பிரபலமான இடுகைகள்

சனி, 30 ஏப்ரல், 2011

அனுபவங்கள் பேசுகின்றன !

லைனிங் மிஸ்ஸிங்... டீஸிங் கம்மிங்!


சமீபத்தில் நானும் என் தோழியின் தங்கையும் ஸ்கூட்டியில் சென்றோம். சிக்னலில் நின்றபோது, எங்கள் வண்டிக்குப் பின்னால் நின்றிருந்த பைக் இளைஞர்கள் என் தோழியைப் பார்த்து, ''ஏய் மஞ்சள் புறா... உள்ள வெள்ளை புறா...'' என்று கேலி பேச, அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் ஆகிவிட்டது எனக்கு. காரணம், வெளிர் மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்த என் தோழியின் தங்கை, அந்த மெல்லிய உடைக்கு லைனிங் கொடுத்து தைக்காததால், அவளின் வெள்ளை உள்ளாடை அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்குத்தான் மேற்கண்ட அநாகரிக கமென்ட் உதிர்த்தார்கள் பைக் இளைஞர்கள்.
ஒரு பெண்ணை நாகரிகமாகப் பார்க்கத் தெரியாத அந்த நான்சென்ஸ் இளைஞர்களை நம்மால் திருத்த முடியாது. ஆனால், இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்க நாம் எப்போதும் கவனமாக உடுத்திக் கொள்வது சாத்தியம்தானே?!
- பி.சூர்யா, மதுரை
அக்கம் பக்கம் பழகுவோம்!


அன்று எங்கள் பக்கத்து வீட்டு டேங்க்கில் தண்ணீர் நிறைந்து வழியும் சத்தம் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்தது. 'கவனிக்காம விட்டிருப்பாங்க... கூப்பிட்டு மோட்டாரை ஆஃப் பண்ணச் சொல்லலாம்...’ என்று அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிய போதுதான் தெரிந்தது வீட்டில் ஆள் இல்லை என்று. காலையில் மோட்டாரை போட்டவர்கள், பவர் கட் ஆனதும் ஆஃப் செய்ய மறந்து வெளியே கிளம்பிவிட்டார்கள் போல! அவர்களின் மொபைல் எண்ணும் என்னிடம் இல்லை. பிரபல ஜவுளிக்கடை ஒன்றின் அருகில்தான், அந்த வீட்டு உரிமையாளரும் கடை வைத்திருக்கிறார். எதேச்சையாக அந்த நேரம் லோக்கல் சேனலில் ஜவுளிக்கடையின் விளம்பரம் வர, அந்தத் தொலைபேசி எண்ணை அழைத்து ''பக்கத்து கடைக்காரங்ககிட்ட விஷயத்தை சொல்லிடுங்க...'' என்றேன். ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து வந்து மோட்டாரை ஆஃப் செய்தார் பக்கத்து வீட்டுக்காரர். அதற்குள் வீணான நீர், எங்கள் தெருவில் ஒரு குட்டி ஆற்றையே உருவாக்கியிருந்தது!
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படும் நீதி யாதெனில்... அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் தொடர்பு எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது எப்போதும் அவசியம்!
- சைலவதி, வேலூர்
லீவுக்கு சம்பளம் உண்டா?

'குழந்தைங்களுக்கு லீவ் விட்டாச்சு. இனி ரெண்டு மாசம் முழுக்க ஊருல எங்கம்மா வீட்டுல இருந்துட்டு, ஸ்கூல் ரீ-ஓபன் ஆகறதுக்கு நாலு நாள் முன்னதான் வருவேன்டி...’' என்று குஷியாக துணிகளை பேக் செய்து கொண்டிருந்தாள் என் தோழி. அவள் வீட்டில் வேலை பார்க்கும் பெண், ''எனக்கு ரெண்டு மாச சம்பளம் கொடுத்துட்டுப் போறீங்களாம்மா...’' என்று தயங்கியபடியே கேட்க, ''அதான் நீ வேலைக்கே வரப் போறதில்லையே... அப்புறம் எதுக்கு சம்பளம்..?’' என்றாள் தோழி கடுப்பாக. ''ரெண்டு மாசம் சம்பளம் இல்லாம நான் எப்படிம்மா சமாளிப்பேன்...?'’ என்று சின்ன குரலில் விளக்க முற்பட்ட அந்த பெண், பின் வாடிய முகத்துடன் பாத்திரம் கழுவப் போய்விட்டார்.
அதையடுத்து என் தோழியிடம், ''உன் வீட்டுக்காரரோட ஆபீஸ்ல, 'ரெண்டு மாசம் ஆபீஸை மூடப் போறோம். நீங்க எல்லாம் வேலைக்கு வர வேண்டாம். சம்பளமும் கிடையாது’னு திடீர்னு வொர்க்கர்ஸ்கிட்ட சொல்டறாங்கோனு வெச்சுக்கோ.. அப்ப என்னடி பண்ணுவே நீ..?'' என்று நான் கேட்க... அவளுக்கோ ஷாக். ''இப்போ புரியுதா அந்தப் பெண்ணோட நிலமை..? உன்னோட வசதிக்கு, அந்தக் காசை சம்பளமா கொடுக்கறதால நீ குறைஞ்சிடப் போறதில்ல. ஆனா, அவங்களுக்கு ஆதாரமே இதுதான். ரெண்டு மாச சம்பளம் இல்லாட்டியும், ஒரு மாச சம்பளத்தையாவது கொடுக்கலாமே... அவங்களும் சந்தோஷமா வாழ்த்துவாங்களே!'’ என்று நான் புரியவைக்க, வேலைக்கார பெண்ணை அழைத்து, அட்வான்ஸாக இரண்டு மாத சம்பளத்தைத் திணித்தாள் தோழி!

__._,_.___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக