பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நமக்குள்ளே....

சமீபத்தில், உலகத்தையே கலங்கடித்த விஷயம்... ஜெசிந்தாவின் தற்கொலை! மங்களூரைச் சேர்ந்த ஜெசிந்தா... லண்டன், கிங் எட்வர்ட் மருத்துவமனையின் நர்ஸ். இளவரசர் சார்லஸின் மருமகள் கேட் வில்லியம், அங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையின் தொலைபேசி ஒலிக்கிறது. 'சார்லஸ் மற்றும் ராணி எலிசபெத் பேசுகிறோம்' என்றபடி ஆண், பெண் குரல்கள் அதில் ஒலிக்க... ஆடிப்போன ஜெசிந்தா... இணைப்பை இன்னொரு நர்ஸுக்கு மாற்றுகிறார். அதன் பிறகு, 'இளவரசர் சார்லஸ் மற்றும் ராணி போல மருத்துவமனைக்கு சாமர்த்தியமாகப் பேசி, அரசாங்க ரகசியத்தைக் கறந்துவிட்டோம்' என்றபடி மருத்துவமனை உரையாடல், ஆஸ்திரேலிய நாட்டின் எஃப்.எம் ரேடியோ ஒன்றில் ஒலிக்க... உலக அளவில் ஏகபரபரப்பு! 'அரச குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டோமே' என்கிற குற்ற உணர்ச்சி வாட்டியெடுக்க... உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார் ஜெசிந்தா. பிரபலங்களைப் போல் குரலை மாற்றிப் பேசி, தொலைபேசி மூலமாக பிறரை ஏமாற்றுவதை நகைச்சுவை நிகழ்ச்சியாக செய்துவரும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், 'எங்கள் விளையாட்டால், ஓர் அப்பாவியின் உயிர் பறிபோய் விட்டதே என்கிற குற்றவுணர்ச்சி, ஒவ்வொரு நாளும் எங்களை வாட்டி எடுக்கிறது' என்று கண்ணீர் பேட்டி கொடுக்கிறார்கள் இப்போது. 'அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு' என்பதை இச்சமூகத்துக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்ட... இரண்டு குழந்தைகளின் தாயான 46 வயது ஜெசிந்தாவின் உயிர் பறிபோனதுதான் கொடுமை. 'நகைச்சுவை' என்கிற பெயரில் இங்கேயும்கூட தொலைக்காட்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெளிநாடுகளை ஒப்பிடும்போது... இங்கே 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்து டெரர் கிளப்புவது... காதில் 'ஊய்ய்' என்று சத்தமிடுவது... என 'டீஸிங்' செய்துவிட்டு, கடைசியில் 'கிஃப்ட்' என்று எதையாவது கையில் திணிக்கிறார்கள்! அந்த நேரத்தில் 'தேமே' என்று டி.வி-க்கு போஸ் கொடுத்தாலும், நாலு பேருக்கு மத்தியில் பட்ட அவமானம்... திரையில் பார்த்த பிறகு, பலரிடம் இருந்தும் பாயும் கேலிப் பார்வை என்று எத்தனை எத்தனை மன உளைச்சல்கள்? மற்றவர்களை கேலிப்பொருளாக்கி, ஊரை சிரிக்க வைப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமையைக் கொடுத்தது?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக