பிரபலமான இடுகைகள்

சனி, 25 ஜூன், 2011

பர்சனல் லோனை ஊதித் தள்ள பக்கா வழிகள்!

திடீரென உடல் நலமில்லாமல் போய் மருத்துவ மனையில் அட்மிட் ஆகிவிடுவது... நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவுவது இப்படி யாக கொஞ்சமும் எதிர்பாராமல் வந்து சேரும் திடீர் செலவுகளைச் சமாளிக்க ஒரே வழி, ஏதாவது ஒரு வங்கியில் பர்சனல் கடன் வாங்குவதே. அடமானம் மற்றும் ஜாமீன் எதையும் கேட்டு நோண்டாமல் கொடுக்கிற கடன் இது என்பதாலோ என்னவோ இதற்கு விதிக்கப்படும் வட்டியும் அதிகமே. ஏதோ ஒரு அவசரத்தில் இந்தக் கடனை வாங்கிவிட்டு, பிற்பாடு ஒழுங்காகத் திரும்பக் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் பலர். இந்தக் கடனிலிருந்து எளிதாக மீள இதோ சில வழிகள்...!

சொத்தை வைத்து சமாளிக்கலாம்!

உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடு, கார், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், வரி சேமிப்புச் சான்றிதழ்கள், பங்குகள், பாண்டுகள், தங்க நகைகள், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற சொத்துக்களை வங்கியில் அடகு வைத்து தனிநபர் கடனை அடைக்கலாம். சில வங்கிகள் இது மாதிரியான சொத்துகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றன. அதனைப் பயன்படுத்தி அதிகளவி லான வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாம்.

மறுசீரமைப்பு!

நீங்கள் முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் எனில், தற்போது அந்த வீட்டிற்கான மதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில் மீண்டும் வீட்டின் மீது கடன் வாங்கி தனிநபர் கடனை அடைக்கலாம். வீட்டுக்கான கடனின் வட்டி 10.75-11 சதவிகி தமாக இருக்கும் பட்சத்தில், தனிநபர் கடன் 16-24 சதவிகிதமாக இருப்பதால் வீட்டின் மீது மறுசீரமைப்பு (Restructure) முறையில் கடனைப் பெற்று, தனிநபர் கடனை அடைத்து விடலாம்.

இம்முறையில் கடன் பெறும்போது மாறுபடும் வட்டி விகிதத்தில் இருந்தால், வருங் காலத்தில் வட்டி விகிதம் குறையும்போது கூடுதல் பலன் கிடைக்கும். இதற்கு நீங்கள் ஒழுங்காக இ.எம்.ஐ. கட்டியிருக்க வேண்டும்; சிபில் அமைப்பில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும். இதுமாதிரி உங்கள் வங்கி ரெக்கார்டில் எந்த குறை பாடும் இருக்கக்கூடாது.



பல வங்கிகளில் வேண்டாமே!

பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கி இருப்பார்கள். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான வட்டி கணக்கிடப்படும். இதனாலும் அதிகளவில் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியிருக் கலாம். பல வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கியவர்கள், வட்டி குறைவாக இருக்கும் வங்கியில் தகுதி இருந்தால் அந்தத் தொகைக்கு ஈடாக கடன் வாங்கி, மற்ற வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைத்துவிடலாம். இதில் கண்ணுக்குத் தெரியாமல் போகும் அதிக வட்டி நமக்கு மிச்சமாகும்.

குறைந்த காலத்தில் கட்டுங்க!

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனைத் திரும்பச் செலுத்தும் போது இ.எம்.ஐ. குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகமாக வைத்திருப்பீர்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல அதிக வட்டி கட்ட வேண்டி யிருக்கும் என்பதை பலரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை. எனவே, கடன் பணம் குறைவோ, அதிகமோ அதை எவ்வளவு சீக்கிரத்தில் கட்டி முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கட்டி முடித்து விட்டால், வட்டியாக கொடுக்கும் பெரும் பணத்தை எளிதாக மிச்சப்படுத்தலாம்.

யோசித்து வாங்கவும்!

அதிகப்படியான வட்டியில் கொடுக்கப்படும் தனிநபர் கடனை வாங்கும்முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துவிட்டு வாங்குவது நல்லது. என்னதான் அவரசத் தேவை என்றாலும் நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்றோ, ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்தோ அவசரத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.

மாதச் சம்பளம் வாங்குபவர் எனில் உங்கள் சம்பள விவரம், தெளிவான வங்கி பரிவர்த்தனை ஆகிய விவரங்களைக் கொண்டு வங்கியை அணுகி குறைந்த வட்டியில் அடமானக் கடன் பெற்றுக் கொள்வது நல்லது.

வாங்குவது கடன்தான் என்றாலும், அதை குறைந்த வட்டியில் வாங்குவதே நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால், பர்சனல் லோனை எளிதாகக் கட்டி முடிக்கலாமே!

சிறுவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சையா?

அகமதாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்யப்பட்டது. இது மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சின்ன வயதில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் காரணமாக, எதிர்பாராத பல பக்க விளைவுகள் உண்டாகலாம் என்று மருத்துவர்களில் ஒரு பிரிவினர் எதிர்க்க... இன்னொரு பிரிவினரோ ஆதரவு தெரிவிக்கின்றனர்!



உடல் பருமனுக்கான பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி என இரண்டு வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்யும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் இது குறித்துப் பேசினோம்.

''அந்த சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி அறியும் முன்பாக, இப்போது நடைமுறையில் உடல் பருமனுக்கு இருக்கும் சிகிச்சைகளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். முன்பு, அதிக எடைகொண்டவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மட்டும்தான் சிறந்த தீர்வு. அதனால் 45 - 50 பி.எம்.ஐ. உள்ளவர்கள் அதாவது 150 - 200 கிலோ எடை இருந்தவர்கள் மட்டுமே, இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சையில் இரைப்பையின் அளவைக் குறைத்துவிட்டு, உணவு செல்லும் குடலின் அளவும் பாதியாகக் குறைக்கப்படும். அதனால், சாப்பிடும் அளவும், உணவில் இருந்து ஊட்டச்சத்து கிரகிக்கும் அளவும் குறைவாக இருக்கும்.

இந்தக் குறைபாட்டை நீக்கிய புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி சிகிச்சையில் இரைப்பை அளவு மட்டுமே குறைக்கப்படும். பொதுவாக இரைப்பையின் கொள்ளளவு 500 மி.லிட்டரில் இருந்து 1 லிட்டராக இருக்கும். இந்த அறுவை சிகிச்சையில் இரைப்பையின் 75 சதவிகிதத்தை வெட்டி எடுத்துவிடுவோம். மேலும், பசியைத் தூண்டும் க்ரெலின் என்ற சுரப்பியையும் அகற்றிவிடுவோம். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவை சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும்.

சிறுவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்பதை தகுந்த பரிசோதனை செய்து உறுதிப்படுத்திய பின்னரே முடிவு செய்ய முடியும். பொதுவாக 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பேபிபேட் என்ற கொழுப்பு இருக்கும். இது டீன்ஏஜ் வயதில் கரைந்துவிடும். எனவே, டீன் ஏஜ் காலம் வரை இத்தகைய உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சைகளைத் தவிர்ப்பது நல்லது. சின்ன வயதில் உடல் பருமன் கூடினால், ஹார்மோன் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. ஹார்மோன் பிரச்னையால் எலும்பு, தசைகள் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த நிலை தொடர்ந்தால், உயிருக்கே ஆபத்து என்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே, சிறுவர்களுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சையை செய்யலாம்.

ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி சிகிச்சை மூலமாகச் செய்யப்படும் உடல் எடை குறைப்பு என்பது நிரந்தரம் இல்லை. ஏனென்றால், இரைப்பை வளர்வதற்கான வாய்ப்பு உள்ளது. 100 கிலோ இருந்தவர் சிகிச்சைக்குப் பிறகு 60 கிலோ ஆகிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில ஆண்டுகள் கழிந்த பிறகு, 70 கிலோ என்று உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், மீண்டும் பழையபடி 100 கிலோவைத் தொட்டுவிடுவார் என்று பயப்படத் தேவை இல்லை.

பைபாஸ் அறுவைசிகிச்சை நிரந்தர எடை குறைப்புக்கு வழிவகுப்பதுடன், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்பார்கள். ஆனால், இந்த அறுவை சிகிச்சை மூலம் 85 சதவிகிதம் பேருக்குத் தீர்வு ஏற்பட்டு உள்ளது என்பதும் உண்மை. சர்க்கரை நோய் முழுமையாகக் குணமாகவில்லை என்றாலும்கூட, அதனால் ஏற்படும் சிறுநீரகம், கண் பிரச்னைகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. இதனால் வாழ்க்கைமுறை மேம்படுகிறது.

ஒரு நோயாளிக்கு பைபாஸ்தான் செய்ய வேண்டும் அல்லது ஸ்லீவ் முறையில்தான் செய்ய வேண்டும் என்பதை, முழுப் பரிசோதனை செய்த பின்னர், டாக்டர்கள் முடிவு எடுப்பார்கள்.

முன்பு லேப்ராஸ்கோப்பியில் 5-6 துளைகள் போடப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும். இப்போது, புதிதாக ஒரு துளை லேப்ராஸ்கோபி மூலம் இந்த இரண்டு வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்ய முடியும். இதற்காக தொப்புளில் துளையிடப்பட்டு, கருவிகளை உள்ளே செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுவதால், ஆபரேஷன் நடந்ததற்கான அடையாளமே இருக்காது. வலி, ரத்த இழப்பு குறைவு என்பதால், ஓய்வில் இருந்து மீண்டு வருவதும் விரைவாக நடைபெறுகிறது. தழும்பு தெரியாது என்பதால், இள வயதினர் அதிக அளவில் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகின்ற னர். ஆனால், இந்த இரண்டு சிகிச்சைகளையும் செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குறைவாக இருப்பதுதான், இப்போதைய பிரச்னை!'' என்றார்.

அளவான உணவு, போதுமான உறக்கம், மிதமான உடற்பயிற்சி போன்றவற்றில் உறுதியாக இருந்தால், உடல் பருமன் வராமலே தடுக்க முடியும். அப்படியே செய்வோம்!

வெள்ளி, 24 ஜூன், 2011

பாராட்டு எனும் ஆயுதம்!

"அவர் ரொம்ப சீரியஸான ஆள். ரொம்ப நல்லவர். வீக்னஸ் எதுவும் இல்லாதவர். அவர்கிட்ட எப்படி உங்க புரோஜக்ட் ரிப்போர்ட்ல் கையெழுத்து வாங்கினீங்க..?"

"அவரை பாராட்டினேன்."

"அவரை பாராட்டினாலே அவருக்கு பிடிக்காதே.. திட்டி அனுப்பிடுவாரே.."

"உங்களை யாராலயும் ஏமாத்த முடியாது. நீங்க பாராட்டுக்கு மயங்காத ஆளா இருக்கீங்க சார் அப்டீனு பாராட்டினேன். சிரிச்சுகிட்டே கையெழுத்து போட்டுட்டார்."

பல வருடங்களுக்கு முன் சொல்லப்பட்ட இந்த துணுக்கு, இன்றைக்கும் செல்லுபடியாகிறது என்றால், அதற்குக் காரணம் மக்களின் மாறாத மனநிலை. பாராட்டுக்கு மயங்காத ஆட்கள் மிக மிகக் குறைவு.

பாராட்டு என்பது சில சமயம் ஆயுதம்; சில சமயம் கேடயம்.

மேலதிகாரிகளைப் பாராட்டி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆட்களைப் போலவே, தன்னிடம் வேலை செய்யும் நபர்களை பாராட்டி நன்றாக வேலை வாங்கும் சாமர்த்தியம் மிக்க மேலதிகாரிகளும் உண்டு.

மேலதிகாரியிடம் நல்ல பேர் வாங்க, வீட்டை மறந்து வேலை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சக ஊழியன் செய்ய வேண்டிய வேலையைக் கூட அவருக்காக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள் பலர் உண்டு.

உங்களிடம் / உங்களோடு வேலை செய்யும் ஒருவர் தனக்கு இடப்பட்ட வேலையை சரியாக செய்து முடித்தால், அவரைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்லுங்கள்.

"அவங்க செய்ய வேண்டிய வேலைய தானே செய்யறாங்க. அதுக்கு நான் ஏன் பாராட்டணும்?" என்ற நினைப்பை விட்டுத் தள்ளுங்கள்.

ஒருவர் ஒரு வேலையை செய்யாவிட்டால், அவரை திட்டும் அதிகாரம் நமக்கு இருக்கும் நமக்கு, வேலை சரியாக முடிக்கப்பட்டால் அவரை பாராட்டும் இயல்பும் இருக்க வேண்டும்.

"என்ன சார் இது.. சொன்ன நேரத்துல வேலைய முடிச்சு குடுக்க மாட்டேங்கறீங்க," என்று சிடுசிடுப்பதை விட, "இந்த முறை லேட்டாயிடுச்சு பரவால்ல.. அடுத்த முறை கரெக்டா பண்ணிடுவீங்க.. தெரியும்," என்று சொல்வது நம் டென்ஷனைக் குறைக்கும்; 'மிஸ்டர் லேட்'-ன் பொறுப்பைப் கூட்டும்.

எவ்வளவு அறிவுரை சொன்னாலும் பிடி கொடுக்காத ஆட்களைக் கூட, சிறு சிறு பாராட்டுகளால் வசப்படுத்தலாம்.

பாராட்டு வலிமை மிக்கது. அதை மிகச் சரியாக பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்கள் பலர்.

அது சரி, பாராட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது..? ஏன் மற்றவர் பாராட்டை நாம் பெரிதாக எடுத்துக் கொள்கிறோம்?

சிறுவயது முதற்கொண்டே பாராட்டித் தான் சோறூட்டுகிறார்கள்; பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்கள். பாடங்களைப் படிக்க வைக்கிறார்கள். பால்யம் தொட்டே, பாராட்டுக்கு நம் மனது பழகி விடுகிறது. அதிக மார்க் வாங்க, கடைக்கு போய்வர, வீட்டுப் பாடங்களை எழுத, ஒட்டடை அடிக்க, திடீர் தூரலின் போது மழையில் ஓடி மொட்டை மாடியில் உலர்த்திய துணிகளை எடுத்து வர, தண்ணீர் கொண்டு வர, ரேஷனுக்கு போய்வர என எத்தனை முறை நாம் பாராட்டுக்கு தலையசைத்து சொன்ன வேலைகளை செய்து முடித்திருக்கிறோம்!

உங்கள் மேலதிகாரியோ, கீழ் அதிகாரியோ உங்களைப் பாராட்டிப் பேசும்போது, உங்களுக்கு உங்கள் மீதான மதிப்பு உயர்கிறது. அந்த மிதப்பில் இருக்கும்போதே அவர்கள் உங்களால் ஆக வேண்டிய வேலையை கச்சிதமாக முடித்துக் கொள்வார்கள். இது ஒன்றும் தவறில்லை. அவர்கள் பாராட்டை பயன்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். நீங்களும் அதை பழகிக் கொள்ளலாம்.

பாராட்டுவதை ஒரு யுக்தியாகக் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏமாற்று வேலையாக நினைத்து, உள்ளுக்குள் புழுங்க வேண்டாம். பாராட்டி சாமர்த்தியமாக காரியத்தை சாதித்துக் கொள்வோம் என்ற எண்ணம் வேண்டவே வேண்டாம். உளமார பாராட்டினால், வளமாகும் வாழ்க்கை, நமக்கும் மற்றவர்க்கும்.

பாராட்டும்போது மனதாரப் பாராட்டுங்கள். வார்த்தைகள் வாயில் இருந்தல்ல, மனதிலிருந்து வரட்டும். பொய்யாக பாராட்ட வேண்டும் என்று அவசியமில்லை. அவரிடம் உள்ள மற்ற நல்ல விஷயங்களைப் பற்றி பாராட்டிப் பேசலாம். உதாரணத்துக்கு, அவர் போட்டிருக்கும் உடை நன்றாக இருக்கலாம், அல்லது அன்று அவரது டேபிளில் எல்லாம் சரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அதைப் பாராட்டலாமே.

"அட, இந்த சட்டை உங்களுக்கு நல்லா இருக்கு சார்..!" என்று பாராட்டுவதால் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே. ஆனால், அந்த வாக்கியத்தின் தாக்கம் அடுத்த அரை மணி நேரத்துக்கு அவரை உற்சாகமாக்கும்.

நம்மை ஒருவர் பாராட்டினால், அதன் தாக்கம் நமக்கு எத்தனை நேரம் இருந்தது என்பதை நாம் அறிவோம். பாராட்டின் தாக்கத்தில் உற்சாகம் கொப்பளிக்க, வேலையை இன்னும் அழகாக, திறம்பட செய்து முடித்திருக்கிறோம். நம்மைப் போலத் தானே மற்றவரும்? பாராட்டு என்னும் சந்தோஷத்தை அவரும் அனுபவிக்கட்டுமே! பணத்தால் நிரப்ப முடியாத இடத்தை, மனத்தால் பாராட்டி நிரப்பலாமே!

பாராட்ட, அவர் அசகாசசூரத்தனமான விஷயங்கள் எதுவும் செய்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு சாதாரண வேலையை கச்சிதமாக செய்ததற்கே கூட ஒருவரைப் பாராட்டலாம்.

சிலருக்கு கையெழுத்து அழகாய் இருக்கும், சிலர் சில வேலைகளை சீக்கிரமாக செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள், சிலர் பேசும் போது சிரிக்க சிரிக்க பேசுபவர்களாக இருப்பார்கள்.. ஒவ்வொருவரிடமும் நிச்சயம் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய, அல்லது ரசிக்கக் கூடிய விஷயம் நிச்சயம் இருக்கும். அதைப் பாராட்டி பேசுவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, அவரை நாம் கவனிக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்துகிறோம். இரண்டு, அவரும் பிறரைப் பாராட்ட, அங்கீகரிக்க தூண்டுகிறோம். இதனால் சந்தோஷம் என்பது சங்கிலித் தொடராகிறது.

சம்பள உயர்வு, பதவி உயர்வு, பாராட்டு போன்ற விஷயங்களின் அடிநாதம் அவர்களுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் தான். உண்மையில் பலருக்கு பணத்தை விட பாராட்டு தான் அதிக வேலையை செய்யத் தூண்டுகிறது. அவர்களது அங்கீகார அலைச்சலுக்கு உங்கள் பாராட்டு தான் தீனி.

பாராட்டுக்கு செலவு கிடையாது. ஆனால் கண்டிப்பாக வரவு உண்டு.

பாராட்டுவோம். வேலை எளிதாகும். வெற்றி நமதாகும்.

*

தமிழன் சினிமாவிற்கு அடிமையா?

தமிழ்நாட்டின் பின்னடைவுக்கு தமிழர்களின் சினிமா மோகம்தான் காரணம் என ஒருசில அரசியல்வாதிகள் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறவர்கள் தங்களது வாக்கு வங்கியை பங்கு போடுவதால் ஏற்பட்ட எ‌ரிச்சலில் அவர்கள் செய்யும் பிரச்சாரம் இது. விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கையில் சினிமா மோகம் என்ற ஒற்றை கருத்துடன் அவர்கள் கூவுவது அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டிவிடுகிறது.

ஆனாலும் அவர்கள் கூறும் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. கலைத்துறையானாலும், அரசியலானாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தனி மனித வழிபாடும், சினிமா நட்சத்திரங்களை அரசியல்வாதிகளாக உருமாற்றும் முனைப்பும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்த இரண்டும் அதிகமுள்ள மாநிலமாக முன்பு ஆந்திரா விளங்கியது. கட்சியை நடத்த முடியாமல் பிர‌ஜா ரா‌ஜ்‌ஜியத்தை சிரஞ்சீவி காங்கிரஸுடன் இணைத்த நிகழ்வு, ஆந்திர மக்களின் விழிப்புணர்வை காட்டுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிர‌ஜா ரா‌ஜ்‌ஜியத்தின் அழிவை முன்னிறுத்தி நமது சினிமா மோகத்தை ஆராய வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

ஆந்திராவில் அளப்ப‌ரிய ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் சிரஞ்சீவி. அவரளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட சினிமா நட்சத்திரம் அங்கில்லை. விஜயசாந்தியும்கூட ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டே அரசியல் அரங்கில் தொடர முடிகிறது. பெரும் மக்கள் ஆதரவு உள்ள சிரஞ்சீவியால்கூட கட்சியை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்பது சினிமா மோகத்தை அம்மாநில மக்கள் விலக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற ஆரோக்கியமான அம்சத்தின் முதல் வெளிப்பாடு. ஆனால் தமிழகம்...?

ஐம்பது வயது வரை நடிகைகளின் தொப்புளில் பம்பரம்விட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென கட்சி ஆரம்பித்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் போது எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் பின்னால் செல்கிறோம். 25 வருடங்களாக திரையுலகில் நீடித்தும் ஒரு சிறந்த படத்தை தர இயலாதவர்கள் எப்படி நல்லாட்சி தருவார்கள் என்றும் நாம் யோசிப்பதில்லை. சிரஞ்சீவியால் ஆந்திராவில் கட்சியை நடத்தவே முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார்.(நன்றி வெப்துனியா)

இந்த வித்தியாசம் எப்படி வந்தது? இத்தனைக்கும் சிரஞ்சீவி அளவுக்கு ரத்ததானம் போன்ற விழிப்புணர்வு செயல்பாட்டில் தன்னையோ தனது ரசிகர்களையோ ஈடுபடுத்திக் கொண்டவரல்ல விஜயகாந்த். ச‌ரி, ஏதேனும் உருப்படியான போராட்டம்? பொருளாதார அறிவு? ஏதேனும் சாதனைகள்? ம்ஹும்... எதுவுமில்லை.
சிந்தனை செய்வோம் உறவுகளே....

வியாழன், 23 ஜூன், 2011

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''

''ஒரு பல்கலைக்கழகத்தில் படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு''-மகிழ்வும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் மது ஷாலினி. 'அவன் இவன்’ படத்தில் தேன்மொழி என்கிற தேனாக நடித்த 'ச்சோ ஸ்வீட்’ மான்.

''படம் பார்த்துட்டு 'தேன்மொழி கேரக்டர்ல பின்னியிருக்கே’னு பலரும் பாராட்டுறப்ப, நிஜமா மிதக்குற மாதிரியே இருக்கு. ஷூட்டிங் நேரத்தில் நான் தவறாமல் யோகா பண்ணுவேன். ஆனால், 'அவன் இவன்’ நடிக்கும்போது நான் யோகா பண்ணவே இல்லை. காரணம், பாலா சார் படத்தில் நடிக்கிறது ஆயிரம் யோகாவுக்குச் சமம். ஆர்யா என்னை ஈவ் டீசிங் பண்ற ஸீனில் என்னைக் குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னாங்க. 'சத்தியமா சான்ஸே இல்லை’னு சொன்னேன். அந்தப் குட்டிப் பாலத்தில் குட்டிக்கரணம் அடிக்கிறது ரொம்ப ரிஸ்க். அதுக்கு முன்னால குட்டிக்கரணம் அடிச்சு எனக்குப் பழக்கமும் கிடையாது. ஆனால், அந்த ஸீனுக்காகக் கட்டாயம் குட்டிக்கரணம் அடிச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. ஆர்யா அழகா குட்டிக்கரணம் அடிச்சுக் காட்டினார். நாலஞ்சு தடவை ட்ரை பண்ணிப் பார்த்த உடனேயே 'ஷாட்’ சொல்லிட்டாங்க. பாலா சாருக்குப் பயந்து உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு குட்டிக்கரணம் அடிச்சேன். கையில் சிராய்ப்பு, முதுகில் எரிச்சல்னு வலி தாங்கலை. ஆனால், படத்தில் அந்தக் காட்சிக்கு செம க்ளாப்ஸ். கை தட்டலைவிட காயத்துக்குப் பெரிய மருந்து வேறு என்ன இருக்க முடியும்? இப்போ குட்டிக்கரணம் அடிப்பதில் நான் எக்ஸ்பர்ட்! பெட் விரிச்சு குட்டிக்கரணம் அடிப்பதைத் தினமும் பயிற்சியாவே பண்ண ஆரம்பிச்சிட்டேன். மொத்த உடம்பையும் பந்து மாதிரி வளைச்சு பல்டி அடிக்கும்போது முதுகு வலி பிரச்னை வரவே வராது!'' - செருகிவைத்த சிறுமல்லிகள் உதிர்வதுபோல் சிரிக்கிறார் மது ஷாலினி!



''உடம்பை ரொம்பக் கச்சிதமா வெச்சிருக்கீங்களே... என்னென்ன பயிற்சிகள் பண்றீங்க?''

''நான் ஜிம்முக்குப் போறதே கிடையாது. வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போவேன். கை, கால்களுக்கு நல்லா மசாஜ் பண்ணிக்குவேன். மிதமான வெயிலில் நல்ல காற்று படும் பகுதியில் அமைதியா கண்களை மூடி உட்கார்ற மாதிரி உடம்புக்கு ஆரோக்கியமான பயிற்சி வேறு எதுவுமே இல்லை. பயிற்சி உடம்புக்கு மட்டுமானது இல்லை. முக்கால்வாசி பயிற்சி மனசுக்கும், கால்வாசி பயிற்சி உடலுக்கும் வேண்டும். இந்தியக் கலைகள் அனைத்துமே மனசுக்கும் உடலுக்கும் ஒரு சேரப் பயிற்சி அளிக்கிற மாதிரி உருவாக்கப் பட்டதுதான். பரதம் ஆடினா கண் தொடங்கி கணுக்கால் வரைக்கும் பயிற்சி கிடைக்கும். தொடர்ந்து இரண்டு மணி நேரம் கிளாஸிக்கல் டான்ஸ் ஆடுகிற அளவுக்கு நான் நடனத்தின் ரசிகை. உடற்பயிற்சிகளை மட்டுமே செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. யோகாவைத் தாண்டுற அளவுக்கு நடனத்தில் மன நிம்மதி கிடைக்கிறது. பெரிய அளவிலான பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் இந்த உடம்பு சிக்கென இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நடனம்தான்!''



'' 'அவன் இவன்’ ஷூட்டிங்கில் 'அசைவ உணவுகளைத் தொடமாட்டேன்’னு அடம் பிடிச்சீங்களாமே?''

''அசைவம் என்பது உணவே இல்லை. விலங்குகளின் பல் அமைப்பைப் பார்த்தாலே சைவம், அசைவத்துக்கு ஏற்றபடி சீராகவும், கூராகவும் இருக்கும். நம் மனிதப் பற்கள் சைவ உணவுகளுக்குத் தக்கபடி சீராக இருக்கும். அசைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால், நம்ம உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் சைவ உணவிலேயே இருக்குது. கறியில் கிடைப்பதைவிட காய்கறியில்தான் சத்துக்கள் அதிகம். அப்படியிருக்க உயிர் வதையைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிடலாமே? வீட்டில் இருக்குறப்ப மட்டுமே நான் உணவு சாப்பிடுவேன். வெளியே கிளம்பிட்டா முழுக்க முழுக்கக் காய்கறிகள்தான். பச்சைக் காய்கறிகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். காரம், கொழுப்பு உள்ள உணவுகளைத் தொடுவதே இல்லை. புரதச் சத்துக்காக சோயாவை அதிகம் சேர்த்துக்குவேன். தினமும் ஒரு கீரை முக்கியம். இயற்கை முறையில் பழுத்த பழங்களைத்தான் தேடிப் பிடிச்சு சாப்பிடுவேன். மிக மிகக் குறைவாதான் சாப்பிடுவேன். ஆனால், அதில் அத்தனை விதமான சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்!''



''முகத்தைப் பளிச்சென்று எப்படி வைத்துக்கொள்வது?''

''சிரிச்சுக்கிட்டே இருந்தால் எப்பவும் முகம் பளிச்சென்று இருக்கும். என்னோட முகம் அதிகமான வெயிலைத் தாங்காது. சுள்ளுனு வெயில் பட்டால் முகத்தில் அலர்ஜியாகிடும். அதனைத் தடுக்க எப்பவுமே சன்லாக் க்ரீம் பயன்படுத்துவேன். விதவிதமான க்ரீம்களைப் பயன்படுத்தி முகத்தின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கக் கூடாது. நம்ம ஸ்கின்னுக்கு ஏற்ற க்ரீம்களைத் தேர்ந்தெடுத்து வாங்கணும். காய்கறிகளும் ஜூஸும் முகத்தின் பளபளப்புக்கு அவசியம். இளநீர் சாப்பிடுவது தோலை மிருதுவாக்கும்!''

''மனசை சந்தோஷமா வெச்சுக்கிறது எப்படி?''

'' 'உங்க படத்தில் வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்!’னு சொல்லி பாலா முன்னாடி கண் மூடி நின்னேன். கண்ணைத் திறந்தா, ஆளையே காணோம். இன்னொரு நாள், 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விஷயங்களைக் கத்துக் கொடுக்குறீங்க சார்’னு சொன்னேன். என் வார்த்தைகளைச் சட்டையே பண்ணாமல் போய்க்கிட்டே இருந்தார். நன்றியோ, பாராட்டோ, திட்டோ எதுவா இருந்தாலும், பாலா மாதிரி அதைக் காதில் வாங்கிக்காமல் போய்க்கிட்டே இருக்கணும். இந்தப் பக்குவத்தைப் பழகிட்டால், நம் மனசை யாரும் சங்கடப்படுத்த முடியாது. என்னதான் சத்தான சாப்பாடு, சரியான பயிற்சின்னு இருந்தாலும் மனசு சரி இல்லைன்னா உடம்பும் சுணங்கிடும். எதையுமே சட்டை பண்ணாத குணம் வந்துட்டால், அப்புறம் எல்லாமே சந்தோஷம்தான்!''

சட்டம் உன் கையில்!

நூறு ரூபாய் பொருளுக்கே 'சேஃப்டி மெஷர்ஸ்’ என்ன இருக்கிறது என்று ஆராயும் பெற்றோர், 'வரதட்சணையாகக் கொடுக்கும் பல லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் புகுந்த வீட்டில் தன் பெண்ணுக்கு என்னவிதமான பாதுகாப்பு இருக்கிறது?' என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள். புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் பெண், எதிர்பாராத கணத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்து அனாதரவானால்?

எம்.இ., படித்த ஷர்மிளாவை... நூறு பவுன் நகை, ஐந்து லட்சம் பணம், வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனை சாமான்களும் கொடுத்து, அமெரிக்காவில் பணியாற்றும் சாஃப்ட்வேர் என்ஜினீயர் சுரேஷ§க்குத் திருமணம் செய்து வைத்தார்கள் படாடோபமாக. இரண்டாவது வாரத்திலேயே ஆசைக்கணவன் சுரேஷ் அமெரிக்கா சென்றுவிட, புதுமணக் கனவுகளை சுமந்தபடி மாமியார் வீட்டில் இருந்தாள்.

அடுத்தடுத்த நாட்களிலேயே யுத்த காண்டம் ஆரம்பமானது. 'உருப்படியா ஒரு ரசம் வைக்கத் தெரியல... நீயெல்லாம் படிச்சு என்னத்துக்கு ஆச்சு’ என்று ஆரம்பித்த வசவுகள், நாளுக்கு நாள் 'நாராச’ வார்த்தைகளாக மாறி, தீயாகச்சுட்டன. 'மூணு மாசத்துல அமெரிக்கா போயிடப் போறோமே’ என்று தேற்றிக் கொண்டாள்.

விசா கிடைத்து அமெரிக்கா கிளம்பியபோது, வெறும் ஐந்து பவுன் நகைகளை மட்டும் கையில் கொடுத்து, 'அங்கே இதை மட்டும் போட்டுக்கிட்டா போதும்...’ என்று மாமியார் சொல்ல, 'மற்ற நகைகளைப் பத்திரமாக வைத்திருப்பார்’ என்ற நம்பிக்கையோடும்...



'கணவனின் காதல் அணைப்பில், வாழ்க்கை ரம்மியமாகச் செல்லப் போகிறது' என்கிற ஆசைக் கனவோடும் அமெரிக்கா போய் இறங்கினாள். ஆனால், அந்த ஆசையில் மண் விழுந்தது.

தினம் ஒரு பார்ட்டி... குடி, கொண்டாட்டம் என்று திரிந்த சுரேஷ§க்கு, மனைவி ஷர்மிளா வெறும் அழகு பொம்மை என்றே ஆகிப்போனாள். மனைவியுடன் 'அன்பாக’ இருப்பதற்குக்கூட... அம்மாவின் ஆணையை எதிர்பார்க்கும் 'இன்டலக்சுவல் முட்டாள்' என்றிருக்கும் சுரேஷிடம், அழுது புலம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்தவள், தனிமையைப் போக்க 'மேற்படிப்புக்குச் செல்கிறேன்’ என்றாள். பல அடிதடிகளுக்குப் பின் இரக்கப்பட்டு, 'போய்த் தொலை’ என்ற ஆசீர்வாதம்(?) கிடைக்க... பெற்றோரின் செலவில் எம்.எஸ்., எம்.பி.ஏ. என்று இரண்டு பட்டங்கள் கிடைத்தன ஷர்மிளாவுக்கு.

இவையெல்லாம் சுரேஷின் ஈகோவை குத்திக் கிளற... 'ஒழுங்கா, பொண்ணா இருந்து குடும்பம் நடத்தத் துப்பில்ல... படிக்கிறாளாம் படிப்பு’ என்ற ஈட்டிமுனைத் தாக்குதல்கள் புகுந்த வீட்டிலிருந்து சீறிக்கொண்டு புறப்பட்டன. தினமும் இஷ்டத்துக்கு குடித்துவிட்டு, அடித்து உதைத்தான். உடலால், மனதால் நித்தமும் சித்ரவதையை அனுபவித்தவள், 'இனியும் பொறுக்க முடியாது' என்கிற நிலையில் போலீஸைத் தொடர்பு கொள்ள, அவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டான் போலீஸால்!

உடனடியாக மனைவியுடன் சென்னை திரும்பியவன், சில தினங்கள் தன் வீட்டில் ஜோடியாகத் தங்கிவிட்டு, பிறகு ஷர்மிளாவை பெற்றோரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அடுத்த சில தினங்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா திரும்பிய சுரேஷ், ஷர்மிளாவின் பாஸ்போர்ட், விசா, சர்டிஃபிகேட்ஸ் அனைத்தையும் அள்ளிச் சென்றுவிட்டான்! பலமுறை தொடர்பு கொண்டும், அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

சேர்த்து வைப்பதற்காக பெரியவர்கள் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நதி நீர் பிரச்னை போல் நீள... என்னிடம் வந்தாள் ஷர்மிளா. காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட... மாமனார், மாமியாரைக் கைது செய்ய சம்மன் அனுப்பப்பட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்த மகனை ஏர்போர்ட்டிலேயே வளைத்துப் பிடித்தது போலீஸ்.

'ஒட்டுமொத்தக் குடும்பமும் மெத்தப் படித்தவர்கள்' என்ற பெருமைக்குரிய அக்குடும்பத்தினர், 'அதிகம் படித்திருக்கிறாள்; சமைக்கத் தெரியவில்லை; மாமியாரை மதிப்பதில்லை' எனக் காரணங்களைச் சொன்னார்கள்.

கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அக்குடும்பத்தினருக்கு, ரத்தமும் சதையுமாக கண் முன்னே நடமாடும் மனிதர்களின் மனம் பற்றி அதிகம் தெரியாமல் போனது வேதனைதான். அவையெல்லாம் கவுன்சிலிங் மூலம் புரிய வைக்கப்படவே... புரிந்து, உணர்ந்து, திருந்தியது அந்தக் குடும்பம்! உடனடியாக ஷர்மிளாவின் அத்தனை சொத்துக்களும் திருப்பி ஒப்படைக்கப்பட, 'நான் ஆசைப்பட்டது இதற்காக அல்ல... நல்லதொரு வாழ்க்கைக்குத்தான்' என்று ஷர்மிளா பதில் தர... இன்று சுரேஷ§ம் ஷர்மிளாவும் ஆதர்ஷ தம்பதிகள்!

'அலைபாயுதே' சினிமா ஸ்டைலில் தாலி கட்டிக்கொண்டாள் அந்தப் பெண். 'சட்டப்பூர்வமாக அது செல்லாது' எனும் வாதத்தை முன் வைத்து, அவளுடைய வாழ்க்கையோடு விளையாடியது அவள் கைப்பிடித்தவனின் குடும்பம்.

செவ்வாய், 21 ஜூன், 2011

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!

இன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.

பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, 'பக்குவமாய் செய்ய ஏது நேரம்?’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.

பூண்டு



'பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.

ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை

பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.

கொள்ளு

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.

கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.



மிளகு

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

சாம்பார் வெங்காயம்

சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

கோடாம்புளி

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

சீரகம் - அதிமதுரம்

தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.

செம்பருத்தி,ரோஜா இதழ்கள்

செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி - ஏலக்காய்

இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

கண்ணுக்குள் ஒரு கள்வன் !

''என்னனு தெரியலை... கொஞ்ச நாளா தலைவலி இருந்துட்டே இருக்கு. கண்ணும் வலிக்குது. குமட்டல் வருது. ராத்திரி நேரத்துல பார்க்கற வெளிச்சத்தைச் சுத்தி ஒரு வட்டம் தெரியுது''...

''தலைவலினு டாக்டர்கிட்ட சொல்லி கண்ணாடி போட்டேன். ஆனா, தலைவலி தீர்ந்தபாடில்ல. கண்ணாடியை மாத்திப் பார்த்தேன். அதுவும் சரிப்படல. பக்கவாட்டுல இருக்கற ஒண்ணும் தெரியல. சில நேரத்தில பாக்கறதெல்லாம் மங்கலாத் தெரியுது''...





மேற்கண்ட புலம்பல்களை ஆங்காங்கே கேட்டு இருப்பீர்கள்தானே!

''இத்தகைய பிரச்னைகளுக்கு, 'க்ளாக்கோமா’ (Glaucoma)எனப்படும் 'கண்ணின் உள்நீர் அழுத்த நோய்'கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல்துறை மேலாளர், முனைவர் அ.போ. இருங்கோவேள்.

''கண்ணில் பூ, பவர் பிரச்னைகள் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன கண்ணின் உள்நீர் அழுத்தம்..?'' என்ற கேள்விக்கு விளக்கமாகவே பதில் தந்தார் இருங்கோவேள்.

''க்ளாக்கோமா என்பது... கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா’ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையி லிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது. இந்தியாவில் கிராமப் பகுதியில் 4.17 சதவிகித மக்களையும், நகரப்புறத்தில் 5.4 சதவிகித மக்களையும் இந்நோய் பாதித்திருப்பதாக தெரிவிக்கிறது சமீபத்தில் சங்கர நேத்ராலயாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம்'' என்ற இருங்கோவேள், இந்நோயின் குறிப்பிடத்தக்கத் தன்மையான மறைந்திருந்து தாக்கும் ஆபத்து பற்றித் தொடர்ந்தார்.



''ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரி யாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா’வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந் திருந்து தாக்கும் கள்வன்’ என்கிறார்கள். ஒரு கட்டத் தில், தீராத கண் பிரச்னை களால் மருத்துவரிடம் செல்லும்போது, அவர்களுக்கு 'க்ளாக்கோமா’ முற்றிய நிலைக்கு சென்றுவிடுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட வர்கள் இந்தியாவில் மட்டும் 11.2 மில்லியன் பேர். முற்றிய நிலைக்கு செல்லும் 'க்ளாக் கோமா’, பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்பது, அதி முக்கியத் தகவல்'' என்று அதிர்ச்சி தந்து முடித்தார்.

இந்நோயின் அறிகுறிகள், இதைக் கண்டறி வதற்கான பரிசோதனை பற்றிப் பேசிய சங்கர நேத்ராலயாவின் 'க்ளாக்கோமா’ துறையின் இயக்குநரும், இந்திய க்ளாக்கோமா சங்கத்தின் தலைவருமான டாக்டர் எல். விஜயா, ''50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந் தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா’வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா’ பாதிப்பை அறியலாம்'' என்ற டாக்டர்,

''ஒருவேளை க்ளாக்கோமா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போது அதிர்ச்சி அடையத் தேவை யில்லை. சொல்லப் போனால், தனக்கு இந்நோய் இருப்பதையே அறியாமல் கண்ணுக்குள் நோய் வளர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோ ரோடு ஒப்பிடும்போது, நோயை அறிந்து கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும்'' என்று நம்பிக்கை அளித்தார் விஜயா!

உங்கள் கண்ணுக்குள் இருக்கிறானா கள்வன்?!

ஞாயிறு, 19 ஜூன், 2011

'கடவுள் உன்னை நம்புகிறாரா?'

வெளிநாடு ஒன்றில் நடந்ததாகச் சொல்லப்படும் வேடிக்கையான ஒரு சம்பவம்:

இரவு நேரம். அந்தப் பெரிய வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்தான். ஒரு பக்கம் படுக்கை அறை; மற்றொரு பக்கம் பணப்பெட்டி இருக்கும் அறை. இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்ட அந்த அனுபவசாலி திருடன், மெள்ள பணப்பெட்டி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். பீரோவை நெருங்கினான். அதன் கைப்பிடியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது!

'இந்த பீரோவைத் திறக்க நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டாம். ஏனெனில், இது பூட்டப்படவே இல்லை. கைப்பிடியைத் திருகினால் போதும், பீரோ திறந்து கொள்ளும்!' என்ற அந்த வாசகத்தைப் படித்தவன் குஷியானான். 'ஆஹா... வேலை சுலபமாக முடிந்து விடும் போல் இருக்கிறதே!' என்று உற்சாகம் அடைந்தான்.

மீண்டும் ஒரு முறை படுக்கை அறையை நோட்டம் இட்டான். எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

'பணத்தை அள்ளிச் செல்வது ரொம்பவே சுலபம்!' என்ற எண்ணத்துடன், பீரோவின் கைப்பிடியை மெள்ள திருகினான். அவ்வளவுதான்!

உயரே இருந்த கனமான மண் மூட்டை ஒன்று 'பொத்'தென்று அவன் தலையில் விழுந்தது. வலியில் அலறினான் திருடன். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர். எல்லா விளக்குகளும் எரிந்தன.

அபாயச் சங்கும் ஒலித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். விளைவு... காவலர்கள் வந்து, திருடனைப் பிடித்துச் சென்று சிறையில் தள்ளினர். அங்கே... அந்தத் திருடன் அலுத்துக் கொண்டான்:


''ச்சே... இப்படியெல்லாம் செஞ்சாங்கன்னா, நான் எப்படி இந்த மனிதர்களை நம்ப முடியும்?''

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்!

திருடன், மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா முக்கியம்? இவன் மீது மற்றவர்கள் வைக்கிற நம்பிக்கைதானே முக்கியம்!

பக்தன் ஒருவன், கோயிலில் தரிசனம் முடிந்து கர்வத்துடன் திரும்பிக் கொண்டிருந்தான்.

எதிரே வந்த பெரியவர் ஒருவர், ''இந்த அளவுக்குத் தலை நிமிர்ந்து வருகிறாயே... என்ன காரணம்?'' என்று கேட்டார் அவன், ''நான் கடவுளை நம்புகிறேன்!'' என்றான்.

உடனே, ''அது முக்கியம் இல்லையே!'' என்றார் பெரியவர்.

''எனில்... வேறு எதுதான் முக்கியம்?'' என்று கேட்டான் பக்தன்.

அந்தப் பெரியவர் அமைதியாக பதில் சொன்னார்: ''கடவுள், உன்னை நம்புகிறாரா என்பதே முக்கியம்!''

வெள்ளி, 17 ஜூன், 2011

அலர்ஜியைக் கட்டுப்படுத்த புதிய வழிகள்

இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.

சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் குழந்தைகள் நலப் பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் பத்மாசனி வெங்கட்ரமணனிடம் பேசினோம்.



'ஆஸ்துமாவை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால்... மற்ற குழந்தைகள்போல வெளியே சென்று விளையாட முடியாது. அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ப தால், பாதிக்கப்பட்ட பிஞ்சுகளின் வாழ்க்கைத் துள்ளலே குறைந்துவிடும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முன்பு சிரப் அல்லது மாத்திரை கொடுப்போம். தொடர்ந்து மருந்துகள் எடுப்பது, குழந்தைக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தவிர, பெரியவர்கள் பயன்படுத்துவதுபோன்று, இன்ஹேலர் மூலம் மருந்துகளை உறிஞ்சுவது குழந்தைகளால் முடியாது. இப்போது, இந்த குறையைத் தீர்க்கும் வண்ணம், 'ஸ்பேஸருடன் பேபி மாஸ்க் இன்ஹேலர்’ என்ற கருவி உள்ளது. இந்தக் கருவியைக் குழந்தையின் முகத்தில் பொருத்தி, மருந்தை அழுத்தி னால் போதும்... மருந்து நேராகக் குழந்தைகளின் நுரையீர லுக்குச் சென்று விடும். மருந்து நேரடியாக நுரையீரலுக்கே செல்வதால், குறைந்த டோஸ் மருந்துகளே குணப்படுத்தப் போதுமானதாக இருக்கி றது. இதனால், பக்க விளைவுகளும் குறைந்துவிட்டன.

உறிஞ்சும் மருந்திலும் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. முதலாவது குரூப், ரிலீவர். ஆஸ்துமா அறிகுறி தோன்றியதும் குழந்தைக்கு இந்த மருந்தைச் செலுத்தினால், உடனடி ஆறுதல் கிடைக்கும். பிரச்னை சரியானதும், இதை நிறுத்திவிடலாம். மீண்டும் பாதிப்பு அடிக்கடி ஏற்படாமல் இருக்க, பிரிவென்டர் எனப்படும் தடுப்பு மருந்தும் உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதுபற்றிய போதிய விழிப்பு உணர்வு பெற்றோர்களிடமே இருப்பது இல்லை. அதனால், நோய் அறிகுறி இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தி, குணமானதும் நிறுத்திவிடுகிறார்கள். இதனால்தான் மீண்டும் மீண்டும் ஆஸ்துமா பிரச்னை வருகிறது.

பொதுவாக மூச்சை இழுக்கும்போது, அது நுரை யீரலின் சின்னச் சின்னக் குழாய்கள் வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. ஆஸ்துமா பாதிப்பில், இந்தக் குழாய்கள் சுருங்கி விடும். மருந்து செலுத்தியதும் மீண்டும் பழைய வடிவத்துக்குத் திரும்பும். இந்த தடுப்பு மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நிரந்தரமாகவே அந்தக் குழாய்கள் சுருங்கிவிடுகின்றன. இதை ஏர்வே ரீ-மாடலிங் என்று சொல் வோம். அப்படி நிரந்தரமாகக் குறுகி விட்டால், மிகப் பெரிய பிரச்னையாகி விடலாம். எனவே, தற்காலிக நிவாரணம் கிடைத்துவிட்டது என்பதற்காக மருந்து எடுப்பதை நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

சில குழந்தைகளுக்கு தூசு அலர்ஜி மிகப் பெரிய பிரச்னை. அதற்காக, அந்தக் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. பள்ளிக்குச் சென்றுதான் ஆகவேண்டும், மற்ற குழந்தைகளுடன் விளையாடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட குழந்தை களுக்கு அந்த அலர்ஜியைத் தவிர்க்க, 'சப்லிங்குவல் இம்யூனோதெரபி’ அறிமுகமாகி உள்ளது. இந்தியா வில் ஒரு சில இடங்களில்தான் இந்த வசதி உள்ளது. இந்த முறையில், முதலில் குழந்தைகளுக்கு எதனால், என்ன மாதிரியான அலர்ஜி ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து கண்டறிவோம். அதன் அடிப் படையில், அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பை உருவாக்கும் 'அலர்ஜன்’களை அந்தக் குழந்தையின் நாக்கில் வைப்போம். முதலில் சிறிய அளவில் ஆரம் பித்து நாளுக்கு நாள் அலர்ஜனின் அளவை அதிகமாக்குவோம். இதனால், குழந்தையின் உடலில் அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கூடிக் கொண்டே போகும். சிறிது காலத்தில் அந்த குழந் தைக்கு அலர்ஜி என்பதே இல்லாமல் போய் விடும்!

ஆஸ்துமா நோயில் இன்ஹேலர் விஷயத்தில்கூட பெற்றோர் மத்தியில் பயம் இருக்கிறது. அதாவது, போதைப் பழக்கம்போல, தங்கள் குழந்தைகள் இதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்களோ என்று அஞ்சுவார்கள். இந்த பயம் தேவை இல்லாதது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் பெற்றோர்களிடம் இருந்து விலகவேண்டும்.

அடிக்கடி இருமல், மூச்சு வாங்குதல், மாடிப்படி ஏறினாலோ, விளையாடினாலோ அதிகம் இளைப்பது, மூச்சு விடும்போது விசில் சத்தம் வருவது, மூச்சுவிட முடியாதபடி நெஞ்சில் அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தாலே ஆஸ்துமாதான் என்றும் முடிவு செய்துவிட முடியாது. வேறு சில நோய்களுக்கும் இதே அறிகுறிகள் உள்ளன. ஆனால், எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சையைத் தொடர்வதுதான் நல்லது.

பெற்றோரில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தாலும், குழந்தைக்கும் வர வாய்ப்பு அதிகம். தாய் கருவுற்று இருக்கும்போது புகைபிடித்தாலும், குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பெண்கள் புகைப்பது இல்லை என்றாலும், மற்றவர்கள் புகைக்கும்போது அதை கர்ப்பிணி சுவாசித்தாலும் அது கருவையும் பாதிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் சிகரெட் புகையை சுவாசிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு வேறு ஆகாரங் களைத் தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே புகட்டினால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு!' என்கிறார்.

அலர்ஜியை அண்டாமல் காக்க முயற்சிப்போம்!

மூட்டுவலிக்கு டாட்டா....

''ஐயோ, வலி உயிர் போகுதே...''

- கை, கால்களில் தைலம் தேய்த்தபடி, வலி தோய்ந்த வார்த்தைகளால் அலறும் பெண்களை விளம்பரங்களில் மட்டும் அல்ல... பல வீடுகளிலும் பார்க்கிறோம். சமையல் அறை தொடங்கி அலுவலகம் வரை பலவித பணிகளாலும் பம்பரமாகச் சுழலும் பெண்களைப் பெரிதாக வருத்துவது மூட்டுவலிதான்.

''ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்!'' என வேதனையோடு சொல்லும் கோயம்புத்தூர், கங்கா மருத்துவமனையின் ஆர்த்தோபீடிக் மற்றும் ஸ்பைன் சர்ஜரி துறைத் தலைவரும் பேராசிரியருமான ராஜசேகரன், கொஞ்சம் விரிவாகவே பேசினார்.





''ஆர்த்தோவின் முக்கியமான நோய்... 'ஆர்த்ரைட்டீஸ்’ எனப்படும் மூட்டுவலிதான். நம் தொடையையும், காலையும் இணைக்கும் பகுதியான மூட்டுப் பகுதியில்தான் 'கார்டலெஜ்’ (carilage) எனும் ஜவ்வு உள்ளது. அன்றாட வாழ்க்கைச் சூழல், செயல்பாடுகள், மாற்றங்களால் அந்த ஜவ்வு தேய ஆரம்பிக்கும். அப்போது மூட்டு வலி, மூட்டு வீக்கம், இடுப்பு வலி ஏற்படும். இதுதான் ஆரம்ப அறிகுறி. இந்த வலி அதிகரிக்கும்போது, அன்றாட வேலைகளைக்கூட நம்மால் செய்ய முடியாது. கால் வளைந்து போகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்!'' என்றவர், மூட்டுவலி வருவதற்கான காரணங்களை அடுக்கினார்.

''உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூட்டு வலி வர வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனச் சாப்பிடுவது, தேவையான நடைபயிற்சி இல்லாதது போன்றவையும் இதற்கு காரணமாகிவிடுகின்றன. கூடவே, எலும்புகளும் தசையும் வலுவிழக்கவும் செய்கின்றன.

மரபணு ரீதியாக இளவயதினருக்குக்கூட மூட்டுப் பிரச்னைகள் வரக்கூடும். இதை 'மூட்டு வாதம்’ (ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ்) என்பார்கள். இது பரம்பரை நோய். இதன் காரணமாக மூட்டுவலி, வீக்கம் ஏற்பட்டு நடப்பதே சிரமமாகிவிடும்!'' என்றவர் மூட்டுவலியைத் தடுக்கும் முறைகள் குறித்து தொடர்ந்தார்.

''சிறு வயதிலிருந்தே தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வேகமாக நடைபயிற்சி செய்ய வேண்டும். அதற்காக ரன்னிங், ஜாக்கிங் என்று அதிகமான உடற்பயிற்சி தேவை இல்லை. சாதாரண நடை பயிற்சியே போதுமானது.

மூட்டுவலியின் அறிகுறிகள் தெரிந்தால்... சம்மணம் போடுவதையும் குத்தங்கால் போட்டு அமர்வதையும் தவிர்க்க வேண்டும். மாடிப்படி ஏறக்கூடாது. வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது.

தினமும் சத்தான உணவுகளைச் சேர்ப்பது நல்லது. குறிப்பாக கால்சியம் அதிகமான உணவு, கீரை, மீன் உணவுகளை உட்கொள்வது அவசியம். காலை, மாலை இருவேளையும் பால் குடிப்பது நல்லது.

முக்கியமாக வயதுக்கேற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதிக எடை ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். மூட்டுவலி வருவதுபோல் தோன்றினால், முதலில் உங்களது எடையில் 10 சதவிகிதம் குறைத்துவிட்டாலே போதும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், எடையைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

மூட்டுக்கு சூடு உத்தடம் கொடுக்கலாம். இது நல்ல கை வைத்தியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி 'மூட்டு பெல்ட்’ Knee Belt முட்டியில் பொருத்திக்கொண்டால்... மூட்டுகள் அசையாமல் இருப்பதுடன் வலியும் குறையும்.

தரமான ஆயில் மசாஜ் செய்வது, தினமும் யோகா மற்றும் பிசியோதெரபி முறைகளைக் கடைபிடித்தால் தசைகள் உறுதியாக இருக்கும்.

மூட்டுவலிக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடுவதால் வயிற்றில் புண், அல்சர், கிட்னி பாதிப்புகள் வரலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ராஜசேகரன், அடுத்து சொன்னதுதான் முக்கிய மாகக் கவனிக்க «வண்டியது.

''குடும்பம் மற்றும் அலுவலகப் பணிகளால் மூட்டுவலிக்கு ஆளாகும் பெண்கள், 'வலி என் விதி’ என்று அசமந்தமாக இருந்துவிடுகிறார்கள். ஆரம்பத்திலேயே மூட்டுவலியைச் சரிசெய்யாமல் விட்டால், இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்றாகிவிடும். இந்த சிகிச்சை செய்வதற்கு சுமார் 1.25 லட்சம் ரூபாய் செலவாகும். 'கடைசி காலத்தில் எதுக்கு இந்த ஆபரேஷன்... நான் என்ன ரன்னிங் ரேஸுக்கா போகப் போறேன்?’ என்கிற சலிப்பில் குடும்பப் பெண்கள் அதனையும் தவிர்த்துவிடுவதுதான் பெரிய சோகம். விளைவு, கழிப்பறைக்குப் போகவேண்டும் என்றால்கூட அடுத்தவரின் உதவி தேவை என்று நிலைமை மோசமாகிவிடும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 25 முதல் 30 வருட காலங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம்.

இப்போது எல்லாம் 40 வயதினருக்குக்கூட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டாலும், குத்தங்கால், சம்மணமிட்டபடி உட்காருவதற்கு என்றே சிறப்பு உபகரணங்கள் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால், வளைந்திருந்த கால்கள் நேராகும். கால்கள் அதிக எடை தெரியாமல் லைட்டாக இருக்கும். வலி என்பதே இருக்காது!'' எனச் சொல்லும் ராஜசேகரன்... முத்தாய்ப்பு அறிவுரையாக இப்படி முடிக்கிறார் -

''நமக்கு 'மூடு’ எந்த அளவுக்கு முக்கியமோ... அந்த அளவுக்கு மூட்டு முக்கியம். 'மூடு’ சரி இல்லை என்றால்கூட அடுத்த சில நிமிடங்களில் சகஜமான மனநிலை உருவாகிவிடும். ஆனால், மூட்டு சரி இல்லை என்றால்... அடுத்தடுத்து துரத்தும் பிரச்னைகள் அதிகமாகிவிடும். அதனால், ஆரம்ப வலி வருகிறபோதே அக்கறையாக செயல்பட வேண்டும்!''

வியாழன், 16 ஜூன், 2011

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.

பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.

நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.



''நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம். சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

ஆளும் வளரணும்...ஆளுமையும் வளரணும் !

'பி.இ. படிக்கும் என் மகள், நல்ல பர்சன்டேஜ் எடுக்கும் 'டாப்பர்’ மாணவி. ஆனால், ஏனோ வைவா, பேப்பர் பிரசன்டேஷன், குரூப் டிஸ்கஷன், சிம்போஸியம், டிபேட், செமினார் போன்றவற்றில் அவளால் சோபிக்க முடியவில்லை. இருக்கும் மிச்ச கல்லூரி காலத்துக்குள் அவளது ஆளுமைத்திறனை மேம்படுத்த வழி காட்டவும்'' என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவகாமி சுந்தரம். அவருக்கு பதில் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராதா ராஜ்குமார்.

'எவ்வளவுதான் பாட அறிவு இருந்தாலும், தேவையான ஆளுமைத்திறனை இளம் வயதினரிடம் வளர்ப்பதற்கான ஆயத்தங்களைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆரம்பத்திலேயே துவக்க வேண்டும். உதாரணத்துக்கு, முதல் மதிப்பெண் எடுக்கும் ஒரு ஸ்டூடன்ட்டின் தலையிலேயே பல பொறுப்புகளைக் கட்டுவதற்குப் பதில், ஒவ்வொரு ஸ்டூடன்டுக்கும் அவரவர் ஈடுபாடு, திறமையைப் பொறுத்து பொறுப்புகளைப் பகிர்ந்து தரலாம்.



வீட்டிலும், விருந்தினர்களை வரவேற்பது, விசாரிப்பது, தன்னை அறிமுகம் செய்து கொள்வது போன்றவற்றுக்குக் குழந்தைகளைப் பழக்கலாம். இவ்வாறு பொறுப்புகள் அளிக்கப்பட்ட குழந்தைகள், அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தவிப்பார்கள்; அதற்காக, தனக்குள் பொதிந்திருக்கும் தனித் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மாறாக, பொத்தி வைத்து வளர்க்கப்படும் குழந்தைகள், பின்னாளில் சிறு சிறு சமூக இடறல்களுக்குக்கூட சங்கடப்பட்டு முடங்கிப் போவார்கள்.

சரி... கல்லூரிப் படிப்பின் பாதியில் இருக்கும் உங்கள் மகள் பிரச்னைக்கு வருவோம். ஆளுமைத்திறனுக்கு முக்கியமானது 'கம்யூனிகேஷன் ஸ்கில்’. இது... வெர்பல், நான்வெர்பல் என்று இரண்டு வகைப்படும். தன்னுடைய படிப்பு சார்ந்து அதில் விஷய ஞானத்தோடு ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது... வெர்பல் ஸ்கில். அதையே சரியான உச்சரிப்பு, குரல் ஸ்தாயி, உடல்மொழி, உடுப்பு என சூழலுக்கு ஏற்றவாறு வெளிப்படுத்துவது... நான்வெர்பல் ஸ்கில். வெர்பல் கம்யூனிகேஷனில் ஒருவர் எவ்வளவு வித்தகராக இருந்தாலும், அதற்கு உயிரோட்டம் கொடுப்பது நான்வெர்பல் மட்டுமே.

வீட்டு உறுப்பினர்கள் மற்றும் இணக்கமான நட்பு வட்டம் இவர்கள் முன்பாக ஒரு தலைப்பின் கீழ் பேசிப் பழகலாம். இதிலும் சங்கடத்தை உணர்பவர்கள், கண்ணாடி முன்பாக பேசிப் பழகலாம். உலகப் புகழ்பெற்ற பேச்சாளரான பெர்னாட்ஷா, தன் வீட்டுக் கண்ணாடி முன்நின்று பேசிப்பார்த்துதான் பட்டைத் தீட்டிக் கொண்டாராம்.

மூன்றாம் நபர்கள் முன்பு மேடையேறும்போது, முதலாவதாக கருத்தில் தெளிவும் தேர்ச்சியும் வேண்டும். அடுத்ததாக, கூட்டம் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய புறத்தோற்றத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மேக்கப், உடை அடிப்படை அம்சங்களில் அதீதத்தைவிட, நீட்னஸ் முக்கியம். மூன்றாவதாக, மொழியில் சரளம் இருப்பதோடு, துறை சார்ந்த வார்த்தைகளில் புலமை இருப்பதும் வேண்டும். முக்கியமானது, மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடும் பழக்கம் வேண்டாம். ஒரே கருத்தை, வெளிப்படுத்தும் பாணியில் வித்தியாசம் காட்டி அப்ளாஸ் அள்ளலாம்.

உலகில் உங்களுடைய வெற்றிடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும். 'என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்?' (If not me, Who else)என்ற தன்னம்பிக்கை பொதிந்திருந்தால், தாழ்வு மனப்பான்மை ஓடி ஒளிந்துவிடும். சிலருக்கு பங்கெடுப்பதிலேயே தகராறு இருக்கும். 'வெற்றி பெறுவதைவிட மகத்தானது பங்கெடுப்பதே' என்பதுதான் அவர்களுக்கான அரிச்சுவடி.

இந்தத் திறமைகளை எல்லாம் வளர்த்துக் கொள்ள கல்லூரியை விட்டால் வேறு சிறப்பான களம் இருக்க முடியாது. படிப்பு தவிர்த்த மற்ற புரோகிராம்களில் பங்கெடுக்கலாம். ஈடுபாடு இல்லையென்றாலும் பங்கெடுப்பவர்களுக்கு தன்னாலான உதவிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யலாம். இப்படி சமூகத்துடன் ஊடாடுவதைப் பொறுத்தே அவரரின் சமூகப் பண்பு பளிச்சிடும்.

மற்றவர்களிடம் இல்லாத, அதேசமயம் தனது முன்னேற்றத்துக்கு வாய்ப்பளிக்கும் ஏதோவொரு திறனை வளர்த்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு... ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு, ஜெர்மன், சைனீஸ், ஜாப்பனீஸ் போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்கலாம்; கூடுதலாக ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் படிப்பைக் கற்கலாம்; இசை கற்றிருக்கலாம், பார்ட் டைமாககூட வேலை பார்க்கலாம். மற்றவர்களைவிட, ஏதோ ஒரு வகையில் தான் மேம்பட்டவர் என்ற உத்வேகத்தை இது பாய்ச்சும்.

என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஸ்கவுட், ரெட் கிராஸ் என்று செயல்படும் பல்வேறு சேவை தொடர்பான அமைப்புகளில் பங்கேற்று சமூகத்திலும், கல்லூரியிலும் பிறருடன் பழகுவதற்கான வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால், தனியார் 'பர்சனாலிட்டி டெவலப்மென்ட்’ வகுப்புகளிலும் சேரலாம்.

பெரும்பாலானவர்கள் நல்ல மதிப்பெண்களோடு கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள் என்றாலும், வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இந்த 'சாஃப்ட் ஸ்கில்ஸ்’ அம்சங்களையே பரிசீலித்து முடிவெடுக்கின்றன என்பது கவனத்தில் இருக்கட்டும்!''

''விரதமே மகத்தான மருத்துவம்!''

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ''73 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?'' எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணாநோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிங் பாஸ்ட்டிங்’ (tலீமீக்ஷீணீஜீமீutவீஸீரீ ஜீணீstவீஸீரீ) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.





அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' -விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.



''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், 'ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். 'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனை களும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''

புதன், 15 ஜூன், 2011

கேரியர் அன்லிமிடட் -1 : சவால்களை வரவேற்போம்!

(எவ்விதப் பணிச் சூழலைக் கொண்ட இளைஞர்களையும் பக்குவப்படுத்த முனையும் வழிகாட்டித் தொடர்)

நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும் உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?



'ஆம்' என்று சொன்னால், கங்கிராட்ஸ்... நீங்கள் நன்றாக பொய் சொல்கிறீர்கள்!

உண்மை என்னவென்றால், பெரிய பெரிய (அரசியல்/தொழில்) தலைவர்கள் கூட சில நேரம் தடுமாறும் இடம் அது.

சரியான முடிவு எடுக்கும் திறன், அனுபவத்தால் வருகிறது. அந்த அனுபவமோ, தவறான முடிவு எடுத்ததால் வருகிறது.

சவால்களை வரவேற்போம்..!

பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம். இதுவரை அவர்கள் சந்தித்திராத புதுப் பிரச்னை. தீர்வு காண வேண்டும்.

ஒரு கஸ்டமர் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடைக்கு போய் இவர்கள் தயாரித்த சோப்பை வாங்கி இருக்கிறார். சோப்பு பாக்கெட்டில் சோப்பு இல்லை. காலியாக இருந்திருக்கிறது. கம்பெனிக்கு போன் செய்து புகார் செய்துவிட்டார்.

"ப்ச்.. அவர் பொய் சொல்றார்பா," என்று இதை அலட்சியமாக ஒதுக்கி விட்டு, சமோசா சாப்பிட போகவில்லை அந்த சோப்பு கம்பெனி நிர்வாக அதிகாரி. மீட்டிங் கூட்டினார்.

சகலமும் இயந்திரமயம் ஆக்கப்பட்ட சோப்பு தொழிற்சாலை அது. சோப்பு தயாராகி, வரிசையாக வந்து, தானாகவே பேக் செய்யப்பட்டு தானாகவே பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்படும்படியாக இருந்தது அவர்கள் இயந்திர அமைப்பு.

தயாரித்து பேக் செய்யப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு சோப்பு பாக்கெட்டிலும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்று முடிவு செய்யத்தான் இந்த அதிகாரிகளின் அவசர மீட்டிங்.

மீட்டிங்கில், புதிதாக வேறு பேக்கிங் இயந்திரங்கள் வாங்கலாம், சோப்புகள் அடுக்கிய அட்டைப் பெட்டியை கடைகளுக்கு அனுப்பும் முன் வேலையாட்களை வைத்து எடை போட்டு பார்த்து அனுப்பலாம் உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக புதிதாக வேலைக்கு எடுக்கப்பட வேண்டிய ஆட்களும் செலவினங்களும் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில் அங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி சொன்ன யோசனையை அமல்படுத்தினார்கள். என்ன அது?

சோப்பு பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியை அடையும் இடத்துக்கு அருகில் ஒரு மேசையை வைத்தார்கள். அதன் மீது ஒரு பெரிய சைஸ் டேபிள் ஃபேனை வைத்தார்கள். பாக்கெட்டில் சோப்பு இல்லாவிட்டால், காலி பாக்கெட் காற்றில் பறந்துவிடும். சோப் இருக்கும் பாக்கெட்டுகள் மட்டுமே அட்டைப் பெட்டியை வந்தடையும்.

மிக எளிமையான யோசனை. ஆனால் பெரிய செலவில்லாமல், பிரச்னைக்கு தீர்வு தருகிறது.

இந்த யோசனை ஏன் மற்ற அதிகாரிகளுக்கு உடனே தோன்றவில்லை..?

காரணம், அவசரம்.

பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதற்றமே அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. அவசரப்பட்டு புது இயந்திரமோ, வேலையாட்கள் நியமனமோ செய்திருந்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?

பல நேரங்களில் பிரச்னைக்கான தீர்வு மிக எளிதானதாக இருக்கும். பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.

பிரச்னை என்பது ஒரு சவால். அதற்கான தீர்வு தேடுவதை நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், தினம் தினம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

சவால்கள் கூடக் கூட உங்களது தீர்வு காணும் திறன் கூடும். புத்தி கூராகும்; வாழ்க்கை நேராகும்.

உங்களுக்கான சவாலை "கமான் கமான்" என வரவேற்று எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

குரல்வளத்தை முதலீடாக்கும் குஷியான பயிற்சி!

''மாற்றுத் திறனாளியான நான், இளநிலைக் கல்வி முடித்தவள். பள்ளி மற்றும் கல்லூரி மேடைகளில் எனது குரலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, இதை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தைத் திட்டமிட விரும்புகிறேன். குரல் உச்சரிப்பில், தொகுத்து வழங்கும் முறை போன்றவற்றில் பயிற்சி பெற அகில இந்திய வானொலியில் உதவி செய்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதுபற்றிய தகவல்களை அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்'' என்று கோரிக்கை வைத்திருக்கும் பேராவூரணியைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு, பதில் தருகிறார் திருச்சி, அகில இந்திய வானொலி நிலைய உதவி இயக்குநர்

வி.சீனிவாசன்.

''குரலை மூலதனமாக வைத்து வாழ்க்கையை நிர்மாணிக்க தற்போது ஏராளமான வழிகள் இருக்கின்றன. இதற்குக் குரல் இனிமை மட்டுமல்லாது... உச்சரிப்புத் தெளிவு, சமயோஜிதம், நிகழ்கால செய்திகளை அப்டேட் செய்து வைத்திருப்பது, மொழிபெயர்ப்புத் திறன், மற்றவர்களோடு உரையாடும் கலை என வேறு பல திறமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

புதிது புதிதாக முளைக்கும் எஃப்.எம். ரேடியோக்கள், டி.வி. சேனல்கள், ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையங்களுக்கான அறிவிப்பு பணிகள், விளம்பரங்கள், சீரியல்கள், திரைப்படங்கள் என பின்னணி குரல் தரும் பணி, ஈவன்ட் மேனேஜ்மென்ட் என பட்டைத் தீட்டிய குரலுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு சிவப்புக் கம்பளம் காத்திருக்கிறது.



நிறைய பேர் குரல் இனிமையைத் துருப்புச் சீட்டாக்கி இந்தத் துறைகளில் ஒன்றில் நுழைந்து விடுவார்கள். பிறகு, இதர திறமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், அங்கிருந்து வெளியேறி விடுவார்கள். அடிப்படை பயிற்சினைப் பெற்று, அடுத்த படியில் கால் வைப்பதன் மூலம் ஸ்திரமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

இதற்காக அகில இந்திய வானொலி நிலையங்கள் 'வாணி’ என்கிற சான்றிதழ் பயிற்சியை அளிக்கின்றன. இந்தச் சான்றிதழை இதர பிற குரல் வேலை வாய்ப்புகளுக்கு பாஸ்போர்ட் என்று சொல்லலாம். இந்தச் சான்றிதழ் பயிற்சிக்கான அறிவிப்பு, உரிய காலத்தில் அந்தந்த வானொலி நிலையங்களால் அறிவிக்கப்படும். உங்கள் ஏரியா வானொலி நிலையத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். உரிய வயது வரம்போடு ஆண், பெண், மாற்றுத்திறனாளி எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரியாக இருப்பது நல்லது. பணிபுரிபவர், படிப்பவர், இல்லத்தரசிகள் என யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைப் பெற முடியும்.

குரல் தேர்வுக்குச் சிறிய அளவிலான 'ஆடிஷன்’ நடக்கும். இது குரல் இனிமையைப் பரிசோதிக்கும் அடிப்படைத் தேர்வு. பயிற்சிக் காலம்... 5 தினங்கள் மட்டுமே! உயிரோட்டத்துடன் பேசும் முறை, தெளிவான உச்சரிப்பு, பேச்சு மொழிக்கான இலக்கணங்கள் என குரலுக்கு மட்டுமல்லாது நிகழ்ச்சித் தயாரிப்புக்கான பயிற்சியும் இதில் உள்ளடங்கி இருக்கும். ஸ்கிரிப்ட் எழுதும் முறை, லைவ் புரோகிராம் சாமர்த்தியங்கள், 'ஆர்டிகுலேஷன்’ எனப்படும் பேசும் முறை, பல்வேறு தரப்பினருக்கும் புரியும்படி பேசுவது, பொறுப்பாக பேசுவது, வானொலிக்கான நன்னடத்தைகள், மொழிபெயர்ப்பு உத்திகள், செய்தி வாசிப்புப் பயிற்சி என பலவற்றையும் படிப்படியாக பயிற்சி பெற்று உரிய தேர்வுக்குப் பின் அகில இந்திய வானொலி டெல்லி தலைமையகத்திலிருந்து உங்களுக்கான 'வாணி’ சான்றிதழ் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சிக்குப் பின்னர் வானொலியின் பகுதி நேர பணிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் முழுநேரப்பணியை பெறவும் முடியும். இந்தப் பயிற்சியோடு நிறைய படிப்பது, பிறமொழிகளை அறிந்து வைப்பது, திறமையான அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்களை உற்றுக் கவனிப்பது போன்றவையும் உங்கள் திறமையை மேலும் செதுக்கிக் கொள்ள உதவும்!'

சீட் பெல்ட் அது லைஃப் பெல்ட்!

இந்தியாவில் ஏபிஎஸ், ஈபிடி, காற்றுப் பைகள் என நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஆனால், கார் விபத்துகள் மூலம் நடக்கும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. பாதுகாப்பான நவீன கார்களில் பயணம் செய்தும் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் காரணம், சீட் பெல்ட் அணியாததுதான்! கார் விபத்துகளில் நடக்கும் உயிரிழப்புகளில் 95 சதவிகித உயிரிழப்புகள் சீட் பெல்ட் அணியாததாலேயே நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரேஸ் வீரர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு காரை டெஸ்ட் செய்வதற்காக கொடைக்கானல் சென்றார். எப்போதுமே சீட் பெல்ட் அணிந்தபடி கார் ஓட்டும் அவர், அன்று சீட் பெல்ட் அணியாமல் காரை அதிவேகமாக ஓட்ட, மலைப் பாதையில் இருந்து கார் சரிந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால் கை, கால்கள் அசைக்க முடியாமல் போய்விட்டன. இன்று வீல் சேரில்தான் அவருடைய வாழ்க்கை நகர்கிறது. சீட் பெல்ட் அணிந்திருந்தால், அன்று அவர் சின்ன காயங்களுடன் வெளியே வந்திருக்க முடியும்.







''இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கார் ஓட்டுபவர்களுக்கு சீட் பெல்ட் முக்கியம். கார் வேகமாக ஓட்டியபடி ஏதாவது தடுப்பில் போய் முட்டும்போது, கார் அந்த இடத்திலேயே நின்றுவிடும். ஆனால், காரைவிட வேகமாகப் பயணிக்கும் நாம், காருக்கு வெளியே தூக்கி எறியப்பட்டு காயங்கள் ஏற்படும். இந்த உயிரிழப்பு மற்றும் காயங்களைத் தவிர்ப்பதற்காகத்தான் சீட் பெல்ட்.

சமீபத்தில் சிவக்குமார் என்பவர் ஓசூரில் இருந்து கோயம்புத்தூருக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்றார். திருப்பூர் அருகே வரும்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தூக்கி வீசப்பட்ட சிவக்குமாரின் தலை, காரின் முன்பக்க விண்ட் ஷீல்டின் மீது மோதியது. இதில் சிவக்குமாரின் கழுத்தில் பயங்கர வலி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு இரண்டாவது கழுத்து எலும்பு முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீட் பெல்ட் அணிந்திருந்தால், அவருக்கு இந்த எலும்பு முறிவே ஏற்பட்டிருக்காது. கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்தபின் அவரது கழுத்து எலும்பு சரி செய்யப்பட்டது.

சீட் பெல்ட் அணியாமல் விபத்துக்கு உள்ளாகும்போது தலை, முதுகெலும்பு, மார்பு போன்ற பகுதிகளில் அடிபடும். கை, கால்கள் முடங்கிப் போய்விடும். லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது என்பது மிகவும் சிரமம். காரில் காற்றுப் பைகள் இருக்கிறது, அவை காப்பாற்றி விடும் என்றால், அதற்கு சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே காயத்தில் இருந்து தப்பிக்க முடியும். சீட் பெல்ட் சரியாக இறுக்கமாக அணிய வேண்டும். குழந்தைகளைக் எக்காரணம் கொண்டும் முன் பக்க இருக்கையில் உட்கார வைக்கக் கூடாது. பின் இருக்கையில் பின் பக்கம் திரும்பியவாறு சைல்டு சீட்டில் உட்கார வைக்க வேண்டும்!'' - ஆபத்துக்களைத் தடுக்க அக்கறையோடு சொல்கிறார் குளோபல் மருத்துவமனையின் நரம்பியல், மூளை மற்றும் முதுகுத் தண்டுத் துறைத் தலைவர் டாக்டர் ஜே.கே.பி.சி.பார்த்திபன்.

சீட் பெல்ட் அணிவது ஒன்றும் சிரமமான வேலை இல்லை. ஆனாலும், அசமந்தமாக நாம் அதனைத் தவிர்ப்பது விதியை விரும்பி அழைப்பதற்குச் சமமானதுதானே!

புகை பிடிப்பதை நிறுத்தினால்..!

புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.

புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.

சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.

''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.

பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.





ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!

பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?

செவ்வாய், 14 ஜூன், 2011

பெரிய மனிதரும் அரிய புத்தகங்களும்!

ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முத லில் அந்த இனம் பற்றிய புத்தகங்களை அழித்தாலே போதுமானது என்பார்கள். தமிழர்களின் வாழ்க்கை யைப்பற்றி அறிந்துகொள்ளக்கூடிய முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்க நூல்களில் முதல் இரண்டு சங்க கால நூல்கள் அழிந்துவிட்டன. மிச்சம் இருந்த கடைச் சங்க நூல்களை வைத்துத்தான் தமிழனின் வரலாறு அறியப்படுகிறது!

அப்படியான அரிய நூல்கள் பலவற்றை நாமக்கல் லைச் சேர்ந்த நா.ப.ராமசாமி பாதுகாத்து வருகிறார். எந்த நூலகத்திலும் கிடைக்காத அரிய பொக்கிஷங் கள் அவை. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங் கள்கூட இவரது நூலகத்தை அலங்கரிக்கின்றன.

''ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பூஞ்சோலை, ஜில்ஜில், வானதி பதிப்பகத்தின் பாப்பா, பாலர் மலர், திருநாவுக்கரசுவின் அம்புலி மாமா புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற இதழை இலவசமாக கொடுப்பார்கள். அதேபோல், சோவியத் நாட்டின் இதழும் வரும். அவற்றையும் படிப்பேன்.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பின்பு, திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன். அப்போது திராவிட நாகரிகம் சார்ந்த புத்தகங்களும், உலக புரட்சியாளர்களின் வரலாறும், பொதுவுடமைச் சிந்தனைகொண்ட புத்தகங்களையும் படித்தேன். இது ஒரு வெறிபோல பல்கிப் பெருகவே, புத்தகங்களை படிப்பதுடன் மட்டும் இல்லாமல் தேடித் தேடி சேகரிக்கவும் ஆரம்பித்தேன்!'' என்று புன்னகை பூக்கிறார் நா.ப.ராமசாமி.

கலை, பண்பாடு, நாகரிகம், உலக வரலாறு, மருத்துவம் என எல்லா வகையான புத்தகங்களும் என்னிடம் உள்ளன. 1890-ல் வந்த திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகமான ஜான்ட்ரூ, ராட்லர் என்பவர் எழுதி 1834-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்-ஆங்கில அகராதி, 1900-ல் ஜி.யு.போப் எழுதிய திருவாசகம், 1858-ல் ஆப்பிரிக்கா பற்றி தமிழில் வந்த புத்தகங்கள், கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் மூலப் பதிப்பு, 1933 முதல் வெளிவந்த ஆனந்த விகடன் தொகுப்பு ஆகியவை என் நூலகத்தின் அரிய பொக்கிஷங்கள்.

கடந்த 2002-ம் ஆண்டு ஈழத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது, யாழ் நூலகத் துக்காக இலங்கை சமூக வளர்ச்சித் துறை அமைச்சர் சந்திரசேகரனிடம் 3,800 புத்தகங் களைக் கொடுத்து அனுப்பினேன். தற்போது 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் என் னிடம் இருக்கின்றன. பழ.நெடுமாறன், வே.ஆனைமுத்து, திலகவதி, காந்தி கண்ணதாசன், க.பா.அறவாணன், தாயம்மாள் அறவாணன் போன்ற தமிழ் ஆர்வலர்கள் என் வீட்டுக்கு வந்து புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு செல் வார்கள்!'' என்று பெருமிதம் தெரிவிப்பவரின் கவலையும் இந்தப் புத்தகங்கள் பற்றியதே!

''எனக்கு வயதாகிவிட்டது. எனக்குப் பின் இந்தச் செல்வங்களை பாதுகாப்பது யார் என்ற கவலையே இப்போது தினமும் என்னை அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது. பிரபாகரன் தலைமையில் ஈழம் மலரும்; அப்போது இந்தப் புத்தகங்களை தாய் மொழியை மதிக்கும் அந்த நாட்டுக்கு கொடுத்துவிடலாம் என்று இருந்தேன். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து அந்த நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள்.

தமிழகத்திலேயே ஒப்படைக்கலாம் என்றால் இந்தப் புத்தகங்களின் மதிப்பும் மரியாதையும் தெரியாமல் தூக்கி மூலையில் போட்டுவிடுவார் கள். இங்கு தமிழுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மதிப்பு இல்லை. என்னைப் போன்ற பல தமிழ் அறிஞர்களுக்கு செம்மொழி மாநாட்டுக்குக்கூட அழைப்பு விடுக்கவில்லை. எனக்குப் பின்பு இந்தச் சமுதாயம் பயனுறும் வகையில் இந்தப் புத்தகங்களைப் பாதுக்காக்கத் தகுதி உள்ள நபர் என்னிடம் வந்து உத்தரவாதம் கொடுத்தால், இவற்றை அளிக்கத் தயாராக இருக்கிறேன்!'' என்கிறார் ராமசாமி!

''நடனம் ஆடினால் நலம்!''

''பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச்சுனு இருக்கிற துக்குக் காரணமே பப்பாளிதான்!'' என்கிறார். அசினை அச்சு வார்த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.

''என் காலை உணவே, பழங்களும் காய்கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விருப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்கும். ஐஸ் மாதிரியான பொருட்களைச் சேர்க்க மாட்டேன்.

பியூட்டி பார்லர் போய் ஃபேஷியல் பண்றதில் எனக்கு விருப்பம் இல்லை. பப்பாளி, ஆரஞ்சு, ப்ளம்ஸ் மாதிரியான எந்தப் பழம் கிடைத் தாலும், அதோட சாறையும் சக்கையை யும் அப்படியே முகத் தில் அப்ளை பண்ணு வேன். பப்பாளிப் பழத்தோட ஸ்பெஷல் என்னன்னா, முகத்தில் மாசு மரு எது இருந்தாலும், அரை மணி நேரத்தில் அதை கிளியர் பண்ணிடும். அரை மணி நேரம் பப்பாளியை முகத்தில் தேய்த்து ஈரம் காயாமல் வைத்திருந்து, பின்னர் கழுவினால் முகத்துக்கு வேறு மேக்கப்பே தேவை இல்லை. மார்க்கெட்டில் கிடைக்கும் அலங்காரப் பொருட்களால், தேவையற்ற ஸ்கின் பாதிப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கு. நம் முகத்தின் தன்மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர்ந்தெடுத்து அப்ளை பண்றதுதான் சரி!'' - அழகுக் கலைப் பயிற்சிக்கு வகுப்பு எடுக்கும் கணக்காகக் கடகடக் கிறார் பூர்ணா.

''உடற்பயிற்சி?''

''சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால், நல்ல வெயிட் போட்டு இருந்தேன். படிப்படியா 10 கிலோவுக்கும் மேல் குறைச்சு இருக்கேன். ஷூட்டிங் நேரத்தில் மட்டும் உடம்பை ரொம்ப வருத்திக்காத அளவுக்கு பிராக்டீஸ் பண்ணுவேன். க்ளாஸிக்கல் டான்ஸ்தான் பிரமாதமான பயிற்சி. ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி பண்றப்ப உடல் மட்டும்தான் பம்பரமா சுழலும். ஆனால், க்ளாஸிக்கல் டான்ஸ் பண்றப்ப, உடலுக்கும் மனசுக்கும் பேரானந்தம் கிடைக்கும். டான்ஸர் ஷோபனாவின் தீவிர விசிறி நான். டான்ஸ் பண்றப்ப மனசுக்குக் கிடைக்கிற சுகமும் அமைதி யும் எல்லாவிதக் கஷ்டங்களையும் மறக்கடிச்சிடும்!''

''தலைமுடியை ரொம்ப ஸ்டைலாப் பராமரிக்கிறீங்களே?''

''தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன். நல்லா எண்ணெய் தேய்ச்சு, தலையில் சிறு இடம் கூடப் பாக்கி இல்லாமல் ரசிச்சு ரசிச்சு மசாஜ் பண்ணுவேன். பழம்பாசி மாதிரியான மூலிகைகள் கிடைச்சா, தலைக்குத் தேய்த்துக் குளிப்பேன். மற்றபடி, தலைமுடிக்காக பிரத்யேகமா எந்தப் பொருளும் நான் பயன்படுத்துறது இல்லை!''



''உணவுப் பழக்கம் எப்படி?''

''சாக்லேட்னா, எனக்கு உயிர். என் உடம்புக்குத் தவறுன்னு தெரிஞ்சும், அந்தப் பழக்கத்தை மட்டும் விட முடியலை. ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு உறுதிமொழி எடுப்பது என் வழக்கம். அடுத்த பிறந்த நாளில் நிச்சயம் சாக்லேட்டுக்குத் தடா போட்டுருவேன். காய்கறிகளைப் பச்சையா சாப்பிட்டே பழகிட்டேன். கொழுப்புச் சத்து உள்ள உணவுகளுக்கு நோ. ஷூட்டிங் நேரங்களில் மட்டும் டயட் ஃபாலோ பண்ணுவேன். இரவு நேரங்களில் மிகக் குறைவான சாப்பாடுதான்.''

''அழகுக்கு அட்ரஸ் சொல்லுங்களேன்...''

''நல்லாத் தண்ணி குடிங்க. எவ்வளவு தண்ணி குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்ம உடம்பு ஃப்ரெஷ்ஷா இருக்கும். எந்த நேரமும் சிரிச்சுக் கிட்டே இருப்பது என்னோட ஸ்பெஷல். இடியே விழுந்தாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல் என் முகத்தை இறுக்கமாப் பார்க்க முடியாது. எதுக்குக் கஷ்டப்படுறோம்; எதுக்குச் சம்பாதிக்கிறோம்? சந்தோஷமா இருக்கத்தானே!

'வருத்தமான சூழலில், குழந்தைங்களோட ஐக்கியமாகிடுங்க; சந்தோஷமான சூழலில், பெரியவங்களோட ஐக்கியமாகிடுங்க!’னு ஒரு தத்துவம் படிச்சேன். இப்போ வரைக்கும் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன்!''

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

சென்னையில், சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, நீலப் படங்கள் எடுத்த டச்சு நாட்டைச் சேர்ந்த வில்ஹெல்மஸ் என்பவனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை!

கடந்த வாரத்தில் நாளிதழ்களின் மூன்றாம் காலத்தில் சிறிய அளவில் வந்த செய்தி... பத்தோடு பதினொன்று எனச் சொல்லத்தக்க சாதாரணச் செய்திதானா? உங்கள் வீட்டில் பட்டாம்பூச்சியாக வளைய வரும் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒரு நாளேனும் கற்பனையாவது செய்திருக்கிறீர் களா? அது பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கும் என்ற அதிர்ச்சியை உங்களால் ஜீரணிக்க முடியுமா?

''மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல்ரீதியிலான தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, அதே அளவுக்கு ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஊடகங்களில் அதுபற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே இருப்பதால், இந்தப் பிரச்னை சமூகத்துக்கு அதிகமாகத் தெரிவது இல்லை!'' என்கிறார் சிறார் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படும் 'துளிர்’ அமைப்பின் களப் பணியாளர் நான்சி வெரோனிக்கா.

'' 'கஸ்டோடியல் வயலென்ஸ்’ முதற்கொண்டு பல நிலைகளிலும் பால் வேறுபாடு இன்றிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமைகளில் 12 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வழக்குகளாகப் பதிவாகின்றன!

தகாத இடங்களில் தொடுதல், தன் அந்தரங்கப் பகுதிகளைத் தொட வைத்தல், நீலப் படங்கள் பார்க்க வைத்தல் போன்ற பாலியல் வன்கொடுமை வகைகளோடு, தொழில்நுட்ப ரீதியிலான வன்கொடுமைகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இந்தக் குற்றங்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், அந்தச் சம்பவங்களைப்பற்றி தங்களின் பெற்றோரிடத்தில் சொல்ல முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட தந்தையே தன் மகளைச் சீரழித்த சம்பவம் செய்தியாக வந்தது. அந்தச் சிறுமி தன் தகப்பனைப்பற்றி பாட்டியிடம் சொல்லி இருக்கிறாள். அதற்கு அந்தப் பாட்டி, 'உங்க அப்பாதானே? இது சீக்கிரமா சரியாயிடும். சாமியை வேண்டிக்கோ’ என்று சொன்னாளாம். ஆக, 'இது தவறு’ என்று தெரிந்திருந்தும், அவர்கள் பொருளாதாரரீதியாகவும், மனரீதியாகவும் அந்தக் கொடூரனைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இந்தக் குற்றத்தை எதிர்த்து எங்கு செல்ல முடியும்?

ஒரு சிறுமி பள்ளி வாகனத்தில் ஏறாமல் அழுதுகொண்டு நின்று இருக்கிறாள். இதைப் பார்த்த ஒருவர் 'ஏன்?’ என்று கேட்டபோது அந்தச் சிறுமி, 'டிரைவர் மாமா என் பாவாடைக்குள்ளே கை விடுறார்’ எனச் சொல்லி இருக்கிறாள். அவருக்கு விபரீதம் புரிந்து இருக்கிறது. அந்தச் சிறுமியின் வீட்டினருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். வீட்டில் இருந்தவர்களோ, 'அவள் எப்பவுமே அப்படித்தான். ரெண்டு அடி போட்டு அவளை வேனில் ஏத்துங்க’ என்று அசட்டையாகக் கூறி இருக் கிறார்கள். ஆக, அந்தச் சிறுமிக்கு 'குட் டச், பேட் டச்’ போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்துதான் என்ன பயன்? பெற்றோர்களின் இத்தகைய புறக்கணிப்புதான் தவறுகள் தொடர்ந்து நடக்க இடம் தருகிறது!

இந்தக் கொடுமைகளை வீடுகளில் பேசுவதற்கான சூழ்நிலை நம் சமூகத்தில் இல்லை. ஒருவேளை குழந்தைகளே தவறைப் புரிந்துகொண்டு, பெற்றோரிடம் சொன்னாலும், 'நீ அப்படி நடந்துக்கிட்டு இருப்பே... அதனால அவங்க உன்கிட்ட இப்படி நடந்துக்கறாங்க’ என்று குழந்தைகள் மீதே பழியைத் திருப்பிவிடும் போக்கே இங்கு இருக்கிறது.

ஆக, நம் கண்முன்னே இவை நடந்தாலும், அவற்றைத் தட்டிக் கேட்க முடியாமல், நாம் அனைவரும் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம்!'' என்கிறார் நான்சி.

சிறார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா னால், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கு கிறார் குழந்தைகள் மனநல நிபுணர் மருத்துவர் ஜெயந்தினி.

''வயது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது ஆணா, பெண்ணா; ஒரு முறை நடந்த சம்பவமா அல்லது தொடர்ந்து நடைபெற்ற சம்பவமா; என்ன வகையான பாலியல் கொடுமை, 'யாரிடமாவது சொன்னால், கொலை செய்துவிடுவேன், மார்க் குறைத்துவிடுவேன்’ என்பது போல ஏதாவது மிரட்டப்பட்டார்களா? இவை எல்லாவற்றையும் கவனத்தில்கொண்டு தான் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கிறோம்.

பாலியல் வன்கொடுமைகளில் சிறார்களின் அந்தரங்க உறுப்புகள் கையாளப்பட்டு இருந்தால், ரத்தக் கசிவு, அந்தப் பகுதியில் எரிச்சல், வலி, சிறுநீர் கழிப்பது கஷ்டமாகிவிடுதல், நோய்த் தொற்று போன்றவை ஏற்படலாம். மேலும் சில நேரங்களில், சிறுவர்களுக்குப் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு, அந்த வயதிலேயே சுய இன்பப் பழக்கம் ஏற்படலாம்.

இதுவே வாய் வழிப் புணர்ச்சிக்கு ஒரு குழந்தை பழக்கப்பட்டு இருந்தால், வாந்தி, வாயில் புண் ஏற்படுதல், சாப்பிடாமல் இருப்பது, பால் போன்ற நீர் ஆகாரங்களைக் கண்டால் குமட்டல் போன்றவை ஏற்படும். நீலப் படங்களைப் பார்க்கவைப்பதன் மூலம் சிறார்களுக்குத் தூக்கம் இன்மை, மன எரிச்சல், நிலைகொள்ளாமை, கோபம், காரணம் இல்லாத அழுகை, உடல் வலி, விளையாட்டில் ஆர்வம் இன்மை, படிப்பில் பின்தங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தனக்கு ஏற்படும் வன்கொடுமைகளால் சிறார் அடையும் வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது. மனம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிற அளவுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்த ஆறா நினைவு, ஆளுமைப் பண்புகளைப் பாதிக்கலாம். ஒரு பால் உறவில் ஈடுபாடு, திருமணத்தின் மீது வெறுப்பு, தாம்பத்ய உறவில் ஈடுபாடு இன்மை, அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகள் எனப் பல பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும்தான்!'' என்கிறார் ஜெயந்தினி.

'சட்டம் என்று ஒன்று இருப்பதால்தான் நீதி என்பது ஓரளவாவது இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கிடைக்கின்றனவே தவிர, நீதி கிடைப்பதில்லை’ என்பார்கள். அது இந்த விஷயத்திலும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. இந்த வன் கொடுமைகளைச் சட்டபூர்வமாக எப்படி அணுகுவது? என்பதுபற்றி கூறுகிறார் கீதா ராமசேஷன்.

சிறார் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு எதிரான சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில் உறுப்பினராக ஆலோசனைகள் வழங்கியவர் இவர்.

''சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத் தனியாக எந்த ஒரு சட்டமும் இது வரை இல்லை. ஆனால், அது தொடர்பான மசோதாக்களை வடிவமைக்க சட்ட அமைச்ச கத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கற்பழிப்புக்கு உண்டான ஐ.பி.சி. சட்ட வரையறைகளைத்தான் இன்றும் இந்தக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.

இந்த வன்கொடுமைக் குற்றங்களை நாம் மூன்று தளங்களில் இருந்து அணுக வேண்டி இருக்கிறது.

முதலாவது, சாட்சி விசாரணை. ஒரு குழந்தையை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, குற்றச் சம்பவத்தை விசாரிப்பது என்பது மிகவும் அபாயகரமானது. அந்த வயதில் அந்தக் குழந்தையின் மனநலம்பற்றி நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆக, இந்த விசாரிப்புகளைத் தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும். அப்போதுதான் கூட்டம், போலீஸ் பற்றிய அச்சம் எதுவும் இல்லாமல் ஓரளவு தைரியமாக நடந்ததைச் சொல்லும் அந்தக் குழந்தை.



இரண்டாவதாக, நீதிமன்றத்தில் இந்த வழக்கை குறிப்பிட்ட வழியில்தான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை அனைத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி இருக்கிறது. நீதிமன்றங்களில் அந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், நீதிமன்றக் கட்டத்துக்கு முந்தைய காவல் துறையினரின் விசாரணைகளில் இதுபோன்ற வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை. அதுபோன்ற சமயங்களில், குழந்தைகள் நடந்ததைச் சொல்வதற்கு அச்சப்படலாம். சில உண்மைகளை மறைக்கலாம். மேலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் காவல் துறைப் பதிவுகளில் சில வேறுபாடுகள் இருப்பதும் தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். ஆக, இந்த விசாரணையை மிகவும் 'சென்சிட்டிவ்’ ஆக மேற்கொள்ள காவல் துறையினருக்கும் சில வழிமுறைகள் இருந்தால் நலம்.

மூன்றாவதாக, பாதுகாப்பு இல்லாத சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள்தான் அதிகமாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது? இன்னொரு பக்கம், ஒரு வீட்டில் தந்தையும், தாயும் பணிக்குச் சென்றுவிட, குழந்தையைத் தெரிந்தவர்களிடம் விட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளும் அதிகம் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்கவும் இந்த அரசு என்ன செய்யப்போகிறது?''

- கேள்விக்குறியோடு முடிக்கிறார் கீதா ராமசேஷன்!

திங்கள், 13 ஜூன், 2011

''மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருங்க...''

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிசமாக கரையும்போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் விதமாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்.

பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக்கலிங்கம்.

''மனிதனின் மனமே அவனை வாழ வைக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண்ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவைகளாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கிறது.



மனிதர்கள் பலவித குணங்களைக் கொண்டவர்கள். ஒரு வகையினர் எதிலும் தீவிரம் மற்றும் கோபம் கொள்பவர்கள். அடுத்த வகையினர் தங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், எண்ணங்களை வெளிப்படுத்தாதவர்களாக - முகமூடி அணிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிரிவில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். அடுத்து அறிவு, பதவி, பணம் படைத்திருந்தும் மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் இந்த மூன்று வகையாக இருக்கக்கூடாது!'' எனச் சொல்லும் சொக்கலிங்கம், அப்படிபட்டவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விளக்குகிறார்.

''இந்த மூன்று வகையினருக்கும் உயர் ரத்த அழுத்தம் (ரத்தக் கொதிப்பு), ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் (நீரிழிவு) அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு உருவாகும் மன அழுத்தம் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மூளை போன்ற கொலஸ்ட்ரால் அதிகம் கொண்டவற்றை சாப்பிடவில்லை என்றாலும், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். காரணம், மன அழுத்தம் காரணமாக கொலஸ்ட்ராலை கல்லீரல் தானே உற்பத்தி செய்துவிடும். இது போன்ற பாதிப்பு உள்ளவர்களைத்தான் திடீர் அதிர்ச்சி அதிகமாக பாதிக்கிறது.

அதிர்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு. அதிர்ச்சியால் இதயம் மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எக்காரணம் கொண்டும் மன அழுத்தம் ஏற்படக்கூடாது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதயத் துடிப்பு வழக்கமாக 70-லிருந்து படிப்படியாக 100, 120 என அதிகரித்து 200-ஐ கூடத் தாண்டக் கூடும். மேலும், ரத்த அழுத்தமும் கூடிவிடும். அதாவது, மன அழுத்தத்தின் மூலம் உருவாகும் கொலஸ்ட்ரால் அனைத்தையும் அதிகரித்து மனிதனை ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சிகரெட், பீடி, மதுபானங்களில் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுவது மாயை! இப்போது 20-25 வயது இந்திய இளைஞர்களைக்கூட மாரடைப்பு அதிகம் தாக்குகிறது. இது அமெரிக்கர்களை விட 4 மடங்கு, சீனாவைவிட 10 மடங்கு, ஜப்பானைவிட 20 மடங்கு அதிக பாதிப்பாகும். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள்!

மாரடைப்பைத் தடுக்க மன மகிழ்ச்சி முக்கியம். மலையே கவிழ்ந்தாலும் மகிழ்ச்சியைக் கைவிடக் கூடாது. வெற்றி அடைவது என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆனால், உண்மையில் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் வெற்றி.

தொழிலை சுமையாக நினைக்கக்கூடாது. 20 மணி நேரம் மன மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தாலும் பாதிப்பு இருக்காது. இதையே கஷ்டப்பட்டு 2 மணி நேரம் சுமையாக நினைத்து வேலை பார்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் வரும்.

மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி ஏற்படும்போது இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேக வேகமாக சுருங்கி விரியும். அப்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய் வேகமாக சுருங்கி விரியும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் வரவும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானமும் யோகாசனமும் நல்ல வழிகள். உடம்பில் எல்லா உறுப்புகளுக்கும் சக்தியைக் கொடுப்பது யோகாசனம். மூளைக்கு வலிமை சேர்ப்பது தியானம்.

மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சி இல்லாமல் உலகில் யாரும் வாழ முடியாது. பாசிடிவ் ஆக நினைக்கும்போது மூளை என்டாக்ரின் மற்றும் மெலட்டோனின் ஆகிய திரவங்களையும் கல்லீரல் நல்ல கொழுப்பையும் அதிக அளவில் சுரந்துவிடும். மன அதிர்ச்சி ஏற்படும்போது அதை உடல் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புகைப்பது மட்டும் அல்ல, புகைப்பவர் அருகில்கூட இருக்கவேண்டாம். வாழ்க்கை என்பது இனிய பயணம். அது பந்தயம் அல்ல. பந்தயம் என்றால் போட்டி பொறாமை வந்துவிடும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்கள், டிரேடர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிகமாக உடல் உழைப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

100 வருடங்கள் வாழ ஒரு மனிதன் வருடத்துக்கு 100 மணி நேரம் யோகாசனம், உடற்பயிற்சி செய்தால் போதும். அதாவது தினசரி 15-20 நிமிடம் இவற்றை மேற்கொண்டால் போதும். ரத்த அழுத்தம் 100-ஐ தாண்டாது. சர்க்கரை அளவு 100, கொலஸ்ட்ரால் அளவு 100-ஐ தாண்டாது. 100 வயதைத் தாண்டி வாழ வேண்டும் என்றால் உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதிலும் பாரம் இருக்கக் கூடாது!'' - முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

''மனமே பணம்!''

பங்குச் சந்தை மற்றும் ஃபண்ட் முதலீட்டில் லாபத்துக்கு சந்தையின் ஏற்றம் ஒரு காரணமாக இருக்கிறது. அதைவிட முக்கியக் காரணமாக இருப்பது முதலீடு செய்திருப்பவர்களின் புத்திசாலித்தனமான செயல்பாடு. அதற்கு அவர்களின் மூளையின் ஆற்றல்தான் காரணமாக இருக்கிறது. மனித உடல் எடையில் ஐம்பதில் ஒரு பங்குதான் மூளை!

மூளையின் ஆற்றலை எப்படி எல்லாம் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை சென்னையின் முன்னணி நரம்பியல் மருத்துவர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் சொல்கிறார்...

''குழந்தை, தாயின் கருவில் இருக்கும்போதே விநாடிக்கு 2,500 நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் உருவாகின்றன. தொடர்ந்து 90 நாட்களுக்கு நியூரான்கள் உருவாகும். மனித மூளை 1,400 கோடி நியூரான்களால் ஆனது. இது உலகில் இருக்கிற அணுக்களின் எண்ணிகையைவிட அதிகம். இந்த நியூரான்கள், அவற்றுக்கு சக்தியை அளிக்கும் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. மேலும், இந்த நியூரான்கள், ஜாதி, மதம், இனம், மொழி, வயது, பாலியல் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே அளவில்தான் இருக்கின்றன. எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு இணையாகப் பணத்தைச் சம்பாதிக்க மூளையின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நமக்குப் புற வாழ்வில் சந்தோஷத்தைக் கொடுப்பது பணம்; அக வாழ்வில் சந்தோஷத்தை கொடுப்பது மனம்!

கம்ப்யூட்டரைவிட மனித மூளை புத்திசாலியாக இருக்கிறது. எவ்வளவுதான் விஷயங்களை கற்றுக் கொண்டாலும், அடுத்தடுத்து கற்கவும், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் மூளையில் சில பகுதிகள் வெற்றிடமாக இருக்கும்!'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.

மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளையும் இங்கே விளக்குகிறார்.

''பணமும் மனமும் சேர்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. மூளையை மனது கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில், மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை மூளை பெற்றிருக்கவில்லை. மனிதனின் மிகப் பெரிய சாதனையாக பணம் சம்பாதிப்பது இருக்கிறது. அதற்கு மூளை ஆற்றலுடன் இருப்பது அவசியம். அதற்கு ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இருப்பது அவசியம். ஒருவர் பணம் சம்பாதிப்பதில் 100 சதவிகிதம் வெற்றி பெற முடியும். அதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மோசமான நண்பர்களின் நட்பை கைவிடுவதுதான் அதற்கு வழி. புகையிலை, மது, பான்பராக் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை மனத்தின் எண்ணங்களை மாற்றி மூளையின் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

அடுத்து மன அழுத்தம் ஏற்பட மிரர் நியூரான் என்ற பிரதிபலிப்பு நரம்பு செல்கள் காரணமாக இருக்கின்றன. அதாவது, கெட்டதைப் பார்த்தால் மூளை பாதிக்கப்படுவதோடு, நம் நடவடிக்கையும் மாறுகிறது. அந்த வகையில் பிறர் மது அருந்துவது, புகைப்பிடிப்பதைப் பார்ப்பதே நல்லதில்லை.

பூமிக்கு கீழே விளைகிற கிழங்கு வகைகள் மூலம் செய்யப்படும் உணவுகள் நாவிற்கு சுவையாக இருக்கும். ஆனால், அவை மூளைக்கு நல்லதில்லை. பூமிக்கு மேலே விளைகிற பச்சை காய்கறிகள் மூளைக்கு பலம் தரும். மூளையைப் பலமானதாக வைத்திருக்க உடலில் கொழுப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

மூளையின் ஆற்றலை அதிகரிக்க உடலுக்கு உடற்பயிற்சி அல்லது யோகாசனமும் மனதுக்கு தியானமும் செய்வது அவசியம். வயது வித்தியாசமின்றி அனைவரும், தினசரி குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்துக்கு ஒதுக்குவது அவசியம். இந்தப் பயற்சி மூளையின் செயல்பாட்டை முடுக்கிவிட்டு, அதன் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளையுடன் தொடர்புடைய எந்த வேலையையும் எளிதில் செய்யலாம். எந்த சவால்களையும் துணிச்சலாக சுறுசுறுப்பாக எதிர் கொண்டு சாதனைப் படைக்க முடியும். இதனால், தேவையில்லாமல் பதற்றம், மனச் சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். பொதுவாக, ஒரு மனிதன் நிமிடத்துக்கு 10 முதல் 12 தடவை சுவாசிக்கிறான். இதை உடற்பயிற்சி மற்றும் தியானம் மூலம் 6 முதல் 8 ஆக குறைத்துவிட்டால் நீண்ட காலம் மூளை பலத்துடன் வாழலாம்!'' எனச் சொல்லும் மருத்துவர் ஸ்ரீனிவாசன் இறுதியாகச் சொன்ன முத்தாய்ப்பு வரிகள்...

''மனம் ஒரு அஷ்டாவதானி. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைத்து செய்யக் கூடியது. அதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருப்பதுதான் அவசியம்!''

ஊற்றெடுக்கு​ம் நம்பிக்கை

வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்டு வாழ்ந்து, தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நூல்களையும் படித்தறிந்து வருகிறநம்பிக்கை முதல்வகை.
அறியாப் பருவம் தொட்டு அடிமேல் அடிவாங்கி, வாழ்க்கை தந்த பாடங்ளைப் படித்து, வாழ்வின் அனுபவங்களை வாங்கிச் செரித்து, புகழ் – இகழ், வெகுமானம் – அவமானம், மகிழ்ச்சி – துயரம் அனைத்தையும் கண்டறிந்து கடந்தும் நின்று, பட்டறிவில் வரும் நம்பிக்கை இரண்டாவது வகை.
கவியரசு கண்ணதாசன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். அனுபவங்களின் களஞ்சியமாய் வாழ்ந்தவர். அவரது திரைப்பாடல்களில் தனிப்பாடல்களில் – உரைநடைகளில் காணக்கிடைக்கும் வாழ்க்கை பற்றிய தெளிவுகளை இதற்குமுன் நமது நம்பிக்கை இதழ்களில் இரண்டொருமுறை பார்த்திருக்கிறோம்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பார்கள். தன் வாழ்வில் ஏற்பட்ட எத்தனையோ குழப்பங்களில் இருந்து கவியரசு கண்ணதாசன் மீன் பிடித்திருக்கிறாரோ இல்லையோ – தேனெடுத்திருக்கிறார்.
அனுபவித்தவற்றின் சாரத்தை, கண்ணீரின் ஈரத்தை – வாழ்வியல் ஞானமாய் வடித்துத் தந்தவர் அவர். தன் வாழ்வை அவர் திறந்த புத்தகமாய் வைத்ததே திசைகள் அனைத்தும் பாடம் படிக்கத்தான். திட்டமிடாமல் வாழ்ந்ததனாலேயே திட்டமிட்டு வாழச் சொல்லும் தகுதியை அவர் பெற்றார்.
“செல்லும் பயணத்தில் திட்டமில்லை என்று சொன்னால்
கல்லோடு முள்ளும் உன் காலை உறுத்திவிடும்!
நாளை அறிந்தவர்க்கும் நல்வழி கண்டவர்க்கும்
வேளை பிறப்பதுண்டு! விருந்தும் கிடைப்பதுண்டு!
கூத்தாட்டரங்கத்துக் கோமாளி போலிருந்தால்
பார்த்தால் சிரிப்பு வரும்! பசித்த பசி தீராது!” என்றார் கவியரசு கண்ணதாசன். இது அனுபவத்தின் தெளிவு. பட்டறிவின் விளைவு.
சரியான பின்பலமும், முறையான வழிகாட்டுதலும் இருந்தால் மட்டும்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்கிற எண்ணம், இன்றும் பலருக்கும் இருக்கிறது. தம்முடைய துறையில் துளியும் சிதறாத கவனத்துடன், முழு ஈடுபாடு கொண்டு திறம்பட உழைப்பவர்கள் ஜெயித்தே தீருவார்கள் என்பது கவியரசு கண்ணதாசனின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் நம்பிக்கை. அதையே அவர் உலகத்திற்கும் சொல்கிறார்.
“சத்தியத்தை உன்வீட்டுத் தலையணையில் வைத்திருந்தால்
தத்துவங்கள் காலடியில் தானாக வந்து நிற்கும்:
செய்வதைநீ செய்து திறமையுடன் வாழ்ந்திருந்தால்
தெய்வமெலாம் கைகட்டிச் சேவகமும் செய்திருக்கும்”
என்பது உழைக்கும் உள்ளங்களுக்குக் கவியரசர் உறுதிபடத் தருகிற உத்திரவாதம்.
இதற்கு, இன்னொரு கவிதையில், தன்னுடைய வாழ்விலிருந்தே உதாரணம் தருகிறார் அவர்.
“அறிவும் தெளிவும் ஆய்ந்திடும் பண்பும்
தணியாக கல்வித் தாகமும் விடுத்துக்
கற்றேன் சில நூல்: கற்றவைஎல்லாம்
மற்றவர்க்கெனவே வடித்து வைக்கின்றேன்.
பெற்றவை என்ன? போகும் புகழும்!” என்கிறார்.
அதனால்தான், வாழ்க்கை அவருக்கு விருதுகள் தந்தபோதும் வலிகள் தந்தபோதும், வாழ்க்கையை நிபந்தனையில்லாமல் நேசித்த மகத்தான கவிஞராய் விளங்கினார்.
இந்த உலகத்தை ஊன்றிக் கவனித்து மிக நுட்பமான பாடல் ஒன்றைக் கவியரசர் கற்றுக் கொள்கிறார். அதை நமக்கும் சொல்கிறார்.
ஆணவம் காரணமாகவே மனிதனுக்கு அழிவு வருகிறது. ஆணவத்தால் சிலரைக் குறைவாக எடைபோடுகிறார்கள். அவர்கள் ஜெயிக்கிறார்கள். ஆணவத்தால் சிலர் தம்மைத்தாமே அதிகமாக எடைபோடுகிறார்கள். அவர்கள் தோற்கிறார்கள்.
ஆணவமில்லாத இதயத்தில் அன்பு சுரக்கிறது. அன்பு பல வெற்றிகளை நிகழ்த்துகிறது. கவியரசர் குரலைக் கேளுங்கள்.
“வாழ்ந்து தாழ்ந்தோர் வரலாறு படித்தேன்
தாழ்ந்து வாழ்ந்தோர் சரித்திரம் பார்த்தேன்
ஏறும் போதே இறங்கிய சிலபேர்
ஏறாமலேயே இறந்தவர் சிலபேர்
ஏறிய இடத்தை இறுகப் பிடித்து
இறங்காமலேயே இருந்தவர் சிலபேர்
எத்தனை குதிரைகள்? எத்தனை வண்டிகள்?
எத்தனை யானைகள்? எத்தனை பூனைகள்?
இத்தனை பார்த்தவன் இன்னும் பார்க்கிறேன்.
மமதை என்பது மறையவே இல்லை
ஆணவம் என்பது அழியவே இல்லை
ஆணவம் ஒன்றேஆணுக்கு அவமென
காணும் போதே கனிவுறும் வாழ்க்கை:
சுத்த வீரனாம் தோல்வியைத் தழுவினான்.
கோழை என்றார்கள் குன்றத்தில் ஏறினான்”
இது தான் பார்த்த உலகம் பற்றிய கவிஞரின் சிந்தனைச் சாரம். தன்னுடைய எழுத்துக்களில் எத்தனையோ இடங்களில் மகாகவி பாரதியை ஒரு மகாகவியாய் கவியரசு கண்ணதாசன் சித்தரித்திருக்கிறார். ஆனால் ஒரு நம்பிக்கையாளனாய் பாரதியை அவர் அடையாளம் காட்டுகிற இடம் அற்புதமானது.
இன்று எத்தனையோ திறமையாளர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டாமல் காத்திருக்கிறார்கள். கேட்டால் உரிய வாய்ப்புகளோ போதிய அங்கீகாரமோ இல்லையென்று காரணம் சொல்கிறார்கள். தன்னை அங்கீகரிக்க ஆட்களில்லாத போது, அஞ்சாமல் படைப்புகளில் பாரதி ஈடுபட்டான். பிறகு அங்கீகாரம் தேடிவந்தது. இதை எல்லோருக்கும் தெரிந்த உவமையில் முதலில் சொல்கிறார் கண்ணதாசன்.
“பாட்டைக் கேட்டுப் பரவசப்பட்டு
கைதட்டுவோரைக் காணா நாளில்
தோன்றிய உணர்ச்சியைப் சுடராய் வடித்து
பிற்காலத்துப் பிள்ளைக்கு வைத்தான்
கும்பிடுவார் இன்றிக் கோயில் கட்டினான்:
கும்பிட இந்நாள் கூட்டம் திரண்டது!”
இதனை அடுத்துக் கவியரசு கண்ணதாசன் சொல்லும் உவமை நம்மை உலுக்கியெடுக்கிறது.
இருண்ட குகை ஒன்று அதற்குள் ஓவியன் ஒருவன் சிரமப்பட்டு ஓவியங்களை தீட்டுகிறான். யாரும் காணாமல் இருண்டிருக்கும் அந்தக் குகையில் வெளிச்சமில்லை என்று வருந்தவில்லை. பிற்காலத்தில் அந்த ஓவியம் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவி மக்கள் திரண்டு வர ஆரம்பித்தார்கள். சுற்றுலாத்துறை, அந்த ஓவியங்களை மக்கள் காண்பதற்காகவே விளக்குகள் அமைத்தது. விளக்கு வரும்வரை அந்த ஓவியன் காத்திருந்தால் அவன் தூரிகை ஈரம் படாமலேயே வாழ்வு முடிந்திருக்கும். பின்னாளில் புகழ் வருமா வராதா என்றெல்லாம் எதிர்பாராமல் வேலை செய்த ஓவியனாய் பாரதியை உருவகப்படுத்துகிறார் கவியரசு கண்ணதாசன்.
“ஒளி இலாக் குகையில் ஓவியம் தீட்டினான்
ஓவியமே இன்று ஒளிவிக்கானது”
இரண்டே வழிகளில ஓர் இமயக்கவிஞனின் வெற்றி ரகசியத்தை வெளிச்சமிட்டுக்காட்டி, உழைத்தால் தானாய் உயர்வு வரும் என்பதைக் கவியரசர் காட்டுகிறார்.
எல்லாவற்றையும் விட, இளைய தலைமுறையின் எதிர்காலம், இல்லங்களில் இருக்கும் சூழல்களைப் பொறுத்தே அமைகிறது என்பது அவந்தீர்மானமாய்த் தெரிவிக்கும் கருத்து.
குழந்தைகளை வளர்க்கும் போது கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.
“தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
நோயில்லாமல் காத்து வளர்த்தால்
நூறு வயது வரும்
நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ந்தால்
பாரில் உயர்ந்து விடும்.
பாலைப்போன்றபிள்ளை மனதில்
எதுவும் பதிந்து விடும்
பயந்து பயந்து வீட்டுக்குள் வைத்தால்
பயனின்றி மாறிவிடும்
அன்பை அதிகம் காட்டி வளர்த்தால்
அதுவும் அன்பாகும்
ஐந்து வயதில் கற்பவை எல்லாம்
ஆயுள் வரை வளரும்
பண்பாடுள்ள பிள்ளைகளைத்தான்
பாரதம் வேண்டுவது
பாரத நாட்டுத் தாய்மார்க்கெல்லாம்
வேறென்ன கூறுவது”
அப்படியானால் குழந்தை வளர்ப்பில் தந்தைக்குப் பங்கில்லையா? அதையும் சொல்கிறார் கவிஞர்.
“குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்
குடிக்கப் பழகிவிடும்
கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
குழந்தையும் கற்றுவிடும்
செல்லம் கொடுத்து வளர்ப்பதனாலே
தீமையும் வருவதுண்டு
தினமும் பிள்ளையை அடிப்பதனாலே
சொரணையும் போவதுண்டு:
தண்டவாளம் சரியாய் இருந்தால்
வண்டிக்கு ஆபத்தில்லை
தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
சேய்க்கொரு குற்றமில்லை”
இந்த வரிகள் ஒவ்வொன்றும் இல்லங்கள் தோறும் இடம்பெறவேண்டியவை.
இந்தப் பிரபஞ்சத்தைப் பரிசோதனைக் கூடமாகவும், தன் வாழ்வை பரிசோதனைக்குரியதாகவும் ஆக்கி, நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் வெல்லலாம் என்று தன் படைப்புகள் வழியே கானம்பாடும். வானம்பாடி கவியரசு கண்ணதாசன் நம்பிக்கையின் ஊற்றாய் நம்மை எப்போதும் குளிர்விக்கிறார். அவர் நிரந்தரமானவர்.