பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மகாகஞ்சன் முல்லா நஸ்ருதீன்

முல்லா நஸ்ருதீன் அவரது கிராமத்தில் மகாகஞ்சன் என்று பெயர் பெற்றிருந்தார்.

எல்லோரும் முல்லா நஸ்ருதீன் மகாகஞ்சன் என்று சொல்லச் சொல்ல அவருக்கு கர்வமாக இருந்தது. அந்த மிதப்பிலேயே அவர் இருந்து வந்தார். நாளடைவில் மக்கள் பக்கத்து ஊர்க் கஞ்சனைப் பற்றி பேச ஆரம்பித்தனர். அவன்தான் மாபெரும் கஞ்சன் என்று பேச ஆரம்பித்தனர்.

இதைக் கேட்டதும் நஸ்ருதீனுக்கு பொறாமை ஏற்பட்டது. அவரும் அந்த கஞ்சனை பார்க்க விரும்பினார். அவன் எப்படி தன்னை விட பெரிய கஞ்சனாக இருப்பான் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அவரை சந்திக்கச் செல்லும்போது வெறும் கையில் போகலாமா? ஒரு காகிதத்தில் ஆப்பிள் பழத்தை வரைந்து ஒரு பையினுள் போட்டு எடுத்துச் சென்றார்.

அந்த கஞ்சனின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். கஞ்சனின் மகனான சிறுவன் கதவைத் திறந்தான். யாரென்று கேட்டதும் தான் பக்கத்து ஊரில்தான் இருப்பதாகவும், அவனது தந்தையை பார்த்துச் செல்ல வந்ததாகவும் நஸ்ருதீன் கூறினார்.

உடனே வீட்டின் உள்ளே அழைத்துச் சென்ற அந்த சிறுவன், என் தந்தை வெளியில் சென்றுள்ளார், திரும்பி வர நேரமாகும். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்றான். ஒன்றுமில்லை, நான் இன்னொரு நாள் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன நஸ்ருதீன் தான் கொண்டு வந்திருந்த பரிசான ஆப்பிள் பழத்தின் படத்தை எடுத்துக் கொடுத்தார்.

வந்துதான் வந்தீர்கள், வெறுங்கையில் அனுப்ப மாட்டேன், என் தந்தையின் சார்பில் இந்த பரிசை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னான் அந்த சிறுவன். பையை திறங்கள் என்று சொன்ன அவன் கைகளால் காற்றில் மாம்பழ உருவத்தை செய்து அந்த பையினுள் போட்டான்.

வீட்டை விட்டு வெளியேறிய நஸ்ருதீன் சிந்தனையில் ஆழ்ந்தார். ஊர் மக்கள் சொன்னது சரிதான் போலிருக்கிறது. நாமாவது ஒரு காகிதம், வண்ணம் செலவு செய்து பரிசை எடுத்துச் சென்றோம். இந்த சிறுவன் வெறும் காற்றில் மாம்பழத்தை உருவாக்கித் தந்துவிட்டானே. இவனே இப்படி என்றால் இவனது தந்தை எப்படி இருப்பான். இவ்வாறு அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அங்கே, மாபெருங்கஞ்சன் வீட்டிற்கு திரும்பினான். நடந்தது என்ன என்று கேட்டறிந்தான். பின்னர் அந்த சிறுவனின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்ட அவன் கோபத்தில் கத்தினான். “ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீ என் சொத்தையே அழிச்சிருவடா. கொடுத்துதான் கொடுத்த இவ்வளவு பெரிய மாம்பழத்தை யார் கொடுக்கச் சொன்னது? சின்னதாக கொடுத்திருக்கலாம் இல்லையா?“

பணிவும் மூர்க்கமும்


அன்றும் அதே மூர்க்கத்துடன் கடைக்காரர் கையிலிருந்து பத்திரிக்கைப் பிடுங்கிச் சென்றான் ..அந்த குமார்..


கடை பையன்...என்ன அண்ணாச்சி நீங்க..?


எவ்வளவு பணிவா..அவனுக்கு வணக்கம் சொல்றிங்க..


அதுக்கு அவன் பதில் வணக்கம் சொல்றான னா...இல்ல..


சரி.. அது தான் போகட்டும் னா .. பதிலுக்கு...ஒரு சின்ன சிரிப்பு கூட அவன் மொகத்துல இல்ல..


அத விட்டுத் தள்ளுங்க..நீங்க எவ்வளவு மரியாதயா அவன் கைல பேப்பர் குடுக்குறிங்க..


அதாவது கொஞ்சம் மெதுவா எடுக்கலாம் ல....அதென்ன... .வெடுக்குனு புடுங்குறது..?


சரி..காசாவது உங்க கைல தரலாம் ல ..அதென்ன ஒங்க மூஞ்சில எறியிற மாதிரி வீசிட்டுப் போறான்..


அதுக்கும் வெக்கம் இல்லாம ..தேங்க்ஸ் ன்னு சொல்லணுமா..எனக்கு கேவலமா இருக்கு..ஒங்கள நெனச்சா..




ஒண்ணு சொல்றேன் கேளுங்க..


நாளைக்கு அவன் காச வீசுனா...நீங்களும் பேப்பர் ர அவன் மூஞ்சில வீசி எறியணும்..புரியுதா..


மௌனமாகப் பார்த்த கடைக்காரர்..சொன்னார்,,


தம்பி..ஒனக்கு சின்ன வயசு..


அது தான் பொசுக்கு பொசுக்கு ன்னு கோவம் வருது..




ஒண்ணு புரிஞ்சிக்க..


நான் என்ன பண்ணினாலும்..அவன என்னால நகரிகமுள்ளவனா மாத்த முடியாது..




அதே மாதிரி..அவன் என்ன பண்ணினாலும் என்ன அவனால..முரடனா மாத்த முடியாது..


அவோனோட மூர்க்கத்தனம் ..என்னோட பணிவான சுபாவத்த எதுவும் பண்ணிற முடியாது...பண்ணவும் விட மாட்டேன்..


இந்த விசயத்துல..நான் அவனா மாற விரும்பல..நான் நானாகவே இருந்துட்டுப் போறேன்..


அவன் அவனாகவே இருக்கட்டும்..


நல்ல விஷயம் னா அவன்கிட்ட இருந்து கத்துக்கலாம்


உப்பு பெறாத விஷயத்த..நம்ம நல்ல கொள்கைய விட்டுக்கொடுத்து கத்துக்கணுமா..சொல்லு..




அண்ணாச்சி கடைய்ல ..இன்னும் ஏன் இவ்வளவு கூட்டம்..அலை மோதுது ன்னு..இப்ப தான் அந்த பையனுக்கு புரிய..ஆரம்பிச்சது..




நல்லவைகளைக் கற்றுக் கொள்வோம்


அல்லவைகளை விட்டுத் தள்ளுவோம்

சனி, 27 ஆகஸ்ட், 2011

மாரடைப்புக்கு மகத்தான யோசனைகள்!

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றால், மீளமுடியாத கடனில் தவிக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு, இன்று மாரடைப்பு சிகிச்சைக்கான செலவுத் தொகை நடுத்தரவர்க்கத்தினரின் நெஞ்சை அழுத்துகிறது. மாரடைப்பினால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி, சிகிச்சை பில்லை பார்த்து மறுபடியும் அட்மிட் ஆகும் அளவுக்கு சேமிப்பும், கையிருப்பும் கரைந்து கடனில் மூழ்க வைத்துவிடுகிறது. இப்படி நோய்களிலேயே அதிக அளவு செலவு வைப்பது மாரடைப்புக்கான சிகிச்சைதான். இந்த நிலையை தவிர்க்க ஒரே வழி மாரடைப்பு வராமல் தடுப்பதுதான்!

'மன மகிழ்ச்சி, சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி இவைதான் இதயத்தை காக்கும் மூன்று மந்திரங்கள்’ என்கிறார் சென்னையின் முன்னணி இதய நிபுணர் டாக்டர் வி.சொக்கலிங்கம்.


'முன்பெல்லாம் 40 வயதானவர்கள்தான் ரத்தம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போதோ 30 வயதை தாண்டுவதற்குள், கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தத்திற்காக பரிசோதிக்க வேண்டிய நிலை. இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கு, முக்கிய காரணமே, மாறிவரும் நம் வாழ்க்கை சூழல்தான்.
வாய்க்கு ருசி என்று, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை வெளுத்துக் கட்டுகிறோம். உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போகும்போது, சாப்பிட்ட உணவு எப்படி ஜீரணமாகும்? வீட்டு வாசலைத் தாண்டியவுடன், பக்கத்து தெருவுக்குகூட ஆட்டோவில் பறக்கிறோம். இவையெல்லாம் முதலில் தவிர்க்கப்பட வேண்டும்.

அலுவலகத்தில் மற்றவர்களின் ஏளன பேச்சுக்கு ஆளாகும்போது, அடுத்தவர்களைவிட சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்கிற உத்வேகம் அதிகரிக்கும்போது, மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே நாளடைவில் மாரடைப்புக்கு காரணமாகி விடும். பெரும்பாலான நோய்களின் நிவாரிணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மேலும் அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, உடல் பருமன், குறிப்பாக ஆப்பிள் வடிவ தொப்பை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்றவர், வராமல் தடுக்கும் வழிகளையும் விளக்கினார்.

''உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். அவ்வப்போது சில நிமிடம் காலார நடை போடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!''


இதமான உணவு!

தவிர்க்க வேண்டியவை:

நெய், தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, ஐஸ் கிரீம், சாக்லேட், ஊறுகாய், முட்டை மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டின் ஈரல், மூளை.

மிதமான அளவு:

முட்டையின் வெள்ளைக் கரு, கோழி இறைச்சி (வாரம் இரு முறை), மீன், மட்டன் அல்லது சிக்கன் சூப் (வாரம் மூன்று முறை)

வெளுத்து கட்ட:

பூண்டு, வெங்காயம், கீரை வகைகள், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், முள்ளங்கி, அனைத்து பழ வகைகள்.

நீரிழிவு பாதிப்பா... நோ...

மாம்பழம், பலாப்பழம் போன்ற அதிக இனிப்பு உள்ள பழங்கள்.

இந்த உணவு முறையை பின்பற்றினாலே போதும். ஓரே ஆண்டுக்குள் இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பு குறைந்து மாரடைப்பு தடுக்கப்பட்டுவிடும்.

"ரௌத்திரம் பழகு"



"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்."

அச்சப்படவேண்டிய விடயங்களுக்கு அஞ்சாதிருத்தல் அறிவற்றசெயல் எனத் திருக்குறள் வலியுறுத்தியது .
அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு எனப் பெண்ணுக்கு அறிவற்றுப் பேதையாய் இருத்தலே அழகு எனச்சொல்லியே வளர்த்தது பழஞ்சமூகம் .மூதோர் சொன்னதன் பொருளறியாமல் , அதனுள் தன் அகந்தையை நுழைத்த பழம் பேய்களை அடித்தோட்ட வந்த சவுக்காய் பாரதி சொன்னான் "அச்சம் தவிர் !! " .
அச்ச்சந்தவிர்த்தவன் என்ன செய்வான் ?

சிதையா நெஞ்சுகொள்

செய்வது துணிந்து செய்

தீயோர்க் கஞ்சேல்

தொன்மைக் கஞ்சேல்

நேர்படப் பேசு

கொடுமையை எதிர்த்து நில்


சாவதற்க் கஞ்சேல்

நையப் புடை

நொந்தது சாகும்

பேய்களுக் கஞ்சேல்

போர்த்தொழில் பழகு

இவையெல்லாம் கைவர வேண்டுமா ...? "ரௌத்திரம் பழகு !! " என்கிறான் பாரதி .

ரௌத்திரம் என்பது என்ன ?

தனக்கும் , கண் முன்னே பிறர்க்கும் இழைக்கப்படும் கொடுமைக்கண்டும் எழாதிருப்பவன் பேடி .
எதிர்க்கும் துணிவின்றி தன்னுள்ளே உழன்று தன்னைத்தானே அழித்துக்கொள்ளச் செய்வது ஆத்திரம் ...சினம் .

அநீதியைக் காணும்பால் பொங்கியெழுந்து தட்டிக் கேட்பதே ரௌத்திரம் !!
ஆத்திரம் அறிவற்றது , விவேகத்துடன்கூடிய அழுத்தமான வெளிப்பாடே ரௌத்திரம் !!

ரௌத்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் உயிரணுவிலும் இருக்கவேண்டும். அதிலும் பெண்ணுக்கு ரௌத்திரமேன்பதே உடுக்கை !!

பிறந்த நன் நாட்டையும் தாயென்பார் , தெய்வமெலாம் பெண்ணென்பார். பெண்ணுக்கிழைக்கும் கேடுகளோ மிகப்பல .
இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி ? ஓடி விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைக்கும் ரௌத்திரம் பயிற்றுவிக்கிறான் பாரதி !!

" பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா ,
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா .

தேம்பியழுங் குழந்தை நொண்டி ,- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா . "

மனிதா நீ மனிதனாய் வாழவேண்டுமா.. மனிதத்துடன் வாழவேண்டுமா..?
பாரதி வழியில் " ரௌத்திரம் பழகு "

புதன், 24 ஆகஸ்ட், 2011

உடல் எடையை குறைக்க வேண்டுமா.... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா?? படியுங்கள்.. சாரி.. குடியுங்கள்.

என்ன நண்பர்களே.... தலைப்பில் ஏதோ ''குடியுங்கள்''

என்று இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா!!...?

ஆம் இந்த பதிவு குடிப்பதைப் பற்றிதான். பச்சை தேயிலையின் (Green tea) மகிமைகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.காபி அல்லது தேநீரை சரியான நேரத்தில் குடிக்காவிட்டால் நம்மில் சில பேருக்கு வேலையே ஓடாது. தேநீரைப் பற்றிய சீன பழமொழியைப் பாருங்கள்.

‘’மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, ஒரே ஒரு நாள் கூட தேனீர் பருகாமல் இருக்க இயலாது.’’ - (சீன பழமொழி)

சீனாவில் பச்சை தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் உள்ளது. 4700 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை ஆண்ட பேரரசர் ஷினாங் தன்னுடைய The Divine Farmer's Herb-Root Classic என்ற தன்னுடைய நூலில் பச்சை தேயிலையின் சிறப்புக்களை கூறியுள்ளார்.


மெல்ல மெல்ல சீன மக்கள் தினமும் தேனீர் பருகும் பழக்கத்தை கொண்டதால், பச்சை தேயிலையை பயிரிட தொடங்கினர். மூன்றாம் நூற்றாண்டில் இருந்து அது மக்கள் அன்றாட வாழ்வில் குடிக்கும் பானமாக மாறியது. இன்றோ, சீனாவில் நூற்றுக்கணக்கான பச்சை தேநீர் வகைகள் பயிரிடப்படுகின்றன.





35 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பச்சை தேயிலை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் இந்தியா, இந்தோனேஷியா, கொரியா, நேப்பால், இலங்கை, தைவான், மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் முன்ணனியில் உள்ளன.


ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பச்சை தேநீரை நீண்ட நாள் அருந்துவோரை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் சில உண்மைகள் வெளிவந்துள்ளன.


உதாரணமாக, 1994 இல் தேசிய புற்றுநோய் நிறுவனம் தனது பத்திரிக்கை செய்தியில் (journal) பச்சை தேயிலை அருந்தும் சீன ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் உணவுக்குழாய் புற்றுநோய் ஆபத்து குறைவதாக அறிவித்துள்ளது.


பர்டியூ பல்கலைகத்தை (University of purdue) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பச்சை தேநீர் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இதை தவிர மோசமான (LDL) கொழுப்பை குறைத்து நல்ல (HDL) கொழுப்பின் விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.


பச்சை தேயிலையின் வகைகள்
கமீலியா சினென்சிஸ் (camellia sinensis) என்னும் பச்சை தேயிலை செடியின் மூன்று முக்கிய வகைகள் இந்தியாவில்(அசாம்) மற்றும் சீனாவில் விளைகின்றன. (சிறிய, பெரிய, கலப்பின வகைகள்)


சீனாவில் விளையும் தேயிலை சிறு இலைகள் கொண்டது மற்றும் உயரமான இடங்களில் நன்கு வளர கூடியது. இந்திய தேயிலையோ, பெரிய இலைகளை கொண்டது மற்றும் குறைந்த உயரத்தில் நன்கு வளர கூடியது. கலப்பின வகைகள் இந்த இரண்டு வித குணங்களையும் கொண்டதாக விளங்குகின்றன.


சீனாவில் இருந்து ஜப்பானிற்கு…………….
NARA காலத்தில் (710-794) புத்த துறவிகளால் சீன விஜயம் செய்த போது பச்சை தேயிலை விதைகள் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜப்பானின் தேயிலை தொழிற்சாலை துறவி ஈசாயால் (Eisai) கோவில் நிலத்தில் 1191 ல் தொடங்கி வைக்கப்பட்டது.


பச்சை தேயிலையில்......அப்படி என்ன விசேஷம்?
பச்சை தேயிலையில் கேட்ச்சின் (catchins) பாலிபினால்கள்(polyphenols), எபிகேலோகேட்ச்சின் கேலட் (epigallocatechin gallete-EGCG) போன்ற பொருட்கள் உள்ளன. இவைகள் பச்சை தேயிலையின் மருத்துவ குணங்களுக்கு காரணங்கள் ஆகும்.

பச்சை தேயிலை தூள் உற்பத்தி - ஓர் அறிமுகம்




பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை
சாகுபடிக்கு பொருத்தமான காலநிலையும் , குறைந்த பட்ச மழையும் (114.3-127) வேண்டும். தேயிலை கடல் மட்டம் மேலே 7,218.2 அடி (2,200 மீ) வரை பயிரிடப்படுகிறது.










ஒரு ஏக்கருக்கு 681 கிலோ தேநீர் இலைகள் பறிக்க முடியும். கைகளால் பறிப்பதாக இருந்தால் ஏக்கருக்கு இரண்டு தொழிலாளர்கள் தேவைபடுவார்கள். தேயிலை செடிகள் பொதுவாக அதன் வளர்ச்சியைப் பொறுத்து ஐந்து முதல் பத்து நாட்களிள் பறிக்கலாம்.




உலர்ந்த நிலையில் பச்சை தேயிலை இலைகள்



உலர்த்துதல்
தேயிலை இலைகள் பறித்த பிறகு அவை நொதியாவதை (Ferment) தடுக்க உலர்த்தப் பட வேண்டும். இதை சரிவர செய்ய இயந்திரங்கள் வந்து விட்டன.






பச்சை தேயிலை தரம் என்பது நல்ல தரமான தேயிலை இலைகளை உபயோகிப்பதை பொருத்து இருக்கிறது. பாக்கெட்டில் அடைப்பதற்கு முன் அவை பல தரகட்டுபாடு அளவுகோளுக்கு உட்படுத்தப் படுகிறது. இறுதியாக தேயிலை தூள் அளவு, வடிவம், மற்றும் தூய்மை ஆகிய பண்புகளை கொண்டு அவை தரவரிசை படுத்த படுகின்றன.


உதாரணமாக ஜப்பனால் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை இலைகளின் மாதிரிகள் அவற்றின் பல்வேறு பண்புகள் ஆய்வுக் உட்படுத்தபடுகின்றன. இலைகள், தண்டுகள், ஈரப்பதம், உள்ளடக்கம், நறுமணம், சுவை, மற்றும் வண்ணம் ஆகிய அனைத்தின் தரமும் ஆராயப்படுகின்றன. இந்த சோதனைகளை சரிவர கடந்தால் மட்டுமே தேயிலை தூள்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப் படுகிறது.




பச்சை தேநீரை தொடர்ந்து அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள்




புற்றுநோய் உருவாக்கூடிய செல்களின் வளர்ச்சியை (ஆரோக்கியமான திசுக்களுக்கு பாதிப்பும் இல்லாமல்)தடுக்க உதவுகிறது.


எல்.டி.எல்(LDL)கொழுப்பின் அளவை குறைக்கும் திறன் நிறைந்தது.


இரத்த கட்டிகளை (blood clots) உருவாகுவதை குறைக்கிறது.


இரத்த உறைவு (இரத்த கட்டிகளுடன் உருவாக்கம்) குறைக்கபடுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் நிகழ்வுகள் பெருமளவு சரிகிறது.


உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


பாக்டீரியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் அழிக்கின்றது.


சர்க்கரை நோயை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.


வாய் துற்நாற்றத்ததை தடுக்கிறது.


மாச்சா (macha) வகையை சேர்ந்த பச்சை தேயிலையில் உள்ள முக்கியமான வைட்டமின்கள் (சி, பி,இ), ஃப்ளோரைடு (பல் சொத்தையை தடுக்கிறது), அமினோ அமிலங்கள் (இரத்த அழுத்தத்தை குறைக்க), மற்றும் பாலிசாக்கரைடுகள் (இரத்ததில் சர்க்கரையின் அளவை குறைக்க) பயன் படுகிறது.


மேலும் இதில் epigallocatechin gallate (EGCG) உள்ளதால் நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant) ஆகவும் செயலாற்றுகிறது. இது புற்றுநோயை எதிர்க்கும் தன்மையை தருகிறது.


மனதின் உற்சாகத்தை அதிகரிக்கரிக்கிறது.


மன அழுத்தம் ஏற்பட கூடிய ஹார்மோன் அளவுகளை குறைக்கிறது.


எச் ஐ வி நோயாளிகளிள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


பார்க்கின்சன் நோய் மற்றும் குறுகிய கால மறதி ஆகியவற்றை குறைக்க பயன்படுகிறது.


எலிகளில் நடந்த பரிசோதனைகளில் தடங்கலான தூக்க மூச்சின்மை (obstructive sleep apnea) தொடர்பான சிகிச்சைக்கும்….


முடக்கு வாதம் சிகிச்சைக்காகவும்


உடல் எடையை குறைக்கவும் என இவற்றின் பயன்பாடுகள் நீள்கின்றன.


பச்சை தேயிலையின் நன்மைகளினால் ஈர்க்கப் பட்டதால் தான் என்னவோ அவற்றில் கிரீம்களிள் இருந்து deodorant வரை சந்தையில் வர தொடங்கி உள்ளன.


என்ன நண்பர்களே....... பச்சை தேநீரை பருக கிளம்பி விட்டீர்களா....!!

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஆரோக்கிய உடம்பே ஆண்டவனின் சந்நிதி!

''ஆரோக்கியமும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. இறைவழிபாட்டில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது நம்மை அறியாமலேயே துர்க்குணங்கள் வெளியேறிவிடுகின்றன. தூய்மையான உள்ளம் கடவுள் வாழும் இல்லம் அல்லவா?

விரதம், தியானம், யாத்திரை, உணவுக் கட்டுப்பாடு என்கிற ஆன்மிக வாழ்க்கைமுறையே உடல் ஆரோக்கியத்துக்கான வழி! எனவே, வாழ்வின் ஆதாரமாக விளங்கும் உடலை பேணிக் காப்பதே, ஆன்மிகச் சேவைதான்!'' - எளிமையாகப் பேச ஆரம்பிக்கிறார் 'முதியோர் சிறப்பு மருத்துவர்’ வி.நடராஜன்.

''விரத நாட்களில், அசைவ உணவு வகைகளை அறவே தவிர்த்து விடுகிறோம். இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரிப்பதால், மனம் அமைதியாகி நல்ல விஷயங்களில் மட்டுமே கவனம் செல்கிறது.

பக்கத்துத் தெருவில் இருக்கும் பலசரக்கு கடைக்குக்கூட பைக்கிலேயே சென்று வருகிற அளவுக்கு ஊரும் உலகமும் நவீன மயமாகிவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே இருந்தபடி, உடம்பையும் பிணியையும் வளர்த்து அவதிப்படுபவரை அமைதிப் படுத்தி ஆரோக்கிய நிலைக்கு அழைத்துச் செல்வதுதான் பக்தி. அந்த வகையில், பழநி மலையானைத் தரிசிக்க பரங்கிமலை பக்தனை பாதயாத்திரை செல்ல வைக்கிறது, அது!

வழிபாட்டு முறைகளில் மவுன விரதமும் ஒன்று. 'மோனம் என்பது ஞான வரம்பு’ என்கிறார் ஒளவையார். புராண- இதிகாசங்கள் அனைத்திலும் வாழ்வியல் தத்துவம் ஒளிந்திருக்கும். சிவாலயங்களில், கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசு வதே இல்லை. எல்லாமே மவுன மொழியான சைகை மொழிதான். எனவேதான் 'ஊமைத்துரை, மவுனசாமி’ என்றெல்லாம் இவருக்குப் பெயர் உண்டு! உயிர்ச் சக்தியான பிராண வாயுவைச் சமன்படுத்தும் மூச்சுப் பயிற்சியானது ஆரோக்கியத்துக்கும் ஆயுள் நீட்டிப்புக்குமான பயிற்சி முறை! தேவையற்ற பேச்சால், கரையும் பிராண சக்தியை உள்ளிருத்திப் பயன் தருவதே மவுன விரதம்!

'வேலை, வேலை’ என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை... வார விடுமுறையில், நன்றாக ஓய்வெடுத்து வீட்டைச் சுத்தம் செய்து சந்தோஷம் அடைவீர்கள் இல்லையா? நாம் கடைப்பிடிக்கும் 'விரதம்’ இந்த வேலையைத்தான் நம்முள்ளே செய்கிறது.




ஒருநாளில், மூன்று வேளை உணவு தேவை. அதனை அரைத்துச் செரித்து, தேவையான சக்தியைக் கொடுக்கிறது ஜீரண உறுப்புக்கள். ஆறு நாட்கள் ஓடியோடி உழைக்கும் நமக்கு ஞாயிறு ஓய்வு என்றால், நம் உடம்பில் தினமும் எந்திரமாக உழைக்கும் ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு தேவை தானே? அதற்காகத்தான் விரத முறைகள் உருவாகின!

விரதம் கடைப்பிடிக்கிற நாட்களில், உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. அதுமட்டுமா? ஜீரண உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வும், உடலுக்குப் போதுமான புத்துணர்வும் ஒருசேரக் கிடைக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை!

கொழுப்பு, ஹார்ட் அட்டாக், வாயுக் கோளாறு, நீரிழிவு போன்ற பல பிணிகளுக்கான வாசற்கதவைத் திறந்து வைப்பதே அசைவ உணவுகள்தான். எனவே அசைவம் தவிர்ப்பது நல்லது. சைவ உணவு சாத்வீகமான உணவு. 'சாத்வீகமான உணவே சாந்தமான மனநிலைக்கு உத்தரவாதம்’ என்பதை அனுபவித்தால்தான் உணரமுடியும். மனமானது ஒருநிலைப்படும்போது, உயிரைக் கொன்று தின்பது 'பாவம்’ என்ற உணர்வைக் கொடுக்கும்; உணவுக் கட்டுப்பாடு என்ற உன்னத உணர்வும் மேலோங்கிவிடும்!

அடுத்தது, மனக்கட்டுப்பாடு! தியானம், யோகா, பிராணாயாமம் ஆகிய எல்லாமே அலைபாயும் மனதை, ஒருபுள்ளியில் நிறுத்துவதுதான்! எந்தவித மன சஞ்சலமும் இல்லாத அந்த நிலைதான் உடலுக்கும் மனதுக்குமான ஓய்வு!

தியானப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், மன அழுத்தம் மறையும்; மனச்சோர்வு விலகும்; பதட்டம் காணாமல் போகும்; கோபதாபங்கள் குறையும்; நல்ல சிந்தனைகள் பெருகும். எவர் மனமும் புண்படாமல் பேசுகிற பக்குவம் வந்துவிடும். காரியத்தில் வீரியம் பொருந்திக் கொள்ளும்'' என விவரிக்கும் நடராஜன் தன்னை வருத்திய சம்பவத்தையும் விளக்கினார்.

''தன் வயிறு, தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்வது என்பது மிகப்பெரிய சோகம்.

ஒருமுறை சென்னையின் பிரதான சாலையில் உள்ள ஒரு பெரிய சத்திரத்தில் பூஜை நடைபெற்றது. அந்த சத்திரத்துக்கு எதிரில் என் நண்பரின் வீடு. அங்கே சென்றிருந்தேன். சத்திரத்தின் வாசலில் சில வயோதிகர்கள் பசியும் பரிதவிப்புமாக நின்றிருந்தனர்.

சத்திரத்தில், பூஜை முடிந்து பந்தி போஜனமும் நிறைவுற்றது. இலைகள், குப்பைத் தொட்டி களுக்குள் விழுந்தன. வயோதிகர்கள் அந்தக் குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு, 'சாப்பிட ஏதும் கிடைக்காதா?’ என்று ஏங்கியபடி துழாவி னார்கள். அந்தக் காட்சி என் மனதில் ஈட்டியாய் இறங்கியது.

கூட்டு வழிபாடு என்ற பெயரில் பணத்தை ஒரு குழுவாகச் சேகரித்து, அவர்களே விருந்து உபசாரம் செய்து கொள்வதை என்ன சொல்ல..? ஏழையின் சிரிப்பில் அல்லவா இருக்கிறான், இறைவன்!

அன்னதானம் வழங்கும்போது, ஏழைக்கு வயிறும் தானம் அளித்தவருக்கு மனதும் ஒருசேர நிரம்புகிறது. இதைத்தானே மதங்களும் மார்க்கங் களும் எடுத்துரைக்கின்றன. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!’ என்ற உயரிய தத்துவத்தைப் பின்பற்றுகிறவனே ஆண்டவனின் செல்லப்பிள்ளை!

காலையில் எழுந்ததும் நீராடி விட்டு, ஒரு விளக்கு அல்லது மெழுகுவத்தியை ஏற்றிவைத்து, 15 நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள். பிறகு 20 நிமிடம் பிராணாயாமம் செய்யுங்கள். இதன் மூலம் முதுமையை நிச்சயமாக வெல்லலாம்!'' எனச் சொல்லும் நடராஜன் வாழ்வியல் நெறியாக இப்படிச் சொல்கிறார்...

''எப்போதுமே 'எல்லாம் அவன் செயல்!’ என்பதை நினைவில் நிறுத்துங்கள். நல்ல காரியங்களைச் செய்யுங்கள்; அப்படியான செயலில் ஈடுபடுபவர்களை மனதாரப் பாராட்டுங்கள். குடும்பத்தாரிடமும் சுற்றத்தாருடனும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மைப்போலவே எல்லோரும் வாழ பிரார்த்தியுங்கள்!''

கருமித்தனம்

'பணத்தை விரயம் செய்தால், பண வரவு நின்றுவிடும். அதுவே, பணத்தை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செய்தால், அபரிமிதமாக வரும்!'

- மகாஸ்ரீ அரவிந்த அன்னை

தேவையற்ற செலவைச் செய்யாமல் இருந் தால், அது சிக்கனம். செலவு செய்ய வேண்டிய தருணத்தில், செலவழிக்காமல் இருப்பது கருமித்தனம். சிக்கனம்- பாஸிட்டிவ் குணம்; கருமித்தனம்- நெகட்டிவ் குணம். கருமித்தனத்தை யும் கஞ்சத்தனத்தையும் 'லோபம்’ என்பார்கள். இன்றைய இளைஞர்களின் பாஷையில் கருமிகளின் பெயர், 'கஞ்சூஸ்’.

காமம், கோபம், மோகம், ஆணவம், பொறாமை, கருமித்தனம் ஆகியன மனிதனின் துர்க்குணங்கள். 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பொருளெல்லாம், பிறருக்குப் பயன்படுவதற்காகவே என்கிறார் வள்ளுவர். ஆனால், தங்களது நியாயமான தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ள விரும்பாமல், பணத்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர், கருமிகள்!

'பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்’

என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவையார். 'எச்சில் கையால் காக்கையை ஓட்டாதவன்’ என்றொரு சொலவடை நம் பக்கத்தில் உண்டு. அதாவது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காகத்தை விரட்டினால், கையில் உள்ள சோற்றுப் பருக்கைகள் வீணாகிவிடுமே என்று யோசிக்கிற அளவுக்கு அத்தனைக் கருமித்தனமாக இருப்பவர்களை அப்படிக் குறிப்பிடுவார்கள்.


உடைகளைத் தைக்கக் கொடுக்கும் போது, 'வளருகிற பையன்தானே’ என்பதற்காகத் 'தொளதொள’வென சட்டை, பேன்ட் தைத்துக் கொடுக்கும்படி டெய்லர்களை வற்புறுத்துவதுகூட ஒரு வகையில் கருமித்தனம்தான். தங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைக்குக் கூடச் செலவு செய்யாமல் பணத்தை மிச்சம் பிடிப்பார்கள் சிலர். ஆரம்பத் திலேயே கவனித்திருந்தால் சொற்பச் செலவுடன் குணமாகியிருக்க வேண்டிய நோய், கருமித்தனத்தால் பெரும் செலவில் கொண்டு தள்ளுவதும் நடக்கிறது.
முதல் நாள் சமைத்த உணவு லேசாகக் கெட்டுப் போயிருந்தாலும், அதனைக் குப்பையில் கொட்ட மனமின்றி, வயிற்றுக் குள் தள்ளி, உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவு செய்வோரும் உள்ளனர். இதனை, 'றிமீஸீஸீஹ் ஷ்வீsமீ ஜீஷீuஸீபீ யீஷீஷீறீவீsலீ’ என்பார்கள்.

வாகனங்களில் பிரேக் கட்டைகள் தேயத் துவங்கும்போதே செலவைப் பார்க்காமல் மாற்றிவிட வேண்டும். இல்லையெனில், விபத்துக் களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். கல்விக்காகச் செய்கிற செலவை முதலீடு என்பதாக ஒரு சிலர் நினைப்பதில்லை.

வட்ட வடிவமாக விரிக்கக்கூடிய விசிறி களைப் பார்த்திருப்பீர்கள். அப்படியரு விசிறியை ஒருவர் பல வருடங்களாக வைத்திருந்தார். அதிகம் பழசாகாமல் இருந்த அந்த விசிறியைப் பார்த்து அதிசயித்துப் போன அவரின் நண்பர் ஒருவர், 'எப்படி இந்த விசிறி இன்னும் புதிதாகவே இருக்கிறது?’ என்று கேட்க, அவர் சொன்னார்... ''விசிறியை முழுசாப் பிரிக்க மாட்டேன். பாதியளவு பிரிச்சு விசிறிக் கொள்வேன்!''

இவர் இப்படியெனில், இன்னொருவர் வேறு விதம். அவருடைய விசிறி, பல வருடங்களாகப் புதிதாகவே இருந்தது. அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ''நான் விசிறியை முழுசா விரிச்சு வைச்சுப்பேன். ஆனா, அதை அசைச்சுக் காற்று வாங்க மாட்டேன்; என் தலையை யும் முதுகையும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா அசைச்சுப்பேன்'' என்றாராம். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், இப்படியான கருமித்தனங்களைப் பலமாக நையாண்டி செய்திருப்பார். சிரிக்க மட்டுமல்ல; சிந்திப்பதற்கும் உகந்த காட்சிகள் அவை.

பிறருக்குப் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்திருக்கும் கருமியின் செல்வம், ஊரின் மையப் பகுதியில் இருக்கிற விஷக் கனிக்கு இணையானது என்கிறார் வள்ளுவர்.

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.’

அந்த ஊரிலேயே பலருக்கும் தெரிந்த மிகப் பெரிய கருமி அவர். பணத்தைப் பொத்திப் பொத்தி வைத்திருப்பார். ஒருமுறை, அவரைக் கடும் நோய் தாக்கியது. சோதித்துப் பார்த்த மருத்துவர், அவருடைய ஆயுளுக்குக் கெடு விதித்தார். இன்றோ, நாளையோ என மரணப் படுக்கையில் கிடந்தார் அந்தக் கருமி. அவருடைய சிந்தனை யெல்லாம், பெட்டியில் உள்ள பணத்தின் மீதே இருந்தது. மனைவியை அழைத்து, ''இதுவரை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை விட்டு இறந்து போக மனம் வரவில்லை. எனவே, நான் இறந்ததும் எவருக்கும் தெரியாமல் என்னுடைய சவப்பெட்டியில் எல்லாப் பணத்தையும் வைத்துப் புதைத்து விடு!'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து போனார்.

கருமியின் மனைவி கெட்டிக்காரி. அவள் என்ன செய்தாள் தெரியுமா? பெட்டியில் இருந்த பணத்தையெல்லாம், தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டாள். அந்தத் தொகைக்கு கணவரின் பெயருக்கு ஒரு 'செக்’ எழுதி, அவரது சவப்பெட்டியில் வைத்துப் புதைத்துவிட்டாள்.

ஆக.. பண விஷயத்தில் ஊதாரியாக இருக்காதீர்கள்; அதே நேரம், கருமியாக- கஞ்சனாக இருப்பதும் சரியல்ல! அப்படி கருமியாகத்தான் இருப்பேன் என்றால், பேச்சில் கஞ்சத்தனத்தைக் காட்டுங்கள். குறைவான பேச்சு, நிறைவான நிம்மதியைக் கொடுக்கும்.

__._,_.___

பிரசவ வலி குறைக்கும் மருந்து



பிரசவ வலி குறைக்கும் மருந்து

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.
பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
1. குழந்தையின் எடை.
2. கருவறையில் குழந்தையின் நிலை.
3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
4. சுருங்கும் தன்மையின் வலிமை.
5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு


என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார் கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.
இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் 'எபிடியூரல் டெலிவரி' என்பது!
'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.
நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.
எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.
ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.
எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!
குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.
ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.
இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.
''இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘
''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘
தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்கும். ''பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘
''பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!''

சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம்.

ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம்.

இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் – கணிக்க முடியும் – அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது. எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள். முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம்.

அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும்.

பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது.

ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது. சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும்.

பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம்.

அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது..













ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

மனம் அமைதியாக இருக்க வேண்டுமா? ...I

1) கேட்டால் தவிர மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்

பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.

2) மறக்கவும்... மன்னிக்கவும்...
இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.
3) பாராட்டுக்காக ஏங்காதீர்கள்
உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.
4) பொறாமைப் படாதீர்கள்
நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.
5) சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்
தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைபீர்களிலானால் நீங்கள் தோற்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.
6) தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.
7) செய்ய முடிவதையே செய்யுங்கள்
இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.
8) தினமும் தியானிங்கள்
தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.
9) மனதை இருட்டறையாக்காதீர்கள்
நமது மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் அதில் கெட்ட எண்ணங்கள் புகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நல்ல விஷயங்களில் நமது மனதை ஈடுப்படுத்த வேண்டும். நமக்கேற்ற நமது விருப்பத்திற்கேற்ற பொழுதுபோக்கும் காரியங்களில் நேரத்தை செலவிடலாம். நமக்கு பணம் முக்கியமா அல்லது மன அமைதி முக்கியமா என்று முடிவு எடுக்க வேண்டும். சமுக சேவை, இறை சேவை போன்றவை நமக்கு செல்வத்தை கொடுக்காது. ஆனால் மன நிறைவையும் திருப்தியும் கொடுக்கும். உடல்ரீதியான் ஓய்வெடுக்கும் போதும் ஆரோக்கியமான விஷயங்களை படித்தல், கடவுள் நாமத்தை உச்சரித்தல் போன்றவற்றை செய்யலாம்.
10) காரியத்தை தள்ளிப்போட்டு பின்பு வருந்தாதீர்கள்
இதை செய்யலாமா செய்யக்கூடாதா என்று தேவை இல்லாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவேண்டும். வாழ்க்கையில் யாராலும் எதிர்காலத்தை சரியாக கணித்து முழுமையான திட்டத்துடன் வாழ முடியாது. நம்மிடம் உள்ள நேரத்திற்கு ஏற்றாற்போல் திட்டமிட வேண்டும். நாம் நமது தப்புகளிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம். அடுத்தமுறை அது போன்ற காரியங்களில் வெற்றி கொள்ளலாம். இந்த வேலையை நாம் செய்யவில்லை என்றோ இந்த வேலையை நாம் சரியாக செய்யவில்லை என்றோ வருத்தப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே ஒழிய வருத்தப்பட கூடாது






வியாழன், 18 ஆகஸ்ட், 2011

‎100 மருத்துவக் குறிப்புகள்.....

•1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

•2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்...போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

•3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

•4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

•5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

•6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

•7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

•8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

•9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…

•10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

•11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

•12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

•13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!

•14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

•15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

•16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

•17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

•18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

•19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

•20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

•21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

•22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

•23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

•24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

•25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

•26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

•27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

•28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

•29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

•30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

•31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!

•32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

•33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

•34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

•35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

•36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

•37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

•38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

•39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

•40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

•41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

•42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

•43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

•44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

•45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

•46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

•47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

•48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!

•49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

•50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

•51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

•52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்… டப்..!

•53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

•54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

•55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

•56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

•57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்

•58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

•59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

•60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

•61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!

•62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

•63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

•65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

•66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

•67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

•68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

•69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

•70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

•71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

•72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

•73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

•74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

•75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

•76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும்,​ ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

•77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

•78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

•79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

•80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

•81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

•82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

•83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

•84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

•85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!

•86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

•87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

•88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

•89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

•90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

•91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

•92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

•93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

•94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை

•95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

•96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

•97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

•98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

•99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

•100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.



.



பருமனைக் குறைக்க பளிச் டிப்ஸ்...

உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது.

'கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகிவருகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அறிகுறி’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் என். சந்திரகுமார் இங்கே விரிவாக விளக்குகிறார்.

'இந்திய மக்கள் தொகையில், 15 சதவிகிதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதில், ஆண்கள் 20 சதவிகிதத்திற்கு மேலும், பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேலும் உடல் பருமனால் பாதிப்புக்குள்ளாகி தவிக்கின்றனர்’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கியவர், பாதிப்புகளை பற்றி பேசினார்.

'அதிக பருமனால், மிக விரைவிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடலின் எடையை தாங்கமுடியாமல் எலும்பு மூட்டு தேய்மானம் ஏற்படலாம்.



இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேருவதால், பித்தப் பையில் கற்கள், வயிற்றுப் புண், வாயு தொந்தரவு, தோல் நோய், சுவாசக் கோளாறு, தூக்கமின்மை, அதீத தூக்கம் போன்ற பல நோய்கள் தாக்கக்கூடும். அதிக உடல் பருமனாக இருந்தால், தூக்கத்திலேகூட மூச்சு நின்று விடக்கூடிய அபாயம் இருக்கிறது. கர்ப்பப்பையில் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படும்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலமாக உடல் பருமனை சரி செய்துவிட முடியும். ஆனால், உடல் பருமன் பிரச்னை அளவுக்கு மீறி முற்றி போய்விட்டால், உடம்பில் உள்ள கொழுப்பை ஊசி மூலம் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஜாக்கிரதை!’ என்று எச்சரிக்கும் டாக்டர், உடல் பருமனை குறைப்பதற்கான டிப்ஸ்களை வழங்கினார்.



அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

தோல் மற்றும் கொழுப்பு நீக்கிய கோழி இறைச்சியைதான் சாப்பிட வேண்டும்.

ஆடு, மாடு இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அரிசி சாதத்தின் அளவை குறைத்து, கோதுமை, கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்கள், பழ ரசங்கள், காய்கறிகள் போன்ற நீர் சத்து நிறைந்த உணவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும், இரவில் கோதுமை சப்பாத்தி, தோசை போன்ற டிபன்தான் சாப்பிடவேண்டும்.

தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இதனால், உடலிலிருந்து அதிகஅளவு சிறுநீர் மற்றும் வியர்வை வெளியேறும்படி பார்த்துக் கொள்ளமுடியும்.



புடலங்காய் அல்லது வெண்டைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் பருமன் கணிசமாக குறையும்.

கொத்தமல்லி விதை (தனியா) தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்ட கொதிக்க வைத்து, காலை மற்றும் மாலை வேளையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காபி, டீ மற்றும் பானங்களில் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, கருப்பட்டி மற்றும் பனக்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.

இவையெல்லாம் தாண்டி, வீட்டை பெருக்குவது, தோட்ட வேலை, வாகனம் கழுவுதல், துணி துவைப்பது போன்று குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய அன்றாட வேலைகளே உடல் பருமனைக் குறைப்பதற்கான உன்னத பயிற்சிகள்தான்’ - என்று அக்கறையாய் சொல்லி முடித்தார் டாக்டர் சந்திரகுமார்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

அரை விநாடியில் இதயத்தின் படம்!

இதயத் துடிப்பு பொதுவாக நிமிடத்துக்கு 60 முதல் 100 ஆக இருக்கும். வயது, பாலினத்துக்கு ஏற்ப இது மாறுபடலாம் என்றாலும், விநாடிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை இதயம் துடிக்கிறது. அப்படித் துடிக்கும் இதயத்தை, துல்லியமாகப் படம் எடுப்பது கொஞ்சம் சிக்கலானது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் இந்த விநாடிக்கும் குறைந்த காலத்துக்குள், முழு இதயத்தையும் படம் எடுக்க இயலாது. இந்த படத்தைக்கொண்டே இதய ரத்தக்


குழாயில் உள்ள பிரச்னைகளை டாக்டர்கள் கண்டறிவார்கள். புதிதாக 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் முழு இதயத்தின் அதி துள்ளியமான படத்தை அரை வினாடியில் கொடுத்துவிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சென்னை அப்போலோ மருத்துவமனையில் மட்டுமே இந்தக் கருவி உள்ளது.

இந்தக் கருவியின் செயல்பாடு குறித்து அப்போலோ ஹார்ட் சென்டரின் மூத்த ரேடியாலஜிஸ்ட் கன்சல்டன்ட் டாக்டர் ரோச்சிதா வெங்கட்ரமணன் சொல்கிறார்...

''இப்போது உபயோகத்தில் இருக்கும், நவீன உடல் உறுப்புகளைப் படம் பிடிக்கும் கருவிகளில், 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் என்பது மிகவும் மேம்பட்டது. இதில், உங்களின் தலை முதல் கால் வரை ஒரு நிமிடத்துக்குள் ஸ்கேன் செய்து படம் எடுத்துவிட முடியும். இதன் மூலம், இதயம் மற்றும் மூளையில் உள்ள பிரச்னைகளை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம். இந்த ஸ்கேன் கருவியில், எக்ஸ் ரே கதிர் வீச்சைப் பயன்படுத்தி படம் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் குறுக்குவெட்டாக (கிராஸ் செக்ஷனல் இமேஜ்) 3டி படம் எடுக்க முடியும்.



64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் கருவி மூலம் 3.2 செ.மீ. பரப்புக்குத்தான் படம் எடுக்க முடியும். ஆனால், இதயத்தின் பரப்போ 13 செ.மீ. எனவே துண்டு துண்டாக எடுக்கும் படத்தை கம்ப்யூட்டரில் ஒன்று சேர்த்துப் பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நிதானமாகப் பார்த்தே, பிரச்னையின் தீவிரத்தை டாக்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், மிகத் துல்லியமான தகவலைக் கஷ்டப்பட்டு சேகரிக்க வேண்டும்.

ஆனால், 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனில் அந்தக் குறைபாடு முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் 16 செ.மீ. பரப்புக்கு ஸ்கேன் செய்து படம் எடுக்க முடியும். அதுவும் அரை விநாடியில் முழு இதயத்தின் படமும் கம்ப்யூட்டர் திரையில் தெரிந்துவிடும். அரை விநாடியில் படம் எடுத்து முடித்துவிடுவதால், கதிர் வீச்சின் நேரமும் குறைகிறது. இதன் மூலம் இதயத் தசைகளுக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக நீடித்துள்ளது? என்பதைக்கூடக் கண்டறிந்துவிட முடியும். மேலும், எதிர்காலத்தில் ரத்தக் குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். அதாவது, ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்கு கொழுப்பு படிந்திருந்தால்கூட, கண்டுபிடித்துவிட முடியும். மிகவும் எளிமையானது; வலி இல்லாதது; விரைவானது.

ஸ்கேன் செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், எதுவும் சாப்பிடக் கூடாது. ஆனால், அதிக அளவு தண்ணீர், ஜூஸ் குடிக்கலாம். ஸ்கேன் செய்ய வேண்டிய நபருக்கு இன்ஜெக்ஷன் மூலம் மருந்து செலுத்தப்படும். ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் தவிர்த்து, மற்ற மருந்து மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். ஸ்கேன் செய்ய வேண்டிய நபரை 320 சி.டி. ஸ்கேன் கருவியின் குகைபோன்ற அமைப்புக்குள் படுக்கவைத்து, தேவைப்படும் பகுதியின் வரைபடத்தை எடுத்துவிடுவோம்.

சாதாரணமாக மூச்சுவிடும் நேரத்திலும் படம் பிடிப்பதில் பிரச்னை எதுவும் இல்லை என்பதால், எந்த வயதினரும் ஸ்கேன் செய்துகொள்ளலாம். மார்பில் வலி உள்ளவர்கள் மட்டுமல்ல, பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, அதிக எடை, புகைபிடிக்கும் பழக்கம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம் உள்ளவர்களும் டாக்டர்களின் பரிந்துரைப்படி, இந்த ஸ்கேன் செய்து பார்த்து தங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறியலாம். அப்படி ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்தாலோ... அல்லது முழுவதும் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலோ... டாக்டரிடம் சிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம்!'' என்றார்.

இதுவும் நல்ல செய்தி!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !

அதிகாலையில், அலாரம் வைத்து எழுந்து, அவசர அவசரமாகச் சமையல் முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கும்... கணவரை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு, அரக்கப் பரக்க தனது அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய்ச் சேர்வதற்குள்ளாகவே... ஒருநாள் முழுமைக்குமான வேலைப் பளுவை அனுபவித்து விடுகிறாள் பெண்! அதன்பிறகும் அலுவலகத்தில் எட்டு மணிநேரம் சுற்றிச் சுழல்பவள்... மாலையில் வீடு திரும்பியதும் வீட்டைச் சுத்தம் செய்வது, இரவு சாப்பாடு தயாரிப்பது... என்று எல்லாம் முடித்து, 'அப்பாடா’ என்று படுக்கையில் சாயும்போதுதான் முதுகுவலி முறுக்கி எடுக்கும்!

'ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் முதுகுவலி வாட்டி எடுத்தாலும்... பெரும்பாலும் அதிக வலியால் அவதிப்படுவது பெண்கள்தான்’ என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

'இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?' என்று தேடுபவர்களுக்காக பல்வேறு தகவல்களை இங்கே விளக்குகிறார் சென்னை எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் எம்.பார்த்தசாரதி.

''மருத்துவ ரீதியாக முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலியைத்தான் முதுகுவலி என்கிறோம். இந்த வலியைப் பற்றி தெரிந்து கொள்வதற்குமுன் முதுகெலும்பைப் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். பிற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவதும், அவன் நிமிர்ந்து நிற்க உதவுவதும் முதுகெலும்புதான். இது ஒரு தனி எலும்பு கிடையாது. 33-எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள், தண்டுவடம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து மிகவும் நேர்த்தியுடன் அமைந்த ஒரு சங்கிலித் தொடர்! உடலின் பல பகுதிகளில் இருக்கும் முதுகெலும்பைச் சார்ந்த நரம்புகள், உணர்ச்சிகளை தண்டுவடம் மூலமாக மூளைக்கு எடுத்து செல்கின்றன.

நேராக நிமிர்ந்து நிற்பது, வளைவது, நெளிவது போன்ற செய்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு, முதுகெலும்பைச் சார்ந்த தசை, நார், ஜவ்வுகளே காரணம். இந்த ஜவ்வு, நரம்பு, எலும்புகளில் ஏற்படுகிற சின்னச் சின்னப் பிரச்னைகளால்தான் முதுகுவலியும் உண்டா கிறது.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பெரும்பாலும் முதுகுவலி நோயாளிகளாக இருப்பார்கள். அந்தக் காலம் மலையேறி, இப்போது 20 வயது நிரம்பாத பெண்களும்கூட முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். ஹை ஹீல்ஸ் எனப்படும் குதிகால் செருப்புகள் அணிவதால் பின்புற எடை முன்னோக்கித் தள்ளப்படுகிறது. இந்த எடையை பேலன்ஸ் செய்தபடியே ஒழுங்கற்று நடப்பதாலும் பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கும் உடல் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் முதுகுவலி வரலாம். உடலின் நடுப் பகுதியில் எடை அதிகரிப்பதால், முதுகுத் தண்டு வடத்தில் வலி உண்டாகும். கர்ப்பக் காலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி வருவதற்கு இதுவே காரணம்.

முதுகெலும்புகளுக்கு நடுவில், ஜெல்லி போன்ற பிசுபிசுப்பு திசுக்களால் ஆன ஜவ்வுகள் அமைந்திருக்கும். எலும்புகள் உராய்வதைத் தடுக்க உதவும் இந்த ஜவ்வுகள், நாளடைவில் தேய்ந்து நரம்புகள் விலகுவதாலும் முதுகு வலி ஏற்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாமல் போவதாலும்கூட எலும்புகள் விரைவில் தேய்மானம் அடைந்து, முதுகு வலியை உண்டாக்கும். சட்டென குனிந்து அதிகமான எடையைத் தம் கட்டித் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தர தவறிவிடுகின்றன. இதனாலும் வலி ஏற்படலாம். தைலம், களிம்பு தடவுவது தற்காலிகத் தீர்வைத்தான் கொடுக்கும்.

முதுகுத் தண்டுவடத்தின் கீழ் பாகத்தில், ஏதேனும் பிரச்னை இருந்தால் தொடையிலிருந்து கால் வரை கொக்கி போட்டு இழுப்பது போன்ற வலி உணர்வு ஏற்படும். இந்த வலி கணுக்கால் வரையிலும் பரவும். முதுகை லேசாகத் திருப்பினாலோ, குனிந்து வேலை செய்தாலோ வலி அதிகமாகும். 'ஸயாடிகா’ (Sciatica) என்னும் இந்த வலி... தும்மல், இருமல் வரும்போது இன்னும் அதிகரிக்கும்'' என்றெல்லாம் விளக்கங்கள் தந்த டாக்டர் பார்த்தசாரதி, அடுத்து சிகிச்சை ஏரியாவுக்குள் நுழைந்தார்.

''மாத்திரைகள், பிசியோதெரபி மூலமாக இந்த வலியைக் குறைக்க முடியும். லேசான வலி இருந்தால் 'எபிடியுரல் ஸ்டீராய்ட்’ (Epidural steroid) எனும் ஊசி மருந்தை செலுத்தி கால் வலியைக் குறைக்க முடியும். உடம்பில் தேவை இல்லாமல் இருக்கும் ஊளைச் சதையை குறைத்தாலே சிலருக்கு முதுகுவலி தானாகவே சரியாகி விடும். வலி மிகவும் அதிகமாக இருந்தால்... முதலில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது நல்லது. அதிலும் தெளிவாகவில்லையெனில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யவேண்டும். இதில், முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு விலகி இருந்தாலோ, நரம்புகள் வெளியேறும் துவாரம் நெருக்கப்பட்டிருந்தாலோ எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அதன்பிறகு, முதுகெலும்பில் இருந்து குறிப்பிட்ட அந்த நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக் கும் திசுக்களை அகற்றி, துவாரத்தை சற்று பெரிதாக்குவதன் மூலம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியை முற்றிலும் குறைக்க முடியும்'' என்று முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் பார்த்தசாரதி!




வலியைக் குறைக்க வழி!

கம்ப்யூட்டர், டி.வி-யின் முன்பு முதுகை வளைத்த நிலையில் மணிக்கணக்கில் உட்காருவதை தவிர்க்கவும். ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காரும்போது, முதுகெலும்பை தாங்கும் தசைகள் பலவீனமாக வாய்ப்பு இருக்கிறது. இடையிடையே எழுந்து செல்வது நல்லது.

சேரில் உட்காரும்போது முதுகின் பின்புறம் சிறிய தலையணையை வைத்துக் கொள்ளலாம்.

முதுகெலும்பை ஒரே நேராக வைத்திருப்பது போல் படுக்கை அமைந்திருக்க வேண்டும்.

சக்திக்கு மீறிய சுமைகளைத் தூக்குவது, இறக்குவதைக் கட்டாயம் தவிர்க்கவும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே எளிய பயிற்சிகளை செய்து முதுகுவலியைப் போக்க முயற்சிக்கலாம்

பணம் உன்னுடையது... ஆனால் உணவு - பொதுச்சொத்து!


உலகின் வளர்ந்த நாடுகளில் முக்கிய ஸ்தானத்தை வகிக்கிறது ஜெர்மனி. பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற உலகப் புகழ்பெற்ற கார்கள் இங்குதான் தயாராகின்றன. ஸீமன்ஸ் போன்ற கம்பெனிகள் உலகப் புகழ் பெற்றவை. அணு ரியாக்டருக்கு வேண்டிய பம்புகள் இங்குள்ள ஒரு சின்ன ஊரில் தயாராகின்றன.
இப்படிப் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் மக்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைப்போம்? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஒரு ஸட்டி டூர் என்னை அந்த நாட்டிற்கு இட்டுச் செல்லும் வரையில்
நான் ஹாம்பர்க் சென்றபோது அங்கு ஹாம்பர்க்கில் வேலை செய்யும் சக ஊழியர்கள் எனக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். நாங்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது நிறைய மேஜைகள் காலியாக இரந்தன. ஒரு மேஜையில் ஓர் இளம் ஜோடி. அவர்களுக்கெதிரில் ஒன்றிரண்டே உணவு ஐட்டங்கள். இரண்டு கிளாஸ் பீர். இவ்வளவு சிம்பிள் சூழ்நிலையில் ரொமாண்டிக் ஆக இருக்க முடியுமா? இந்தப் பெண் இந்தக் கஞ்ச பிரபுவை ditch செய்து விடுவாளா என்றெல்லாம் யோசித்தேன்.
இன்னொரு மேஜையில் சில வயதான பெண்மணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை செய்ட்டரைக் கொண்டு பரிமாறச் செய்தனர். உணவைப் பகிர்ந்து கொண்டு துளியும் மிச்சம் வைக்காமல் உண்டனர். நாங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தவில்லை. எங்களுக்கு நல்ல பசி. அதனால் நிறைய உணவு ஆர்டர் செய்திருந்தோம். அவற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
கூட்டம் அதிகம் இல்லாததால் உணவு சீக்கிரமே கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு இன்னும் நிறை வேலைகள் இருந்ததால் விரைவாகச் சாப்பிட்டு முடித்தோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உணவு மீந்து போயிருந்தது. நாங்கள் ரெஸ்டாரெண்டை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கையில் எங்களை யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது மூதாட்டிகள் ஹோட்டல் முதலாளியிடம் புகார் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் அத்தனை உணவை வீணாக்கியதை அவர்கள் கண்டித்துக் கொண்டிருந்தனர் என்று முதலாளி ஆங்கிலத்தில் சொன்னபோது தெரிந்தது. எங்களுக்கு அவர்கள் தலையீடு அதிகப் பிரசங்கித்தனமாகப் பட்டது.
நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய உணவை என்ன செய்கிறோம் என்பது எங்கள் விருப்பம். நீங்கள் தலையிட வேண்டாம் என்று என் நம்பர் கை எதடி என்பர் சொன்னார். மூதாட்டிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் தன் கைப்பேசியில் ஏதோ ஒரு எண்ணைச் சுழற்றினார்.
சிறிய நேரத்தில் சீருடையணிந்த ஒரு ஆபிசர் - இவர் சோஷியல் செக்யூரிடி சர்வீஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் - வந்தார். விஷயம் என்னவென்று அறிந்ததும் என் நண்பருக்கு ஐம்பது மார்க் அபராதம் விதித்து, சீட்டு கொடுத்தார்.
நாங்கள் அனைவரும் மௌனம் சாதித்தோம். நண்பர் 50 மார்க் நோட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரினார்.
ஆபீசர் கடுமையான குரலில் சொன்னார். "உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவே ஆர்டர் செய்யுங்கள். பணம் உங்களுடையதுதான், சந்தேகமில்லை, ஆனால் இயற்கை வளங்கள் பொதுச் சொத்து. உலகில் நிறைய பேர் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர். உணவை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை.'
எங்கள் முகம் சிவந்துவிட்டது. அவர் சொல்வதன் நியாயம் எங்கள் மனதிற்குப் புரிந்தது. வளர்ந்த, பணக்கார நாட்டவரான அவர்களின் பொறுப்புணர்வுக்கு நாங்கள் வெட்கித் தலை குனிந்தோம்.
நம் நாடு பணக்கார நாடல்ல, ஆயினும் நாம் விழாக்கள், விசேஷங்களில் மற்றவர்களை விருந்துக்கு அழைத்தால் அதிக அளவில் உணவு தயாரிக்கிறோம். இந்தக் கெட்ட பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பித்தது.
என் நண்பர் அபராதம் கட்டிய ரசீதை போட்டோ காப்பிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்தார்.
நாங்கள் அனைவரும் அதை வீட்டுச் சுவரில் ஓட்டி வைத்துத் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி என்றும் எதையும் வீணாக்க மாட்டோம்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கன்ஸ்யூமரை ஏமாற்றும் கண்'கட்டிங்' வித்தை!

சமீபகாலமாக நுகர்பொருள் துறையில் நடக்கும் தில்லாலங்கடி வேலையன்றை நண்பரொருவர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது கொஞ்சம் புதுமையாகத்தான் இருந்தது. கடைக்குப் போனவர் வழக்கமாக வாங்கும் டூத் பேஸ்ட்டை வாங்கி வந்திருக்கிறார். அதில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவர், என்னவென்று பார்த்திருக்கிறார். ஆனால் பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இருந்தும் விடாமல் துருவித் துருவி பார்த்திருக்கிறார். கடைசியில்தான் தெரிந்திருக்கிறது வழக்கமாக 50 கிராம் இருக்கும் அந்த பேஸ்ட் இப்போது 40 கிராம்தான் இருந்திருக்கிறது. இதனையடுத்து வழக்கமாக வாங்கும் எல்லா பொருட்களையும் நோட்டம்விட ஆரம்பித்திருக்கிறார். அதிலும் அவருக்கு கிடைத்தது அதிர்ச்சிதான். கிட்டத்தட்ட பெரும்பாலான பொருட்களின் விலையில் இந்த கண்கட்டு வித்தை நடந்திருக்கிறது!

இதையடுத்து நாமும் களமிறங்கி விசாரித்தபோது சோப்பு, பேஸ்ட், டீ தூள், முதற்கொண்டு மசாலா பொருட்கள் வரை அனைத் திலும் இந்த எடை 'கட்டிங்’ வேலை ஓசையில்லாமல் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்றில்லாமல் எல்லா நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கையாண்டிருக் கின்றன. விலையை ஏற்றினால் விற்பனை குறைந்துவிடும் என்பதால், அளவு அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் தங்களின் பிஸினஸை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால், எந்த நிறுவனமும் நேர்மையாக நுகர்வோரிடத்தில் இதைச் சொல்லவில்லை.



''எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கையாளர்களை ஏமாற்று கிற மாதிரி ஆகிவிடாதா?'' என ஒரு முன்னணி பிராண்டின் விற்பனை உயரதிகாரியிடம் கேட்டோம்.

''எடை குறைப்பு செய்ததன் மூலம் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்றுவதாக எப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருள் எவ்வளவு எடை கொண்டது, விலை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெளிவாக அச்சடித்துதானே தருகிறோம்? வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தானே வாங்கு கிறார்கள்? அவர்களுக்கு அந்த பொருள் தேவை. விலையும் அவர்களுக்கு சகாயமாக இருக்க வேண்டும். ஆனால், எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்றுதான் அவர்கள் வாங்குகிறார்கள். எனவே, ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை'' என்றார்.

சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்ததோடு விலையையும் உயர்த்தி இருக்கிறார்கள். உதாரணமாக, மேனியை மிருதுவாக வைத்திருக்க உதவும் ஒரு சோப் முன்பு 100 கிராம் அளவில் கிடைத்தது. இன்று வெறும் 90 கிராம்தான் உள்ளது. ஆனால், விலை முன்பிருந்ததைவிட அதிகம். இதேபோல பாதுகாப்பு வளையத்தைத் தரும் ஒரு பற்பசை முன்பு 50 கிராம் 10 ரூபாய். ஆனால், இன்றைக்கு அதே 10 ரூபாய்க்கு வெறும் 40 கிராம் மட்டுமே தருகிறார்கள். நூடுல்ஸுக்கு பெயர் போன அந்த பிராண்ட் முன்பு 100 கிராமுக்கு கொடுத்த விலையில், இப்போது 87 கிராம் மட்டுமே உள்ளது. 250 கிராம் என நினைத்து வாங்கும் மலரின் பெயர் கொண்ட டீ பாக்கெட் இப்போது 245 கிராம்தான் இருக்கிறது.

''வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குகிறார்கள். தவிர சோப்பு, ஷாம்பு போன்றவற்றில் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு பழகிவிடுவதால் இந்த பொருட்கள் விலையேறினாலும் வாங்கத்தான் செய்கிறார்கள். கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், இந்த மாதிரியான எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.'' என்கிறார் தஞ்சை இ.பி. காலனி ஸ்ரீஹரி மளிகை செல்வகுமார்.

மூலப் பொருட்களின் விலை ஏறியதால், தாங்கள் தயார் செய்யும் பொருட் களின் விலையை உயர்த்தி யாக வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு இருக்கிறது தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால், ஐந்து கிராம் ஆஃபர் கொடுத்தாலே டமாரம் அடிக்கும் இந்த நிறுவனங்கள், இதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே!

நாணயம்...நம்பிக்கை !

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.

பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

நல்ல டாக்டர்கள் `இருவர்'



நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை' மருத்துவர்கள், இரண்டு பேர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட்டிக்காப்பதில் கைதேர்ந்த `நிபுணர்கள்'. அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய இதோ அவர்கள் முகவரி...

1

காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்' செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடுவார். காசு எதுவும் கேட்க மாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல `சூரிய'பகவான்தான்.


`சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்' என்பது பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு என்னென்ன நலன்களைத் தருகிறது தெரியுமா?


* சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு பணியைச் செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


* சூரிய ஒளி, உணவு செரிமானத் தன்மையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரியும்.


* உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் `வைட்டமின் டி` கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வில், மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.


* காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. உச்சி வெயிலில் கிடைக்கும் அதிகமான புற ஊதாக்கதிர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.


* சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


* நலத்துடன் வாழ விரும்புபவர்கள் காலை, மாலை வெயிலில் சிறிது நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும் படியான பணிகளைச் செய்தாலே போதும். இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும்.


2

கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும் மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்ற மருந்துகள் ஒரு நாளைக்கு ஒரு டோஸ், 3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும் 8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது.

புரியவில்லையா... தண்ணீர்தாங்க அந்த மருத்துவர்.


இயற்கை தந்த அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான். உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டிருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது தெரியுமா?


* சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில் இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல்கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும்.


* உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில் கொலஸ்டிரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும்.


* தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.


* தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச் செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவும்.


* மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும். ஞாபகமறதி வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும்.


* தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கியத்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது என்கிறார் புளோரிடா மருத்துவ நிபுணர் பத்மாங்கலிட்ஜ்.



திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ஆளும் வளரணும்...ஆளுமையும் வளரணும் !

'பி.இ. படிக்கும் என் மகள், நல்ல பர்சன்டேஜ் எடுக்கும் 'டாப்பர்’ மாணவி. ஆனால், ஏனோ வைவா, பேப்பர் பிரசன்டேஷன், குரூப் டிஸ்கஷன், சிம்போஸியம், டிபேட், செமினார் போன்றவற்றில் அவளால் சோபிக்க முடியவில்லை. இருக்கும் மிச்ச கல்லூரி காலத்துக்குள் அவளது ஆளுமைத்திறனை மேம்படுத்த வழி காட்டவும்'' என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவகாமி சுந்தரம். அவருக்கு பதில் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராதா ராஜ்குமார்.

'எவ்வளவுதான் பாட அறிவு இருந்தாலும், தேவையான ஆளுமைத்திறனை இளம் வயதினரிடம் வளர்ப்பதற்கான ஆயத்தங்களைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆரம்பத்திலேயே துவக்க வேண்டும். உதாரணத்துக்கு, முதல் மதிப்பெண் எடுக்கும் ஒரு ஸ்டூடன்ட்டின் தலையிலேயே பல பொறுப்புகளைக் கட்டுவதற்குப் பதில், ஒவ்வொரு ஸ்டூடன்டுக்கும் அவரவர் ஈடுபாடு, திறமையைப் பொறுத்து பொறுப்புகளைப் பகிர்ந்து தரலாம்.



வீட்டிலும், விருந்தினர்களை வரவேற்பது, விசாரிப்பது, தன்னை அறிமுகம் செய்து கொள்வது போன்றவற்றுக்குக் குழந்தைகளைப் பழக்கலாம். இவ்வாறு பொறுப்புகள் அளிக்கப்பட்ட குழந்தைகள், அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தவிப்பார்கள்; அதற்காக, தனக்குள் பொதிந்திருக்கும் தனித் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மாறாக, பொத்தி வைத்து வளர்க்கப்படும் குழந்தைகள், பின்னாளில் சிறு சிறு சமூக இடறல்களுக்குக்கூட சங்கடப்பட்டு முடங்கிப் போவார்கள்.

சரி... கல்லூரிப் படிப்பின் பாதியில் இருக்கும் உங்கள் மகள் பிரச்னைக்கு வருவோம். ஆளுமைத்திறனுக்கு முக்கியமானது 'கம்யூனிகேஷன் ஸ்கில்’. இது... வெர்பல், நான்வெர்பல் என்று இரண்டு வகைப்படும். தன்னுடைய படிப்பு சார்ந்து அதில் விஷய ஞானத்தோடு ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது... வெர்பல் ஸ்கில். அதையே சரியான உச்சரிப்பு, குரல் ஸ்தாயி, உடல்மொழி, உடுப்பு என சூழலுக்கு ஏற்றவாறு வெளிப்படுத்துவது... நான்வெர்பல் ஸ்கில். வெர்பல் கம்யூனிகேஷனில் ஒருவர் எவ்வளவு வித்தகராக இருந்தாலும், அதற்கு உயிரோட்டம் கொடுப்பது நான்வெர்பல் மட்டுமே.

வீட்டு உறுப்பினர்கள் மற்றும் இணக்கமான நட்பு வட்டம் இவர்கள் முன்பாக ஒரு தலைப்பின் கீழ் பேசிப் பழகலாம். இதிலும் சங்கடத்தை உணர்பவர்கள், கண்ணாடி முன்பாக பேசிப் பழகலாம். உலகப் புகழ்பெற்ற பேச்சாளரான பெர்னாட்ஷா, தன் வீட்டுக் கண்ணாடி முன்நின்று பேசிப்பார்த்துதான் பட்டைத் தீட்டிக் கொண்டாராம்.

மூன்றாம் நபர்கள் முன்பு மேடையேறும்போது, முதலாவதாக கருத்தில் தெளிவும் தேர்ச்சியும் வேண்டும். அடுத்ததாக, கூட்டம் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய புறத்தோற்றத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மேக்கப், உடை அடிப்படை அம்சங்களில் அதீதத்தைவிட, நீட்னஸ் முக்கியம். மூன்றாவதாக, மொழியில் சரளம் இருப்பதோடு, துறை சார்ந்த வார்த்தைகளில் புலமை இருப்பதும் வேண்டும். முக்கியமானது, மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடும் பழக்கம் வேண்டாம். ஒரே கருத்தை, வெளிப்படுத்தும் பாணியில் வித்தியாசம் காட்டி அப்ளாஸ் அள்ளலாம்.

உலகில் உங்களுடைய வெற்றிடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும். 'என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்?' (If not me, Who else)என்ற தன்னம்பிக்கை பொதிந்திருந்தால், தாழ்வு மனப்பான்மை ஓடி ஒளிந்துவிடும். சிலருக்கு பங்கெடுப்பதிலேயே தகராறு இருக்கும். 'வெற்றி பெறுவதைவிட மகத்தானது பங்கெடுப்பதே' என்பதுதான் அவர்களுக்கான அரிச்சுவடி.

இந்தத் திறமைகளை எல்லாம் வளர்த்துக் கொள்ள கல்லூரியை விட்டால் வேறு சிறப்பான களம் இருக்க முடியாது. படிப்பு தவிர்த்த மற்ற புரோகிராம்களில் பங்கெடுக்கலாம். ஈடுபாடு இல்லையென்றாலும் பங்கெடுப்பவர்களுக்கு தன்னாலான உதவிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யலாம். இப்படி சமூகத்துடன் ஊடாடுவதைப் பொறுத்தே அவரரின் சமூகப் பண்பு பளிச்சிடும்.

மற்றவர்களிடம் இல்லாத, அதேசமயம் தனது முன்னேற்றத்துக்கு வாய்ப்பளிக்கும் ஏதோவொரு திறனை வளர்த்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு... ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு, ஜெர்மன், சைனீஸ், ஜாப்பனீஸ் போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்கலாம்; கூடுதலாக ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் படிப்பைக் கற்கலாம்; இசை கற்றிருக்கலாம், பார்ட் டைமாககூட வேலை பார்க்கலாம். மற்றவர்களைவிட, ஏதோ ஒரு வகையில் தான் மேம்பட்டவர் என்ற உத்வேகத்தை இது பாய்ச்சும்.

என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஸ்கவுட், ரெட் கிராஸ் என்று செயல்படும் பல்வேறு சேவை தொடர்பான அமைப்புகளில் பங்கேற்று சமூகத்திலும், கல்லூரியிலும் பிறருடன் பழகுவதற்கான வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால், தனியார் 'பர்சனாலிட்டி டெவலப்மென்ட்’ வகுப்புகளிலும் சேரலாம்.

பெரும்பாலானவர்கள் நல்ல மதிப்பெண்களோடு கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள் என்றாலும், வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இந்த 'சாஃப்ட் ஸ்கில்ஸ்’ அம்சங்களையே பரிசீலித்து முடிவெடுக்கின்றன என்பது கவனத்தில் இருக்கட்டும்!''






முன்னேற்றத்துக்கு கைகொடுக்கும் மொழிப் பாடம்!

"தற்போது ப்ளஸ் டூ படித்துவரும் எங்கள் மகளை இன்ஜினீயரிங் அல்லது மெடிக்கல் சேர்க்கும் கனவில் இருக்கிறோம். அதற்கேற்ற வாறே அவளும் நன்றாகப் படித்து வந்தாள். ஆனால், எதிர்பாராத அதிர்ச்சியாக தற்போது, 'ஆங்கிலம் வழியாக படிக்கக் கூடிய எந்தவொரு கல்லூரி மேற்படிப்புமே எனக்கு வேண்டாம்’ என்கிறாள்.

காரணம்... மொழிப்பாடத்தில் அவள் மிகவும் வீக் என்பதுதான். தொழிற்கல்விக்கான 'கட் ஆஃப் மார்க்'க்கு, மொழிப்பாட மார்க் அவசியம் இல்லை என்பதால், அதில் அவளை போதிய கவனம் செலுத்த வைக்காத எங்களின் தவறு இப்போதுதான் புரிகிறது. அவளை எப்படி கையாள்வது..?'' என்று கேட்டிருக்கிறார் ஆத்தூரைச் சேர்ந்த ராஜசேகரன்.

அவருக்கு பதில் தருகிறார் அரியலூர், வித்யா மந்திர் மெட்ராஸ் சிமென்ட்ஸ் (சி.பி.எஸ்.இ.)பள்ளி முதல்வர் த.ராஜ்குமார்.

"பெற்றோர் மட்டுமல்ல... ஆசிரியர்களும் கூட இத்தகைய தவறுக்கு காரணமாக இருக்கிறார்கள். 'தொழிற் கல்வியில் சேர வேண்டும்... அதற்கான 'கட் ஆஃப் மார்க்'க் குக்கான பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்கிற நோக்கத்தில் பழுதில்லை. அதற்காக மொழிப்பாடங்களை அலட்சியம் காட்டுவது தவறு.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் சில புகழ்பெற்ற வட இந்திய கல்வி நிறுவனங்கள் மொழிப் பாடங்களை உள்ளடக்கிய மொத்த மதிப்பெண்களின் சதவிகிதத்தையும் மேற்படிப்பு களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும்போது இந்த மொத்த மதிப்பெண் சதவிகிதம் என்பது கேபிடேஷன் ஃபீஸை குறைக்க வழி செய்யும்.

'கட் ஆஃப் மார்க்' என்பது காலேஜ் அட்மிஷனோடு முடிந்து போவது. அதன் பிறகு பாடங்களைப் புரிந்து கொள்ள கை கொடுக்கப்போவது பள்ளி வரை படித்த மொழிப்பாட அறிவுதான். கல்லூரியில் மட்டுமல்ல, வேலைவாய்ப்புச் சந்தையிலும்கூட மொழிப்பாட அறிவு நிரம்பவே கை கொடுக்கும். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் கல்லூரி முடித்த சூட்டோடு பணியில் சேர்பவர்களில், மூன்று மாதங்கள் கழித்து அந்த நிறுவனம் வைக்கும் தேர்வில் துறை சார்ந்த அறிவு மட்டுமல்லாது மொழியறிவு, சக பணியாளர் களுடன் குழுவாக இணைந்து செயல்படுவது, தகவல் தொடர்பில் உள்ள திறமைகள் என எல்லாம் அசலப்பட்டு, அதில் தேறுபவர்கள்தான் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் போவார்கள்.

எனவே, பள்ளியில் படிக்கும்போதே மொழிப்பாட வகுப்புகளில் கவனம் செலுத்தி வந்தால், இம்மாதிரியான இடைஞ்சல்களைத் தவிர்க்கலாம். ஆசிரியர்களும் மொழிப்பாட பீரியட்களை மற்ற பாடங்களுக்கு தருவது, செய்முறை பயிற்சிக்கு அனுப்புவது போன்ற வற்றைத் தவிர்த்து மாணவர்கள் மத்தியில் மொழிப்பாட ஆர்வத்தை தர வேண்டும்.

சரி, இருக்கும் கால அவகாசத்தில் உங்கள் மகளின் ஆங்கில மொழிப்பாட தடுமாற்றத்தை தகர்ப்பது எப்படி என்று பார்ப்போம். இந்த வயதில் 'பியர் குரூப்’ எனப்படும் உடனிருக்கும் சக மாணவர்களின் சகவாசம் உங்கள் மகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆங்கிலத்தில் ஆர்வமுள்ள மாணவிகள் வட்டாரத்தில் புழங்கச் செய்வது அவரது ஆர்வத்தையும் சீர்தூக்கிவிடும்.

படிப்புக்கு இடையேயான ஓய்வு பொழுதுகளில் ஒரு மாற்றத்துக்காக டி.வி. பார்ப்பது வழக்கமெனில் ஆங்கில செய்தி சேனல்கள், ஆங்கில சப்டைட்டில்களுடனான படங்கள் இவற்றை பார்க்கலாம். ஆங்கில செய்தித்தாள் படிப்பது மற்றும் ஆங்கில கதைகள் படிப்பது போன்றவையும் இவற்றில் சேர்க்கலாம். மாணவிக்கு பிரியமான ஆசிரியை உதவியுடன் அவருடைய அச்சத்தை படிப்படியாக நீக்கலாம். பிளஸ் டூ பரீட்சைக்கு பிறகான கால இடைவெளியில் தரமான ஆங்கிலப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து, எழுத்து மற்றும் பேச்சுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அப்படியும் ஆங்கில அச்சம் அவரிடம் தொடர்ந்தால்... தற்போது தமிழகத்தில் அறிமுக மாகி இருக்கும் தமிழ் வழி பொறியியல் படிப்பு களைத் தேர்ந்தெடுக்கலாம். காலப்போக்கில் மொழித்தடை அதுவாக விலகட்டும். அதுவரை உங்கள் மகளின் மேற்கல்விப் பாதை தடையின்றி செல்லட்டும்!"

மறுபடியும் மழலையாவோம்!

உடல் நலத்தைப் பேண சரியான பயிற்சி, முறையான பழக்கவழக்கம், சத்தான உணவு என வகைப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், மன நலனுக்கு? மனதை அடக்கியாண்டால் உலகையே கைகொள்ளலாம் என்கிறது இந்து சாஸ்திரம். அதேநேரம், 'மனம் ஒரு குரங்கு’ என ஆதிகாலம் தொட்டுச் சொல்லப்படும் கூற்றுக்களுக்கும் குறைவு இல்லை. மனதைப் பக்குவப்படுத்தும் பயிற்சி குறித்து சொல்கிறார் பிரபல மனநல மருத்துவர் அசோகன்.

''மனதில் தோன்றும் ஆசைகளை அடக்கவும், நெறிமுறைகளோடு வாழவும் ஆன்மிகமே சிறந்த வழி என்பார்கள். நல்ல சிந்தனை எதன் மூலமாக ஏற்பட்டாலும் அதனை வரவேற்பதுதான் மகத்தானது. மனம் தளரும்போதும், நிம்மதிக்காகத் தவிக்கும்போதும் நம்மை மீறிய சக்தி இருப்பதாக மனம் நினைக்கிறது. அந்த நம்பிக்கைதான் நம்மை நல்வழியில் நடத்துகிறது.

சமீபத்தில் ஒரு கண்டுபிடிப்பு மருத்துவ உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு இசைக்கருவியை மீட்டும்போது நம்மில் ஏற்படும் அதிர்வலைகளின் அளவைக் கண்டு பிடித்தார்கள். இசைக்கருவியை மீட்டாமல், அதை மீட்டுவதுபோல் மனதுக்குள் பாவித்தால் அதே மாதிரியான அதிர்வு அலைகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எதையாவது கற்பனை செய்துகொள்வதன் மூலமாகக்கூட நம் உடலுக்குள் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஆராய்ச்சி அது. மனம் எத்தகைய வல்லமை வாய்ந்தது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டியது இல்லை!'' எனச் சொல்லும் டாக்டர் அசோகன் தான் மேற்கொள்ளும் பயிற்சிகள் குறித்தும் சொன்னார்.

''உடல் நலத்தைப் பேணுவதைக் காட்டிலும் மன நலத்தைப் பேணுவது முக்கியமானது. மனம்தான் நம் உடலை ஆள்கிறது. அத்தகைய மனதுக்கு தெளிவையும் தீர்க்கத்தையும் உருவாக்கிக்கொடுக்க வேண்டியது நம் கடமை. இதற்காக மலையைத் தலையில் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நடை பயிற்சி போதும். காலாற நடப்பவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். நான் தினமும் மனமார நடக்கிறேன். ஆழ்ந்த தியானத்தில் மூழ்குவது, பிடித்த மந்திரங்களை உச்சரிப்பது, மனதுக்குள் கற்பனைகளை விதைத்து அதனைப் பெருக்கிப் பார்ப்பது, ஒரு நல்ல நூலை ஆழ்ந்து வாசிப்பது என ஏதாவது ஒரு செயலில் மனதை ஈடுபடுத்தலாம். அதுதான் மனமார நடக்கும் பயிற்சி. கடிகார முள்ளைப் போன்றது மனம். அதனை ஒரு இடத்தில் கட்டி வைப்பது சாத்தியம் இல்லாதது. ஆனால், மனதின் வழியே பயணமானால் மனம் நம் வழியே நிச்சயம் வசமாகும்.

ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் இறை வனைத் துதித்துப் பாடுவார்கள். இறைவனை மனதுக்குள் நேர்நிறுத்தி அவனிடம் நேரடியாகப் பேசுவதுபோல் பிரார்த்திக்கும்போது மனம் இலகுவாகிறது. 'என் கஷ்டங்களை எல்லாம் உன்னிடம் கொட்டிவிட்டேன்!’ என்கிற நிறைவு உண்டாகிறது. மனநல மருத்துவத்தில் பகிர்தல் மூலமாகத்தான் முக்கால்வாசி பிரச்னைகள் சரிசெய்யப்படுகின்றன. 'காடு மலை தேடி வந்து கஷ்டத்தை சொல்லிப்புட்டேன்... வீடுபோய் சேர்ந்தபிறகு வெசனமத்து நான் கிடப்பேன்!’ என பழநி மலைக்கு பாத யாத்திரை செல்பவர்கள் பாடுவதைக் கேட்டிருக்கலாம். ஒருவரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக நம் கஷ்டம் பாதியாகக் குறைகிறது. ஆன்மிகம் தொடங்கி மருத்துவ உலகம் வரை இதைத்தான் சொல்கிறது.

தினமும் குறைந்தது 15 நிமிடங்களை மனப் பயிற்சிக்காக ஒதுக்குங்கள். நல்ல காற்றில் அமைதியான சூழலில் தியானத்தில் அமருங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அன்றைக்கு முழுக்க உங்களுக்குத் தேவையான தெளிவை அந்த 15 நிமிடங்கள் உங்களுக்கு நிச்சயம் தரும்!

நல்ல உணவு உடலை எப்படி சீராக வைத்திருக்கிறதோ... அதேபோல் நல்ல சிந்தனை மனதை சீராக உருவாக்குகிறது. பலவிதமான திட்டங்களோடு நம் இலக்குகளை நோக்கி நாம் ஓடுகிறோம். பலவிதமான அனுபவங்களையும் சந்தித்த பிறகு நமக்குள் ஒரு தெளிவு பிறக்கிறது. தண்ணீரின் மேல் மிதக்கும் தக்கையாக நம்மை உணர்கிறோம். தக்கையின் பயணத்தை தண்ணீரே தீர்மானிக்கிறது என்பது நமக்கு மிகத் தாமதமாகப் புரிகிறது!'' -மனதை இலகுவாக்க வழிசொல்லும் அசோகன் நிறைவாக இப்படிச் சொல்கிறார்.

''நான் நிறையக் கற்றுக்கொண்டது என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இருந்துதான். சிலர் தங்களின் மனக் கவலைகளைப் பற்றிச் சொல்லும்போது, அவர்களின் இடத்தில் அமர்ந்திருக்கவேண்டிய ஆள் நான்தான் என நினைப்பேன். அவர்களின் மனக்கவலைகள் அப்படியே என் மனநிலையைப் பிரதிபலிப்பவை போல இருக்கும். பாமரர் ஒருவர் என்னை சந்தித்தபோது, 'அடுத்தவங்க அண்டுற மாதிரி அனுசரணையான ஆளா இருக்கணும் சார்... ஒரு குழந்தையைக் கொஞ்சுறப்ப நாமளும் குழந்தையா மாறணும். 80 வயது தாத்தாங்கிற தோரணையில குழந்தையை மிரட்டினோம்னா, அது விலகி ஓடிடும்!’ எனச் சொன்னார். இன்றைக்கும் என் மனதுக்குள் அப்படியே ரீங்கரிக்கும் மந்திரம் இது. அடுத்தவர்களின் மனதுக்கு ஏற்றபடி நடந்துகொள்வதே மகத்தான குணம்.

சிறு வயதில் அணிந்த சட்டையை இள வயதில் நாம் தவிர்க்கிறோம். அதன் அளவு பொருந்தாது என்கிற புரிதல் நமக்கு ஏற்படுகிறது. உடையில் மட்டும் அல்ல... உள்ளத்திலும் அந்தப் புரிதல் ஏற்பட வேண்டும். எளிமை பழகி, எல்லாவற்றையும் ரசித்து, சின்னச் சின்ன சந்தோஷங்களில் சிலிர்த்து சாதாரண இலக்குக் கொண்ட ஆளாக இருப்பதில்தான் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கிறது. குழந்தையாகப் பிறந்து வயதான குழந்தையாக மாறுவதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது!''

ஒழுக்கத்தை வளர்க்கும் தாய்ப்பால் !

'தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழுக்கமுள்ள குழந்தைகளாக வளர்வார்கள்’

- சமீபத்தில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட மெகா ஆய்வின் ரிசல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாடஇருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!


'' 'தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் பல்வேறு நன்மைக்கு வழிவகுக்கும் என்பது காலம்காலமாக வலியுறுத்தப்படும் விஷயம்தான். ஆனால், இன்றைய நவநாகரிக உலகில்... நேரமின்மை, அழகுக் கெட்டுவிடும் என்பதுபோன்ற பல காரணங்களால்... குழந்தைக்குப் பால் கொடுப் பதையே பாரமாக நினைக்க ஆரம்பித்து விட்ட னர் பலர். இத்தகைய சூழலில், ஆய்வுபூர்வ மாகவும்... தாய்ப்பாலின் மகத்துவம் வலியுறுத் தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது'' என்று சொல்லும் காரைக்குடியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான வெங்கடேசன், அந்த ஆய்வு குறித்த தகவல்களை முதலில் பகிர்ந்தார்.

''ஐரோப்பாவின் 'டிபார்ட்மென்ட் ஆஃப் ஹெல்த்’ என்கிற அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக, மொத்தம் 10,037 குழந்தைகளிடமும் அதன் தாய்மார்களிடமும் இந்த மெகா ஆய்வினை நடத்தியது. இதில் 9,525 குழந்தைகள் நிறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்; 512 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தவை. அத்தனை குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணித்த டாக்டர்கள் குழு, பிறந்து ஒன்பது மாதங்கள் ஆனநிலையில், 'தாய்ப்பால் மட்டுமே எத்தனை நாட்கள் கொடுத்தீர்கள்?’ என்று தாய்மார்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறது. அதன் பிறகும் குறிப்பிட்ட மாத இடைவெளிகளில் குழந்தைகளின் உடல்நிலை குறித்தும், அதன் நடத்தைகள் குறித்தும், எதுவரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கட்ட சர்வேக்கள் எடுத்திருக்கிறார்கள்.


இறுதியாக, ஐந்து வயது பூர்த்தியானதும் அவர்களின் நடத்தை உள்ளிட்டவை பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. அதில்தான், நிறைமாத பிரசவத்தில் பிறந்து, குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்த குழந்தைகளில் 75% பேர் ஒழுக்கமும், நல்ல பழக்க வழக்கமுள்ளவர்களாகவும் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்து, தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்திருந்த குழந்தைகளிடமிருந்து தெளிவான முடிவைப் பெற முடியவில்லை.

குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பிற காரணிகள் குறித்தும் ஆய்வுகளை நடத்தினார்கள். குழந்தைகள் பிறந்த சூழ்நிலை, அவர்களை பாதித்த நோய்கள் உள்ளிட்டவை இதில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில், 'குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான 'எஸ்ஸென்ஷியல் லாங்-செயின் பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ்' (Essential Long - Chain Polyunsaturated Fatty Acids) தாய்ப்பாலில் அதிகம் இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் அதன் செயல்பாட்டையும் ஊக்குவிப்பதுடன் தாய் - குழந்தை பிணைப்பையும் வலுப்படுத்துகிறது’ என்ற தகவல்களும் கிடைத்திருக்கின்றன'' என்ற டாக்டர் வெங்கடேசன், மேலும் சில உபயோக மான தகவல்களையும் சொன்னார்.

''தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து 'இண்டியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' (Indian Academy Of Paediatrics) அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், மற்ற குழந்தைகளைவிட, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து ஆறு மடங்கு குறைவாகத்தான் பாதிக்கப்படுகிறார்கள்... தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய், கருமுட்டை பை புற்று நோய் (Ovarian cancer)160; உள்ளிட்ட நோய்கள் வருவது தடுக்கப் படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

தாய்ப்பால் சுரப்பியானது குடிக்கக் குடிக்கத்தான் ஊறும். புட்டிப்பாலை கொடுத்து பழக்கிவிட்டால் பிறகு, தாயிடம் பாலை சப்பிக் குடிக்காமல் இருந்துவிடும். இதனால் பால் சுரப்பதும் தடைப்படும். முதலில் குழந்தைகளைப் பசித்து அழ விடவேண்டும். அழுகிறார்களே என்று புட்டிப்பாலை கொடுத்தால், அது பசியைக் குறைத்துவிடும். அதன்பிறகு தாய்ப்பாலுக்கு ஏங்கமாட்டார்கள்.

சில தாய்மார்களின் பால் புகட்டும் நிப்பிள் சிறிதாக இருப்பதால், சிறிய பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை உறிஞ்சி எடுத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்கள். தவிர்க்க முடியாத நிலையில் இதைச் செய்யும்போது, கண்டிப்பாக சங்கு (பாலாடை) மூலமாகத்தான் அந்தப் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும்.

பிரசவமானதும் தாய்க்கு முதலில் சுரக்கும் பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்கிற தவறான கண்ணோட்டம் இன்றும் நிலவுகிறது. அந்தப் பாலில்தான் நோய் எதிர்ப்புச் சக்திக்கான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது, குழந்தைகளுக்கு வரும் நோயை எதிர்க்கும் போர் வீரனைப் போன்றது.

சின்னம்மை பாதித்த தாய்மார்கள், தாராளமாக தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கலாம். சின்னம்மை, குழந்தைக்கு தொற்றுவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்களாவது ஆகும். அதற்குள், தாய்க்கு உடம்பில் உண்டாகும் எதிர்ப்புச் சக்தியானது தாய்ப்பால் மூலமாக குழந்தையின் உடம்பில் சேர்ந்து எதிர்ப்புத் தன்மையை உண்டாக்கி விடுவதால் குழந்தையை அது தாக்காது'’ என்ற டாக்டர்,

''தாய்ப்பால் புகட்டுவதால் அழகுக் குலைந்துவிடும் என்று சொல்லப்படுவதில் துளியும் உண்மையில்லை. தாய்ப்பால் குழந்தைக்கு நன்மை சேர்ப்பதோடு, அம்மாக்களும் உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து '50 கே.ஜி தாஜ்மஹால்' போல ஜொலிப்பார்கள்'' என்று ஃபிட்னெஸ் ரகசியத்துக்கும் டிப்ஸ் தந்தார்.

ஐந்து லிட்டர் தண்ணீர்... அரை லிட்டர் ஜுஸ்!

அபர்ணா பாஜ்பாய்... மும்பையை மூச்சிரைக்க வைக்கும் மாடல். 'ஈசன்’ படத்தில் பெரிய இடத்துப் பெண்ணாகக் கன்னம் காட்டிவிட்டுப் போனவர், 'கருப்பம்பட்டி’ படத்துக்காக அஜ்மலுடன் ஆட்டம் போடுகிறார். சிக் உடம்பில் கிக் கிளப்பும் இந்த மோகினி ஆடாத ஆட்டமே இல்லை!

''ரொம்ப ஸ்லிம்மாவும் அதே நேரம் ரொம்ப ஸ்ட்ராங்காவும் என் உடம்பை வெச்சிருக்கேன்னா, அதுக்கு ஸ்போர்ட்ஸ்தான் காரணம். நான் ஜிம் பக்கம் தலைவெச்சே படுக்க மாட்டேன். பயிற்சிங்கிற பேர்ல உடம்பைச் சக்கையா பிழிஞ்சு எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்ம உடம்புக்கே தெரியாம நாம பண்றது தான் பயிற்சி. பேஸ்கட் பால், பேட்மிட்டன், ஸ்பின்னிங், பௌலிங்னு நிறைய விளையாட்டுகள் எனக்குத் தெரியும். மணிக்கணக்கில் விளையாடுவேன். சும்மா பேருக்காக விளையாடுற ஆள் இல்லை நான். எந்த விளையாட்டா இருந்தாலும், முதல் ஆளா பின்னி எடுப்பேன். நான் பேஸ்கட் பால் ஆடுற அழகை வந்து பாருங்க... மைதானமே குலுங்குற அளவுக் குத் தடதடன்னு ஆடுவேன். உடம்பில் 200 கிராம் வெயிட் ஏறினாலும், எனக்குத் தெரிஞ்சிடும். வெயிட் போடுற மாதிரி தெரிஞ்சா விளையாடுற நேரத்தை ஜாஸ்தி ஆக்கிடுவேன். ஷூட்டிங் நேரத் தில் சூழலுக்குத் தக்கபடியான விளையாட்டுகளை விளையாடுவேன்!''-தெம்பாகக் கையை மடக்கிக்காட்டிச் சிரிக்கிறார் அபர்ணா.



''விளையாட்டு தவிர, வேறு பயிற்சிகள் எதுவும் செய்வது கிடையாதா?''

''காலையில் வாக்கிங், ஜாக்கிங் போவேன். அதைக்கூட பயிற்சியா நினைச்சுப் பண்றது கிடையாது. 6 மணிக்கு எழுந்து காலாற நடக் கிறப்ப, மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும். ஒருநாள் தவறினாலும் அன்னிக்கு முழுக்க எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும். அதே மாதிரி டான்ஸும் எனக்கு உயிர். குச்சிப்புடி, கதகளி, வெஸ்டர்ன்னு விதவிதமா ஆடுவேன். டான்ஸ் ஆடுறப்ப கிடைக்கிற பரவசத்துக்கும் ஆத்ம திருப்திக்கும் அளவே இருக்காது. நைட்ல, பிடிச்ச மியூஸிக்கைக் கேட்டபடியே பெட் ரூம்ல டான்ஸ் ஆடுவேன். விளை யாட்டு, டான்ஸ், வாக்கிங், ஜாக் கிங்னு இத்தனை விஷயங்களையும் தாண்டி, தனியாப் பயிற்சிகள் ஏதும் பண்ணணுமா என்ன?''

''சின்ன குழந்தைங்க சாப்பிடுற மாதிரி குறைவா சாப்பிடுறீங்களே... எப்பவுமே இப்படித்தானா?''

''பசிக்குத் தக்கபடி அளவாத்தான் சாப்பிடுவேன். உணவு விஷயத்தில் எவ்வளவு கரெக்ட்டா இருக்கிறோமோ, அந்த அளவுக்கு உடம்பு கன்ட்ரோலா இருக்கும். மும்பையில் இருந்த வரைக்கும் சரியா டயட் ஃபாலோ பண்ணினேன். ஆனால், 'ஈசன்’ ஷூட்டிங்குக்காக சென்னை வந்தப்ப 'ஆப்பம்’கிற அட்டகாசமான உணவை அறிமுகப்படுத்திட்டாங்க. அப்பப்பா... என்ன ஒரு டேஸ்ட்? ஆப்பமும் தேங்காய்ப் பாலும் கொடுக்கிறவங்களுக்கு நான் அடிமையாகவே இருக்கத் தயார். இப்போ மும்பை முழுக்கச் சல்லடை போட்டுத் தேடி ஆப்பம் விக்கிற கடைகளைக் கண்டுபிடிச்சிட்டேன். வாரத்துக்கு ஒரு தடவையாவது ஆப்பக் கடைகளில் ஆஜராகிடுவேன். எப்பவுமே ப்யூர் வெஜிடேரியன். வெரைட்டியான சத்துகள்கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன். எண்ணெய்ப் பதார்த்தங்களைக் கண்டாலே பயம் வந்துடும். இரவு நேரங்களில் கிராம் கணக்கில் தான் சாப்பிடுவேன். ரொம்ப ஸ்லிம்மா இருக்கிற துக்கு அதிகமா சாப்பிடாததும் முக்கியக் காரணம்!''

''முக அழகை எப்படிப் பராமரிக்கிறீங்க?''

''வெளிப்புற அலங்காரத்தால் சில மணி நேரங்களுக்கு மட்டுமே முகத்தையும் உடலையும் அழகா வெச்சுக்க முடியும். உணவு முறைகள் மூலமா உருவாகும் அழகுதான் நிலைச்சு நிக்கும். சின்ன வயசுல இருந்தே இந்த விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன். அதனால், மேக்கப் விஷயத்தில் நான் அக்கறை காட்டுறதே கிடையாது. தினமும் நிறைய பழங்கள் சாப்பிடுவேன். அரை லிட்டர் அளவாவது ஜூஸ் குடிப்பேன். பச்சைக் காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவேன். சாப்பாட்டில் எப்பவுமே ஒரு கீரை இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பேன். சாப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டாலும், தண்ணீர் விஷயத்தில் சரியா இருப்பேன். வெள்ளரி, தர்பூசணி மாதிரி குளிர்ச்சியான பொருட்களை வைத்து ஃபேஷியல் பண்ணிக்குவேன். இயற்கையான பொருட்களை முகத்தில் அப்ளை பண்றதால், ஸ்கின் எந்தப் பாதிப்புக் கும் ஆளாகாது. ஷூட்டிங் நேரத்தில் மட்டுமே மேக்கப். அதுவும் டைரக்டர் வற்புறுத்தினால் மட்டும்!''

''தலைமுடியும் ரொம்ப ஷைனிங்கா இருக்கே?''

''கால் வரைக்கும் முடி வளர்த்து அழகு காட்டுறது எல்லாம் அந்தக் காலம். ஸ்டைலிஷாவும் ஷைனிங்காவும் முடியை வெச்சுக்கிறதுதான் இப்போதைய ட்ரெண்ட். வாரத்துக்கு இரண்டு தடவை தலைமுடிக்கு கண்டிஷனர் ஷாம்பு பயன்படுத்துவேன். அடிக்கடி ஆயில் மசாஜ் பண்ணிக்குவேன். உச்சந்தலையில் ஏற்படும் குளிர்ச்சிதான் உடல் முழுக்கக் குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால், ஆயில் மசாஜ் எல்லாப் பெண்களுக்குமே அவசியம்!''

''எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பது எப்படி?''

''வாழ்க்கையில் எனக்குப் பிடிச்ச இரண்டு விஷயம் தூக்கமும் புன்னகையும்தான். உலகத் தைப்பற்றிக் கவலையேபடாமல் கண்ணை மூடித் தூங்கும் நிம்மதி நமக்கு வேற எந்த விஷயத்திலும் கிடைக்கிறதே இல்லை. அதனால 10 நிமிஷ இடைவெளி கிடைச்சா லும் கண்ணை மூடிக்கிடப்பேன். தவறியும் யார்கிட்டயும் கோபப்பட மாட்டேன். கோபத்தால் சாதிக்க முடியாததை, சின்னப் புன்னகையால் நிச்சயம் சாதிக்க முடியும். நம் குணம் எப்படிப்பட்டதுன்னு சொல்ற விசிட்டிங் கார்டே புன்னகைதான். மாடலிங், சினிமா மாதிரியான இடங்களில் ஜெயிக்க அந்த விசிட்டிங் கார்டு எப்பவும் இதழ்களில் இருந்துகிட்டே இருக்கணும்!''