பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நம்பிக்கையூட்டும் 'நல்விதைகள் !

'நல்விதைகள்’ அமைப்பின் ஃபவுண்டர் அசாருதீன், ''நண்பர்கள் சிலரோடு இணைஞ்சு, கடந்த ஏழு வருஷமா தமிழ்நாடு ஊனமுற்றோர் நல சங்கத்துல இருக்கற மாற்றுத்திறனாளிகளுக்கு என்னாலான உதவிகளை செய்துட்டு வர்றேன். ஒருமுறை என் நண்பன் கிருஷ்ணன், 'நாம ஏன் தனியா ஒரு அமைப்பு தொடங்கி, அதன் வழியா சமூகத்துக்கு நம்மளால முடிஞ்ச உதவிகளைச் செய்யக் கூடாது?’னு ஒரு தடவை கேட்டார். ஒரு வருஷத்துக்கு முன்ன அந்த எண்ணத்துக்கு நண்பர்கள் பலருமா சேர்ந்து வடிவம் கொடுத்தப்போ உருவானதுதான் 'நல்விதைகள்’ அமைப்பு. சேவையில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள், அவர்களின் நண்பர்கள்னு எங்க வட்டம் விரிஞ்சது. கூடவே, 'ஃபேஸ்புக்’ல 'நல்விதைகளுக்’காக ஒரு பேஜ் கிரியேட் செய்தோம். அது இன்னும் பலரை எங்களுடன் இணைய வெச்சுது. இன்னிக்கு எங்க உறுப்பினர்களோட எண்ணிக்கை நூறுக்கும் மேல தாண்டியிருக்கு. இதில் பாதிக்கும் மேற்பட்டவங்க பெண்கள்தான். 90 சதவிகிதம் கல்லூரி மாணவர்களைக் கொண்டு இயங்கும் எங்க அமைப்புல, வேலைக்குப் போறவங்களும் ஆர்வமா முன்வந்து சேர்ந்திருக்காங்க'' என்று அமைப்பின் அறிமுகம் சொன்னார். பிர்தோஷ் பாத்திமா, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு ஹோமியோபதி மாணவி. ''சின்ன வயசுல இருந்தே சேவை செய்றதுல எனக்கு விருப்பம் உண்டு. அப்படி ஒரு களத்தில்தான் 'நல்விதைகள்’ அமைப்பை பற்றித் தெரிய வந்தது. நான் சேர்ந்ததோட, என்னைப் பார்த்து என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் 20 பேருக்கும் மேல இதுல சேர்ந்தாங்க. எங்க ஓய்வு நேரங்கள் எல்லாம் வீணாகாம, பிறருக்கு பயன்படும் விதமா இருக்கு. கோடம்பாக்கத்துல இருக்குற நவ பாரதி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள்ல வகுப்புகள் எடுக்க, அந்த ஸ்கூல் முதல்வர்கிட்ட அனுமதி வாங்கி களத்தில் இறங்கினோம். மாதத்தின் எல்லா ஞாயிறும், அந்த மாணவர்களுக்கு பாடங்களை சுமைகளாக்காம, சுவாரசியமா கற்றுக் கொடுத்தோம். இறுதியா தேர்வு வெச்சு பார்த்தப்ப, அவங்க எல்லாரிடமும் நல்ல முன்னேற்றம் தெரிஞ்சதா... பள்ளிக்கூடத்துல எங்களப் பாராட்டினாங்க. இன்னும் பல பள்ளிகளோட பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு'' எனும் இவர்களின் அமைப்புக்கு, நடிகர் பாலாஜி தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் நன்றியுடன் குறிப்பிட்டார். சாய்ராம் கல்லூரியின் பி.இ., இறுதியாண்டு மாணவி அக்ஷயாவின் பேச்சில் வேகம். ''நல்விதைகள் உறுப்பினர்கள் எல்லாரும் வெறும் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாம... ஆத்மார்த்தமா இணைஞ்சுருக்கோம். ஆரம்பத்தில் கல்வி சம்பந்தமான உதவிகளையே முன் எடுத்துச் செய்தோம். இப்போ ரத்ததானம், மாற்றுத் திறனாளிகள்னு எல்லா பக்கமும் செயல்படுறோம். இந்த முகாம்ல எங்க அமைப்புல இருந்து 70 பேர் ரத்ததானம் செஞ்சிருக்கோம். இது எங்களோட முதல் முயற்சி. இனி, ஆண்டுதோறும் குறைந்தது நான்கு ரத்ததான முகாம்களாவது நடத்தணும்னு முடிவு செய்திருக்கோம்'' என்றார் சமூக அக்கறை கொண்டவராக. ''இதுவரைக்கும் யார்கிட்டயும் பண உதவி கேட்டுப் போய் நிக்கல. எங்களால என்ன முடியுமோ அதை வெச்சுதான் பல்வேறு உதவிகள் செய்துட்டு வர்றோம். எங்க உறுப்பினர்களில் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 100 ரூபாயும், வேலை செய்றவங்க எல்லாரும் 200 ரூபாயும் கொடுக்கறாங்க. அந்தப் பணம்தான் சேவைகளுக்கான முதல். பெற்றோர் இல்லாத மாணவர்கள் ராஜேஷ், கிஷோர்னு ரெண்டு பேரோட படிப்புக்கு முழுமையா பொறுப்பேற்று, ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு வர்றோம். இன்னும் எங்க உறுப்பினர்களோட எண்ணிக்கை நிறைய விரியணும்... 'நல் விதைகளோ’ட உதவிகளும்!'' - நல்ல பல எதிர்காலத் திட்டங்களை மனதில் வைத்து முடித்தனர் 'நல் விதை’யினர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக