பிரபலமான இடுகைகள்

புதன், 2 மார்ச், 2011

கண்டிப்பா படிங்க- திருக்குறளி​ல் வாழ்வியல்

திருக்குறளில் வாழ்வியல்!!



பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய கேள்விக்கான பதில்களையெல்லாம் இன்றே நமக்காய் சேகரித்து யாரோ ஒருவரின் கைகளில் கொடுத்துவைக்காமல்; காலம் நகர்வதேயில்லை.

அப்படி - நமது இன்றைய தேவைகள் அத்தனையையும், ‘அன்றே 'இரண்டாயிரமாண்டு முன்னரே திருவள்ளுவர் எனும் ஒரு காலத் தச்சனின் கையில் காலத்தால் நமக்கென கொடுத்து வைக்கப் பட்ட பொக்கிஷம் தான் திருக்குறள்.
// இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் // என்று மனப்பாடம் செய்து அன்று தேர்வில் எழுதியது தவிர, எத்தனை பேர் நம்மில் ஒரே ஒரு குறலை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழப் பழகியிருப்போம்???!!!
என்னை கேட்டால்; நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறில்லை என்று மனசாட்சியை ஒரு புனித புத்தகத்தின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுப்பவர்கள்; திருக்குறளை முழுமையாய் உணர்ந்து படித்திருப்பார்களெனில் 'படித்து வாழ்ந்திருப்பார்களெனில் அவர்களுக்கு அங்ஙனம் ஒரு நிலைக்குச் செல்ல வாய்ப்பே அமைந்திருக்காது. அதோடு மட்டுமல்லாமல் அங்ஙனம் சத்தியப்பிரமாணம் எடுக்கக் ‘தமிழருக்கென்று புனித நூலாய் 'திருக்குறள்' எனும் மாபெரும் படைப்பு ஒன்றே போதுமானதாகவும் இருந்திருக்கும். காரணம் –வாழ்வியலின், உலக மனிதர்களுடைய நடத்தையின், ஒவ்வொரு அசைவையும் தமிழன் எனும் பதத்தில், தமிழனின் வாழ்வு முறையின் உத்தியில்; வாழும் ஒவ்வொரு உயிர்க்கும், ‘வாழ்தலை சொல்லித் தரும் உலகப் பொதுமறை, நமக்குக் கிடைத்த பொக்கிஷம் திருக்குறள். ஒரு மனிதன் பிறக்கும்போதே அவன் பிறகு எப்படி வளர்க்கப் படவேண்டும், எப்படி இவ்வுலகில் வாழவேண்டும், எந்த கண்கொண்டு இவ்வுலகை காணவேண்டும், எந்த தருணத்தில் தன்னை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதுமுதல், வாழ்வின் கடைசித் தருணத்தில் நாம் கரைந்துப் போவது வரை திருக்குறளின் மூலம் திருவள்ளுவரேச் சொல்கிறார். // நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு // இப்படி ஒரு குறள்

முடிகிறது. இக்குறளில் –இயற்கை என்பது இப்படித் தான்; நீ நல்லது செய்தாலும் அது தீமையாகலாம், நீ செய்யும் தீயதும் சிலவேளை நன்மையாக முடியலாம், எனவே காலத்தின் எந்த ஒரு கடவிற்கும் நீ மட்டுமே காரணமென்றெண்ணி நீ உடைந்து விடாதே என்கிறார். மேலும், இந்த இயற்கையின் படைப்பே இப்படித் தான் இருக்கிறதென்று நமக்கு ஆறுதல் வார்த்தையை தருவதோடு நில்லாமல், இன்று நீ செய்யும் நன்மை தீயவை ஆவதும், தீயவை நன்மையாவதும் கூட என்றோ நீ செய்த உன் ஊழ்வினையால் தான். எனவே, நாளைய வாழ்விற்கு இன்றே உன்னைச் சரிபடுத்தி வைத்திரு’ எனும் ஞானப் பாடத்தையும் இந்த இரண்டு வரிகளில் தருகிறார் திருவள்ளுவர். இன்று நாம் வெளி உலகில் நிறைய பேரை பார்க்கிறோம், உண்பதற்கு உணவிருக்காது ஆனால்; உணவு மேல் ஆசை பொங்கும், சிலருக்கு உணவு கொட்டிக் கிடக்கும் ஆனால் உண்பதற்கு காலமோ சூழலோ உடல்நிலையோ இடம் தருவதில்லை, காரணம் அதை கூட நாம் வாழும் நெறியே தீர்மானிக்கிறது என்கிறார். நாம் வாழும் பக்குவம் மட்டுமே நமக்கு எதையுமே ஈட்டுத் தருகிறது அன்றி வேறில்லை என்கிறார் திருவள்ளுவர். // வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது // எனும் குறளில் – என்னதான் கோடி பொருள் சேர்த்திருந்தாலும் அதிலும் நமக்கென இத்தனைத்தான் விதிக்கப் பட்டுள்ளது. அந்த எத்தனை விதிக்கப் பட்டுள்ளதோ அத்தனையை -மட்டுமே நம்மால் அனுபவிக்க இயலும் அல்லாது எது நமக்கு இருந்தும் அவைகள் இல்லாத பொருளுக்கே சமம் என்கிறார். ஆனால், அந்த விதிக்கப் பட்டது என்பது யாரோ வந்து நம் தலையில் எழுதி விட்டு சென்றது என்று அர்த்தம் கொள்வதைக் காட்டிலும், நாம் நேற்று வாழ்ந்த வாழ்க்கை எப்படி இன்றினை முடிவு செய்கிறதோ; அப்படி நாளைக்கான நம் நன்மை தீமைகளையும் நாமே இன்று நம் ஒவ்வொரு அசைவுகளினால் வாழ்தலினால் தீர்மானிக்கிறோம், எனவே என்னதான் கோடி கோடியை பணமாகவோ சொத்தாகவோ சேர்த்தாலும், சேர்ப்பது மட்டுமாகி விடாது வாழ்க்கை. அதை எப்படி நெறி படி சேர்த்தோம் என்பதும் வாழ்வியலில் முக்கியமான ஒன்றாகிறது என்கிறார். அப்படி நெறி படி வாழ்தலில், அந்த வாழ்தலின்படி நமக்கான நன்மைகளும் தீமைகளும் வந்தடைகின்றன. எனவே சம்பாதிப்பது மட்டும் நம் கடமையில்லை, வாழ்தலை கண்ணியப் படுத்திக் கொள்ளலும் நம் பொருப்பாகிறது என்கிறது இக்குறள்.எல்லோருக்குமே பெரிய ஆளாக வேண்டும், நான்கு பேர் மதிக்க கண்ணியமாக வாழ வேண்டும், தன்னை சரியாக வைத்திருக்க வேண்டும், தான் சார்ந்த உலகம் தன்னை மெச்சிடும் வகையில் தன் வாழ்க்கை அமையவேண்டும் என்று ஓர் ஆசை இருக்கிறது. அந்த ஆசையை அடைவது எப்படி, அங்ஙனம் சரியானவராக ஒருவர் புகழ் நிலைத்து வாழ அந்த வாழ்தல் எப்படி இருந்திடல் வேண்டும் என்றும் திருக்குறள் சொல்கிறது. அந்த ஆசையினை போல் அப்படி உயர்ந்துவிட்ட மனிதன், தான் உயர்ந்த இடத்தை அடைந்த பிறகு அவன் கடந்து வந்த பாதையை மறக்காத பட்சத்தில் மட்டுமே தனக்கு கீழுள்ளோரை மதிக்கவும் பண்பு கொள்கிறான் என்றெண்ணி; இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே, செய்தது சிறிதாயினும், அந்த சிறு நன்றி யுணர்தல் குறித்து திருவள்ளுவர் எத்தனை அழகாக சொல்கிறார் பாருங்கள் –// தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் // எனில் - ஒருவர் மிக சிறு உதவியே செய்திருப்பினும் கூட, அந்த உதவியின் பயனை அறிந்தவருக்கு; அது மாபெரும் செயலாக கருதப் படுகிறதென்கிறார். ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். ஒருரூபாய்க்கு பயண சீட்டு வாங்க வேண்டும். கையில் ஏகப்பட்ட வங்கிகள் வழங்கிய பணம் எடுக்கப் பயன்படும் அட்டைகள் இருக்கின்றது. அந்த அட்டையை எந்திரத்தில் தட்டினால் கோடி கோடியாய் பணம் கொட்டும். எல்லாம் சரி தான், ஆனால், அத்தனை வைத்திருந்தாலும் சில்லறை பணம் எடுக்க மறந்தீர்கள் என்று வையுங்கள், நம் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு – இன்று இத்தனை மணிக்கு சென்று ஒரு பெரிய வேலைக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்று பார்த்து ஓட்டுனர் வராமலோ அல்லது மகிழூந்து பழுதுபட்டோ வேறு வழியின்றி அவசர அவசரமாக ஒரு அரசு பேருந்து பிடித்து செல்லக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவசரத்தில், பணப்பை எடுக்க மறந்து பேருந்தில் ஏறிவிடுகிறீர்கள். பேருந்து கூட்டத்தில் அலைமோதும் நிறைய பேரை ஏற்றிக் கொண்டு பாதி தூரம் வந்து விடுகிறது. நடத்துனர் கூட்டத்தை விளக்கி விட்டுக் கொண்டு உங்களை நோக்கி வருகிறார். இப்போது, பயணச் சீட்டு வாங்க, ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். நடத்துனர் சீட்டு வாங்கச் சொல்லி கைநீட்டி உங்கள் எதிரே வந்து நிற்கிறார். சட்டை பையில் கைவிட்டு துழாவி பார்த்ததில் வங்கியின் பணம் எடுக்க உதவும் அட்டைகளே கையில் தட்டுப் படுகின்றன. துழாவி தேடி எடுத்ததில் அந்த வங்கி அட்டைகள் போக தொன்னூற்றி ஐந்து பைசா மட்டும் கிடைத்து விடுகிறது. மீதம் ஐந்து பைசா இல்லவே இல்லை. நடத்துனர் முகம் பார்த்தால் மென்று தின்று விடுவார்போல் அப்படி உர்ரென்று இருந்தார். ‘நாங்க மட்டும் ஐந்து காசு குறைவா கொடுத்தா எவ்வளவு அழுத்தமா சத்தமா சட்டம் பேசி கேட்கிறீங்க அதுபோல நீங்களும் தர வேண்டாமா’ என்று யாரையோ கடிந்துப் பேசிக் கொண்டே வருகிறார். உங்கள் அருகில் இப்போது வந்து விட்டார். நீங்கள் மீண்டும் சட்டை பைகளில் மாறி மாறி துழாவிப் பார்த்து வேறு பணம் இல்லாமையால் பதற்றம் கொள்கிறீர்கள். உங்களையே பார்க்கிறார் நடத்துனர். சுற்றி இருக்கும் மக்கள் எல்லாம் உங்களையே பார்க்கிறார்கள். அவசரத்தில் துரிதப் பட்டு தேடியதில் நெற்றி, உடம்பெல்லாம் உங்களுக்கு வியர்த்து விடுகிறது. நடத்துனர் என்னாச்சு எவ்வளோ இருக்கோ கொடுங்க என்கிறார், அவுமானமாக இருக்கிறது உங்களுக்கு.இல்லை சில்லறை போதவில்லை இறங்கி விடுகிறேன் வண்டியை நிறுத்துங்கள் என்று சொல்ல வருகிறீர்கள். அந்நேரம் பார்த்து, நடத்துனர் உங்கள் அருகில் நெருங்கி உங்களின் கையிலிருந்த சில்லறைகளை வாங்கிக் கொண்டு, சிரித்தவாறே “என்ன சார் சரியாதான் சில்லறை வைத்திருக்கீங்களே, ஒரு ரூபாய் நீங்க கொடுக்காமல் போனால் என்ன ஓடும் பேருந்து சற்று நிற்காது என்றாலும், இப்படித் தேடி தேடி சரியா சிலல்றையை தர உங்களை மாதிரி வாலிபர்கள் இருந்தால் போதும்; நாடு செழிக்கும் சார்” என்று சொல்லிவிட்டு லேசாக உங்களைப் பார்த்து ஒரு கண்ணடித்துவிட்டுப் போகிறார். அடுத்த ஓரிரு வினாடிகளில் மக்கள் தங்களை அத்தனை நாணயத்தோடும் மதிப்போடும் பார்க்கிறார்கள். உள்ளே ஒரு பெருமூச்சு எழுகிறது உங்களுக்கு. நடத்துனரின் நன்னடத்தை எண்ணி மகிழ்கிறது உங்கள் மனசு. யோசித்துப் பாருங்கள், அவர் உங்களுக்கென கொடுத்தது வெறும் ஐந்து காசு மட்டும் தான். ஆனால், அந்த ஐந்து காசு இல்லாத காரணம் காட்டி இன்று எல்லோருக்கு மத்தியில் உங்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுக் கூட உங்களை அவுமாணப் படுத்தி இருக்கலாம். நீங்கள் சரியான நேரத்திற்கு போக முடியாமல் அந்த ஒப்பந்தமே உங்கள் கைவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அங்கனம் செய்யாது அவர் செய்த இந்த சிறு உதவி எத்தனை பெரிதென்று அதன் பயன் அறிந்தவரே அறிவரென்கிறார் திருவள்ளுவர். ஒரு சின்ன உதவி தான் நம்மை பேராபத்திலிருந்து காக்கிறது. என்றாலும், அதை உதாசீனப் படுத்தாது அதையும் பெரிதாக எண்ணி நன்றியுணர்வு கொள்ளும் பக்குவம் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதுபோன்று ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளை எழுதி, நாம் நகரும் இடமெல்லாம் நம்மோடு வந்து நமக்கு வாழ்வியலை சொல்லித் தரும் பெரும் பயனுள்ள ஒரு நூலாக திருக்குறள் அமைகிறது. அதை வெறும் நூல் என்று சொல்வது கூட அத்தனை மிகையில்லை, அது ஒரு நன்னடத்தையின் ஞானப் பலன். தமிழராகப் பிறந்ததன் பிறவிப் பயன். இன்றைய நம் வாழ்வியலை என்றோ சொல்லிச் சென்ற ஒரு மகானின் மாமனிதரின் வாழ்வியல் சொல்லும் மாமறை. அது வெறுமனே காக்கப் பட மட்டுலமல்ல ஒவ்வொரு மனிதனும் படித்து தன் வாழ்க்கையினை சீர்செய்துக் கொள்ளவும், நம்மை நடுநிலை படுத்திக் கொள்ளவும், பிற்காலத்தின் மாற்றங்களை இப்பொழுதிலிருந்தே நிகழ்த்திக் கொள்ளவும், நாளைக்கு வேண்டியதை இன்றே ஏற்படுத்திக் கொள்ளவும், உலகச் சமன்பாடுகளில் எல்லாம் உயிர்க்கும் எல்லாம் கிடைக்கும் வண்ணம் நாம் வாழத் தக்க நம்மை நெறி படுத்தும் நூலாகவும் திருக்குறள் அமைகிறது. எனவே, திருக்குறளில் இருக்கும் தமிழர் பண்பினை, நம் வாழ்வியலை ஒவ்வொருவரும் படித்து, தமிழரின் பண்பு மாறாது வாழ்ந்து, நாளைய நல்லதொரு சமுதாயத்தை இன்றிலிருந்தே உருவாக்குவோம். ஒவ்வொரு தமிழனும் மற்றொரு மனிதருக்கேனும் நல்ல பாடமாய் வாழ்வோம். அதற்கு துணை நிற்கும் திருக்குறளை தினம் ஒரு குறள் வாசிக்கும் முறையிலேனும் வாழ்நாள் முழுதும் மீண்டும் மீண்டும் வாசித்து மனனம் செய்து அர்த்தம் அறிவோம். அறிந்ததை பிறருக்கும் படிக்கத் தருவோம். இயன்றவரை விழா நடத்தும் இடங்களில், நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளில் பரிசு கொடுக்கும் பட்சத்தில்; திருக்குறளையே நல் பரிசாகத் தருவோம். திருக்குறளை மொத்த தமிழரும் படிக்க வழிவகை செய்வோம். தமிழர் பண்பினை முழுமையாக திருக்குறள் மூலமும் கற்று அதன்படி மேன்மையாக வாழ்ந்து; தமிழரை மீண்டும் உலக அரங்கில் முன்னிலை படுத்துவோம். ஆங்காங்கே அடிமைப் பட்டுக் கிடக்கும் நம் இனத்து மக்கள் அப்படி யொன்றும் சோடைப் போனவர்கள் அல்ல; அவர்கள் இவ்வுலக வாழ்வு முறைகளின், பண்பின், நாகரிகத்தின் முன்னோடிகள் என்று திருக்குறளின் வழி நின்று; வாழ்ந்து; வென்று; முழங்குவோம். தெளிவும், பண்பும், உண்மையோடு வாழ்தலும், பிறருக்கு உதவும் மனமும், எல்லோரையும் மதித்துப் போற்றும் குணமும் எல்லோருக்கும் இயல்பாக வரப் பெறட்டும். அனைத்துயிரும் நலம் பெற்று ஓங்கட்டும். எல்லோருக்கும் நன்றியும் வணக்கமும்!

1 கருத்து:

  1. . தெளிவும், பண்பும், உண்மையோடு வாழ்தலும், பிறருக்கு உதவும் மனமும், எல்லோரையும் மதித்துப் போற்றும் குணமும் எல்லோருக்கும் இயல்பாக வரப் பெறட்டும்.

    பதிலளிநீக்கு