பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கர்ப்பப்பை ஆபரேஷன்...கல் நெஞ்ச டாக்டர்...

உயிருடன் இருக்கும் மனைவியையே கண்டு கொள்ளாத கணவர்கள் இருக்கும் காலம் இது. ஆனால், தவறான சிகிச்சையால் இறந்துபோன தன் மனைவிக்காக, 25 வருடங்களாக நீதி கேட்டு போராடி வெற்றி பெற்றுள்ளார் 84 வயது சிங்கி. தவறு செய்த மருத்துவருக்கு, நீதிமன்றம் ஒருநாள் தண்டனை அளித்ததுடன், மொத்தம் 85 லட்சம் ரூபாயை நஷ்டஈடாக தரவும் உத்தரவிட்டுள்ளது! ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சி.சிங்கி. இவருடைய மனைவி லீலா சிங்கி, 1977-ல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த பத்து வருடங்களில் லீலாவுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. எனினும், நுரையீரலுக்கும் புற்றுநோய் பரவி, கர்ப்பப்பையையும் பாதித்துவிட்டது. அந்த சமயத்தில் பணியின் காரணமாக அமெ ரிக்காவில் இருந்தார் சிங்கி. அதனால், நியூயார்க் நகரிலிருக்கும் ஸ்லோன் கேத்தரிங் நினைவு மருத்துவமனையில், பிரபல புற்றுநோய் மருத்துவர் எர்னஸ்ட் கிரீன்பர்க்கிடம் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனை செய்த டாக்டர், 'அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை எடுப்பதால் லீலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என அறி வுறுத்தி, மருந்துகளை மட்டும் பரிந்துரைத்துள்ளார். சிலகாலத்துக்குப் பிறகு, மனைவியுடன் இந்தியா திரும்பியவர், மருத்துவ பரிசோதனைக்காக மும்பை யின் பிரபல பாம்பே ஹாஸ்பிடலுக்கு 1987-ல் லீலாவை அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த புற்று நோய் பிரிவு தலைவரும், மத்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் பிரஃபுல்லா தேசாய், 'உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்க வேண்டும்' என பரிந்துரைக்க... ஏற்கெனவே அமெரிக்க டாக்டர் அளித்த ஆலோசனையை எடுத்துச் சொன்னார் சிங்கி. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிய தேசாய், தம் உதவியாளராக இருந்த மருத் துவர் ஏ.கே.முகர்ஜியிடம், லீலாவின் அடிவயிற்றை ஓபன் செய்த பிறகு, தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு, வேறு சர்ஜரியில் மூழ்கினார். அதன்படியே செயல்பட்ட டாக்டர் முகர்ஜி, லீலாவின் கர்ப்பப்பை, அகற்ற முடியாத நிலையில் சீரியஸாக இருப்பதைக் கண்டு, தேசாயிடம் கூற... 'அப்படியே மூடி தையல் போடு' என்று ஆபரேஷனை முடித் தார் தேசாய். பிறகு வீடு திரும்பிய லீலாவுக்கு, வலி அதிகமானது. அவருடைய செயல்பாடு களும் முடங்கி, சுமார் 14 மாத நரக வேத னைக்குப் பிறகு... 89-ம் ஆண்டில், தன்னு டைய 46 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே... சிங்கி பதிவு செய்த வழக்கின் மீது நடந்த விசாரணையில் மும்பையின் கிரிமினல் நீதிமன்றம், 2001-ல் டாக்டர் தேசாய்க்கு ஒருநாள் சாதாரண தண்டனை மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மும்பை உயர் நீதிமன்றத்தில் தேசாய் அப்பீல் செய்ய, அந்த மனு கடந்த அக்டோபரில் தள்ளுபடியானது. உச்ச நீதிமன்றத்துக்கு ஓடினார் தேசாய். அங்கிருந்து கடந்த நவம்பர் 20 அன்று வெளியான தீர்ப்பு... கீழ் கோர்ட் கொடுத்த ஒரு நாள் தண்டனையை உறுதி செய்ததுடன், நஷ்டஈடாக 70 லட்சம், மருத்துவ செலவுக்காக 15 லட்சம்... ஆக மொத் தம் 85 லட்ச ரூபாயை சிங்கிக்கு, தரவேண்டும்' எனக் கூறி, தேசாயை அதிர வைத்துவிட்டது. தற்போது மும்பையிலிருக்கும் மகள் வீட்டில் தங்கியிருக்கும் 84 வயது சிங்கியிடம் பேசினோம்! ''இது என் மனைவி லீலாவுக்குக் கிடைத்த வெற்றி!'' என்று ஈரத்தில் மின்னிய கண்களுடன் பேசினார் சிங்கி! ''பாம்பே ஹாஸ்பிடலின் புற்றுநோய்ப் பிரிவு முன்னாள் தலைவர் மீது தனக்கிருந்த பகைமையைத் தீர்த்துக் கொள்ள, என்னுடைய மனைவியின் உயிருடன் விளையாடிவிட்டார் தேசாய். முன்னாள் தலைவரின் மாணவர்தான் ஏ.கே.முகர்ஜி. அவரை வேண்டுமென்றே பிரச்னை யில் சிக்க வைத்து, முன்னாள் தலைவர் மற்றும் முகர்ஜி இருவரின் எதிர்காலத்தையும் கெடுப்பது தான் தேசாயின் முக்கியக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. என் மனைவி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னதாகத்தான இந்த விஷயங் களை எல்லாம் நான் கண்டுபிடித்தேன். உடனே, லீலாவின் நிலைக்கு தேசாயின் கவனக் குறைவே காரணம் என மும்பை போலீஸ் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் இரண்டு இடங்களிலும் புகார் அளித்தேன். இதை விசா ரித்த கவுன்சில், தேசாயின் தவறை கோடிட்டுக் காட்டிய பின், 1991-ல் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது போலீஸ். 25 ஆண்டு களுக்குப் பின் நீதி கிடைத்திருக்கிறது!'' என்றவர், ''டாக்டர் தேசாயைத் தண்டித்து அவரிடம் பணம் பெற வேண்டும் என்பது என் குறிக்கோள் அல்ல. அவர் செய்த தவறை உணர்ந்தாலே போதுமானது. இப்போது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். என்றாலும், தேசாய்க்கு மத்திய அரசு அளித்த பத்மவிபூஷண் விருதையும் திரும்பப் பெற வேண்டி அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன். தேசாய் போன்ற மருத்துவர்கள், இந்த வழக்கையே ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நோயாளிகளின் உயிருடன் விளையாடும் விபரீ தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசாய் தரவிருக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை முழுவதையும் வைத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக் காக ஒரு டிரஸ்ட் அமைத்து, அவர்களின் மருத் துவ சிகிச்சைக்காக செலவு செய்வேன்'' என்றவர், ''இறந்த மனைவிக்காக இந்த வயதிலும் போராடி இருக்கிறீர்களே..? என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். என் மனைவி இறக்கும் போது, 'தேசாய் போன்ற மருத்துவர்களை சும்மா விடக்கூடாது’ என்று எனது கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க கதறினாள். அதைத்தான் நிறைவேற்றியிருக்கிறேன். நீதி கிடைக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகி இருந்தாலும், விடாமல் போராடியிருப்பேன். என் மனைவிக்கு, ஒரு டாக்டர் இழைத்த அநியாயத்தை, என்னுடைய பேத்தி சிறுமியாக இருக்கும்போது மடியில் கிடத்தியபடி கூறி இருக்கிறேன். அப்போது, 'நான் நன்றாகப் படித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஒரு மருத்துவராக வாழ்ந்து காட்டுவேன்' என்று கூறினாள். இப்போது அவள் உண்மையிலேயே மருத்துவராகி, நியாயமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு சிறுமியைக்கூட பாதித்த இந்தச் சம்பவம், அன்புக் கணவனான என்னை பாதிக்காமல் இருக்குமா?'' எனக் கேள்வி எழுப்பிய சிங்கி, சமூகவியல் மற்றும் பொருளா தாரத் துறைகளில் இருபது நூல்களை எழுதி யுள்ளார். ''நியாயம், தண்டனை, அபராதம் என்பதை எல்லாம்விட, உண்மையில் என் மனைவி மீது நான் வைத்திருந்த அன்பே... என்னை 25 ஆண்டு களாக இடைவிடாமல் போராட வைத்துள்ளது. மனைவி என்பவள் நம் வீட்டுக் கடமைகள் செய்யும் மனுஷி என்றே ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவள் நம்மில் பாதி. அப்படி என் உயிருக்கு நிகராக நான் நேசித்த என் மனைவியை இழந்த வலிதான், இந்த 84 வயதிலும் அவளுக்காக என்னைப் போராட வைத்தது. ஆண்களுக்கு என் வேண்டுகோள். உங்கள் மனைவியை நேசியுங்கள்... அந்த அன்பே வாழ்வில் ஜெயிக்கும் வல்லமையை உங்களுக்குத் தரும்!'' - பூரிப்புடன் முடித்த சிங்கியும் ஒரு புற்று நோயாளி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக