பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

முன்னேற்றத்துக்கு கைகொடுக்கும் மொழிப் பாடம்!

"தற்போது ப்ளஸ் டூ படித்துவரும் எங்கள் மகளை இன்ஜினீயரிங் அல்லது மெடிக்கல் சேர்க்கும் கனவில் இருக்கிறோம். அதற்கேற்ற வாறே அவளும் நன்றாகப் படித்து வந்தாள். ஆனால், எதிர்பாராத அதிர்ச்சியாக தற்போது, 'ஆங்கிலம் வழியாக படிக்கக் கூடிய எந்தவொரு கல்லூரி மேற்படிப்புமே எனக்கு வேண்டாம்’ என்கிறாள்.

காரணம்... மொழிப்பாடத்தில் அவள் மிகவும் வீக் என்பதுதான். தொழிற்கல்விக்கான 'கட் ஆஃப் மார்க்'க்கு, மொழிப்பாட மார்க் அவசியம் இல்லை என்பதால், அதில் அவளை போதிய கவனம் செலுத்த வைக்காத எங்களின் தவறு இப்போதுதான் புரிகிறது. அவளை எப்படி கையாள்வது..?'' என்று கேட்டிருக்கிறார் ஆத்தூரைச் சேர்ந்த ராஜசேகரன்.

அவருக்கு பதில் தருகிறார் அரியலூர், வித்யா மந்திர் மெட்ராஸ் சிமென்ட்ஸ் (சி.பி.எஸ்.இ.)பள்ளி முதல்வர் த.ராஜ்குமார்.

"பெற்றோர் மட்டுமல்ல... ஆசிரியர்களும் கூட இத்தகைய தவறுக்கு காரணமாக இருக்கிறார்கள். 'தொழிற் கல்வியில் சேர வேண்டும்... அதற்கான 'கட் ஆஃப் மார்க்'க் குக்கான பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்கிற நோக்கத்தில் பழுதில்லை. அதற்காக மொழிப்பாடங்களை அலட்சியம் காட்டுவது தவறு.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் சில புகழ்பெற்ற வட இந்திய கல்வி நிறுவனங்கள் மொழிப் பாடங்களை உள்ளடக்கிய மொத்த மதிப்பெண்களின் சதவிகிதத்தையும் மேற்படிப்பு களுக்கு கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும்போது இந்த மொத்த மதிப்பெண் சதவிகிதம் என்பது கேபிடேஷன் ஃபீஸை குறைக்க வழி செய்யும்.

'கட் ஆஃப் மார்க்' என்பது காலேஜ் அட்மிஷனோடு முடிந்து போவது. அதன் பிறகு பாடங்களைப் புரிந்து கொள்ள கை கொடுக்கப்போவது பள்ளி வரை படித்த மொழிப்பாட அறிவுதான். கல்லூரியில் மட்டுமல்ல, வேலைவாய்ப்புச் சந்தையிலும்கூட மொழிப்பாட அறிவு நிரம்பவே கை கொடுக்கும். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் கல்லூரி முடித்த சூட்டோடு பணியில் சேர்பவர்களில், மூன்று மாதங்கள் கழித்து அந்த நிறுவனம் வைக்கும் தேர்வில் துறை சார்ந்த அறிவு மட்டுமல்லாது மொழியறிவு, சக பணியாளர் களுடன் குழுவாக இணைந்து செயல்படுவது, தகவல் தொடர்பில் உள்ள திறமைகள் என எல்லாம் அசலப்பட்டு, அதில் தேறுபவர்கள்தான் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் போவார்கள்.

எனவே, பள்ளியில் படிக்கும்போதே மொழிப்பாட வகுப்புகளில் கவனம் செலுத்தி வந்தால், இம்மாதிரியான இடைஞ்சல்களைத் தவிர்க்கலாம். ஆசிரியர்களும் மொழிப்பாட பீரியட்களை மற்ற பாடங்களுக்கு தருவது, செய்முறை பயிற்சிக்கு அனுப்புவது போன்ற வற்றைத் தவிர்த்து மாணவர்கள் மத்தியில் மொழிப்பாட ஆர்வத்தை தர வேண்டும்.

சரி, இருக்கும் கால அவகாசத்தில் உங்கள் மகளின் ஆங்கில மொழிப்பாட தடுமாற்றத்தை தகர்ப்பது எப்படி என்று பார்ப்போம். இந்த வயதில் 'பியர் குரூப்’ எனப்படும் உடனிருக்கும் சக மாணவர்களின் சகவாசம் உங்கள் மகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆங்கிலத்தில் ஆர்வமுள்ள மாணவிகள் வட்டாரத்தில் புழங்கச் செய்வது அவரது ஆர்வத்தையும் சீர்தூக்கிவிடும்.

படிப்புக்கு இடையேயான ஓய்வு பொழுதுகளில் ஒரு மாற்றத்துக்காக டி.வி. பார்ப்பது வழக்கமெனில் ஆங்கில செய்தி சேனல்கள், ஆங்கில சப்டைட்டில்களுடனான படங்கள் இவற்றை பார்க்கலாம். ஆங்கில செய்தித்தாள் படிப்பது மற்றும் ஆங்கில கதைகள் படிப்பது போன்றவையும் இவற்றில் சேர்க்கலாம். மாணவிக்கு பிரியமான ஆசிரியை உதவியுடன் அவருடைய அச்சத்தை படிப்படியாக நீக்கலாம். பிளஸ் டூ பரீட்சைக்கு பிறகான கால இடைவெளியில் தரமான ஆங்கிலப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து, எழுத்து மற்றும் பேச்சுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அப்படியும் ஆங்கில அச்சம் அவரிடம் தொடர்ந்தால்... தற்போது தமிழகத்தில் அறிமுக மாகி இருக்கும் தமிழ் வழி பொறியியல் படிப்பு களைத் தேர்ந்தெடுக்கலாம். காலப்போக்கில் மொழித்தடை அதுவாக விலகட்டும். அதுவரை உங்கள் மகளின் மேற்கல்விப் பாதை தடையின்றி செல்லட்டும்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக