பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 14 ஜூன், 2011

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

சென்னையில், சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, நீலப் படங்கள் எடுத்த டச்சு நாட்டைச் சேர்ந்த வில்ஹெல்மஸ் என்பவனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை!

கடந்த வாரத்தில் நாளிதழ்களின் மூன்றாம் காலத்தில் சிறிய அளவில் வந்த செய்தி... பத்தோடு பதினொன்று எனச் சொல்லத்தக்க சாதாரணச் செய்திதானா? உங்கள் வீட்டில் பட்டாம்பூச்சியாக வளைய வரும் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒரு நாளேனும் கற்பனையாவது செய்திருக்கிறீர் களா? அது பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கும் என்ற அதிர்ச்சியை உங்களால் ஜீரணிக்க முடியுமா?

''மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல்ரீதியிலான தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, அதே அளவுக்கு ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஊடகங்களில் அதுபற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே இருப்பதால், இந்தப் பிரச்னை சமூகத்துக்கு அதிகமாகத் தெரிவது இல்லை!'' என்கிறார் சிறார் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படும் 'துளிர்’ அமைப்பின் களப் பணியாளர் நான்சி வெரோனிக்கா.

'' 'கஸ்டோடியல் வயலென்ஸ்’ முதற்கொண்டு பல நிலைகளிலும் பால் வேறுபாடு இன்றிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமைகளில் 12 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வழக்குகளாகப் பதிவாகின்றன!

தகாத இடங்களில் தொடுதல், தன் அந்தரங்கப் பகுதிகளைத் தொட வைத்தல், நீலப் படங்கள் பார்க்க வைத்தல் போன்ற பாலியல் வன்கொடுமை வகைகளோடு, தொழில்நுட்ப ரீதியிலான வன்கொடுமைகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இந்தக் குற்றங்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், அந்தச் சம்பவங்களைப்பற்றி தங்களின் பெற்றோரிடத்தில் சொல்ல முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட தந்தையே தன் மகளைச் சீரழித்த சம்பவம் செய்தியாக வந்தது. அந்தச் சிறுமி தன் தகப்பனைப்பற்றி பாட்டியிடம் சொல்லி இருக்கிறாள். அதற்கு அந்தப் பாட்டி, 'உங்க அப்பாதானே? இது சீக்கிரமா சரியாயிடும். சாமியை வேண்டிக்கோ’ என்று சொன்னாளாம். ஆக, 'இது தவறு’ என்று தெரிந்திருந்தும், அவர்கள் பொருளாதாரரீதியாகவும், மனரீதியாகவும் அந்தக் கொடூரனைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இந்தக் குற்றத்தை எதிர்த்து எங்கு செல்ல முடியும்?

ஒரு சிறுமி பள்ளி வாகனத்தில் ஏறாமல் அழுதுகொண்டு நின்று இருக்கிறாள். இதைப் பார்த்த ஒருவர் 'ஏன்?’ என்று கேட்டபோது அந்தச் சிறுமி, 'டிரைவர் மாமா என் பாவாடைக்குள்ளே கை விடுறார்’ எனச் சொல்லி இருக்கிறாள். அவருக்கு விபரீதம் புரிந்து இருக்கிறது. அந்தச் சிறுமியின் வீட்டினருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். வீட்டில் இருந்தவர்களோ, 'அவள் எப்பவுமே அப்படித்தான். ரெண்டு அடி போட்டு அவளை வேனில் ஏத்துங்க’ என்று அசட்டையாகக் கூறி இருக் கிறார்கள். ஆக, அந்தச் சிறுமிக்கு 'குட் டச், பேட் டச்’ போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்துதான் என்ன பயன்? பெற்றோர்களின் இத்தகைய புறக்கணிப்புதான் தவறுகள் தொடர்ந்து நடக்க இடம் தருகிறது!

இந்தக் கொடுமைகளை வீடுகளில் பேசுவதற்கான சூழ்நிலை நம் சமூகத்தில் இல்லை. ஒருவேளை குழந்தைகளே தவறைப் புரிந்துகொண்டு, பெற்றோரிடம் சொன்னாலும், 'நீ அப்படி நடந்துக்கிட்டு இருப்பே... அதனால அவங்க உன்கிட்ட இப்படி நடந்துக்கறாங்க’ என்று குழந்தைகள் மீதே பழியைத் திருப்பிவிடும் போக்கே இங்கு இருக்கிறது.

ஆக, நம் கண்முன்னே இவை நடந்தாலும், அவற்றைத் தட்டிக் கேட்க முடியாமல், நாம் அனைவரும் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம்!'' என்கிறார் நான்சி.

சிறார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா னால், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கு கிறார் குழந்தைகள் மனநல நிபுணர் மருத்துவர் ஜெயந்தினி.

''வயது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது ஆணா, பெண்ணா; ஒரு முறை நடந்த சம்பவமா அல்லது தொடர்ந்து நடைபெற்ற சம்பவமா; என்ன வகையான பாலியல் கொடுமை, 'யாரிடமாவது சொன்னால், கொலை செய்துவிடுவேன், மார்க் குறைத்துவிடுவேன்’ என்பது போல ஏதாவது மிரட்டப்பட்டார்களா? இவை எல்லாவற்றையும் கவனத்தில்கொண்டு தான் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கிறோம்.

பாலியல் வன்கொடுமைகளில் சிறார்களின் அந்தரங்க உறுப்புகள் கையாளப்பட்டு இருந்தால், ரத்தக் கசிவு, அந்தப் பகுதியில் எரிச்சல், வலி, சிறுநீர் கழிப்பது கஷ்டமாகிவிடுதல், நோய்த் தொற்று போன்றவை ஏற்படலாம். மேலும் சில நேரங்களில், சிறுவர்களுக்குப் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு, அந்த வயதிலேயே சுய இன்பப் பழக்கம் ஏற்படலாம்.

இதுவே வாய் வழிப் புணர்ச்சிக்கு ஒரு குழந்தை பழக்கப்பட்டு இருந்தால், வாந்தி, வாயில் புண் ஏற்படுதல், சாப்பிடாமல் இருப்பது, பால் போன்ற நீர் ஆகாரங்களைக் கண்டால் குமட்டல் போன்றவை ஏற்படும். நீலப் படங்களைப் பார்க்கவைப்பதன் மூலம் சிறார்களுக்குத் தூக்கம் இன்மை, மன எரிச்சல், நிலைகொள்ளாமை, கோபம், காரணம் இல்லாத அழுகை, உடல் வலி, விளையாட்டில் ஆர்வம் இன்மை, படிப்பில் பின்தங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தனக்கு ஏற்படும் வன்கொடுமைகளால் சிறார் அடையும் வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது. மனம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிற அளவுக்குச் செல்வார்கள். நாளடைவில் இந்த ஆறா நினைவு, ஆளுமைப் பண்புகளைப் பாதிக்கலாம். ஒரு பால் உறவில் ஈடுபாடு, திருமணத்தின் மீது வெறுப்பு, தாம்பத்ய உறவில் ஈடுபாடு இன்மை, அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகள் எனப் பல பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும்தான்!'' என்கிறார் ஜெயந்தினி.

'சட்டம் என்று ஒன்று இருப்பதால்தான் நீதி என்பது ஓரளவாவது இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கிடைக்கின்றனவே தவிர, நீதி கிடைப்பதில்லை’ என்பார்கள். அது இந்த விஷயத்திலும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. இந்த வன் கொடுமைகளைச் சட்டபூர்வமாக எப்படி அணுகுவது? என்பதுபற்றி கூறுகிறார் கீதா ராமசேஷன்.

சிறார் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு எதிரான சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில் உறுப்பினராக ஆலோசனைகள் வழங்கியவர் இவர்.

''சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத் தனியாக எந்த ஒரு சட்டமும் இது வரை இல்லை. ஆனால், அது தொடர்பான மசோதாக்களை வடிவமைக்க சட்ட அமைச்ச கத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கற்பழிப்புக்கு உண்டான ஐ.பி.சி. சட்ட வரையறைகளைத்தான் இன்றும் இந்தக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.

இந்த வன்கொடுமைக் குற்றங்களை நாம் மூன்று தளங்களில் இருந்து அணுக வேண்டி இருக்கிறது.

முதலாவது, சாட்சி விசாரணை. ஒரு குழந்தையை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, குற்றச் சம்பவத்தை விசாரிப்பது என்பது மிகவும் அபாயகரமானது. அந்த வயதில் அந்தக் குழந்தையின் மனநலம்பற்றி நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆக, இந்த விசாரிப்புகளைத் தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும். அப்போதுதான் கூட்டம், போலீஸ் பற்றிய அச்சம் எதுவும் இல்லாமல் ஓரளவு தைரியமாக நடந்ததைச் சொல்லும் அந்தக் குழந்தை.



இரண்டாவதாக, நீதிமன்றத்தில் இந்த வழக்கை குறிப்பிட்ட வழியில்தான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை அனைத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி இருக்கிறது. நீதிமன்றங்களில் அந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், நீதிமன்றக் கட்டத்துக்கு முந்தைய காவல் துறையினரின் விசாரணைகளில் இதுபோன்ற வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை. அதுபோன்ற சமயங்களில், குழந்தைகள் நடந்ததைச் சொல்வதற்கு அச்சப்படலாம். சில உண்மைகளை மறைக்கலாம். மேலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் காவல் துறைப் பதிவுகளில் சில வேறுபாடுகள் இருப்பதும் தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். ஆக, இந்த விசாரணையை மிகவும் 'சென்சிட்டிவ்’ ஆக மேற்கொள்ள காவல் துறையினருக்கும் சில வழிமுறைகள் இருந்தால் நலம்.

மூன்றாவதாக, பாதுகாப்பு இல்லாத சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள்தான் அதிகமாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது? இன்னொரு பக்கம், ஒரு வீட்டில் தந்தையும், தாயும் பணிக்குச் சென்றுவிட, குழந்தையைத் தெரிந்தவர்களிடம் விட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளும் அதிகம் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்கவும் இந்த அரசு என்ன செய்யப்போகிறது?''

- கேள்விக்குறியோடு முடிக்கிறார் கீதா ராமசேஷன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக