பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ஒழுக்கத்தை வளர்க்கும் தாய்ப்பால் !

'தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழுக்கமுள்ள குழந்தைகளாக வளர்வார்கள்’

- சமீபத்தில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட மெகா ஆய்வின் ரிசல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாடஇருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!


'' 'தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் பல்வேறு நன்மைக்கு வழிவகுக்கும் என்பது காலம்காலமாக வலியுறுத்தப்படும் விஷயம்தான். ஆனால், இன்றைய நவநாகரிக உலகில்... நேரமின்மை, அழகுக் கெட்டுவிடும் என்பதுபோன்ற பல காரணங்களால்... குழந்தைக்குப் பால் கொடுப் பதையே பாரமாக நினைக்க ஆரம்பித்து விட்ட னர் பலர். இத்தகைய சூழலில், ஆய்வுபூர்வ மாகவும்... தாய்ப்பாலின் மகத்துவம் வலியுறுத் தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது'' என்று சொல்லும் காரைக்குடியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான வெங்கடேசன், அந்த ஆய்வு குறித்த தகவல்களை முதலில் பகிர்ந்தார்.

''ஐரோப்பாவின் 'டிபார்ட்மென்ட் ஆஃப் ஹெல்த்’ என்கிற அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக, மொத்தம் 10,037 குழந்தைகளிடமும் அதன் தாய்மார்களிடமும் இந்த மெகா ஆய்வினை நடத்தியது. இதில் 9,525 குழந்தைகள் நிறைமாதத்தில் பிறந்த குழந்தைகள்; 512 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தவை. அத்தனை குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணித்த டாக்டர்கள் குழு, பிறந்து ஒன்பது மாதங்கள் ஆனநிலையில், 'தாய்ப்பால் மட்டுமே எத்தனை நாட்கள் கொடுத்தீர்கள்?’ என்று தாய்மார்களிடம் விவரங்களைச் சேகரித்திருக்கிறது. அதன் பிறகும் குறிப்பிட்ட மாத இடைவெளிகளில் குழந்தைகளின் உடல்நிலை குறித்தும், அதன் நடத்தைகள் குறித்தும், எதுவரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கட்ட சர்வேக்கள் எடுத்திருக்கிறார்கள்.


இறுதியாக, ஐந்து வயது பூர்த்தியானதும் அவர்களின் நடத்தை உள்ளிட்டவை பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. அதில்தான், நிறைமாத பிரசவத்தில் பிறந்து, குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்த குழந்தைகளில் 75% பேர் ஒழுக்கமும், நல்ல பழக்க வழக்கமுள்ளவர்களாகவும் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்து, தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்திருந்த குழந்தைகளிடமிருந்து தெளிவான முடிவைப் பெற முடியவில்லை.

குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பிற காரணிகள் குறித்தும் ஆய்வுகளை நடத்தினார்கள். குழந்தைகள் பிறந்த சூழ்நிலை, அவர்களை பாதித்த நோய்கள் உள்ளிட்டவை இதில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில், 'குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான 'எஸ்ஸென்ஷியல் லாங்-செயின் பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ்' (Essential Long - Chain Polyunsaturated Fatty Acids) தாய்ப்பாலில் அதிகம் இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் அதன் செயல்பாட்டையும் ஊக்குவிப்பதுடன் தாய் - குழந்தை பிணைப்பையும் வலுப்படுத்துகிறது’ என்ற தகவல்களும் கிடைத்திருக்கின்றன'' என்ற டாக்டர் வெங்கடேசன், மேலும் சில உபயோக மான தகவல்களையும் சொன்னார்.

''தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து 'இண்டியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' (Indian Academy Of Paediatrics) அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், மற்ற குழந்தைகளைவிட, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து ஆறு மடங்கு குறைவாகத்தான் பாதிக்கப்படுகிறார்கள்... தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய், கருமுட்டை பை புற்று நோய் (Ovarian cancer)160; உள்ளிட்ட நோய்கள் வருவது தடுக்கப் படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

தாய்ப்பால் சுரப்பியானது குடிக்கக் குடிக்கத்தான் ஊறும். புட்டிப்பாலை கொடுத்து பழக்கிவிட்டால் பிறகு, தாயிடம் பாலை சப்பிக் குடிக்காமல் இருந்துவிடும். இதனால் பால் சுரப்பதும் தடைப்படும். முதலில் குழந்தைகளைப் பசித்து அழ விடவேண்டும். அழுகிறார்களே என்று புட்டிப்பாலை கொடுத்தால், அது பசியைக் குறைத்துவிடும். அதன்பிறகு தாய்ப்பாலுக்கு ஏங்கமாட்டார்கள்.

சில தாய்மார்களின் பால் புகட்டும் நிப்பிள் சிறிதாக இருப்பதால், சிறிய பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை உறிஞ்சி எடுத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்கள். தவிர்க்க முடியாத நிலையில் இதைச் செய்யும்போது, கண்டிப்பாக சங்கு (பாலாடை) மூலமாகத்தான் அந்தப் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும்.

பிரசவமானதும் தாய்க்கு முதலில் சுரக்கும் பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்கிற தவறான கண்ணோட்டம் இன்றும் நிலவுகிறது. அந்தப் பாலில்தான் நோய் எதிர்ப்புச் சக்திக்கான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது, குழந்தைகளுக்கு வரும் நோயை எதிர்க்கும் போர் வீரனைப் போன்றது.

சின்னம்மை பாதித்த தாய்மார்கள், தாராளமாக தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கலாம். சின்னம்மை, குழந்தைக்கு தொற்றுவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்களாவது ஆகும். அதற்குள், தாய்க்கு உடம்பில் உண்டாகும் எதிர்ப்புச் சக்தியானது தாய்ப்பால் மூலமாக குழந்தையின் உடம்பில் சேர்ந்து எதிர்ப்புத் தன்மையை உண்டாக்கி விடுவதால் குழந்தையை அது தாக்காது'’ என்ற டாக்டர்,

''தாய்ப்பால் புகட்டுவதால் அழகுக் குலைந்துவிடும் என்று சொல்லப்படுவதில் துளியும் உண்மையில்லை. தாய்ப்பால் குழந்தைக்கு நன்மை சேர்ப்பதோடு, அம்மாக்களும் உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து '50 கே.ஜி தாஜ்மஹால்' போல ஜொலிப்பார்கள்'' என்று ஃபிட்னெஸ் ரகசியத்துக்கும் டிப்ஸ் தந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக