பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை

புது யுகம் படைப்போம்!!

ஓடி மறைந்து வாழ்ந்தது போதும்
ஊர் மறந்து உறங்கியது போதும்
உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும்
பிள்ளைகளின் - சமாதிகளை கூட உடைத்தது போதும்
எம் - பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்;
வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்;
இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்!

விடுதலை விடுதலை யென்றே
உயிர்விட்ட இனமே..
சுதந்திரக் காற்றினை சுவாசிக்கவே
நாளுக்கொரு போருக்குள் வித்தான மனிதர்களே..
வாருங்கள்; உயிர்கொல்லாது உயிர்வென்று -
நம் இனம் வாழ ஓர் - யுகம் படைப்போம்!

ஒற்றுமை தீயின் சுவாலையை - நம்
எதிரி நாக்கில் தீண்டி
உயிர்பயம் கொள்ள செய்வோம்;
உயிரோடு விட்டு நம் - விடுதலையை மட்டும் வெல்வோம்!

கற்றை கற்றையாய் குண்டுகளை வீசி
பறித்துக் கொண்ட நம் உடமைகளை
நாம் வாழ்ந்த அடையாளத்தை -
நம் ஒற்றுமையால் மீட்டெடுப்போம்!

மரணத்தின் விளிம்பில் சாய்ந்த
ஒரு இனத்தின் - மிச்ச சுவாசத்தை வார்த்தெடுத்து
புதியதொரு யுகம் படைப்போம் - அதில் தமிழரின்
ஒற்றுமையை ஓங்க வைப்போம்; வாருங்கள் உறவுகளே...!!!!!!

கல்லில் அடிக்கவில்லை குண்டில் அடித்தார்
தள்ளிப் போகவில்லை எள்ளி - நகைத்தார்
முல்லை பறிக்கவில்லை முற்றும் பறித்தார்
சண்டை ஒழிந்ததென்று - சங்கினை யறுத்தார்,

வாழ்ந்த சுவடுகளை அழித்து - அந்நியரென்றார் -
தூர வந்து தமிழரென்று மார் தட்டினோமே யொழிய
பிறந்த எம் தேசத்தில் ஒரு பிடி மண்ணுக்கே -
விரோதியானோமே???!!!!!!!!!

'நாம்' என்ற ஒற்றை குறையினால்
நானென்றே ஒருமை பட்டோமே????????
இனி - வாருங்கள் உறவுகளே நாமென்றே இணைவோம் -
ஒற்றுமையின் பலத்தில் தமிழினத்தின்; புது யுகம் படைப்போம்!
-----------------------------

1 கருத்து:

  1. 'நாம்' என்ற ஒற்றை குறையினால்
    நானென்றே ஒருமை பட்டோமே????????
    இனி - வாருங்கள் உறவுகளே நாமென்றே இணைவோம் -
    ஒற்றுமையின் பலத்தில் தமிழினத்தின்; புது யுகம் படைப்போம்!//
    இறையருள் துணை நிற்கப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு