பிரபலமான இடுகைகள்

புதன், 15 ஜூன், 2011

சீட் பெல்ட் அது லைஃப் பெல்ட்!

இந்தியாவில் ஏபிஎஸ், ஈபிடி, காற்றுப் பைகள் என நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஆனால், கார் விபத்துகள் மூலம் நடக்கும் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. பாதுகாப்பான நவீன கார்களில் பயணம் செய்தும் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் காரணம், சீட் பெல்ட் அணியாததுதான்! கார் விபத்துகளில் நடக்கும் உயிரிழப்புகளில் 95 சதவிகித உயிரிழப்புகள் சீட் பெல்ட் அணியாததாலேயே நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரேஸ் வீரர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு காரை டெஸ்ட் செய்வதற்காக கொடைக்கானல் சென்றார். எப்போதுமே சீட் பெல்ட் அணிந்தபடி கார் ஓட்டும் அவர், அன்று சீட் பெல்ட் அணியாமல் காரை அதிவேகமாக ஓட்ட, மலைப் பாதையில் இருந்து கார் சரிந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால் கை, கால்கள் அசைக்க முடியாமல் போய்விட்டன. இன்று வீல் சேரில்தான் அவருடைய வாழ்க்கை நகர்கிறது. சீட் பெல்ட் அணிந்திருந்தால், அன்று அவர் சின்ன காயங்களுடன் வெளியே வந்திருக்க முடியும்.







''இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கார் ஓட்டுபவர்களுக்கு சீட் பெல்ட் முக்கியம். கார் வேகமாக ஓட்டியபடி ஏதாவது தடுப்பில் போய் முட்டும்போது, கார் அந்த இடத்திலேயே நின்றுவிடும். ஆனால், காரைவிட வேகமாகப் பயணிக்கும் நாம், காருக்கு வெளியே தூக்கி எறியப்பட்டு காயங்கள் ஏற்படும். இந்த உயிரிழப்பு மற்றும் காயங்களைத் தவிர்ப்பதற்காகத்தான் சீட் பெல்ட்.

சமீபத்தில் சிவக்குமார் என்பவர் ஓசூரில் இருந்து கோயம்புத்தூருக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்றார். திருப்பூர் அருகே வரும்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தூக்கி வீசப்பட்ட சிவக்குமாரின் தலை, காரின் முன்பக்க விண்ட் ஷீல்டின் மீது மோதியது. இதில் சிவக்குமாரின் கழுத்தில் பயங்கர வலி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு இரண்டாவது கழுத்து எலும்பு முறிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீட் பெல்ட் அணிந்திருந்தால், அவருக்கு இந்த எலும்பு முறிவே ஏற்பட்டிருக்காது. கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்தபின் அவரது கழுத்து எலும்பு சரி செய்யப்பட்டது.

சீட் பெல்ட் அணியாமல் விபத்துக்கு உள்ளாகும்போது தலை, முதுகெலும்பு, மார்பு போன்ற பகுதிகளில் அடிபடும். கை, கால்கள் முடங்கிப் போய்விடும். லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது என்பது மிகவும் சிரமம். காரில் காற்றுப் பைகள் இருக்கிறது, அவை காப்பாற்றி விடும் என்றால், அதற்கு சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே காயத்தில் இருந்து தப்பிக்க முடியும். சீட் பெல்ட் சரியாக இறுக்கமாக அணிய வேண்டும். குழந்தைகளைக் எக்காரணம் கொண்டும் முன் பக்க இருக்கையில் உட்கார வைக்கக் கூடாது. பின் இருக்கையில் பின் பக்கம் திரும்பியவாறு சைல்டு சீட்டில் உட்கார வைக்க வேண்டும்!'' - ஆபத்துக்களைத் தடுக்க அக்கறையோடு சொல்கிறார் குளோபல் மருத்துவமனையின் நரம்பியல், மூளை மற்றும் முதுகுத் தண்டுத் துறைத் தலைவர் டாக்டர் ஜே.கே.பி.சி.பார்த்திபன்.

சீட் பெல்ட் அணிவது ஒன்றும் சிரமமான வேலை இல்லை. ஆனாலும், அசமந்தமாக நாம் அதனைத் தவிர்ப்பது விதியை விரும்பி அழைப்பதற்குச் சமமானதுதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக