மாவைக் கேட்காமல் எந்த வேலையும் பண்ண மாட்டேன். அப்பாவுக்கு நேவியில் வேலை. அண்ணன் பைலட். அதனால், கட்டுப்பாட்டுக்குக் குறைவு இல்லாத குடும்பம். சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம்னு பெல் அடிக்கிறது அம்மாதான். 8 மணிக்கு காலை டிஃபன், மதியம் 12 மணிக்கு சாப்பாடு, இரவு 7 மணிக்கு டின்னர்னு கரெக்ட் டைமுக்கு சாப்பிடுவேன். என்னதான் வேலை இருந்தாலும், இரவு 8.30-க்கு பெட்ல விழுந்துடுவேன். 8 மணி நேர உறக்கம் அவசியம்கிறது அம்மாவோட ஆர்டர்!''



''ஷூட்டிங் நேரத்தில் சாப்பாடு, தூக்கம்னு டைம் மெயின்டெய்ன் பண்றது சிரமம் இல்லையா?''

''இல்லவே இல்லை. 'மணி 12 ஆச்சுப்பா... சுவாதிக்குச் சாப்பாடு கொடுத் துடுங்க’னு ஷூட்டிங் ஸ்பாட்லயே சொல்வாங்க. அந்த அளவுக்குச் சாப்பாடு நேரத்தில் சரியா இருப்பேன். 'சுப்ரமணியபுரம்’ படத்துக்காக என்னை அணுகினப்ப ரொம்ப ஒல்லியா இருந்தேன். சசிகுமார் சார் பார்த்துட்டு, 'ரொம்பப் பரிதாபமா இருக்கியேம்மா... இன்னும் வெயிட் போடணும்!’னு சொன்னார். நாலஞ்சு கிலோ வெயிட் ஏத்திட்டுப் போனால், 'இவங்க சரிப்பட மாட்டாங்க... மதுரை சாப்பாட்டைக் கொடுத்து நாமளே தேத்தினாத்தான் உண்டு’ன்னு சொல்லி தலப்பாகட்டி பிரியாணி, கறிக்கோலா உருண்டைனு வாங்கிக் கொடுத்தார். டைமிங் மிஸ்ஸாகி, கிடைக்கிற நேரம் எல்லாம் சாப்பாடுன்னு மாறி, ஒரு மாசத்துலயே செம வெயிட் போட்டேன். நிறையச் சாப்பிட்டது மட்டும் அதுக்குக் காரணம் இல்லை... டைமிங் தவறி சாப்பிட்டதுதான் காரணம். டைமிங் மிஸ் ஆகும்போது, உடம்போட ஜீரண உறுப்புகளுக்கும் சிக்கல் உண்டாகுது. சாப்பாட்டைத் தவிர்க்கிறப்பதான் நம்ம உடம்பு இன்னும் குண்டாகிடுது. 'சுப்ர மணியபுரம்’ படத்துக்கு அப்புறம் வெயிட்டைக் குறைக்க, மறுபடியும் சாப்பாட்டுக்கு டைமிங் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். தூக்கமும் அப்படித் தான்... யூனிட்ல எல்லாருக்கும் என்னோட டைமிங் நல்லா தெரியும். ஒரு தடவை என்னோட பிறந்த நாளுக்காக நைட் 12 மணிக்குத் தோழிகள் வீடு தேடி வந்துட்டாங்க. நானும் ஆசையா எழுந்து அவங்ககிட்ட பேசுறப்ப, அம்மா எழுந்துட்டாங்க. சகட்டுமேனிக்குச் சத்தம்... பிறந்த நாளில் அவ்வளவு திட்டு வாங்கின ஆள் நானாத் தான் இருப்பேன். 'ஒருநாள் கண் விழிக் கிறது, ஒரு வாரத்துக்குப் பாதிக்கும்’னு அம்மா சொல்வாங்க. அதனால், டைமிங் ரொம்ப முக்கியம்!''

''உடலுக்காக என்னென்ன பயிற்சிகள் பண்றீங்க?''

''ஜிம்முக்குப் போற அளவுக்கு எனக்கு டைம் இல்லை. அதோட, ஜிம் பயிற்சிகள் மேல எனக்குப் பெரிசா நம்பிக்கையும் இல்லை. நம்ம வீட்ல நம்மளைச் சுற்றி இருக்கிற சூழலில் பண்ற பயிற்சிகள்தான் நம்ம உடலை வளப்படுத்தும்.

நான் சின்ன வயசில் இருந்தே ஸ்கிப்பிங் ஆடுவேன். வாக்கிங் மாதிரியான பயிற்சிகளைத் தாண்டி, உடலுக்காக நான் பிரத்யேகமா பண்றது ஸ்கிப்பிங்தான். உடல் குலுங்க கால்களைத் தூக்கி ஆடுறப்ப, வியர்த்துக் கொட்டும். வீட்டு மொட்டை மாடி, தோட்டம், வாசல்னு எங்கே வேணும்னாலும் ஸ்கிப்பிங் ஆடலாம். ஸ்கிப்பிங் ஆட உடம்பு மட்டும் ஒத்துழைச்சாப் போதாது. மனசும் ஒத்துழைக்கணும். டைமிங் ரொம்ப முக்கியம். டைமிங் மிஸ்ஸாகி கயிறு பிசகினால், கால் இடறி விழக்கூட வாய்ப்பு இருக்கு. காலை, மாலை இரண்டு வேளையும் ஸ்கிப்பிங் ஆடுவேன். ஷூட்டிங்குக்காக வெளியே போறப்பகூட, ஸ்கிப்பிங் ஆடுறதில் சிரமம் இருக்காது. அதனால், அதைத் தாண்டிய பயிற்சிகளை நான் பண்றது கிடையாது!''



''அடிக்கடி உங்களை ட்ரட்மில் பயிற்சியில் பார்க்க முடியும்னு சொல்றாங்களே?''

''ட்ரட்மில் பயிற்சியை உடம்புக்காக நான் பண்றது இல்லை. கோபம், வேதனை, சோர்வு மாதிரியான நேரங்களில் ட்ரட்மில் ஏறிடுவேன். என்னோட கோபத்தைக் கட்டுப்படுத்தவும், ஆதங்கத்தை இறக்கிவைக்கவும் ட்ரட்மில்தான் தேவைப்படுது. மனசு ரிலாக்ஸ் ஆகிற வரைக்கும் ட்ரட்மில்ல ஓடுவேன். ஷூட்டிங்கில் யாராவது மனசு வருத்தப்படுற மாதிரி பேசிட்டாங்கன்னா, பதிலுக்கு நான் ஏதும் பேச மாட்டேன். அன்னிக்கு ட்ரட்மில் பண்ண ஒதுங்கிடுவேன். ஒரு மணி நேரம்கூட ஓடுவேன். அதன் மூலமா, யார்கிட்டயும் பகிர்ந்துக்காமலே என்னோட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்குது. 'பகிர்ந்துகொள்ளும் துன்பம் பாதியாகும்’னு சொல்வாங்க. ஆனால், பிரச்னைகளை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கிறப்பதான் ஜாஸ்திஆகுது. நாலு பேரும் நாலு விதமா அட்வைஸ் பண்ணி, நம்மை மேலும் குழப்புவாங்க. அதனால, கொஞ்ச நேரம் அமைதியா வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைச் செலுத்தினாலே, தெளிவு கிடைச்சிடும். அடிக்கடி கோபப்படுற குணம்கொண்ட நான் என்னைச் சரி பண்ணிட்டது இப்படித்தான்!''

''சாப்பாட்டில் எப்படி?''

''சைவம், அசைவம்னு பிரிச்சுப் பார்க்கிறது கிடையாது. ஆந்திராவில் பிறந்து இருந்தாலும் அதிகமா காரம் சேர்க்க மாட்டேன். உடல் பருமனை ஏற்படுத்தாத கொழுப்பு தவிர்த்த உணவுகளை நல்லா சாப்பிடுவேன். எல்லாவிதமான காய்கறிகளையும் சாப்பிடுவேன். என்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்... தண்ணி குடிக்க மறந்துடுறதுதான்! இப்பல்லாம், நிறையத் தண்ணி குடிக்கணும்கிறதுக்காகவே, கண்ணில் படுகிற இடத்தில் எல்லாம் தண்ணி பாட்டிலை வெச்சிருக்கேன். ஜூஸ் நிறையக் குடிப்பேன்!''

''அழகுக்கு?''

''கலைஞ்சுகிடக்குற தலைமுடி... பராமரிக்காத முகம்... ஏனோதானோங்கிற உடைதான் இப்போ அழகுன்னு ஆகிடுச்சு. உடைகளில் எப்பவுமே ரொம்ப எளிமையா இருக்கிற மாதிரியே தேர்வு பண்ணுவேன். வாரத்துக்கு ஒரு தடவை முகத்தை ப்ளீச் பண்ணிக்குவேன். தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான் தெய்வம்!

'தெற்றுப் பல்லை நீக்கிட்டா இன்னும் அழகா இருப்பீங்க’ன்னு சிலர் சொன்னாங்க. உடலை வறுத்தி அழகைப் பெறுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. அழகோ, அசிங்கமோ... நம்ம உடம்புக்கு நாமதான் முதல் ரசிகரா இருக்கணும். யோகாவில் மிக முக்கியமான பயிற்சியே நம்ம உடம்புகளோட ஒவ்வோர் உறுப்பையும் ஆத்மார்த்தமா நினைக்கிறதும் ரசிக்கிறதும்தான்!''